BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 31 March 2014

சோனியா, ராகுலை துகில் உரித்து, இத்தாலிக்கு அனுப்ப வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ.

சோனியா, ராகுலுக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஹீராலால் ரேகர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில்  பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்டு, "பாரதீய ஜனதா கட்சி மத்தியில் நிச்சயம் ஆட்சியில் அமரும். அதன் பிறகு சோனியா, ராகுல் இருவரும் துகில் உரியப்பட வேண்டும். அவர்களை இத்தாலிக்கே திருப்பி அனுப்ப வேண்டும். " என்று கூறினார்.

ஹீராலால் ரேகரின் இந்த பேச்சு இன்று காலை இணையத் தளங்களில் வெளியானது. இது காங்கிரஸ் தொண்டர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து ஹீராலால் எம்.எல்.ஏ. , "நான் பேசியதை தவறாக சித்தரித்து விட்டனர். நான் தனிப்பட்ட முறையில் யார் பெயரையும் குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை. என்னுடைய இந்த பேச்சால், யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். " என்று தெரிவித்து இருந்தார். இருந்தாலும், பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது தேர்தல் கமிஷனில் புகார் செய்ய காங்கிரசார் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் குடிநீர் இல்லை, மதுக்கடைகளை தான் அதிகமாக திறந்திருக்கிறார் ஜெ.- பிரேமலதா

விழுப்புரம் தே.மு.தி.க. வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா மரக்காணத்தில் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அவர் பேசியதாவது:

விழுப்புரம் தே.மு.தி.க.வின் கோட்டை. இங்குதான் உளுந்தூர்பேட்டையில் லஞ்சம் ஒழிப்பு மாநாடு நடத்தி காட்டினோம். ஜெயலலிதா தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் மின்வெட்டு, தண்ணீர் இல்லை. டாஸ்மாக் கடைகள்தான் அதிகமாக திறந்துள்ளனார். டாஸ்மாக் கடையில் ரூ.24 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது.

ஜெயலலிதா 40 தொகுதிகளை வைத்துக்கொண்டு பிரதமராக வேண்டி ஓட்டு கேட்கிறார். ஆனால் 272 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் பிரதமராக முடிவும். ஆனால் ஜெயலலிதா தமிழ்நாட்டின் 40 தொகுதியை வைத்துக்கொண்டு நான்தான் பிரதமர் என்று பகல் கனவு காண்கிறார்.

நரேந்திரமோடி பிரதமரானால் தமிழ்நாட்டில் மீனவர் பிரச்சினை தீர்க்கப்படும். மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். நதிகள் இணைப்பு நடைபெறும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அனைவருக்கும் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்படும்.

கலைஞரை சுற்றி சூழ்ச்சி கும்பல் தான் உள்ளது. அந்த கும்பலின் நிர்பந்தத்தால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது-அழகிரி

நாமக்கல்லில் இன்று மு.க.அழகிரி, தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்தார். அவர்களை ச‌ந்தித்த பிறகு,  நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அழகிரி அளித்த பதில்களும் பின் வருமாறு:

கேள்வி: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உயிரோடு இருந்தால் அவர் உங்களுக்கு ஆதரவாக இருந்து இருப்பாரா?

பதில்: அவர் உயிரோடு இருந்தால் எனக்கு மட்டுமல்ல தொண்டர்களுக்கும் ஆதரவாக இருப்பார். எனக்கும் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

கே. ஏன் உங்களை கட்சியை விட்டு நீக்கினார்கள்.?

ப: தலைவர் கலைஞரை சுற்றி சூழ்ச்சி கும்பல் தான் உள்ளது. அந்த கும்பலின் நிர்பந்தத்தால் எனக்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.

கே.பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுமா?

ப: தி.மு.க. 3-வது இடத்துக்கு போகும்.

கே:.அப்போது யார் தான் தேர்தலில் வெற்றி பெறுவார்கள்?

ப: எனக்கு ஜோசியம் சொல்லத் தெரியாது.

கே. தனிக்கட்சி தொடங்குவீர்களா?

ப: தனிக்கட்சி தொடங்க மாட்டேன். தி.மு.கவில் தான் இருப்பேன். தலைவர் கலைஞர்தான் எனக்கு தலைவர். தி.மு.க. கரை போட்ட வேட்டி தான் கட்டுவேன்.

போலீஸார் மதிமுகவினரிடம் நடந்து கொண்ட விதத்தை எதிர்த்து வைகோ சாலை மறியல்

வைகோ இன்று அருப்புக்கோட்டைக்கு விருதுநகரில் இருந்து புறப்பட்ட போது, அவருடன் கட்சியினரும், தொடர் படையினரும் அடுத்தடுத்த வாகனங்களில் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர்.

