BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 17 March 2014

நெய்வேலி நிலக்கரி நிறுவன ஊழியர்கள் 24 மணி நேரம் வேலைநிறுத்தம்


நெய்வேலி என்.எல்.சி. வளாகத்தில் இன்று மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் சுட்டதில் ஒப்பந்த ஊழியர் ராஜா பலியானார். இதனைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து துப்பாக்கியால் சுட்ட வீரரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தொழிலாளர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து என்.எல்.சி.யில் 24 மணி நேரம் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் நாளை இரவு 10 மணி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

நாமக்கல்லைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களுக்கு நாமம் இட்ட திமுக , அதிமுக- விஜயகாந்த்



நாமக்கல் தொகுதியில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விஜயகாந்த் பேசியது:

 "நாமக்கல்லைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்களுக்கு முந்தைய திமுக அரசும், தற்போதைய அதிமுக அரசும் நாமம் இட்டுள்ளனர். தமிழகத்தில் விலைவாசி கடுமையாக அதிகரித்துவிட்டது. அதைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அமைச்சரவையில் இருந்த திமுக அமைச்சர்களும் தமிழக மக்களுக்காக எதையும் செய்யவில்லை.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்ளும்போது, சாலைகளில் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

மக்களை ஏமாற்றும் திமுக, அதிமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் நல்லாட்சி புரிந்திருந்தால், நான் அரசியலுக்கே வந்திருக்க மாட்டேன். மக்கள் விரோத கூட்டணி பற்றி ஜெயலலிதா பேசுகிறார். அவர்தானே உண்மையில் மக்கள் விரோத சக்தி.

இந்தியாவுக்கு விடுதலை பெற்றுதரும் தேர்தல் என்று ஜெயலலிதா சொல்கிறார். மின்வெட்டால் இருண்டு காணப்படும் தமிழ்நாட்டுக்கு எப்போது விடுதலை? என்று அவர்தான் சொல்ல வேண்டும். ஆனால், மின் பிரச்சினையை நான் டெல்லி வரை கொண்டுபோய் பிரதமரிடம் சொன்னேன். இதுவரை மக்கள் பிரச்சினைக்காக ஜெயலலிதா இப்படிச் செய்ததே இல்லை. செய்யவும் மாட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராவதற்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்"

இவ்வாறு விஜயகாந்த் தனது பிரச்சாரத்தின் போது பேசியிருந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் என்.எல்.சி. தொழிலாளி பலி: வைகோ, திருமா, தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்



நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கிச் சூட்டில் என்.எல்.சி. தொழிலாளி உயிரிழந்த சம்பவத்துக்கு வைகோ, தா.பாண்டியன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து வைகோ கூறுகையில், "மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் இத்தகைய போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது. இனி இதுபோன்ற கோர சம்பவங்கள் நடக்காமல், தொழிலாளர்களின் பாதுகாப்பை என்.எல்.சி. நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தொழிலாளி ராஜா குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனைவி மற்றும் இரு குழந்தைகளை கண்ணீர்க் கடலில் மூழ்கடித்துவிட்டு உயிர் பலியான ராஜா குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

 சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத் தலைவரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலுர் மாவட்டச் செயலாளருமான எம்.சேகர் தொழிலகப் பாதுகாப்பு படையினர் தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். இதனைப்போன்றே தொழிலாளர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வரலாற்றில் இதுவரை, நடந்திராத இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக துப்பாக்கியால் சுட்டவரை கைது செய்வதுடன், தடியடி நடத்தியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறினார்.

"மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நெய்வேலி தொழிலாளர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிகிறது. எனவே அவர்களை என்.எல்.சி. நிறுவனத்திலிருந்து அகற்ற வேண்டும். நிறுவனத்தின் பாதுகாப்புக்கென அந்த நிறுவனமே ஒரு தனி பாதுகாப்புப் படையை உருவாக்க வேண்டும்.",  என்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துக் கொண்டார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில், பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளி பலி


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, நெய்வேலி சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் கூறும்போது, 'என்.எல்.சி.யின் முதல் சுரங்கத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளரான டி.சுரேஷ் என்பவர் தனது சக பணியாளர்களுடன் இன்று மதியம் 1 மணி அளவில், இரண்டாவது நுழைவாயில் செல்ல முயன்றிருக்கிறார். இரண்டாவது சுரங்கத்துக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவலர் ராம்சிங் அவர்களைத் தடுத்திருக்கிறார். இதனால், தொழிலாளர்களுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. நிலைமை மிகவும் மோசமடைந்தச் சூழலில், காவலர் ராம்சிங் தனது துப்பாக்கியால் மூன்று ரவுண்டு சுட்டுள்ளார். இதில், தலையில் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மற்றவர்கள் அங்கிருந்து காயமின்றி தப்பிவிட்டனர்' என்று சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் தெரிவித்தார்.

இச்சம்பவத்தால், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பதற்றம் நீடிக்கிறது.

தமிழகத்தில்,கல்வியை தனியார்க்கு தாரை வார்த்து விட்டு, டாஸ்மாக் கடைகளை அரசே நடத்துகின்றது- ராமதாஸ்


செஞ்சி மந்தவெளியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், "பாமக‌ 2016ல் ஆட்சி அமைத்தால், தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்றுவோம்." என்று கூறினார்.  மேலும் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வியை இலவசமாக கொடுப்போம். ஜெயலலிதா ஆட்சியில் கல்வியை தனியார்க்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு, டாஸ்மாக் கடைகளை அரசே எடுத்து நடத்துகின்றது. மேலும் ஒரு கோடி இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். நாங்கள் ஆட்சி அமைத்தால் 2 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு டிராக்டர் கொடுத்து விவசாயத்தை காப்போம்.

இந்தியாவில் 17 சதவீதம் மின்பற்றாக்குறை இருந்து வருகின்றது. 2016–ல் பாமக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் சாராயகடைகளை மூடிவிட்டு தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்றுவோம்.

இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

இயேசுபிரான் இந்தியாவை காப்பாற்ற அனுப்பிய ரட்சகர் தான் மோடி- வெங்கயா நாயுடு


பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

காங்கிரஸ் ஆட்சியில் நாடே ஊழல் மயமானதால்,  தொழில் அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்குகிறார்கள். அவர்கள் வெளி நாடுகளில் முதலீடு செய்ய தொடங்கி விட்டார்கள். நரேந்திர மோடியால் குஜராத் மாநிலம் எல்லா வகையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதுபோல் மொத்த நாடே முன்னேற மோடி பிரதமராக வேண்டும்.

நமது நாட்டு மக்களை காப்பாற்ற ‘‘இயேசு அனுப்பி வைத்த ரட்சகர் மோடி’’. அவரை நோக்கி இந்த நாடு காத்து நிற்கிறது. கட்சி சம்பந்தமில்லாத அனைவரும் மோடி பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். மோடி புகழை நடிகர் பவன் கல்யாண் கூட கூறத் தொடங்கி விட்டார்.

வாரணாசியில் போட்டியிடுவது மோடியின் விருப்பம் அல்ல. கட்சி தான் அவரை அங்கு நிறுத்தியுள்ளது.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

கற்பழிக்க முயன்ற போது, கூச்சலிட்ட பெண்ணை ஓடும் பேருந்தில் இருந்து தள்ளி விட்ட ஓட்டுநர் கைது


பெங்களூர் நகரின் பனஷங்கரி பகுதிக்கு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 13-ம் தேதி இரவு அரசு பேருந்தில் சென்றார். கடைசி நிறுத்தமான பனஷங்கரியில் பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர், அந்த பெண் பேருந்து ஓட்டுநரிடம் தேவேகவுடா பெட்ரோல் பங்குக்கு செல்ல  வழி விசாரித்தார்.

