BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 24 January 2014

அக்கா வாழ்க்கையில் குறுக்கிட்ட மாமியாரை வெட்டி கொன்ற ஸ்டேட்பர்ஸ்ட் வாங்கிய மாணவி

மதுரையில் தனியார் கல்லூரி ஒன்றில் பி.ஏ தமிழ் இலக்கியம் படித்து வருகிறார், தங்க ரத்தினம். இவர் தந்தை சுமை தூக்கும் தொழிலாளி. தங்க ரத்தினம், பன்னிரெண்டாம் வகுப்பில், தமிழ் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றிருந்தார். இவர் அக்காவிற்கு திருமணம் நடந்து, வரதட்சணை கொடுக்காத காரணத்தால், ஒரே வாரத்தில் தாய் வீட்டிற்கு அனுப்ப பட்டார். இந்நிலையில், ஒரு ஆண்டு கடந்து விட்டதால், அவர் கணவருக்கு இரண்டாவது திருமணம் நடத்த ஏற்பாடுகள் தொடங்கியது.

இதனால் ஆத்திரம் அடைந்த தங்கரத்தினம், தன் அக்காள் மாமியாரிடம் பேச நேரில் சென்றார். வாக்குவாதம் நடைப் பெற்று கொண்டிருக்கும் போது,  அக்காள் மாமியாரை அரிவாளால் கழுத்து, கால், கையில் வெட்டி கொன்றார். இதையடுத்து, தங்கரத்தினம் அவனியாபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.





முக‌அழகிரி போஸ்டர் பாய்ஸ்ன் அல்டிமேட் போஸ்டர் கலாட்டாக்கள்

அழகிரியின் அதிரடியைவிட அவருடைய துணை கைகள் அடிக்கும் போஸ்டர் மெகா காமெடியாக இருக்கும்.

அழகிரிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுகிறேன் என்று அழகிரி மதுரையில் வண்டி ஏறும் முன் சென்னையில் வந்து கோபாலபுரம் முழுதும் திமுகவின் பொதுக்குழுவே என்று போஸ்டர் ஒட்டி ஸ்டாலினையும், கருணாநிதியையும் கடுப்பேற்றுவார்கள்.அதுமட்டுமின்றி ஸ்டாலின் அழகிரி சண்டையில் பெட்ரோலை ஊற்றுவதும் அதாவது அடிக்கடி போஸ்டர் ஒட்டுவதும் இவர்கள் தான்,

அது மட்டுமின்றி கருணாநிதி கெட்டப்பில் அழகிரி,  எந்திரன் கெட்டப்பில் அழகிரி, பெரியார் கெட்டப் என காமெடிக்கும் பஞ்சமில்லை

டோண்ட் ஒர்ரி, கோழிமிதிச்சு குஞ்சு சாகுமா என்று அரசியல் நிலவங்கள் வேறு போஸ்டராக வரும் அனைத்துக்கும் சிகரமாக தேர்தல் முடிந்த பின் அழகிரியை கலாய்த்து அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர் தான் ஹைலைட், அது கடைசி போஸ்டராக இணைக்கப்பட்டுள்ளது


அழகிரி பாய்ஸ்ன் போஸ்டர்கள் உங்கள் பார்வைக்கு





CM என்றால்Chemical Minister











இது தான் அந்த ஹைலைட்டான அதிமுகவின் போஸ்டர்


அழகிரியின் போஸ்டர் பாய்ஸ்ன் போஸ்டர்களை நீங்கள் மட்டும் பார்த்து ரசித்தால் எப்படி, லைக் போட்டு ஷேர் போடுங்க மற்றவர்களும் பார்க்கட்டும்

உங்களுக்கு பிடிச்ச போஸ்டர் எது என்று கமெண்ட்டில் சொல்லுங்கள்
--------------------------------------------------------------
ரவுடிகளையும் புரோக்கர்களையும் அருகில் வைத்துக்கொண்டு வாய்ப்புகளை வீணடித்த அழகிரி

திமுக தலைவர் கருணாநிதி தன் இரண்டு மகன்களுக்கும் சம வாய்ப்பை தந்தார்.

அழகிரி எப்படி வாய்ப்புகளை வீணடித்தார் என்பதையும், ஸ்டாலின் எப்படி வாய்ப்புகளை பயன்படுத்தினார் என்பதையும் அலசும் கட்டுரை

மேலும் படிக்க‌
http://goo.gl/L2XlPD

ரவுடிகளையும் புரோக்கர்களையும் அருகில் வைத்துக்கொண்டு வாய்ப்புகளை வீணடித்த அழகிரி - ஒரு அலசல்



மு.க.ஸ்டாலினுக்காக மு.க.அழகிரி திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பரபரப்பு கிளம்பியுள்ளது, அஞ்சாநெஞ்சனாக திமுகவின் அடுத்த தலைவர் ஆக இருந்தவர் இப்படி செல்லாக்காசாகி இன்று பலவீனமான நிலையில் திமுகவை விட்டு விலக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலினுக்கு கருணாநிதி சப்போர்ட், கருணாநிதி ஸ்டாலினுக்கு வெண்ணையையும் அழகிரிக்கு சுண்ணாம்பையும் வைத்தாரா என்று பார்த்தால் உண்மையில் ஸ்டாலினுக்கு தான் சுண்ணாம்பை வைத்தார் கருணாநிதி, அழகிரிக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கினார் கருணாநிதி. அத்தனையையும் வீணடித்துள்ளார் அழகிரி.

