BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 19 March 2014

மோடி இரு தொகுதிகளில் போட்டி. பாஜக தலைவர்கள் பதவிக்காக ஏன் இப்படி அலைகிறார்கள்?-காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர்


காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளரும் ஹரியானாவின் மாநில அமைச்சருமான ரந்தீப் சுர்ஜிவாலா, பாஜக தலைவர்கள் பதவிக்காக அலைகிறதாக‌ குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்தர மோடி வாரணாசி தொகுதியை தேர்ந்தெடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர் குஜராத்திலும் போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகின்றன. இது தனது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாமல் அவர் தவிப்பதைக் காட்டுகிறது.

இவரைபோல் பாஜகவின் அனைத்து தலைவர்களும் அங்கும் இங்கும் அலைபாய்ந்து வருகின்றனர். பாதுகாப்பான தொகுதிகளுக்காக ஒருவர், மற்றவருடைய தொகுதியைப் பறிப்பதும் நிகழ்கிறது.

காஜியாபாத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ்பப்பரிடம் தோற்றுவிடுவோம் எனப் பயந்து காஜியாபாத்தில் இருந்து லக்னோவிற்கு ஓடி விட்டார் ராஜ்நாத்சிங்.

உத்தரப்பிரதேச பாஜக சட்டமன்றத் தலைவரான கல்ராஜ் மிஸ்ரா வழக்கமாக போட்டியிடும் கிழக்கு லக்னோ தொகுதியை விட்டு, தேவரியாவில் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேசத்தின் டீக்கம்கரையைச் சேர்ந்த உமா பாரதியை உத்தரப் பிரதேசத்தின் மஹோபாவில் எம்.எல்.ஏவாக்கினார்கள். அவர் அங்கேயே எம்பி தொகுதிக்கு போட்டியிடாமல் ஜான்சிக்கு மாறி விட்டார்.

டெல்லியை சேர்ந்த அருண்ஜெட்லி அதன் ஏழு தொகுதிகளில் ஒன்றில்கூட போட்டியிட மறுத்து பாதுகாப்பான சீட் என அமிர்தசரஸில், மற்றொருவரின் வாய்ப்பை பறித்துக் கொண்டார். மூத்தவர்களுக்கு மதிப்பளிக்கும் கலாச்சாரம் கொண்ட பாஜக அதன் மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அவர் தனது விருப்பத்தை தெரிவித்தும் இன்னும் சீட் ஒதுக்காமல் இருக்கிறது எனத் தெரிவித்தார்.

ஐ.பி.எல் சீசன் 7 முதல் கட்ட போட்டிக்கான‌ அட்டவணை வெளியீடு



ஏப்ரல் 16-ம்தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் போட்டியில் மும்பையும் கொல்கத்தாவும் களம் இறங்குகின்றனர். ஏப்ரல் 17-ம்தேதி ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன.

18-ம் தேதி அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணியும் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன.

மற்ற போட்டிகளின் அட்டவணை பின்வருமாறு:

ஏப்.18.    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் (அபுதாபி)

ஏப்.19.    ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் -மும்பை இந்தியன்ஸ் ,கொல்கத்தா நைட்ரைடர்ஸ் -டெல்லி டேர்வில்ஸ் (துபாய்)

ஏப்.20.    ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப்  (ஷார்ஜா)

ஏப்.21.    சென்னை சூப்பர் கிங்ஸ் -டெல்லி டேர்வில்ஸ் (அபுதாபி)

ஏப்.22.    கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ஷார்ஜா)

ஏப்.23.    ராஜஸ்தான் ராயல்ஸ்  - சென்னை சூப்பர் கிங்ஸ் (துபாய்)

ஏப்.24.    ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (ஷார்ஜா)

ஏப்.25.    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -டெல்லி டேர்வில்ஸ் (துபாய்) ,சென்னை சூப்பர்கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (துபாய்)

ஏப்.26.    ராஜஸ்தான் ராயல்ஸ் -   ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் (அபுதாபி) ,கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (அபுதாபி)

ஏப்.27.    டெல்லி டேர்வில்ஸ்- மும்பை இந்தியன்ஸ் (ஷார்ஜா) ,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர்கிங்ஸ் (ஷார்ஜா)

ஏப்.28.    ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் -  கிங்ஸ் லெவன் பஞ்சாப் (துபாய்)

ஏப்.29.    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (அபுதாபி)

ஏப்.30.    மும்பை இந்தியன்ஸ் -  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (துபாய்)

இட ஒதுக்கீட்டினை விட்டுக்கொடுத்து, தனது குடும்பத்தினருக்கு அரசியலில் இடங்களைப் பெற்றுக் கொண்ட கருணாநிதி


தென்காசி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசனை ஆதரித்து சங்கரன்கோவிலில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஜெயலலிதா, "கருணாநிதியை பொறுத்தவரையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அவருக்கு முக்கியமில்லை. தன் குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படுகிறதா என்ற அந்த இட ஒதுக்கீடு தான் அவருக்கு முக்கியம்." என்று கூறினார்.

