நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட சிதம்பரம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசினார். மேலும் அவர், தான் இந்த தேர்தலில் போட்டியிடாத காரணங்களையும் கூறினார்.
முப்பது ஆண்டுகள் மக்களவையில் பணியாற்றியதோடு முக்கிய துறைகளில் அமைச்சராகவும் தான் இருந்துவிட்டுதாகவும், தொடர்ந்து காந்திய வழியில் நிர்மாணியப் பணிகளை செய்ய வேண்டுமென தனது மனம் சொல்வதாகவும், இளைஞர்கள் பொறுப்புக்கு வரவேண்டும் என்றுதான் தான் வழிவிட்டதாகவும் கூறினார்.
மாநாட்டில் மேலும் அவர் பேசியதாவது:
காரைக்குடியில் வெள்ளிக் கிழமை பிரச்சாரத்துக்காக வந்த முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசு தமிழகத்துக்கு ஒன்றுமே செய்யவில்லை எனக் கூறினார். அவர் வான்வழிப் பயணத்தை விட்டுவிட்டு தரை வழியாக பயணித்தால்தான் தமிழகத்தில் மத்திய அரசு என்னென்ன திட்டங் களை செய்துள்ளது என்றும் மக்களின் நிலைமைகளும் தெரியும். மத்திய அரசு செய்ததை பட்டியலிட்டால் நீங்கள் மறுக்கத் தயாரா?
அந்தக் கூட்டத்தில் 2009-ம் ஆண்டு சிவகங்கை தொகுதி மக்களவைத் தேர்தல் முடிவை நான் மாற்றி அறிவித்துக்கொண்டதாக முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளரால் தொடரப் பட்ட வழக்கின் சாட்சி விசாரணை 2013 ஜன. 31-ல் தொடங்கியது. முதலில் மனுதாரரில் இருந்து தொடங்கியது. இதில் 19 வாய்தாவில் 10 வாய்தாவுக்கு அவர் வரவில்லை.
இதைத்தொடர்ந்து குறுக்கு விசாரணைக்கான 17 வாய்தாக்களில் 8 வாய்தாக்களுக்கு அவர் வரவில்லை. இவ்வாறு வாய்தா வாங்கினால் எப்படி வழக்கு முடியும்? வழக்கு முடியாததற்கு காரணம் நான் அல்ல அப்போதைய உங்கள் வேட்பாளர்தான்.
இந்த ஒரு வழக்கை மட்டும் குறிப்பிட்டாரே, டான்ஸி நிலம், சட்டத்துக்கு புறம்பாக 4 தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல், சொத்துக்குவிப்பு வழக்கு இதைப்பற்றியும் அவர் பேச வேண்டியதுதானே?
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலி தாவே இந்த நீதிபதிதான் வழக்கை விசாரிக்க வேண்டும், இந்த அரசு வழக்கறிஞர்தான் வாதாட வேண்டும் என்றெல்லாம் சொல்லாமா?
மத்திய அரசு கொண்டு வந்த பிற்பட்டோருக்கு 69 சதவீதம் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற முடியாதென்றும் அதன்பிறகு பல்வேறு வாதங்களுப்பிறகு 50 சதவீதம் இடஒதுக்கீட்டை ஒத்துக்கொண்டவர்தான் முதல்வர்.
தமிழகத்தில் 5 முனைப்போட்டியைப் பற்றி எனக்கு கவலை இல்லை. காங்கிரஸ் தனி வழியில் பயணிக்கிறது. முந்தைய தேர்தலைவிட கூடுதலாகப் பணியாற்றுவோம்.
தமிழகம் நாட்டின் முதல் மாநிலமாக வரும். 2031-ல் இந்தியா உலக நாடுகளில் முதல் 3 நாடுகளில் ஒன்றாக உயரும். அதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசியிருந்தார்,