BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 18 March 2014

தோனிக்கு எதிராக‌ செய்தி வெளியிட்ட ஜீ சேனலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு  ஐ.பி.ல் சூதாட்ட நிகழ்வுகளில் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்டு வந்த‌ ஜீ தொலைக்காட்சி சேனல் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக தோனி தாக்கல் செய்த மனுவில், 'கிரிக்கெட் சூதாட்டத்தில் எனக்கு தொடர்பு உள்ளதாகக் கூறி ஜீ நெட்வொர்க் தொலைக்காட்சி கடந்த சில வாரங்களாக செய்திகளை ஒளிபரப்பி வருகிறது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள், இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எனது நற்பெயருக்கும் புகழுக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

ஆகவே, அந்த நிறுவனம் இது தொடர்பான செய்திகளை தொடர்ந்து வெளியிட தடை விதிக்க வேண்டும்.

மேலும், அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் ஐபிஎஸ் ஜி.சம்பத்குமார் ஆகியோர் ரூ.100 கோடி நஷ்டஈடாகத் தரும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது, தோனி் தொடர்பான செய்தியைத் தொடர்ந்து வெளியிட ஜீ தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 2 வாரம் இடைக்கால தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஊட்டியில், மோடிக்கு வாக்கு சேகரித்த விஜயகாந்த், ஜெ.வை கடும் தாக்கு



ஊட்டியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து மேற்கொண்ட பிரச்சாரத்தில விஜயகாந்த் பேசியது:

 ஊட்டியில் உள்ள படுகர் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோருகிறார்கள். இதுவரை யாருமே அந்தக் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. ஊட்டியில் ஏழை மக்கள் மிகுதியாக இருக்கிறார்கள். ஆனால், ஒரு அரசு பொறியியல் கல்லூரிகூட இல்லை. ஊட்டியைப் பொருத்தவரை, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்கு தமிழக அரசு ஏதாவது செய்திருக்கிறதா?

டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கும் ஜெயலலிதா அரசு, ஏழைகளின் வளர்ச்சிக்கு ஏதேனும் இலக்கை நிர்ணயித்திருக்கிறதா? அம்மா உணவகம், அம்மா பார்மஸி, அம்மா குடிநீர்... இப்படி எல்லாவற்றுக்கும் அம்மா பெயர் வைக்கிறார்கள். மக்களைப் பாழ்படுத்தும் டாஸ்மாக் கடைகளுக்கு அம்மா மதுக்கடை என்று பெயர் வையுங்களேன்.

நான் படத்தில்தான் நடிப்பேன். நேரில் நடிக்கத் தெரியாது. இனி, என் மகன் படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். விஜயகாந்த் கோபப்படுகிறார் என்கிறார்கள். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பது பழமொழி.

மினி பஸ்சில் எங்கு பார்த்தாலும் இரட்டை இலை சின்னம் இருக்கிறது. அதை வெறும் ஓவியம் என்கிறார்கள். இலவசங்களை விலையில்லா பொருள்கள் என்கிறார்கள். எங்கு பார்த்தாலும் மின் வெட்டு, தண்ணீர் பிரச்சினை. ஆனால், குடிநீரை விலைக்கு விற்கிறார்கள். இதுதான் ஆட்சியா? 13 மாதங்களில் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்த ஜெயலலிதா, இப்போது யாருடைய ஆட்சியைக் கவிழ்க்க வாக்கு கேட்டு வருகிறார்கள். நான் 20 எம்.எல்.ஏ.க்களுடன் பிரதமரைப் பார்த்தேன். எந்தப் பிரச்சினையிலும் பிரதமரைப் பார்க்காத முதல்வர் ஜெயலலிதா, சாதாரண மக்களை எப்படிப் பார்ப்பார்?

 நான் ஷூட்டிங்குக்காக குஜராத் சென்றபோது, அகமதாபாத்தில் நேரில் பார்த்தேன். ஒரு மதுக்கடை கூட இல்லை. அதுதான் மோடி ஆட்சி. அந்த நல்ல ஆட்சி, இந்தியா முழுவதும் வேண்டும். அதற்கு மோடி பிரதமராக வேண்டும். இந்தியா வல்லரசாக நரேந்திர மோடிதான் பிரதமராக வேண்டும். குஜராத்தில் மிகுந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாகப் பார்க்கிறேன். தமிழக மக்களுக்கு நரேந்திர மோடி நன்மை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை.