இது குறித்து அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது:

"அண்மையில் வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில், "பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் கமிஷன் பரிந்துரையை முழுமையாக அமல்படுத்துதல்" என்ற தலைப்பின் கீழ் "ஆண்டுகள் 17 ஆன பின்பும்; இன்று வரை பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படாமல்; மத்திய அரசின் ஏ பி சி டி ஆகிய பிரிவுகளில் உள்ள இடங்களில் இன்றைய நிலையில் 14 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய ஒன்றாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தீர்க்க தி.மு.கழகம் மத்திய அரசை வலியுறுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மண்டல் கமிஷன் அறிக்கை என்பது 1993-ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரலாறு கூட தெரியாமல் 17 ஆண்டுகள் ஆன பின்பும் 27 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 14 விழுக்காடு மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது யார்? தி.மு.க. தானே மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது? இட ஒதுக்கீட்டை முழுமையாக ஏன் பின்பற்றவில்லை என்று மத்திய அரசை தி.மு.க. ஏன் தட்டிக் கேட்கவில்லை?

தி.மு.க-வினர் அமைச்சர்களாக இருந்த அமைச்சகங்களில் ஆவது இந்த இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டதா என்பதை கருணாநிதி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். தனது பேரனுக்கும், தி.மு.க-வினருக்கும் வளம் கொழிக்கும் இலாக்காக்களை கேட்டுப் பெற்ற கருணாநிதி; தகவல் தொழில்நுட்பத் துறையை தி.மு.க-விற்கு வற்புறுத்தி பெற்ற கருணாநிதி; தன் மகள் மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியிடம் மடிப்பிச்சை கேட்ட கருணாநிதி; பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முற்றிலும் பின்பற்றுமாறு மத்திய அரசை ஏன் வலியுறுத்தவில்லை?

கருணாநிதியை பொறுத்தவரையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அவருக்கு முக்கியமில்லை. தன் குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படுகிறதா என்ற அந்த இட ஒதுக்கீடு தான் அவருக்கு முக்கியம்.

தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையிலிருந்து இடஒதுக்கீட்டினை கருணாநிதி காவு கொடுத்துவிட்டார் என்பது தெளிவாகிறது. திரு. கருணாநிதியை பொறுத்தவரையில் இட ஒதுக்கீடு உட்பட எந்த கொள்கையிலும் அவருக்கு அக்கறை இல்லை. தன்னலம் என்ற ஒரே கொள்கையை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறார் கருணாநிதி.

17 ஆண்டுகளாக தன்னலத்திற்காக தமிழகத்தின் நலனை காற்றில் பறக்கவிட்ட கருணாநிதி; மீண்டும் தமிழகத்தின் நலன்களை காற்றில் பறக்கவிட உங்களிடம் வாக்கு கேட்க வருவார். ஏமாந்து விடாதீர்கள். இட ஒதுக்கீட்டினை விட்டுக்கொடுத்து; தனது குடும்பத்தினருக்கு அரசியலில் இடங்களைப் பெற்றுக் கொண்ட கருணாநிதிக்கும், தி.மு.க-விற்கும் வருகின்ற மக்களவைத் தேர்தலில் நீங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். வருகின்ற மக்களவை பொதுத் தேர்தலில் திமுக-வை நீங்கள் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்."

இவ்வாறு ஜெயலலிதா பிரச்சாரத்தில் பேசியிருந்தார். 

ஜெயலலிதா பொய் பிரச்சாரம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்: கருணாநிதி


தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுகவை பற்றி பொய் பிரச்சாரம் செய்து வருகிறார், அதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி  எச்சரித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

அலைக்கற்றை பற்றிய வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில்தான் உள்ளது. ஆ.ராசா குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கவில்லை. அவர் தொடர்ந்து ஆஜராகி வாதாடி வருகிறார். ஆனால், திமுக ஊழல் செய்ததாக ஜெயலலிதா பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நேரத்தில் முந்தைய ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா செய்த முறைகேடுகளைப் பற்றி நினைவுபடுத்த விரும்புகிறேன். டான்சி நில அபகரிப்பு, கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஓட்டல் கட்ட நிலம் வழங்கியது போன்ற வழக்குகளில் ஜெயலலிதா குற்றவாளி என்று கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கலர் டி.வி. வாங்கியதில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் ஜெயலலிதா மீது வழக்கு பதியப்பட்டது.