அவர்களது வாகனங்கள் பெரியவள்ளிகுளம் அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், வைகோவுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த அவரது கட்சியினரின் வாகனங்களை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டப்போது, அக்கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, தங்களை சப்-இன்ஸ்பெக்டர் ஒருமையில் பேசியதாகக் கூறி, மதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த வைகோ தனது வாகனத்தையும் சோதனையிடுமாறு போலீஸாரை கேட்டுள்ளார். அத்துடன், போலீஸாரின் நடந்து கொண்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வைகோ சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.

"வாகன சோதனை நடத்துவதை விட்டுவிட்டு, வாகனத்தை நிறுத்தி 'இறங்குங்கடா, யாருடா நீங்க?' என்றெல்லாம் ஒருமையில் பேசியது சரியல்ல. போலீஸார் நடந்துகொண்ட முறை பண்பாட்டுக் குறைவானது. இந்த போக்கை அனுமதிக்கக்கூடாது. நான் பிரச்சினை செய்யவேண்டும் என்பதற்காக சாலையில் உட்காரவில்லை. இது மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் அமர்ந்திருக்கிறேன்" என்றார் வைகோ.

மேலும், "முதல்வர் ஜெயலலிதா செல்லும்போது 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது, அப்போது தேர்தல் அதிகாரிகள் எங்கே போனார்கள்?" என்று போலீஸாரிடம் அவர் கேள்வி எழுப்பினார். பின்பு அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் உதயகுமார் வைகோவுடன் பேசியதைத் தொடர்ந்து, பிரச்சனை முடிவுக்கு வந்தது.

மோடிக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்- சரத்பவார்



மகாராஷ்டிரா மாநிலத்தில், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் விஜய் பாம்ப்ளேவை ஆதரித்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது, "மோடி அண்மைக்காலமாக அர்த்தமற்ற விஷயங்களை பேசி வருகிறார். அவருக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்" என்றார்.

மேலும், மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு பற்றியும் தியாகம் பற்றியும் என்ன தெரியும் என கேள்வி எழுப்பியதோடு காங்கிரஸ் கட்சியின் தியாகமே இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்டது என்று சரத்பவார் கூறினார்.

குஜராத் கலவரம் குறித்து விமர்சித்த பவார், "2002 குஜராத் கலவரத்தின் போது சிறுபான்மையினரும், காங்கிரஸ் எம்.பி அசான் ஜாஃப்ரியும் படுகொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்தாரை என்றைக்குமே சந்தித்து மோடி ஆறுதல் கூறியதில்லை. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நலன் மீதும் மோடிக்கு எந்த அக்கறையும் இல்லை. மோடி, இந்திய தேசத்திற்கு ஒரு ஆபத்து. " என்று பேசியிருந்தார்.

"கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை..." என்று அழகிரியை பார்த்து ஜோதிடம் கூறிய எஸ்.வி.சேகர்

மு.க.அழகிரியை நேற்று காலை பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர்  சந்தித்தார். காலையில் அழகிரியின் வீட்டுக்கு சென்ற‌ அவர், அழகிரியுடனான சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் கூறியது:

மு.க.அழகிரி என் நண்பர். மதுரை வரும்போதெல்லாம் அவரை நான் சந்திப்பது வழக்கம். சிவகாசியில் இன்று எனது மோதி விளையாடு பாப்பா நாடகம் நடைபெறுகிறது. அதற்காக செல்லும் வழியில் அவரைச் சந்தித்து நட்புரீதியாகப் பேசினேன். அரசியலைத் தாண்டிய நட்பு இது. எனது, 3000-வது நாடகத்துக்கு ஜெயலலிதா வந்தார். 3500-வது நாடகத்துக்கு கலைஞரும், மூப்பனாரும் வந்தனர். 5001-வது நாடகத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்தார் என்றார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் எஸ்.வி.சேகர் கூறியதாவது:

அழகிரிக்கு ஆறுதல் கூறுவதற்காக வந்தீர்களா?

நான் ஆறுதல் கூறுவதற்காக வரவில்லை. அவர்களுக்குள் சமரசம் செய்து வைக்கவும் வரவில்லை. இது அரசியல் சந்திப்பும் கிடை யாது. ஏப். 14-ம் தேதிக்குப் பிறகு எல்லாம் தானாகவே சரியாகி விடும். நான் நிறைய பேருக்கு ஜோதிடம் சொல்லியிருக்கிறேன். கட்டம் சரியாக இருந்தால் யாரையும் கட்டம் கட்ட முடியாது. கட்டம் சரி யில்லை என்றால் யார் வேண்டுமானாலும் கட்டம் கட்டுவார்கள்.