’பேருந்து அந்த பக்கமாகதான் போகிறது. உங்களை அங்கே இறக்கி விடுகிறேன்’ என்று கூறிய ஓட்டுநர் சற்று தூரம் சென்றதும் பேருந்தை நிறுத்திவிட்டு அந்த பெண்ணை கற்பழிக்க முயற்சித்தார். அப்பொழுது, அந்த‌ பெண் கூச்சலிடவே, மீண்டும் பேருந்தை கிளப்பி ஓட்டி சென்று, அப்பெண்ணின் கைப்பையை பறித்துக் கொண்டு, பேருந்தில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டு வேகமாக சென்று விட்டார். கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அந்த பெண், நடந்த சம்பவம் தொடர்பாக சாம்ராஜ்பேட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, பேருந்து ஓட்டுநர் சித்தார்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்ட கர்நாடக மாநில போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்க ரெட்டி, காயமடைந்த பெண்ணின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்காத மூன்று போலீசாரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆட்சியை கொடுத்தால், நடத்த முடியாமல் ஓட்டம் பிடித்த ஆம் ஆத்மி, தேசிய அளவில் ஒரு பொருட்டில்லை -ராகுல்


டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சி தொடர்பாக கேட்கப்பட்ட‌ கேள்வி ஒன்றுக்கு, "அதை செய்வோம்; இதை செய்வோம் என்று கூறி டெல்லி மக்களிடம் ஓட்டு வாங்கி விட்டு  ஆட்சி அமைக்க முடியாமல் திணறிய ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் தான் ஆதரவு அளித்து ஆட்சி அமைக்க உதவியது. டெல்லி மக்களிடம் கொடுத்த‌ வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் எந்த பிரச்சனையையும் அவர்கள் தீர்க்கவில்லை. பெரிய வாக்குறுதிகளை தருவதும் ஒரு அரசை வழி நடத்துவதும் வெவ்வேறு என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு ஆட்சியை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்", என்று கூறினார்.

வருகின்ற  பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை பிரிக்கும் ஒரு காரணியாக ஆம் ஆத்மி கட்சியை பார்க்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ராகுல், ‘தேசிய அளவில் நான் அப்படி கருதவில்லை’ என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி சின்னம் துடைப்பத்தை அடுத்து, வருகிறது கிரண்குமார் ரெட்டி கட்சியின் செருப்பு சின்னம்


தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரண்குமார் ரெட்டி, தனது ஆந்திர முதல் அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்து தனிக் கட்சி தொடங்கினார். தனது கட்சிக்கு ’’ஜெய் சமக்யாந்திரா கட்சி’’ என பெயரிட்டு உள்ளார். மேலும், தனது கட்சிக்கு ‘செருப்பு’ சின்னத்தை தேர்ந்து எடுத்தார். இதற்கு தேர்தல் ஆணையம் நேற்று ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் தனது கட்சி சின்னத்தை கிரண்குமார் ரெட்டி அறிமுகப்படுத்தி பிரச்சாரத்தை தொடங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:

மக்கள் அனைவரும் செருப்பு அணிகிறார்கள். அதனால் இந்த சின்னம் எளிதில் அவர்களிடம் பிரபலமடையும் செருப்பு அதனை அணிபவர்களின் சுமையை தாங்குவது மட்டுமின்றி அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கிறது. சாதி, மதம் போன்ற எந்த பாகு பாட்டையும் காட்டுவதில்லை. சமத்துவத்தின் சின்னமாக செருப்பு இருக்கிறது.

ராமராஜ்யம் ஏற்பட ராமரின் செருப்பு வழி காட்டியது அது போல இந்த செருப்பும் நல்ல ஆட்சிக்கு, மக்கள் ஒற்றுமைக்கு வழி காட்டும்.

இவ்வாறு கிரண்குமார் ரெட்டி பேசினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media