BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 6 June 2014

மோடி அடுத்து சில மாதங்களுக்கு ரொம்ப பிஸி !!!!!!

மோடியின் வெளிஉறவுத்துறை பிரதிநிதி சையத் அக்பருதீன் கூறுகையில் , " மோடி பதவியேற்ற பின் பல நாட்டு தலைவர்கள் மோடி அவர்களை தங்கள் நாட்டிற்கு வர அழைப்பு விடுத்துள்ளனர்  . அவரது இன்பாஸ் நிரம்பிவிட்டது " என்று கூறினார் .

மேலும் மோடி அவர்கள் இந்த மாதத்தில் பூட்டான் செல்ல உள்ளதாகவும் , அடுத்த மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அவர்களின் அழைப்பை ஏற்று ஜப்பான் செல்ல உள்ளார் . அடுத்து செப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார் . ஜுலை மாதம் பிரேசிலில் நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார் . பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில் , ரஷ்யா , இந்தியா , சீனா , தென் ஆப்ப்ரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர் .

பூட்டான் செல்லுவதற்கு முன் சீனாவின் பிரதமர் சார்பாக இந்தியா வரும் வாங் யி அவர்களை ஜுன் 8 மற்றும் 9 ஆம் தேதி சந்திக்கிறார் .

நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் நகரில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்க உள்ளார் . மேலும் அதே மாதம் நடைபெற உள்ள சார்க் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார் .

கட்காரிக்கு மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. எனவே அவற்றை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை


அரவிந்த் கேஜ்ரிவால், கடந்த ஜனவரி 31-ம் தேதி, "இந்தியாவின் மோசமான ஊழல் அரசியல்வாதிகள்" பட்டியலை வெளியிட்டார். இந்தப் பட்டியலில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி பெயரும் இடம்பெற்றிருந்தது. கேஜ்ரிவால் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகக் கூறி அவர் மீது நிதின் கட்கரி கிரிமினல் அவதூறு வழக்கு பதிவு செய்தார். வழக்கில், ஜாமீன் பெற பிரமாண பத்திரம் அளிக்க மறுத்த கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி பிரமாண பத்திரம் அளித்து ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில், இன்று டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பேசுகையில்: "நீங்கள் இருவரும் மிகப்பெரிய அரசியல்வாதிகள். நீங்கள் இருவரும் இந்த விவகாரத்தில் ஏன் சுமுக உடன்பாட்டுக்கு வரக்கூடாது? நேரத்தை விரயம் செய்யாமல் ஆக்கப்பூர்வமாக அனுபவிக்கலாமே" என்றார்.

அதற்கு பதிலளித்த நிதின் கட்கரி நான் ஒரு நேர்மையான அரசியல்வாதி. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் குற்றச்சாட்டுகளை கேஜ்ரிவால் சுமத்தியுள்ளார். எனக்கு கேஜ்ரிவால் மீது தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை. கேஜ்ரிவால் என் மீதான அவதூறு குற்றச்சாட்டை திரும்பப்பெற்றால் நான் சுமுகத் தீர்வு காண தயார் என கூறியுள்ளார்.

அப்போது குறுக்கிட்ட கேஜ்ரிவால், கட்காரி மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. எனவே அவற்றை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என கூறினார்.

பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளராகப் யாற்றுவது எனது வாழ்வாதாரம், பழம் விற்கவா நான் போக முடியும்?- வாசிம் அக்ரம்


ஐபிஎல் அணியான கொல்கத்தாவின் பயிற்சியாளராகவும், கிரிக்கெட் போட்டிகளின் போது வர்ணனையாளராகவும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் செயல்பட்டது குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக பாகிஸ்தானில் இவரது நாட்டுப்பற்று பற்றி சிலர் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஜியோ நியூஸ் சானலில் இதைப்பற்றி வாசிம் அக்ரம் பேசுகையில், "இது போன்ற நாகரிகமற்ற கருத்துக்களை என் மீது விமர்சனமாக வைக்கும்போது எனக்கு ஆத்திரம் ஏற்படுவதுண்டு, அவர்கள் என் எதிரே இதையெல்லாம் எழுதினால் நான் இதை அவர்களைப்போலவே எதிர்கொள்வேன்.