அஞ்சா நெஞ்சன் அழகிரியாக தொண்டர்களுடன் நெருங்கி பழகுபவராக, அனைத்து தொண்டர்கள் வீட்டு கல்யாணத்துக்கும் காதுகுத்திக்கும் சென்று வருபவராக, தன் ஆதரவாளர்களை எந்த சூழலிலும் கைவிடாதவராக, எதிர்கட்சிகளையும் எதிரிகளையும் தேர்தல் களத்திலும் பிற நேரங்களிலும் அச்சுறுத்தும் விதமாக அதிரடியாக அரசியல் நடத்தியவர் தான் அழகிரி.


அந்த நேரத்தில் ஸ்டாலின் மென்மையான போக்கை கடைபிடிப்பவராக, தன்னுடைய தீவிர ஆதரவாளர்களுக்கு கட்சியில் சிக்கல் வரும்போது அவர்களுக்காக மேலிடத்தில் வாதாடாமல் கைவிட்டவராக தொண்டர்களுடன் நெருங்கி பழகாதவராக, எதிர்கட்சிகளை சரியாக கையாள தெரியாதவராக அவர் மேல் விமர்சனங்களை திமுகவினரே கூட சில ஆண்டுகளுக்கு முன் வைத்தனர்.

திருமங்கலம் தேர்தல்களில் அழகிரியின் அகாசாய நடவடிக்கைகள், அவரின் உழைப்பு, பாராளுமன்ற தேர்தலில் திமுகவினரே தோல்வியை எதிர்பார்த்த  நிலையில் தென்மாவட்டங்களில் எல்லாம் வெற்றிபெற வைத்த உழைப்புகள் எல்லாம் திமுகவினரிடமே மந்தமான ஸ்டாலினுக்கு இவர் பரவாயில்லை என்று பேச்சு கிளம்பியது. இந்த எதிர்பார்ப்புகள் வாய்ப்புகளை தானே வீணடித்தார் அழகிரி.


அழகிரி தன் அருகில் அட்டாக் பாண்டி போன்ற ரவுடிகளையும் பொட்டு சுரேஷ் போன்ற புரோக்கர்களையும் வைத்து அரசியல் நடத்தி அனைவரையும் அச்சுறுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஸ்டாலினோ தன் அருகில் பொன்முடி, கே.என்.நேரு போன்ற தலைவர்களை வைத்துக்கொண்டு அரசியல் நடத்தி வந்தார்.

அழகிரி தென்மாவட்ட முக்கிய திமுக தலைவர்களை எடுத்தெறிந்தும் மரியாதையின்றியும் அரசியல் நடத்திய நேரத்தில் ஸ்டாலினோ தன் ஆதரவாளர்களாக இல்லாத  ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்களையும் பகைத்துக்கொள்ளாமல் மரியாதையுடன் நடத்தி வந்தவர்.

தா.கிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்களை அழகிரி ஆதரவாளர்கள் போட்டு தள்ள தன்னை கடுமையாக எதிர்த்த வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக அவரது சாதியில் இருந்தே பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் என்பவரை உருவாக்கி அவர் வழியாக தான் எதிர்ப்பு அரசியல் செய்து வந்தார் ஸ்டாலின்.

விளைவு மதுரை முதல் கன்னியாக்குமரி வரை இருந்த ஆதரவு போய் சாத்தூர் ராமச்சந்திரன், சுரேஷ், தூத்துக்குடி பெரியசாமி போன்றவர்கள் எல்லாம் ஸ்டாலினை நோக்கி செல்ல காரணமாகிவிட்டார், கடைசியில் தங்கம் தென்னரசுவும் கூட ஸ்டாலினிடம் அடைக்கலமாக அழகிரி ஆதரவு பரப்பளவு சுருங்கிக்கொண்டே வந்தது.

ஸ்டாலின் தென்மாவட்டங்களில் தனக்கான ஆதரவாளர்களை உருவாக்கும் நேரத்தில் வடமாவட்டங்களில் வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்றோர் அழகிரிக்கு ஆதரவாக செயல்பட வந்த நேரத்திலும் அதை முறையாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்.

