BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 13 March 2014

பெரும் ஊழல் செய்த ராசா, தயாநிதி மாறனுக்கு வாய்ப்பு கொடுப்பதா? கருணாநிதியை கடுமையாக சாடிய ஜெ.


திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று பேசியதாவது:

காங்கிரஸ் அரசு செய்த பல்வேறு ஊழல்களில் மிகப் பெரும் ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். இந்த ஊழலில் ஆ.ராசா மீது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நீதிமன்ற விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசாவை, நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக கருணாநிதி அறிவித்துள்ளார்.

தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வைத்து, பின்னர் மேக்ஸிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனத்தின் மூலம் சன் குழுமத்தில் 675 கோடி ரூபாய் முதலீடு செய்ய வழி வகுத்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் தயாநிதி மாறன். பி.எஸ்.என்.எல்.-லின் 300 தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக தனது வீட்டில் ஏற்படுத்திக் கொண்டவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் தயாநிதி மாறன். இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தயாநிதி மாறனை மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவித்திருக்கிறார் கருணாநிதி.

இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, "போடப்பட்ட வழக்குகள் எல்லாம் இப்போது ஆடிக் கொண்டிருக்கின்றன. அந்த வழக்குகளை நிரூபிக்கக் கூடிய சாட்சிகள் இல்லை என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது" என்று கூறி உள்ளார் கருணாநிதி. அதாவது, அவர்கள் ஊழல் புரியவில்லை என்று அவர் சொல்லவில்லை. சாட்சிகள் இல்லை என்ற சூழ்நிலை தான் உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி. இப்படிப்பட்ட தி.மு.க-விற்கு வருகின்ற மக்களவைத் தேர்தலில் நீங்கள் மறக்க முடியாத பாடத்தை கற்பிக்க வேண்டும்.

இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக சாடி பேசினார்.

இரட்டை இலையை ஜடையாகவோ, காதில் தோடாகவோ, நெற்றியில் பொட்டாகவோ வைத்துக் கொள்ளட்டும்; மக்கள் வரிப்பணத்தில் அச்சின்னம் இருக்ககூடாது-ஸ்டாலின்


மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பகுதி செயல் வீரர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின்  பேசியதாவது:

மத்திய சென்னை பொறுத்தவரையில் யாருக்கும் அறிவுரை, ஆலோசனை வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து கழகத்தின் கோட்டையாக இத்தொகுதி திகழ்கிறது. ஏற்கனவே இருமுறை இந்த தொகுதியில் தயாநிதி மாறன் தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளார்.

சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா என் பெயரை உச்சரித்து உள்ளார். அது மகிழ்ச்சிதான். அரசு பேருந்தில், எம்.ஜி.ஆர். சமாதியில் இரட்டை இலையை மறைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து உள்ளேன். இதுபற்றி அவர் சைக்கிள், கை போன்ற சின்னங்கள் இருக்கிறது. அதற்காக கையை வெட்ட முடியுமா? சைக்கிளை ஓட்டாமல் இருக்க முடியுமா? என்று புத்திசாலித்தனமாக பேசுகிறார்.

இரட்டை இலையை ஜடையாக போட்டுக் கொள்ளட்டும், காதில் தோடாக மாட்டிக் கொள்ளட்டும், பொட்டாக வைத்துக் கொள்ளட்டும், ஆனால் மக்கள் வரிப் பணத்தில் இரட்டை இலை இருக்க கூடாது என்று நாங்கள் கூறுகிறோம்.

இவ்வாறு திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.

கருணாநிதி தேர்ந்தெடுத்த விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமார்?!



கெஜ்ரிவாலை ஏற்றி சென்ற ஆட்டோ ஓட்டுநர் மீது மும்பை போலீஸார் வழக்கு


டெல்லியில் இருந்து மும்பைக்கு நேற்று விமானத்தில் சென்ற கெஜ்ரிவால், விமான நிலையத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏறி அந்தேரி ரயில் நிலையத்துக்கு சென்றார். அவருடன் அதே ஆட்டோவில் மூன்று ஆம்ஆத்மி நிர்வாகிகளும் பயணம் செய்தனர்.

அந்தேரி ரெயில் நிலையத்தை அடைந்த கெஜ்ரிவால், அங்கிருந்து  மின்சார ரயில் மூலம் தெற்கு மும்பையில் உள்ள சர்ச்கேட் பகுதிக்கு சென்றார். கெஜ்ரிவாலின் ஆட்டோ மற்றும் ரெயில் பயணத்தால் நேற்று மும்பையில் பயணிகள் பாதிப்புக்குள்ளானார்கள். இந்த நிலையில் கெஜ்ரிவாலை ஏற்றிச் சென்ற ஆட்டோ பற்றி மும்பை போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினார். பிறகு அந்த ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்தனர்.

ஆட்டோவில் 3 பயணிகளுக்கு மேல் ஏற்றிச் சென்றதாக அவர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் கியூசர் காலித் கூறினார்.