பயிற்சியாளராக இருப்பது மற்றும் வர்ணனையாளராகப் பணியாற்றுவது என்பது எனது வாழ்வாதாரம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். என் வாழ்க்கையில் இந்தக் கட்டத்தில் நான் இவற்றையெல்லாம் செய்யாமல் என்ன பழம் விற்கவா செல்வது?

மன்னிக்க வேண்டும், நான் யாரிடமும் சென்று கெஞ்சுபவன் அல்ல. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரிடமே நான் கூறியிருக்கிறேன், எப்போது கராச்சியில் நான் இருக்கிறேனோ அப்போது இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன் என்று, ஆனால் இவையெல்லாம் என்னைக் கேட்டால்தானே செய்ய முடியும், அப்படியிருக்கும்போது நான் என் வாழ்வாதாரத்திற்காக என்ன செய்தால் இவர்களுக்கு என்ன?

எழுதுவதற்கு முன்னால் யோசிக்க வேண்டும், ஏனெனில் அனைவருக்கும் சுயமரியாதை உண்டு."

இவ்வாறு கடுமையாக வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகள் மீண்டும் வன்முறையில் இறங்கினர் !!!

நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள போகோஹாரம் என்ற தீவிரவாத அமைப்பினர் அந்த இடத்தில் உள்ள 4 கிராமங்களுக்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதலில் இறங்கினர் . இந்த தாக்குதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது .  மேற்கத்திய கல்வி முறையை எதிர்த்து இந்த போகோஹாரம் அமைப்பினர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் . 

குறிப்பாக சர்ச் மற்றும் கிறிஸ்துவர்களை குறி வைத்து தாக்கும் இவர்கள் நேற்றைய தாக்குதலில் சர்ச் ஒன்றிற்கு தீ வைத்தனர் . நாங்கு கிராமங்களும் தீவிரவாதிகளின் கட்டுபாட்டிற்குள் சென்றுவிட்டதால் தகவல் தொடர்பு சரியாக இல்லை . எனவே பலியானோர் எண்ணிக்கை குறித்து எந்தவொரு சரியான தகவலும் இல்லை . 

இதற்கு முன்னரும் அப்பாவி 200 பள்ளிக் குழந்தைகளைக் கடத்திச் சென்றதும் இந்த அமைப்பினர் தான் என்பது குறிப்பிடத்தக்கது . 

பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில், மோடி வழங்கிய அறிவுரை என்ன?


நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்ற போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பாஜக தற்போது எதிர்க்கட்சி என்ற நிலையில் இல்லை. உங்களுக்கான கடமைகள் பல, நாட்டில் காத்திருக்கின்றன. அதற்காக உழைத்து, இந்த நாடாளுமன்றத்தின் புனிதத்தை நீங்கள் காத்திட வேண்டும்." என்று கூறினார். மேலும் கூட்டத்தில் அவர் கூறியதாவது:

எப்போதும் அடித்தட்டு மக்களிடம் தொடர்பில் இருங்கள். கட்சியின் கடை நிலை பொறுப்பில் இருப்பவர்கள் கூட மக்களுக்காக பாடுபட வேண்டும். அவை சுமூகமாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். அவையின் எல்லா கூட்டங்களிலும், எ.பி க்கள் இடம்பெற வேண்டும். அப்போது தான் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை காக்க முடியும். உறுப்பினர்கள் அனைவரும் அவையின் விவாதங்களுக்கு ஏற்றவாறு, அனைத்து விவகாரங்களையும் கற்று அறிந்து வர வேண்டும். எல்லா விவாதங்களிலும் பங்கேற்கும்போது தான், அனைத்து விஷயங்களிலும் நமது அறிவை வளர்த்துக்கொள்ள முடியும்.

காலில் விழுந்து வணங்கும் கலாச்சாரத்தை எம்.பி.க்கள் பின்பற்றக் கூடாது. புதிதாக பதவியேற்றுக் கொண்ட எம்.பி.க்கள் சிலர், என் காலில் விழுந்து வணங்கினர். எனது காலில் மட்டும் அல்ல, வேறு எந்த தலைவர்கள் காலிலும் விழுந்து வணங்கக் கூடாது. தேவையற்ற துதிபாடுதல்கள் தேவையில்லை. மாறாக மக்கள் நலப் பணிகளில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்.”

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி எம்.பிக்களிடம் கேட்டுக்கொண்டார்.

புனேவில் இஸ்லாமிய தொழில்நுட்ப பணியாளர் கொலையடுத்து, ராஷ்ட்ரீய சேனை அமைப்பிற்கு தடை?