தா.கி.கொலை, மதுரை தினகரன் அலுவலகம் எரித்து மூன்று பேர் கொலை என ரவுடி இமேஜை அழகிரி பொதுமக்களிடம் பெற ஸ்டாலின் கொஞ்சம் கொஞ்சமாக தன் அமைதி நடவடிக்கைகள் மூலம் ஜென்டில்மேன் அந்தஸ்தை பெற்றார்.

2011ல் ஆட்சியை திமுக இழந்த உடன், இதற்காகவே காத்திருந்தது போல மு.க.ஸ்டாலின் உடனடியாக சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார், கட்சித்தலைவர்களையும் சோர்ந்திருந்த தொண்டர்களையும் போய் சந்தித்தார், ஆனால் அழகிரியோ நினைத்தாலும் கூட சுதந்திரமாக சுற்ற முடியாதவாறு அதிமுக அரசின் வழக்குகள் இறுக்க பங்களாவில் போய் பதுங்கி கொண்டார். இதை சரியாக பயன்படுத்திய ஸ்டாலின் முழு திமுகவையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது மட்டுமின்றி மதுரையின் உள்ளேயும் அழகிரியின் ஆதரவாளர்களை இழுத்தார், புரோக்கர் பொட்டு சுரேஷ்க்காக தன்னுடைய பல ஆதரவாளர்களை ஸ்டாலினிடம் இழந்தார் அழகிரி.

கடைசியில் அட்டாக் பாண்டி பொட்டு சுரேஷையும் போட்டு தள்ள, பொட்டு சுரேஷூம் போய் சேர்ந்தார், வழக்குகள் போய் தென்மாவட்டத்தில் கட்சியில் இருந்த பிடியும் போய் கடைசியில் மதுரையிலேயே தன் பிடியை இழந்த அழகிரி தன் நிலையை உணர்ந்து பதுங்கியிருக்கலாம், பெற்றோரிடம் முரண்டு பிடித்து முரண்டு பிடித்து அடிவாங்கி சத்தம் போட்டு கைகால்களை உதைத்து அழும் குழந்தை  கடைசியில் எதுவுமே நடக்காது என்பதை அறிந்து அழுகை குறைந்து தேம்பி தேம்பி தூங்கி போவதை போல செல்லாக்காசாக கட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார் அழகிரி.

அதிரடிகளும், ஆவேசமும், முரட்டுத்தனமும், அச்சுறுத்தலும் தளபதிகளுக்கு தான் அழகு, தலைவர்களுக்கல்ல, அழகிரி தளபதியாக இருக்கதான் லாயக்கு, தலைவராக இருக்க அல்ல.

இந்த நிலைக்கு அழகிரி தள்ளப்படவில்லை, அழகிரி தன்னை தானே இந்த நிலைக்கு தள்ளிக்கொண்டார்.

# அலசல் பிடித்திருந்தால் ஒரு லைக் போட்டு ஷேர் செய்யுங்கள்

அழகிரி நீக்கப்பட்டதன் பின்னணியில் கேப்டனா?



நாடாளுமன்ற மக்களவைத் தேர்ததில், தே.மு.தி.க வுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க உருப்படாமல் போகும் என்று மு.க. அழகிரி, புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதை தொடர்ந்து கருணாநிதி, அழகிரியின் கருத்துக்கும், தி.மு.கவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். தேமுதிகவுக்கும், திமுகவுக்கும் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சிதான் என்றும் கூறினார்.

கட்சியில் அழகிரி இருந்தால் கூட்டணிக்கு வருவதற்கு விஜயகாந்த் தயக்கம் காட்ட வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டே அவரை உடனடியாக நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் மலேசியாவில் விஜயகாந்துடன் திமுக சார்பில் கூட்டணிப் பற்றி  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் மு.க.அழகிரியை வைத்துக் கொண்டு எப்படி கூட்டணிக்குள் வருவது? என்று விஜயகாந்த் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனாலேயும் கூட‌ தற்போது அழகிரி நீக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து தான், இன்று காலை திமுக தலைவர் கருணாநிதிக்கும், மு.க.அழகிரிக்கும் இடையே கோபாலபுரம் இல்லத்தில் மிகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் இறுதியில் கருணாநிதியின் அறையிலிருந்து அழகிரி மிகக் கோபத்துடன் வெளியேறியதாகவும், பின்னர் அன்பழகனை அழைத்து உடனடியாக அழகிரியை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்க‌ செய்யும் படி உத்தரவை வெளியிட கருணாநிதி கூறியதாக‌ தகவல்கள் கூறுகின்றன.

மு.க. அழகிரி நீக்கப்பட்டது சரியான முடிவு: வீரமணி



மு.க. அழகிரி, கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக,  தி.மு.க வில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார். அவர் நீக்கப்பட்டிருப்பதால் அக்கட்சி மீதான 'குடும்ப அரசியல்' பழி துடைக்கப்பட்டுள்ளது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். இது ஒரு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட, கட்சிக்கு ஆரோக்கியமான முடிவு என்றும் கூறினார்.

