நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு அனுப்ப பட்டிருப்பது, தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகத் தமிழர்களின் மத்தியில் அதிருப்தியையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ், பா.ஜ.க. தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் இந்த முடிவை மோடி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று புதுடெல்லியில் பா.ஜ.க.தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் மோடியை தனித்தனியாக சந்தித்து தமிழக மக்களின் உள்ளக் குமுறல்களை பதிவு செய்தார்.
இந்நிலையில், பால் தாக்கரே காலத்தில் இருந்தே பாகிஸ்தானின் நடவடிக்கைகளில் அதிருப்தி வெளியிட்டுவந்த சிவசேனா கட்சி ‘பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்பை அழைப்பதா..?’ என்று குரல் எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக கருத்து கூறிய அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், ‘நமது நாட்டின் மீது கடந்த 20 ஆண்டுகளாக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஏவி விடும் ஒரு நாட்டின் தலைவருக்கு, நமது நாட்டின் புதிய சகாப்தத்தின் துவக்கமான மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு அனுப்புவதா?
இதில் பங்கேற்குமாறு நாம் அழைப்பு விடுத்தால், அவர்களுடன் நட்புறவு பாராட்ட நாம் மிகவும் வளைந்துக் கொடுப்பதாக கருதி விடுவார்கள். பாகிஸ்தானுடனான அணுகுமுறையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான முந்தைய மத்திய அரசின் நிலைப்பாட்டை மோடி அரசும் பின்பற்ற வேண்டாம் என்றே நாங்கள் விரும்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.