சோலாப்பூரை சேர்ந்த மொசின் ஷேக் (வயது 24) என்பவர் புனேவில் தொழில்நுட்ப பணியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் திங்கள்கிழமை மாலை தொழுகைக்குச் சென்று திரும்பினார். அப்போது, அவர் மீது திடீரென சிலர் சரமாரியாக ஹாக்கி பேட்களால் அடித்துத் தாக்கினர். அதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவத்தின் தொடர்புடைய ராஷ்டீரிய சேனை அமைப்பின் உறுப்பினர்கள் 17 பேரை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவர்கள் மீது கொலைக் குற்றம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இது தொடர்பாக இந்து ராஷ்டீரிய சேனா அமைப்பின் தலைவர் தனஞ்செய் தேசாய், வன்முறையை தூண்டும் வகையில் துண்டு பிரசுரங்களை வினியோகித்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், மதவாதத்தை அடிப்படையாக வைத்து வன்முறையை ஏற்படுத்தி அமைதிக்கு பங்கம் வகித்த ராஷ்ட்ரீய சேனை அமைப்பை தடை செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்தை புனே காவல்துறை ஆணையர் சதீஷ் முத்தூர் நாடி உள்ளார்.

மேலும், சமூக வலைத்தளத்தில் இழிவுபடுத்தும் படங்களை, கொலையான ஷேக் மொகசின் சாதிக் வெளியிடவில்லை என்றும், இது தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

ஜெயாவிற்கு டெல்லியில் செல்வாக்கு இருக்காது என்பதில் மகிழ்ச்சி; மோடி இலங்கை பக்கம் இருப்பார்- இலங்கை செய்தி தொடர்பாளர்


இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளரும், தகவல் தொடர்பு அமைச்சருமான கெஹேலியா ரம்புக்வெல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"இலங்கையில் நடந்ததை இனப்படுகொலை என்று வர்ணிப்பது தவறு, இது குறித்து இந்திய அரசுக்குத் எங்களது முறையான ஆட்சேபத்தையும் தெரிவிப்போம். இந்தியாவில் நிலையான தனிப்பெரும்பான்மை அரசு அமைந்தது பற்றி இலங்கை மகிழ்ச்சி அடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்பும் நாங்கள் இதையே கூறினோம், இந்தியாவில் நிலையான ஆட்சி இலங்கைக்கு நல்லது.

இன்று ஜெயலலிதாவுக்கு முன்பு டெல்லியில் இருந்த செல்வாக்கு இருக்காது. இது பற்றி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். பிரதமர் நரேந்திர மோடி சரியான பக்கத்தில் இருப்பார் என்று நம்புகிறோம் அதாவது இலங்கை பக்கம்" என்று கூறியுள்ளார் அவர்.

லோக்சபாவின் புதிய சபாநாயகர் - சுமித்ரா மஹாஜன் !!!

மக்களவையின் இரண்டாவது பெண் சபாநாயகராக மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுமித்ரா மஹாஜன் இன்று தேர்வு செய்யப்பட உள்ளார் . இன்று சபாநாயருக்கான தேர்தல் முறைப்படி நடைபெற உள்ளது . 

சபாநாயகர் தேர்தலுக்கு 19 பேர் சுமித்ரா மஹாஜன் பெயரை  முன் மொழிந்துள்ளனர் . அந்த பட்டியலில் காங்கிரஸின் மல்லிகார்ஜுன் கார்கே , அதிமுகவின் தம்பிதுரை ,சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடா, தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் ஜிதேந்திர ரெட்டி அடங்குவர் . 

சுமித்ரா மஹாஜன் இதுவரை இண்டோர் தொகுதியில் போட்டியிட்ட எட்டு மக்களவை தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார் . அவரது தொகுதி மக்கள் அவரை "டாய்" என்று பாசமாக அழைப்பர் . டாய் என்றால் மராட்டிய மொழியில் சகோதரி என்று பொருள் .
 

இந்த நேரத்தில் துணை சபாநயகர் பதவி அதிமுக வின் தம்பி துரைக்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது . ஜெயலலிதா மற்றும் மோடி இடையே நடந்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது . இதை பயன்படுத்தி பாஜக அதிமுக உடன் தன் உறவை பலப்படுத்ததிக் கொள்ளும் என பலர் நம்புகின்றனர் . இதற்கு முன்னர் துணை சபாநயகராக இருந்த அனுபவம்  தம்பி துரை அவர்களுக்கு இருக்கிறது . 