"தந்தை பெரியார் அறிவுறுத்தியபடி, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் கட்டுப்பாட்டிற்கே முதல் முன்னுரிமை என்பதற்கேற்ப அமைந்துள்ள இந்த‌ நடவடிக்கை பெரிதும் வரவேற்கத்தக்கது. " என்று தன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

மு.க.அழகிரி திமுகவிலிருந்து நீக்கம், திமுகவில் முற்றியது சகோதரயுத்தம்

மு.க.அழகிரி திமுகவிலிருந்து நீக்கம், திமுகவில் முற்றியது சகோதரயுத்தம்


கேஜ்ரிவால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு

விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவையும் மீறி தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது, அம்மாநில போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

144 தடையை மீறி நடைபெறும் போராட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என கேஜ்ரிவால்முதலில் கூறியிருந்தார்.  பின்னர் பொதுமக்கள்,, அரசு ஊழியர்கள்,  மற்றும் நேர்மையான‌ போலீசாரையும் போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். டெல்லியின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நான்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது. போராட்டத்தை அங்கிருந்து ஜந்தர் மந்தருக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் கேஜ்ரிவால் ஏற்கவில்லை.

தர்ணாவில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் என ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் மீது நேற்று டெல்லி நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டது. இதையடுத்து, கேஜ்ரிவால் மீதும் 144 தடையை மீறி டெல்லி ரயில் பவனில் ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தியதற்காக, அம்மாநில போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.












இனி ஒருமுறை நாங்கள் திமுக, அதிமுக நிழலில் கூட ஒதுங்க மாட்டோம்

“இனி, நாங்கள் அதிமுக, திமுக நிழலில்கூட ஒதுங்க மாட்டோம்’’ என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நேற்று, பாஜக குழுவினர் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் மதிமுக தலைமையகம் சென்றிருந்தனர். அப்பொழுது பேசிய வைகோ, "ஈழத் தமிழர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தது வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிதான்." என்று கூறினார். வாஜ்பாய் 2000ம் ஆண்டு, தன் பிறந்த நாள் அன்று போன் செய்து வாழ்த்து தெரிவித்தார் என்றும் கூறியிருந்தார்.

மோடியை பற்றி பேசுகையில், "மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமையப்போவது நிச்சயம், அந்த ஆட்சி ஐந்தாண்டுகள் முழுமையாக நீடிக்க வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம்’’ என்றும், "இனி ஒருமுறை நாங்கள் திமுக, அதிமுக நிழலில் கூட ஒதுங்க மாட்டோம்"  என்றும் வைகோ கூறினார். அடுத்த மாதம், சென்னையில் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தானும் கட்டாயம் கலந்து கொள்ள போவதாக பா.ஜ.க வினரிடம் உறுதியும் கொடுத்தார்.

கேஜ்ரிவால், ஒரு பைத்தியாகார முதல் அமைச்சர் , சர்கஸ் ரிங் மாஸ்டர்- சிவ சேனா

ஆம் ஆத்மி கட்சிக்கு நகர்புறங்களில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது, டெல்லியை அடுத்து மும்பையை குறிவைத்து ஆம் ஆத்மி கட்சி களம் இறங்கியிருக்கும் இந்நிலையில் சிவசேனா கட்சிக்கு அஸ்தியில் சுரம் கண்டுள்ளது, ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியை விமர்சித்த சிவசேனா தற்போது கீழ்த்தரமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளது.

சிவ சேனா, டெல்லி முதல் அமைச்சர் கேஜ்ரிவாலை, ஷின்டே சொல்வது போல், 'பைத்தியாகார முதல் அமைச்சர்' என தனது சாம்னா பத்திரிக்கையில் கூறியிருக்கிறார். கேஜ்ரிவால் பயன் படுத்திய வார்த்தைகள் ஏற்று கொள்ள முடியாதது என்றும், அவர் ஒரு 'சர்கஸ் ரிங் மாஸ்டர்' என்றும் அழைத்திருந்தார்.

மேலும், இந்திய அரசியலில் ஆம் ஆத்மி கட்சி, பொழுது போக்குகாக குத்து ஆட்டம் ஆடும் பெண்கள் போன்ற ஒரு கட்சி. அவர்கள் ஆட்சிக்கு வந்த புதிதில், சேதன் பகத் போன்ற எழுத்தாளர்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர். ஆனால், இப்பொழுது, ஆம் ஆத்மி கட்சி மேற் கொள்ளும் கோமாளி தனமான நடவடிக்கைகள், அவரையே சங்கட பட வைத்து இருக்கின்றது என்று சிவ சேனா, சாம்னா பத்திரிக்கையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media