டெல்லி மாணவி கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி, மகிழ்ச்சி தெரிவித்த மாணவியின் தாய்


16-12-2012 அன்று டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா, 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு ஆயுதங்களால் தாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வெளியே வீசப்பட்டார். இதனால் பலத்த காயம் அடைந்த அந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழ‌ந்தார்.

இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவன் சிறையிலே தற்கொலை செய்து கொண்டான், மேலும் ஒருவன் சிறார் என்பதனால், மற்ற நான்கு பேருக்கு நீதிமன்ற விசாராணைக்கு பிறகு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், குற்றவாளிகள் நால்வரின் தூக்கை உறுதி செய்தது. இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி 18 வயதுக்கு உட்பட்டிருப்பதால் அவனுக்கு சிறார் நீதிமன்றம், 3 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறுகையில், “இத்தீர்ப்பு குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் தான் எங்களுக்கு முழு மகிழ்ச்சி கிடைக்கும்” என்று கூறினார்.

ஏப்ரல் முதல் கருணாநிதி பிரச்சாரம், அவருக்காக பேருந்து வடிவில் வேன் தயார் செய்யப்படுகிறது


மக்களவை தேர்தலில், திமுக 35 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுவதை ஒட்டி, திமுக தலைவர் கருணாநிதி பெரும்பாலான தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.  தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் முதல் வாரம் தொடங்க இருக்கிறார். அவர் நீண்ட தூரம் பயணம் செய்வதற்காக பஸ் வடிவில் வேன் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அவர், பொதுக் கூட்டத்தில் மட்டுமின்றி வேனிலும் அமர்ந்து கொண்டும் முக்கிய இடங்களில் பேசவிருக்கிறார்.

கருணாநிதியின் சுற்றுப்பயண விவரங்கள் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியாக இருக்கிறது.

பிரதமரை சந்தித்த அழகிரி, திமுக-காங்கிரஸ் முறிவு பற்றி வருத்தம் தெரிவித்த பிரதமர்


டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் அழகிரி இன்று காலை சந்தித்தார். சுமார் 15-நிமிட சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம் தெரிவித்ததாகவும் பதிலுக்கு தாமும் வருத்தத்தை தெரிவித்ததாகவும் கூறினார். 2009-ல் இருந்து 2013 வரை மத்திய அமைச்சரவையில் பணியாற்ற தனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

புதிய கட்சி தொடர்பாக கேள்வி எழுப்பப்ட்டபோது, இது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து 2 மாதங்களுக்கு பின்னரே முடிவெடுக்க முடியும் என தெரிவித்தார்.

அழகிரி புதிய கட்சி ஆரம்பித்தால், அவருக்கு இருக்கும் வரவேற்பு குறித்தும், திமுகவிற்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் உங்களுடைய கருத்தை கமென்டில் தெரிவியுங்கள்!

'அம்மா' என்ற சொல் பொதுவானது என்பதால் மறைக்கத் தேவையில்லை: தேர்தல் ஆணையம்


மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அம்மா குடிநீர் பாட்டில்கள் மற்றும் தமிழக அரசின் சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை மறைப்பதற்கு உத்தரவிடக் கோரி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், அரசின் சிறிய பஸ்களில் இடம்பெற்றுள்ள இலைகள் சின்னம், அம்மா உணவகம் மற்றும் அம்மா குடிநீர் பாட்டில்களில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஆகியவற்றை மறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 'அம்மா' என்ற சொல் பொதுவானது என்பதால், அதனை மறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை போர் விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத எதிர்ப்புக்கு எதிரானது;தமிழ் மக்களுக்கு அல்ல- ராஜபக்சே


இலங்கையில் கலே நகரில் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு ராஜபக்சே பேசினார். அப்பொழுது அவர், விடுதலைப் புலிகள் என்ற ஒரு பயங்கரவாத அமைப்பை எதிர்த்தே இலங்கையில் போர் நடத்தப்பட்டதே தவிர, போரின் இலக்கு தமிழர்கள் அல்ல என்று தெரிவித்தார்.

மேலும், தமிழ் மக்களுக்கு எதிராகவே போர் நடத்தப்பட்டது என்றால் இலங்கையின் தெற்கே சிங்களவர் மத்தியில் தமிழர்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்களே அது எப்படி சாத்தியமாகும் என்ற‌ கேள்வியை எழுப்பினார். இலங்கையில், சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், அதனை மறுத்துள்ள ராஜபக்சே, சில வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இலங்கை மீது அவதூறு பரப்பி வருவதாக கூறினார்.

பொது மக்கள் காலில் விழுந்து பிரச்சாரம் செய்யும் சத்தியாகிரக இயக்கம்


தேர்தலில் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும். வன்முறை, லஞ்சம், சாதி போன்ற வற்றிற்கு அப்பாற்பட்ட வேட் பாளரை தேர்வுசெய்ய வேண்டும். 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்களின் காலில் விழுந்து வணங்கி பிரச்சாரம் செய்து வருகிறது, சத்தியாகிரக இயக்கம். இந்த இயக்கத்தில் நாடு முழுவதும் 50 லட்சத்துக்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் இருக்கின்றனர்.

