BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 19 January 2014

காங்கிரஸை கேலி செய்த மோடி



பா.ஜ.க வின் தேசிய கவுன்சில் கூட்டம் மூன்று நாட்களாக டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் நடந்தது. நிறைவு நாளான இன்று, பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது:

2014 பாராளுமன்ற தேர்தல் என்பது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல். இந்திய வரலாற்றிலே மிக பெரும் ஊழல்கள் இந்த 10 வருட காங்கிரஸ் ஆட்சியில் தான் நடந்துள்ளது. காங்கிரஸ், தங்கள் கட்சியை பாதுகாக்க பார்க்கிறது. பா.ஜ.க., நாட்டை பாதுகாக்க பார்க்கிறது. சமீபத்தில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழுவில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று அறிவிக்கப்படும் என நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை கூறாமல், வீடுகளுக்கு வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர்கள் ஆண்டுக்கு 12 ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை சொல்கிறது காங்கிரஸ். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்க‌ போவது உறுதியாகி விட்ட நிலையில், தன் மகனை தியாகம் செய்ய சோனியா முன் வரவில்லை. மேலும், ஒரு டீக்கடைக்காரனை எதிர்த்து நம் மகனை நிறுத்துவதா? என்று தோன்றி இருக்கலாம்.

தோல்வியில் இருந்து காப்பாற்றுவதற்காகவே ராகுல் காந்தியை காங்கிரசின் பிரதமர் பதவி வேட்பாளராக சோனியா காந்தி அறிவிக்கவில்லை என்றும் மோடி கூறியிருந்தார்.

கேஜ்ரிவாலை கடத்துவதற்கு திட்டம்


தீவிரவாதி யாசின் பட்கலை சிறையிலிருந்து விடுவிக்க கோரி, கேஜ்ரிவாலை கடத்துவதாக திட்டம் வைத்திருந்தது இந்தியன் முஜாகிதீன் அமைப்பு, என்ற தகவலை வெளியிட்டு இருக்கிறது உளவுதுறை. இந்த செய்தியை தொடர்ந்து அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க டெல்லி மாநில காவல்துறை முடிவு செய்துள்ளது.

உளவுதுறை உறுதி செய்த இந்த செய்தியை, கேஜ்ரிவாலிடம் காவல் துறை விளக்கி கூறியுள்ளது.

தீவிரவாதி யாசின் பட்கலையும், அவனது கூட்டாளியையும் 2008 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்காக காவல் துறை கைது செய்து வைத்திருந்தனர்.

காங்கிரஸிடம் நாங்கள் ஆதரவு கேட்கவில்லை- கேஜ்ரிவால்



டெல்லி முதல் அமைச்சர் கேஜ்ரிவால் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் ஆம் ஆத்மி கட்சி, யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை எனவும், காங்கிரஸ் கட்சிக்கு தான் பயந்து நடக்கவில்லை என்றும், அவர்கள் மீது நடவடிக்கைகள் விரைவில் பாயும் என்றும் தெரிவித்து இருந்தார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது:

டெல்லியில் ஆட்சி அமைக்க நாங்கள் காங்கிரஸிடம் ஆதரவு அளிக்குமாறு கேட்கவில்லை. அவர்களாகவே தான், வலிய முன் வந்து, ஆதரவு அளித்தனர். நாங்கள் அவர்களிடம் பேசியதும் இல்லை, அவர்களை சந்தித்ததும் இல்லை.

2010–ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடந்த‌ ஊழல் மற்றும் குடிநீர் வாரிய ஊழல் ஆகியவை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். இன்னும் சில நாட்களில், ஊழலில் ஈடுப்பட்ட அதிகாரிகள் மீதும், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மீதும், தகுந்த நடவடிக்கைகள் எடுக்க போகிறோம். எங்களுக்காக ஆதரவு அளித்தது, காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த வருத்தத்தை தர போகிறது. வேண்டுமென்றால், அவர்கள் கொடுத்த ஆதரவை திரும்ப பெற்று கொள்ளலாம்.

மேலும், டெல்லி முன்னாள் முதல் அமைச்சர் ஷீலா தீட்சீத் மகன் சந்தீப் உடன் தனக்கு நட்பு இருக்கிறது என கூறப்படுவது உண்மை இல்லை எனவும் கூறியிருக்கிறார் கேஜ்ரிவால்.

டெல்லி நீதி துறை அமைச்சர் சோம்நாத் பாரதி மீது குற்றச்சாட்டு

உகண்டா நாட்டை சேர்ந்த நான்கு பெண்கள், டெல்லியில் காரில் சென்று கொண்டிருந்த போது, அமைச்சர் சோம்நாத் பாரதி மற்றும் அவருடன் இருந்த நபர்கள், அந்த பெண்கள் வந்த காரை வழி மறைத்து நிறுத்தி, சத்தம் போட்டு பயமுறுத்தினர் என்றும், தங்களிடம் நடந்து கொண்ட முறை கண்டனத்திற்குரியது எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்நேரத்தில் டெல்லி போலீசார் வந்து, தங்களை காப்பாற்றினர் என்றும், அமைச்சர் மற்றும் அவருடன் இருந்தவர்கள், தங்களை குற்றவாளிகளை போல நடத்தினர் என்றும், இதற்காக அமைச்சர் சோம்நாத் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உகண்டா பெண்கள், ஆவேசமாக கூறியிருக்கின்றனர்.  டெல்லி போலீசார் மட்டும் வரவில்லை என்றால், தங்களை அந்த கும்பல் கொன்று இருப்பனர் என்று அப்பெண்கள் கூறியிருக்கின்ற்னர்.

இதை பற்றி சல்மான் குர்ஷித் பேசுகையில், "இது போன்ற சம்பவங்களால், மற்ற நாடுகளிடம் இந்தியாவின் புகழ் பாதிக்கப்படும்.  நடந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சிகரமானது மற்றும் ஏற்று கொள்ள முடியாதது. ", என தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து, சோம்நாத் பாரதி மீதும் மற்றும் அவர்களுடன் இருந்தவர்கள் மீதும், டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து வழக்கு நடத்த இருக்கின்றனர்.

ஆம் ஆத்மி கட்சி விரும்பினால், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- கேஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் ஆட்சி அமைத்ததை அடுத்து, அக்கட்சி நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், "நானோ, எனது கட்சி சேர்ந்த எம்.எல்.ஏ.க்களோ, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டோம்." என்று டெல்லி முதல் அமைச்சர் கேஜ்ரிவால் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், அக்கட்சியினர், டெல்லி மற்றுமல்லாது, பிற மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். கேஜ்ரிவாலும், "நடக்கவிருக்கும் தேர்தலில் இருக்கப்போகும் போட்டி, பா.ஜ.க. விற்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே தான் ஒழிய, காங்கிரஸ் அந்த காட்சியிலேயே இருக்க போவதில்லை.", என்று கருத்தி தெரிவித்து இருந்தார்.

ஆனால், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த கேஜ்ரிவால், "நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தனிப்பட்ட முறையில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், கட்சி விரும்பினால் போட்டியிடுவேன்", என்று அதிரடியாக அறிவித்து இருக்கிறார்.


சசி தரூரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவியின் மரணம் இயற்கையானது அல்ல, மேலும் அவர் உடலின் மேற்புறத்தில் காயஙக்ள் இருந்ததாக, அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறியிருந்தனர். அவர் இறப்பதற்கு முன்பு, தன் கணவர் சசி தரூருக்கும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். 

இதையடுத்து, சுனந்தாவின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் சசி தரூர் மீது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும்,  அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல், வழக்கில் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media