10 ஆண்டுகளாக அத்வானிக்கு நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்பட்டிருந்த தனி அறையில் அவரது பெயர்ப் பலகை நீக்கம்


தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் அறை எண் 4 அத்வானிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக அவர் அந்த அறையைப் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது அந்த அறையில் அத்வானியின் பெயர்ப் பலகை நீக்கப்பட்டுள்ளது.

அவருக்கு தனி அறை ஒதுக்கப்படவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில்தான் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

மக்களவையில் காலையில் அவர் அவையில் நுழைந்ததும் 2-வது வரிசையில் அமர்ந்தார். நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வற்புறுத்தி அவரை முதல் வரிசையில் அமரச் செய்தார். எனினும் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜுக்கு அடுத்தே அவர் அமர்ந்தார்.

பிற்பகலில் அவர் அவைக்கு வந்தபோது சிறிது நேரம் இருக்கையைத் தேடி அலைந்தார். பின்னர் 8-வது வரிசையில் அமர்ந்தார்.

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில், 22, 078 விபத்துகள்; 5,078 பேர் பலி


தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 66,238 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 15,563 பேர் இறந்துள்ளனர்.

மேலும் 75,681 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் தமிழகம் முழுவதும் நடந்துள்ள 22,078 விபத்துகளில் 5,078 பேர் இறந்துள்ளனர், 25,374 பேர் காயமடைந்துள்ளனர் என்று அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து போக்குவரத்துத் துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

சாலை விபத்துக்கள் அதிகரிப்பதற்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவே முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சாலை விதிகளை பின்பற்றி நடக்க வலியுறுத்தி, ஆண்டுதோறும் ஜனவரியில் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களில் மேம்பாலம் கட்டுதல், சாலையை விரிவுபடுத்துதல், துணைச் சாலைகள் அமைத்தல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். 2012-ல் சாலை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 16,175 ஆக இருந்தது. இது 2013-ல் 15,563 ஆக குறைந்துள்ளது. இதை மேலும் குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

"பலாத்காரத்தைத் தடுக்க எந்த அரசாலும் முடியாது. சம்பவம் நிகழ்ந்த பின்பு, நடவடிக்கை மட்டுமே எடுக்க முடியும்."


மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர், பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருக்கிறார். அமைச்சர் கூறியதாவது: “பாலியல் பலாத்காரம், சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணை பொறுத்து சமூக குற்றமாக கருதப்படுகிறது. சில சமயங்களில் அது சரி என்றும், சில நேரங்களில் தவறு என்றும் கூறப்படுகிறது. புகார் தெரிவிக்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது. பலாத்காரத்தைத் தடுக்க எந்தவொரு அரசாலும் முடியாது. சம்பவம் நிகழ்ந்த பின்பு, நடவடிக்கை மட்டுமே எடுக்க முடியும்.

பலாத்காரம் செய்யப்படுவதி லிருந்து தப்பிக்க, கராத்தே, ஜுடோ உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை பெண்கள் கற்றுக்கொள்ள வேண் டும். அப்போதுதான், பெண்களின் சம்மதம் இல்லாமல், யாராலும் அவர்களைத் தொட முடியாது.

திரைப்படங்களில் காட்டப்படும் ஆபாச நடனங்கள் சமுதாயத்தில் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. 2007-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இந்தித் திரைப்பட நடிகை ஒருவரின் கன்னத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் முத்தமிட்டார். ஆனால், அந்த நடிகை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதைத் தவறு என்றும் கருதவில்லை” என்றார்.

பாபுலால் கவுரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அவர் உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

பாபுலால் கவுரின் கருத்துக்கும், கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் லலிதா குமாரமங்கலம் கூறியுள்ளார்.

கலைஞர் கேள்வி பதில் அறிக்கை !!

நேற்று கலைஞர் கருணாநிதி தனது கேள்வி பதில் அறிக்கையை வெளியிட்டார் . அந்த அறிக்கையில் மெட்ரோ ரயில் திட்டம் வேண்டாம் என்று சொன்ன முதல்வர் ஜெயலலிதா இப்போது மத்திய அரசிடம் நிதி கேட்பது ஏன் என கேள்வி எழுப்பினார் . 

கேள்வி:-மத்திய மந்திரி முண்டே பதவியேற்ற 10 நாட்களில் விபத்தில் சிக்கி பலியாகி விட்டாரே? 