இவ்வாறு விஜயகாந்த் ஊட்டியில் பேசியிருந்தார்.

ஈரோட்டில் உள்ள பெருந்துறை சிப்காட்டில் விஷவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் பலி


ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள ஆலை ஒன்றில், மோட்டார் குழாயை சரி செய்வதற்காக தொழிலாளி ஒருவர் முதலில் இறங்கியிருக்கிறார். அப்பொழுது அவர் மயக்கம் அடைந்து விழுந்து கிடப்பதை பார்த்து அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். அனைவரையுமே விஷவாயு தாக்கியதால், அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது

சிப்காட் வளாகத்தில் 7 பேரை பலிகொண்ட இந்த விஷவாயு விபத்து தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம் ஆத்மியின் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் உதயகுமார்


ஆம் ஆத்மி கட்சி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் போட்டியிட இருக்கிறார்.

ஆம் ஆத்மியில் பிப்ரவரி மாதம் இணைந்த உதயகுமார் கட்சியில் சேருவதற்கு முன்பு, சில நிபந்தனைகளை விதித்து இருந்தார். அணு உலைகளை அமைக்கும் முன் அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்ட பின்னரே முடிவு செய்ய வேண்டும், கட்சியின் தேசிய கமிட்டியில் தமிழர்களுக்கு இடம் அளிக்க வேண்டும், பரவலாக்கப்பட்ட தலைமை கட்சியில் இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை  ஆம் ஆத்மி ஏற்றுக் கொண்டதால் உதயகுமார் அக்கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் அவர் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகி இருக்க வாய்ப்பே இல்லை-ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு


மாயமான மலேசிய விமானம் எங்கேயாவது மோதியோ, நடுவானில் வெடித்துச் சிதறியோ விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை என ஐ.நா. சபையின் ஆதரவோடு இயங்கும் க‌ண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தகவலை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்திதொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்த அமைப்பு, சரவ்தேச கண்காணிப்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விமான விபத்துக்களை 3 அல்லது 4 வழிகளில் இந்த அமைப்பு உறுதிப்படுத்துகிறது.  உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த அமைப்பு உயர்தர சென்சார்களை நிறுவியுள்ளது. அணுஆயுதச் சோதனையோ, விமான விபத்தோ, பூகம்பமோ ஏற்பட்டால் உடனே அதன் தாக்கத்தை சென்சார்கள் பதிவு செய்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.

அதனால் இது வரை சேகரித்த விவரங்கள் மூலம் விமானம் விபத்துக்கு உள்ளாகவில்லை என்றே தெரிகிறது என்ற தகவலை அவர் பகிர்ந்தார்.

அதிமுகவுடன் கூட்டணி இருந்த காலம்தான் எனது அரசியல் வாழ்க்கையிலேயே மிகவும் வேதனையான காலமாகும் என்று வாஜ்பாயே கூறியிருந்தார்- கருணாநிதி


திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை வெற்றி பெறச் செய்த கருணாநிதி, அதைத் தடை செய்ய பாடுபடுவோம் என்று அந்தர் பல்டி அடித்திருக்கிறார். சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தன்னலத்துக்காக தன்னை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி போன்ற கருணாநிதி." என்று என்னை ஜெயலலிதா கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, முடிந்த அளவுக்கு தோழமைக் கட்சியோடு அனுசரணையாக நடந்து கொண்டோம். அதேநேரத்தில், இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு எல்லை கடந்து நடந்து கொண்ட நேரத்தில், கூட்டணியை விட்டு விலகி வரவும் நாங்கள் தயங்கவில்லை.

ஆனால், 1998-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய ஆதரவுக் கடிதத்தைக்கூட வேண்டுமென்றே தாமதம் செய்து முரண்டு பிடித்தார்.

திமுக அரசைக் கலைக்க வேண்டும், தன் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். முன்னாள் தலைமைச் செயலாளர் அரிபாஸ்கரின் சஸ்பெண்டை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பன போன்ற பல சிபாரிசுகளை தன் கைப்படவே எழுதிக் கொடுத்திருந்தார்.