ஸ்பிக் நிறுவனப் பங்குகளை விற்றது குறித்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிபதி வெங்கடாசலம் அளித்த தீர்ப்பில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கையால் அரசுக்கு ரூ.28.29 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதை எம்.ஏ.சிதம்பரம், ஏ.சி.முத்தையா, ஜெயலலிதா ஆகியோர் சேர்ந்தோ, தனித்தனியாகவோ 6 மாதத்துக்குள் ஈடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

தற்போது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜாராகாமல் இருக்க பல வழிகளைக் கையாண்டு வருகிறார்.

இப்படி ஜெயலலிதா மீதான பல வழக்குகளில் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் கருத்துகளை, தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். பின்னர் ஜெயலலிதா ஆட்சியில், சில வழக்குகளை மேல்முறையீடு செய்து, தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

2ஜி வழக்கைப் பொருத்தவரை அது விசாரணையில் உள்ள ஒன்று. இறுதித் தீர்ப்பு வந்த பிறகுதான் யார் குற்றவாளி என்பது தெரியவரும். எனவே, திமுக மீது குற்றம்சாட்டுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

மறுபடியும், மோடியை கிண்டலடித்த‌ சல்மான் குர்ஷித், பாஜக கண்டனம்


சமீபத்தில் தான் குஜராத் கலவரம் நடக்கும் போது, அதை தடுக்க இயலாத நரேந்திர மோடி 'இம்பொடென்ட்' என்று சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்.

இந்நிலையில் பரூகாபாத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையி்ல், “2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடிக்கு முக்கிய பங்கு உண்டு. இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றம் இவரை விசாரணைக்கு அழைக்கவே இல்லை. ஆனால் மோடி தனக்கும் இக்கலவரத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறி வருவது, மழலையர் பள்ளியில் நற்சான்றிதழ் பெற்ற மாணவன், டாக்டர் பட்டம் பெற்றதாக நினைத்துக் கொள்வது போன்றது” என்று தெரிவித்துள்ளார்.

அழகிரியுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது:கட்சியினருக்கு திமுக கடும் எச்சரிக்கை


கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியுடன் திமுகவினர் எந்த விதமான தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என்பது பற்றி திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் போற்றி வளர்ந்து வரும் கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில், யார் செயல்பட்டாலும் அதை என்றைக்கும் கழகத்தின் தலைமை பொறுத்துக் கொள்ளாது என்பதைக் கடந்தகால கழக வரலாற்றை தெரிந்தவர்கள் உணர்வார்கள்.

இன்றையச் சூழ்நிலையில் கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விலக்கி வைக்கப்பட்டுள்ள தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேச சந்திப்பு என்ற பெயரில் ஆங்காங்கு கூட்டங்கள் ஏற்பாடு செய்து, கழகத் தோழர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்ற செய்தி தலைமைக் கழகத்திற்குக் கிடைத்து வருகிறது.

திமுகவில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியுடன் எந்தவிதமான தொடர்பும் கழகத் தோழர்கள் யாரும், எந்தப் பொறுப்பில் உள்ளவர்களாயினும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை மிகவும் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வறிக்கையை மீறி கழக உறுப்பினர் எவரும் செயல்படுவதாக தலைமைக்குத் தகவல் வருமேயானால், அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் அந்த செய்தி குறிப்பில் கூறியிருந்தார்.

ஒவ்வொரு மாநிலமும் ஒரு பூவுக்கு ஒப்பானது. பல்வேறு பூக்களைக் கட்டி தொடுத்தால்தான் இந்தியா என்ற பூங்கொத்து முழுமை பெறும்



தேர்தலை முன்னிட்டு அருணாச்சலப் பிரதேசம், ஹபோலி பகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

பாஜகவின் மதவாத கொள்கைகளால் நீண்ட காலமாக கட்டிக் காக்கப்படும் இந்த நாட்டின் மதச்சார்பின்மை சீர்குலைந்து வருகிறது. இதன் அடுத்த பரிணாமமாக இனவெறியும் தலைதூக்கி வருகிறது. வெறுப்புணர்வு, பிரிவினைவாதம் காரணமாகவே அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நிடோ தானியா டெல்லியில் கொலை செய்யப்பட்டார்.

ஒவ்வொரு மாநிலமும் ஒரு பூவுக்கு ஒப்பானது. பல்வேறு பூக்களைக் கட்டி தொடுத்தால்தான் இந்தியா என்ற பூங்கொத்து முழுமை பெறும். 1972-ம் ஆண்டில் அருணாச்சல் பிரதேசத்துக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி யூனியன் பிரதேச அந்தஸ்தை அளித்தார். 1987-ல் ராஜீவ் காந்தி மாநில அந்தஸ்தை வழங்கினார்.