பதில்:-மிகவும் சோகமான ஒரு சம்பவம் அது. பா.ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்த பிரமோத்மகாஜன் சில ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் அசாதாரணமான முறையில் மறைந்தார். அவருடைய மைத்துனர்தான் தற்போது மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கோபிநாத் முண்டே.இந்தியாவின் தலைநகரின் மத்திய பகுதியிலே முக்கியமான சாலை ஒன்றில் மத்திய மந்திரியின் ஒருவரின் கார் விபத்துக்கு ஆளாகியுள்ளது.எளிய சாதாரண குடும்பத்தில் பிறந்தவரான முண்டே தனது கடின உழைப்பின் காரணமாக முன்னேறியவர். அவரது மறைவு குறித்து தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்தினருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கேள்வி:- வல்லூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறதே? 
பதில்:- ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்ட போதே அ.தி.மு.க. ஆட்சிக்கு வருமானால் மூன்றே மாதங்களில் மின்வெட்டே இல்லாமல் செய்வோம் என்று கூறித்தான் ஆட்சிக்கு வந்தார். அதற்குப் பிறகு பல முறை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும், மின்துறை அமைச்சரும் மின்வெட்டே இல்லாமல் செய்திடுவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் மின்வெட்டுதான் நிறுத்தப்படவில்லை. 
பெரிய, சிறிய தொழிற்சாலைகள் எல்லாம் தமிழகத்தில் மின்வெட்டு காரணமாக மூடப்பட வேண்டிய நிலை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் ஏற்பட்டது. முதல்-அமைச்சர் விடுத்த அறிக்கையில், “பகீரத முயற்சிகளை எனது தலைமையிலான அரசு எடுத்ததன் விளைவாக, கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவுத்திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளதுஎன்று கூறியிருக்கிறார்.
அதாவது புதிய மின் உற்பத்தியை இவருடைய தலைமையிலான அரசு கடந்த மூன்றாண்டுகளில் எடுத்த தீவிரமான நடவடிக்கைகளின் விளைவாக, 2,500 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறும் முதல்-அமைச்சர், இந்தப் புதிய மின் உற்பத்தி நிறுவு திறனுக்கான மின் திட்டங்கள், எங்கெங்கே-எந்தெந்த தேதியில் இவர்களுடைய ஆட்சியினால் தொடங்கப்பட்டன என்று விளக்கிடத்தயாரா?
 
தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்துதான் இந்த 2,500 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைக்கத்தொடங்கியிருக்கிறதே தவிர, ஜெயலலிதாவினால் புதிதாகத்தொடங்கப்போவதாக அறிவிக்கப்பட்ட மின் திட்டங்கள் எதுவும் இதுவரை தொடங்கப்படவும் இல்லை, அதிலிருந்து தற்போது மின்சாரம் கிடைக்கவும் இல்லை. மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில் 3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்டகால அடிப்படையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார்.
 
இந்த மின்சாரம் யாரிடமிருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது? அதற்காக முறைப்படி டெண்டர் கோரப்பட்டதா? இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் அரசு சார்பில் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமானால் அனைவரும் விவரங்களைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
 


கேள்வி :- ஜெயலலிதா மீதான வருமான வரி முறைகேடு வழக்கும் 15 ஆண்டு களுக்கு மேலாக நிலுவையில் உள்ளதே?

பதில் :- ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் 199394ம் ஆண்டுக்கான தங்களது வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வில்லை. வருமான வரித் துறை பல முறை சம்மன் அனுப்பியும் பதில் இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித் துறை 2005ல் இவர்கள் மீது வழக்கு தொடுத்தது. உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. வருமான வரித்துறை உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. 2422006ல் வழக்கு நீதிபதிகள் பி.என்.அகர்வால், ஏ.கே. மாத்தூர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
   
ஜெயலலிதா வக்கீல் 6 வாரம் அவகாசம் வேண்டுமென்றார். அப்போது நீதிபதிகள் கூறியது என்ன தெரியுமா? நீதி பரிபாலன முறையை நீங்கள் கேலிக் கூத்தாக்கி வருகிறீர்கள். இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த நீதிமன்ற நடவடிக்கைகளை இழுத்துச் செல்ல முடியும்? குற்றவியல் நடைமுறைச் சட்டம்  313 பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜராகி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நீங்கள் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் என்ன பதில் மனுவை உங்களால் தாக்கல் செய்ய முடியும்? (ஜெயலலிதா வழக்கறிஞரைப் பார்த்து) உங்கள் கட்சிக்காரர் நீதிமன்றத்தில் ஆஜராகி கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்று நாங்கள் இன்றைக்கே ஆணை பிறப்பிக்க விரும்புகிறோம். இவ்வாறு உச்சநீதிமன்றம் தெரிவித்தும் கூட, வழக்கு இன்னமும் முடியவில்லை என்பதுதான் வேடிக்கை. நாடகமே உலகம். தமிழ்நாட்டில் நடப்பதை யார் அறிவார்?