சொந்த நலனுக்காக எண்ணியதெல்லாம் முழுமையாக நிறைவேறவில்லை என்பதால் ஆத்திரப்பட்ட ஜெயலலிதா, பாஜக ஆட்சிக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்று, வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ காரணமாக இருந்தார். அதிமுகவுடன் கூட்டணி இருந்த காலம்தான் எனது அரசியல் வாழ்க்கையிலேயே மிகவும் வேதனையான காலமாகும் என்று வாஜ்பாயே கூறியிருந்தார்.

மீனவர்களுக்காக நான் எதுவும் செய்யவில்லை என்பதைப் போல தூத்துக்குடி கூட்டத்தில் ஜெயலலிதா பேசியிருக்கிறார். இருநாட்டு மீனவர் பிரதிநிதிகளைச் சந்திக்க, தேதி குறிப்பிட வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் பதில் வரவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார். உண்மையிலேயே, மீனவர்களின் நலனில் ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால், பிரதமரின் கடிதத்துக்கு பதிலெழுத 6 மாதங்கள் தாமதம் செய்திருப்பாரா? மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட போதெல்லாம், பிரதமருக்கு ஒரு கடிதத்தை எழுதிவிட்டு, அதை அவசர அவசரமாக ஏடுகளிலே விளம்பரப்படுத்திக் கொண்டால், மீனவர்களைப் பாதுகாப்பதாக அர்த்தமாகிவிடுமா?

இவ்வாறு தனது கேள்வி-பதில் அறிக்கையில் கருணாநிதி கூறியிருந்தார்.

ஏப்ரல் 11ம் தேதி தமிழகம் வருகிறார் கெஜ்ரிவால்; சென்னை, கோவையில் பிரச்சாரம்


ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள ஏப்ரல் 11-ம் தேதி அர்விந்த் கேஜ்ரிவால் தமிழகம் வருகிறார். சென்னையில் பொதுக் கூட்டத்திலும், கோவையில் திறந்தவெளி பிரச்சாரத்திலும் பேசவிருக்கிறார்.

 இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தமிழக மாநில ஒருங்கிணைப்பாளர் லெனின் கூறியதாவது:

தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். எங்களுக்கு பல்வேறு சமூக இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. 40 தொகுதிகளில் இருந்து போட்டியிட 500க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து மனு செய்துள்ளனர். 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் தயாராக உள்ளது. மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். ஊழலை ஒழிக்கவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ள ஏப்ரல் 11-ம் தேதி தமிழகம் வருகிறார். 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் இங்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார். சென்னையில் பொதுக் கூட்டத்திலும், கோவையில் திறந்தவெளி பிரச்சாரத்திலும் ஈடுபடவுள்ளார்.

இவ்வாறு லெனின் கூறினார்.

ஆம் ஆத்மிக்கு 70 லட்ச ரூபாய் நிதி கிடைத்தது எப்படி?


ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தல் நிதி திரட்டுவதற்காக பெங்களூரில் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் விருந்து உண்ண‌ விரும்புபவர்கள், 20 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 15-ம் தேதி நடைபெற்ற இந்த நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சி ஆம் ஆத்மிக்கு வெற்றிகரமாக நடந்தது.

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அரசியல் பேசிக் கொண்டே உணவருந்துவதற்கு 20 ஆயிரம் ரூபாயை செலவு செய்ய முன்வந்த 250 பேர் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் மதுவை தவிர்த்து சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் பறிமாறப்பட்டன.

இந்த நிகழ்ச்சியின் மூலமாகவும், இதேபோல், முன்னர் நாக்பூரில் சுமார் 150 பேர் தலா 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி பங்கேற்ற மற்றொரு நிகழ்ச்சியின் வாயிலாகவும், இதுவரை ஆம் ஆத்மி கட்சிக்கு சுமார் 70 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக சேர்ந்துள்ளது.