கடந்த 2008-ம் ஆண்டில் ரூ.10,000 கோடி மதிப்பிலான சாலை திட்டப் பணிகள் நிறை வேற்றப்பட்டன. அருணாச்சல் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு ஆரம்பம் முதலே காங்கிரஸ் அரும்பணியாற்றி வருகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

மோடியை போலவே இருக்கும் அபிநந்தன் பாதக்



நேற்று முன் தினம் நடந்த ஹோலி பண்டிகையின்போது வாரணாசி மக்கள் மோடியை போலவே இருக்கும் நபரை பார்த்து குழப்பம் அடைந்தனர். நகரின் கங்கை கரைகளில் நண்பர்களுடன் நரேந்திர மோடி உலவுவதாக தகவல்கள் பரவின. இதைப்பார்க்க வந்த கூட்டத்தினர் மோடியைப்போல் தோற்றம் கொண்டவரை பார்த்து ஆச்சரியப்பட்டனர். அவரது பெயர் அபிநந்தன் பாதக், உத்தரப் பிரதேசத்தின் சஹாரான்பூரை சேர்ந்த இவர், மோடியைவிட சற்று உயரம் குறைவானவர். பாஜகவில் உறுப்பினராக உள்ளார்.

இதைப் பற்றி அபிநந்தன் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "மோடி பிரதமராக வர வேண்டும் எனபல வருடங்களாக காத்திருக்கிறேன். அவரை போலவே நான் இருப்பதை பார்த்து பலரும் ஏமாந்து விடுகிறார்கள். இதன் பலனை மோடிக்கே அளிக்க வேண்டி வாரணாசியில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இதற்காக, பாஜக தலைமையிடம் அனுமதி கேட்டு காத்திருக்கிறேன்.’ எனக் கூறினார்.

அதிமுக பிரச்சாரத்தின் போது, ஜெயலலிதா படம் போட்ட முகத்திரை வழங்கிய போலீஸ் மீது திமுக புகார்


தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் தி.மு.க. சார்பில், ஜெயலலிதா படம் போட்ட  முகத்திரையை வழங்கிய போலீஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16-ந்தேதி கள்ளக்குறிச்சி தொகுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். அங்கு வந்த கூட்டத்தினருக்கு ஜெயலலிதாவின் படம் போட்ட முகத்திரையை போலீஸ் அதிகாரி ஒருவர் வழங்கிக்கொண்டிருந்தார். பத்திரிகையில் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அந்த போலீஸ் அதிகாரி சட்டப்படி செயல்படாமல், அ.தி.மு.க. கட்சிக்காரர் போல் செயல்பட்டு இருக்கிறார். இது சட்டவிரோதம் மட்டுமல்ல, தேர்தல் விதிகளை மீறிய நிகழ்வாகும்.

மேலும், அரசு எந்திரம் முழுவதும், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்காக இயக்கப்படுகிறது என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. எனவே அந்த போலீஸ் அதிகாரியை தேர்தல் பணியாற்றத் தடை செய்ய வேண்டும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நரேந்திர மோடியை யாருக்கும் தெரியாது- ப.சிதம்பரம்


சிவகங்கையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ப.சிதம்பரம், "தமிழ்நாட்டில் நரேந்திர மோடியை யாருக்கும் தெரியாது, அவரை கண்டு யாரும் பயப்படவும் இல்லை, வாரணாசி உட்பட இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக மோடி இருப்பதால், ஒரு வேளை பாஜகவிற்கு வேட்பாளர்களுக்கு பற்றாகுறையா?" என்று அவர் கேட்டிருந்தார்.

அருண் ஜெய்ட்லி காங்கிரஸ் சார்பில் போட்டியிட மூத்த தலைவர்கள் ஒதுங்குவதாக கூறியிருப்பது பற்றி கேட்ட போது, "அருண் ஜெய்ட்லி தனது முதல் தேர்தலை 62வது வயதில் சந்திக்கிறார். நான் 30 வருடங்களாக தேர்தல்களை சந்தித்து வருகிறேன். " என கூறினார்.

வாரணாசி தொகுதியில், மோடியை எதிர்த்து ஒரு பலமான வேட்பாளரை காங்கிரஸ் போட்டியிட வைக்கும் என சிதம்பரம் கூறினார்.

சிதம்பரம், சிவகங்கை தொகுதியில் ஏழு முறை தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார்.

தமிழ்நாட்டில், காங்கிரஸ் கூட்டணி அமைக்க முடியாதது பற்றி கேட்ட போது, "திமுகவுடன் எந்த தேசிய கட்சியும் கூட்டணி வைக்கவில்லை. தேசிய அளவில் திராவிட கட்சிகள் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதியாக இருக்க முடியாது, திமுக ஒரு புறக்கணிக்கப்பட்ட கட்சி." என்று அவர் கூறியிருந்தார்.

இது குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்!
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media