கேள்வி:- 3-6-2014 அன்று பிரதமரைச் சந்தித்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொடுத்த மனுவில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசின் முழு உதவி நாடப்படுகிறது என்றெல்லாம் கேட்டிருக்கிறார். ஆனால் ஏற்கனவே இந்த மெட்ரோ ரெயில் திட்டமே கூடாது என்றும் மோனோ ரெயில் திட்டம் தான் தேவை என்றும் கூறி வந்தாரே?
பதில்:- மெட்ரோதிட்டத்தைத் தொடக்கத்தில் வரவேற்காத ஜெயலலிதா தற்போது பிரதமரைச் சந்தித்த நேரத்தில், மெட்ரோ ரெயிலின் 76 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இரண்டாம் பாகப்பணிகளை நிறைவேற்ற ரூ.36 ஆயிரத்து 100 கோடி தேவைப்படும் நிலையில், மத்திய அரசின் முழு உதவி நாடப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார். 
மெட்ரோ திட்டமே கூடாது என்று சொன்னவர்கள், அந்தத் திட்டத்தை நிறைவேற்ற மறுத்தவர்கள், தற்போது டெல்லிக்குச்சென்று அதே மெட்ரோ திட்டத்திற்கு நிதி வேண்டுமென்று கேட்கிறார்கள் என்றால், வாக்களித்த மக்கள் இந்த முரண்பாட்டை புரிந்து கொள்ள வக்கற்றுப் போய் விட்டார்களா என்பதுதான் நமக்குள்ள அய்யப்பாடு.
 


தமிழக அரசு கேபிள் டி.வி.க்கு டிஜிட்டல் உரிமம் வழங்க கோரி மத்திய அமைச்சருக்கு ஜெயலலிதா கடிதம்


தமிழகத்தில் டிஜிட்டல் முறையி லான கேபிள் டிவி ஒளிபரப்புக்கான உரிமத்தை அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பது தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 2011-ல் முதல்வராக பதவியேற்றதும், செயலற்று இருந்த தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு உயிரூட்டினேன். வாடிக்கையாளர்களுக்கு மாதக் கட்டணம் ரூ.70-க்கு, 100 சானல் கள் என்ற அடிப்படையில் அரசு கேபிள் டிவி வழங்கி வருகிறது. 24 ஆயிரம் உள்ளூர் கேபிள் ஆபரேட் டர்கள் மூலமாக 65 லட்சம் வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் நாட்டிலேயே மிகப் பெரிய எம்எஸ்ஓ-வாக அரசு கேபிள் டிவி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

கடந்த 2.4.2008-ல் தமிழக அரசுக்கு ‘காஸ்’ (சிஏஎஸ்) முறையில் கேபிள் டி.வி. ஒளிபரப்பை மேற்கொள்வதற்கான உரிமத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வழங்கியது. அதனடிப்படையில் சென்னை வாடிக்கையாளர்களுக்கு கேபிள் டிவி சேவையை தமிழக அரசு வழங்கி வருகிறது. பின்னர், கேபிள் டிவி இணைப்பு (ஒழுங்குமுறை) சட்டம்,1995-ல் திருத்தம் செய்து ‘காஸ்’ என்றிருந்ததை ‘டாஸ்’ (டிஜிட்டல் அட்ரஸபிள் சிஸ்டம் - டிஏஎஸ்) என மாற்றியமைத்தது.

அதைத் தொடர்ந்து, சென்னையில் டிஜிட்டல் முறையில் கேபிள் டிவி ஒளிபரப்பை வழங்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு கேபிள் டிவி நிறுவனம் மேற்கொண்டது. இதற்காக ரூ.50 கோடி செலவில் செட்டாப் பாக்ஸ் வாங்குவது, தேவையான டிஜிட்டல் கருவிகளை நிறுவுவது ஆகியவற்றுக்கான ஒப்பந்தத்தை செய்தது. மேலும் ‘டாஸ்’ உரிமத்துக்காக 5.7.2012-ல் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது.

தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த ஒன்பது தனியார் எம்எஸ்ஓ-க்களுக்கு உரிமம் வழங்கிய மத்திய அரசு, தமிழக அரசு கேபிள் டிவிக்கு உரிமத்தை வழங்காமல் உள்ளது.

கடந்த ஆட்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சரை தமிழக எம்.பி.க்கள் பலமுறை சந்தித்தும், பிரதமரிடம் முறையிட்டும் பலன் இல்லை. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு உரிமத்தை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. நானும் அப்போதைய பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். எனினும் இன்னும் வழங்கப்படவில்லை.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் குறைந்த விலையில் தரமான கேபிள் டிவி சேவையை பெறும் வகையில், ‘டாஸ்’ உரிமத்தை தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் தனியார் நிறுவனம் ஒன்றில் விபத்து !!



புதன்கிழமை இரவில் தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிறுவனமான நிலா கடற் உணவு நிறுவனத்தில் அமோனியா வாயு வெளியேறிய்தால் அங்கு பணியாற்றிய 54 பேர் மயக்கம் அடைந்தனர் .

அவர்களை மருத்துவமனையில் சந்தித்த மாவட்ட ஆட்சியர் , அனைவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தார் . 

இந்த 54 பேரில் 47 பேர் பெண்கள் , 7 பேர் ஆண்கள் .


புனேயில் திட்டமிடப்பட்ட வன்முறை இசுலாமியர்கள் மீது நடத்தப்படுகிறது!


பூனா நகரில் 24 வயது இசுலாமிய பணியாளர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இவர் கொலை செய்யப்பட்ட செய்தியை இந்து ராஸ்ட்ர சேனா என்கிற அமைப்பினர் “ முதல் விக்கெட் விழுந்திருக்கிறது” என்று குறுஞ்செய்தியை பகிர்ந்திருக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட மோசினின் தந்தை,” கொலை செய்யப்பட்ட தினத்தின் மதியத்தில் கூட அவனிடம் பேசினேன். எங்களுக்கு மதக்கலவரம் பற்றிய அச்சம் இல்லை. ஏனெனில் பூனா பாதுகாப்பானது என்றே நாங்கள் நம்பினோம். அவன் ஒருவன் மட்டுமே எங்கள் குடும்பத்தினருக்கான வருமானத்தினை ஈட்டுபவன்” என்று சொல்லுகிறார். முகநூலில் ஏற்றப்பட்ட படங்களுக்கு எந்தவகையிலும் சம்பந்தப்படாத மோசின் கொலை செய்யப்பட்டது , மதவெறியின் உக்கிரத்தினை காட்டுகிறது.
பூனாவில் 500க்கும் அதிகமானோர் இசுலாமிய வீடுகளை தாக்கி அழித்திருக்கிறார்கள். பல வணிக கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளது. பல மசூதிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இசுலாமிய மத குருமார் மீதும், மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தபட்டிருக்கிறது. இசுலாமியருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கு எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது. 20க்கும் மேற்பட்ட பேக்கரிகள் அழிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அதிகமான அழிவுகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இசுலாமியர் குடியிருப்புப் பகுதியில் 500க்கும் மேற்பட்டவர்கள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்கி இருக்கிறார்கள். இப்படியாக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இதைப்பற்றிய பெரிய விவரங்களை, விவாதங்களை ஊடகங்களில் காணமுடிவதில்லை. மோடியின் வெற்றியின் கொண்டாட்ட மனநிலையை கலைத்துவிட விருப்பமில்லாமல் ஊடகங்கள் செயல்படுகின்றனவோ என அய்யம் எழுகிறது.
பூனே நகரில் இசுலாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் திட்டமிட்ட வன்முறையை கண்டிப்போம். மனிதநேயமற்ற மதவெறிபிடித்த அரசியல் உடனடியாக எதிர்க்கப்படவேண்டியது. அப்பாவிகளை பலியிட்டு வளர்த்தப்படும் மதவெறி அரசியல் தடுத்து நிறுத்த ஒன்றாக குரல் கொடுப்போம்.
எக்காலத்திலும், மதவெறி மனிதர்களை வேட்டையாட அனுமதிக்கக் கூடாது.

Thirumurugan Gandhi
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media