அழகிரியை கட்சியில் இருந்து தானே நீக்கியிருக்கிறார்கள். கலை ஞரின் மகன், மு.க.ஸ்டாலின், கனி மொழியின் சகோதரர் என்ற உறவில் இருந்து அவரை நீக்க முடியாது. “பிளட் இஸ் திக்கர் தேன் வாட்டர்”.

நீங்கள் சார்ந்துள்ள பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்கிறது?

‘மோடி பிரதமராக வரப்போ கிறார், ப.சிதம்பரம் நிதி அமைச்சர் பதவியை இழக்கப் போகிறார்’ என்றதும் சென்செக்ஸ் புள்ளிகள் ஏற ஆரம்பித்துவிட்டன. எனது நாடகத்தில் ஒரு காட்சி வரும். ‘தீவிரவாதத்தை ஒழிக்க என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்பார். ‘நிதி அமைச்சரை, உள்துறை அமைச்சராக்கப் போகி றோம்’ என்று பதில் சொல்வார் இன்னொருவர். ‘ஏன்?’ என்று அவர் கேட்க, ‘ஷேர் மார்க்கெட்டை அழித்து ஒழித்தவர் இவர். தீவிர வாதத்தை ஒழிக்க மாட்டாரா?’ என்று பதில் சொல்வார்கள். இது சிதம்பரத்துக்குப் பொருந்தும். மத்தியில் 300 தொகுதிகளுக்கு மேல் வென்று பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். தன் செயல் திறத்தால் தொடர்ந்து 3 முறை மோடியே பிரதமர் பதவியை வகிப்பார்.

இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.

1993 டெல்லி குண்டுவெடிப்பில் கைதான புல்லர் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புது டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் காலிஸ்தான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த தேவிந்தர்பால் சிங் புல்லருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 2003-ம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு புல்லர் கருணை மனுவை அனுப்பினார். அதை 8 ஆண்டுகளுக்கு பிறகு 20011-ம் ஆண்டு மே 14-ம் தேதி குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.

புல்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று புல்லரின் மனைவி நவ்நீத் கவுர் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு வெளியாகும்வரை மரண தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு கடைசியாக கடந்த 27-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி ஆஜரானார். “தேவேந்தர்பால் சிங் புல்லரின் மரண தண்டனையை ஆயுளாகக் குறைப்பதில் மத்திய அரசுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.” என்று வாஹன்வதி தெரிவித்தார். வழக்கில் வரும் 31-ம் தேதி ஓர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி இன்று, தேவிந்தர்பால் சிங் புல்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆதாரம் இல்லாமல், பழிவாங்கும் நோக்கத்துடன் என் மீது பொய் வழக்கு போட்டதற்கு கண்டனங்கள்- அன்புமணி ராமதாஸ்

சாதி உணர்வை தூண்டியதாக அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

தருமபுரி மக்களவைத் தொகுதியில் சாதி உணர்வைத் தூண்டும் வகையில் குறுந்தகடுகளை வினியோகம் செய்ததாகக் கூறி என் மீதும் பா.ம.க. நிர்வாகிகள் சரவணன், அரசாங்கம் ஆகியோர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

அடிப்படை ஆதாரம் இல்லாமல், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்தப் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தருமபுரி மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக என்னை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.

அதைப் போலவே பரப்புரைக்காக நான் செல்லுமிடங்களில் எல்லாம் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து தங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதி என்னை வரவேற்கிறார்கள்.

 தருமபுரி தொகுதியின் பொது வேட்பாளராக கருதி எனக்கு பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர். தருமபுரி முழுவதும் எனக்கு ஆதரவான அலை வீசுகிறது.

தருமபுரி தொகுதியில் அனைத்து சமுதாய மக்களும் அமைதியாகவும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும். அப்போது தான் அனைத்து துறைகளிலும் தருமபுரி முன்னேறும் என்பதைத் தான் நான் பிரச்சாரம் செய்வதற்காக செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறேன்.

மனித வாழ்நிலை மேம்பாட்டுக் குறியீட்டில் தற்போது 28 ஆவது இடத்தில் இருக்கும் தருமபுரி மாவட்டத்தை முதல் ஐந்து இடங்களுக்குள் கொண்டு வருவேன் என்றும், மிகவும் பின்தங்கியுள்ள தருமபுரி மாவட்டத்தை அமைதியும், வளர்ச்சியும் நிறைந்ததாக மாற்றுவேன் என்றும் தேர்தல் பரப்புரையின் போது நான் அளிக்கும் வாக்குறுதிக்கு தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களிடையேயும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஆளுங்கட்சியினர், தோல்வி பயத்தில் காவல்துறையினரைத் தூண்டிவிட்டு பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளனர்.