யாரிடமும் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொது மக்கள் காலில் விழுந்து வணங்கும் சத்தியாகிரக பிரச்சார தொடக்க நிகழ்ச்சி, மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நேற்று நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தை, தமிழக இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் தொடங்கி வைத்தார்.

"இதுவரை 51 லட்சம் பேர் காலில் விழுந்து வணங்கி பிரச்சாரம் செய்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் சென்று சத்தியாகிரக பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்." என்று எம்.ராமகிருஷ்ண சாஸ்திரி தெரிவித்தார்.

இப்பிரச்சாரத்தை குறித்து தங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்!

தேவயாணி மீதான விசா மோசடி குற்றச்சாட்டை அமெரிக்கா தள்ளுபடி செய்ய உத்தரவு

அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய துணை தூதர் தேவயாணி கோப்ரகடே மீதான விசா மோசடி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தனக்கு எதிரான விசா மோசடி வழக்கை தள்ளுபடி செய்யுமாறு  தேவயானி கோப்ரகடே அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், மான்ஹாட்டன் நீதிமன்ற அரசு தரப்பு வழக்கறிஞர் பிரீத் பஹாரா, தேவயானி கோப்ரகடே மீதான குற்றச்சாட்டு பதிவதை நிறுத்தக் கோரிய மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், தேவயானி சார்பில் அவரது வழக்கறிஞர் டேனியல் அர்ஷாக் பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், தேவயாணி மீதான குற்றச்சாட்டு அவருக்கு முழுமையான தூதரக பாதுகாப்பு அளிக்கப்பட்ட பின்னர் தான் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது; முழுமையான தூதரக பாதுகாப்பு அளிக்கப்பட்ட பிறகு அமெரிக்காவுக்கு தேவயாணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய அதிகாரம் இல்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில், மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஷிரா ஸ்கெயிண்டிலின் அளித்த தீர்ப்பில், தேவயானி மீதான விசா மோசடி குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மோடி அலை எல்லாம் வீசுவதாக ஒன்றும் தெரிய‌வில்லை, மக்களின் அதிருப்தி அலையே வீசிகிறது: கெஜ்ரிவால்


ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று மும்பையில் விக்ரொலி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது :

நாட்டில் நரேந்திர மோடி அலை வீசுவதாக பரவலாக கூறப்படுகிறது. நான் உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவிற்கு சென்றேன்.  இப்போது மும்பைக்கு வந்திருக்கிறேன். எங்கேயும் மோடி அலை வீசுவதாக தெரியவில்லை. மக்களின் அதிருப்தி அலையே எங்கும் வீசுகிறது. காங்கிரசை வெளியேற்றி பா.ஜ.க.வை கொண்டு வர நாங்கள் விரும்பவில்லை. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். சில ஊடகங்கள் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடையும் என தவறான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதே ஊடகங்கள் தான் டெல்லி சட்டசபை தேர்தலில் நாங்கள் 4-5 சீட்கள் மட்டுமே பெறமுடியும் என்றன. ஆனால் 28 சீட்டுகளை நாங்கள் பெற்றோம்.

மக்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, நரேந்திரமோடி, கபில் சிபல், நிதின் கட்கரி, எடியூரப்பாவை தோற்கடிக்க தயாராகி விட்டனர். இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் அதிசயம் நடக்கும்.

இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் பேசினார். இது குறித்து தங்கள் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்!

கற்பழிப்பு புகாரில் சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ, சுற்றி வளைக்கப்பட்டு சரமாரியாக அடி உதை வாங்கினார்


கேரள மாநிலம் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி மீது,  திருவனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் சரிதா நாயர்  என்பவர் கற்பழிப்பு புகார் அளித்து இருந்தார். சரிதா நாயர்,  கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி, சமீபத்தில் ஜாமீனில் விடுதலை ஆனவர்.  அப்துல்லா குட்டி, சோலார் பேனல் தொழில் சம்பந்தமாக பேச வேண்டும் என்று தன்னை நட்சத்திர ஒட்டலுக்கு அழைத்து தன்னை கற்பழித்ததாக புகாரில் கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் அந்த கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக கண்ணூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தனது ஆதரவாளர்களுடன் அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார். இதுபற்றி அறிந்த கண்ணூர் மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் பிஜூ, 25–க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் அந்த ஓட்டலுக்கு சென்றார். அங்கிருந்த பாதுகாப்பு போலீசாரை தள்ளிவிட்டு விட்டு உள்ளே நுழைந்து, அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ.வை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினார்கள். அவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அப்துல்லா குட்டி கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினார். இருந்தாலும் தொடர்ந்து அடி–உதை விழுந்தது.

போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அதிரடிப்படை போலீசாரை அங்கு வர வழைத்தனர். அவர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது தடியடி நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். அதன்பிறகு போலீசார் அப்துல்லா குட்டி எம்.எல்.ஏ.வை பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media