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை, எந்த கொம்பனாலும் உருவாக்க முடியாது. அடித்தாலும், அணைத்தாலும் நாங்கள் உங்கள் பிள்ளைகள்- ப.சிதம்பரம்


சிவகங்கையில் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கும் முன்னரே, பிள்ளையார்பட்டியில் ப.சிதம்பரம் தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். பிள்ளையார்பட்டியில் தொடங்கி 21 இடங்களில் வாக்கு சேகரித்த அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கடந்த 130 ஆண்டுகளாக எட்டு தலை முறையாக நாட்டு மக்களுக்கு உழைத்த கட்சி. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை, எந்த கொம்பனாலும் உருவாக்க முடியாது. அடித்தாலும், அணைத்தாலும் நாங்கள் உங்கள் பிள்ளைகள்.

காங்கிரஸ் கட்சி வேண்டாமென்று திமுகவினர் ஒதுக்கி விட்டனர். பாஜகவோடு எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என கருணாநிதி அறிவித்திருக்கிறார். மூன்றாவது அணியிலும் திமுக கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் துணையும் கிடையாது. இதுபோன்ற சூழ்நிலையில் திமுக வினர் வெற்றிபெற்று என்ன செய்யப் போகிறார்கள்?

அதேபோல, அதிமுகவுக்கு பாஜகவோடு கூட்டணி கிடையாது. காங்கிரஸ் அவர்களுக்கு பரம விரோதி. கூட இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஜெயலலிதா கழற்றி விட்டுவிட்டார். ஆக, தனியாக வெற்றிபெற்று டெல்லியில் போய் அதிமுகவினர் என்ன செய்ய போகிறார்கள்? இரண்டு சண்டைக் கோழிகளும் தமிழ் நாட்டுக்குள் சண்டை போட்டுக் கொள்ளட்டும்.

மத்திய அரசை நடத்தக்கூடிய அதிகாரமோ, செல்வாக்கோ, வாய்ப்போ, வசதியோ அதிமுக, திமுகவுக்கு கிடையாது. பத்து நாள்களுக்கு முன்புவரை ஜெயலலிதா நான்தான் அடுத்த பிரதமர் எனச் சொல்லிக்கொண்டிருந்தார். அவர்களது கட்சிக்காரர்களும், அம்மாதான் அடுத்த பிரதமர் என்றனர். அம்மா தலைமையில் ஆட்சி எனச் சொன்னவர்களின் சுருதி, தற்போது குறைந்துவிட்டது. தற்போது அதிமுக அங்கம் பெறும் ஆட்சி என மாற்றிப் பேசுகிறார்கள்.
டெல்லியிலே ஆட்சி அமைக்க கூடிய கட்சி காங்கிரஸ்தான். ஆனால் பாஜகவினர் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக வில் முதல் வரிசைத் தலைவர்களில் தமிழர், மலையாளி, கன்னடத்துக்காரர், மேற்கு வங்கத்துக்காரர் யாராவது இருக்கிறார்களா?

பாஜக இந்தி மொழி பேசக்கூடிய மக்கள் மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய கட்சி. அங்கு முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்களுக்கு இடம் கிடையாது. மதவெறியர்களை பிரதிபலிக்கக் கூடிய கட்சி பாஜக.

தமிழகத்தில் ஒரு ஆட்சி வரலாம். போகலாம். ஆனால், டெல்லியில் காங்கிரஸ் அரசு தொடரவேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு தனது பிரச்சாரத்தின் போது சிதம்பரம் பேசியிருந்தார்.

கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் பாமகவினர்- தேமுதிக‌ குற்றச்சாட்டு


தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்பட‌வில்லை. பாமகவுக்கு ஏற்கெனவே 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 12 தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேமுதிக போட்டியிடுள்ள 14 தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டி யலை கட்சித் தலைவர் விஜயகாந்த் நாளை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்க படுகிறது. இதுதொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘பாஜக கூட்டணியில் எங்களுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கு 8 தொகுதிகள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது மேலும் சில தொகுதிகளைக் கேட்டு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். அவர்கள் வெளியேறுவதற்கு திட்டமிட்டே இவ்வாறு கூடுதல் தொகுதிகளை கேட்கிறார்களோ என்று கருதுகிறோம். எங்களுக்கான தொகுதிகளை பாஜக உறுதி செய்துள்ளது. எனவே, தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியலை 19-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் நடக்கும் இடத்திலேயே விஜயகாந்த் அறி விக்க உள்ளார்’’ என்று அவர் கூறினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media