பா.ம.க. பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடுவதன் மூலம் எனது வெற்றியை தடுத்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கும் ஆளுங்கட்சியினர், அதற்காகவே சாதி உணர்வை தூண்டுவதாகக் கூறி காவல்துறை மூலம் பொய் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

வாக்காளர்களிடையே வினியோகிக்கப்பட்டதாக கூறப்படும் குறுந்தகடு பற்றி எனக்கு எதுவும் தெரியாது; அந்த குறுந்தகட்டை நான் பார்த்ததும் இல்லை; அப்படி ஒரு குறுந்தகட்டை நான் கொடுக்கவும் இல்லை; கொடுக்கும்படி யாரிடமும் கூறவும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் நடக்காத ஒரு நிகழ்வுக்காக என் மீதும், பா.ம.க. நிர்வாகிகள் மீதும் வேண்டுமென்றே பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தருமபுரி தொகுதியில் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சாதி உணர்வை தூண்ட வேண்டிய தேவை எனக்கு இல்லை.

மாறாக, தோல்வி பயத்தால் துவண்டு கிடக்கும் ஆளுங்கட்சியினர் தான் பா.ம.க.வினர் மீது வழக்குத் தொடருவதன் மூலம் சாதி உணர்வைத் தூண்டி மலிவான அரசியல் லாபம் தேட முயற்சி செய்கின்றனர். ஆளுங்கட்சியின் இந்த முயற்சிக்கு அதிகாரிகளும் துணை போயிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தேர்தலுக்கு இன்னும் 25 நாட்கள் இருக்கும் நிலையில், ஆளுங்கட்சியினர் நினைத்தால் அவர்களே எங்களின் பெயரில் ஏதேனும் துண்டறிக்கைகளை வினியோகித்துவிட்டு, அதை நாங்கள் தான் செய்ததாகக் கூறி மீண்டும், மீண்டும் பொய் வழக்கு தொடரும் ஆபத்து உள்ளது.

எனவே, தேர்தல் ஆணையம் உடனடியாக இதில் தலையிட்டு, என் மீதும், பா.ம.க. நிர்வாகிகள் மீதும் தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறும்படி ஆணையிட வேண்டும்.

அதுமட்டுமின்றி, இது தொடர்பாக விசாரணை நடத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது பொய் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்"

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள பெரும்பாலான பெண்கள் மோசமாகவே நடந்து கொண்டுள்ளார்கள்-சல்மா

 
கவிஞர் சல்மாவுக்கு இந்த ஆண்டுக்கான இலக்கியப் பெண் எழுத்தாளருக்கான பெமினாவின் ’வுமன் ஆப் வொர்த் ’ என்ற விருது, சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல செய்தித்தாள் ஒன்றிற்கு, திமுக மகளிரணி பிரச்சாரக் குழுச் செயலாளரும், பிரபல பெண் கவிஞருமான சல்மா பேட்டியளித்து இருந்தார்.  

ஒரு பெண் பிரதமராக வந்தால் வரவேற்பீர்களா? என்ற கேள்விக்கு, "நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வருவது ஆணா, பெண்ணா? என்பது முக்கியமல்ல. நல்ல நிர்வாகம் தெரிந்தவராக இருக்க வேண்டும். பொதுவாக நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள பெரும்பாலான பெண்கள் மோசமாகவே நடந்து கொண்டுள்ளார்கள் என்பதுதான் வரலாறு. இலங்கையின் சந்திரிகா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, தமிழகத்தின் ஜெயலலிதா என அனைவருமே மோசமாக நடந்து கொண்டதுதான் வரலாறாக உள்ளது. பெண் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதற்காகக் கெட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. " என்று பரப்பரப்பாக பேசியுள்ளார்.

மேலும், அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டது கட்சியை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும், அவருக்கு மக்கள் மத்தியிலோ, தொண்டர்கள் மத்தியிலோ செல்வாக்கு இல்லை என்பது தலைமைக்கு தெரிந்ததனால் தான் தயக்கமின்றி அவர் நீக்கப்பட்டிருக்கிறார், அழகிரியின் செல்வாக்கு என்னவென்று இந்தத் தேர்தலுக்குப் பிறகு தெரிந்து விடும் என்றும் சல்மா கூறியுள்ளார்.

தென் மாவட்டங்களில், நெருக்கடி காலத்தில் கட்சியை வளர்த்தவர் அழகிரி, அவரை புறக்கணிப்பது சரியா என்று கேட்டபோது, திமுகவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து வகையிலும் பணியாற்றி, கட்சியை வளர்த்தவர் தளபதிதான் (ஸ்டாலின்). எனவே அவருக்குதான் செல்வாக்கு உள்ளது என்று பதிலளித்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media