BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 13 August 2013

தன் உயிர் கொடுத்து 40 பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனர்.

ஊட்டியில் இருந்து ஈரோடு வரும் பேருந்து ஒன்று சுமார் 40 பயணிகளுடன் தமது பயணத்தை தொடங்கியது. பரளியாறு பகுதியில் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனருக்கு தீடிரென்று மாரடைப்பு ஏற்பட்டது. வலப்புறம் திரும்பினால் 1000 அடி பள்ளம். அந்த உயிர் போகும் நிலையில் பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடப்பக்கமாக திருப்பி நாற்பது பயணிகளின் உயிரை காப்பாற்றினார்.

பேருந்தை இடப்புறம் திருப்பும் போது பேருந்து நிலைகுழைந்து பக்கவாட்டில் சாய்ந்தது, இதில் ஓட்டுனர் தலை பேருந்தில் சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், ஒருவேளை பேருந்து பக்கவாட்டில் சாயாமல் இருந்திருந்தால் தேவையான முதலுதவி சிகிச்சைகள் செய்து ஓட்டனரின் உயிரை காப்பாற்றியிருக்கலாம், ஆனாலும் அந்த சூழலில் ஓட்டுனர் பேருந்தை இடப்புறம் திருப்ப வேண்டியது கட்டாயமும் கூட, உள்ளிருந்த பயணிகளின் உயிரை காப்பாற்றவே ஓட்டுனர் பேருந்தை இடப்பக்கம் திருப்பினார்.

பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் பத்து பேருக்கு மட்டும் சிறுகாயங்கள் ஏற்பட்டது, பின்பு மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கபட்டு பேருந்து தூக்கி நிறுத்தப்பட்டது, இந்த நிகழ்ச்சி அப்பேருந்தில் பயணம் செய்த ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்வில் மறக்க முடியாதது என்றும், தங்கள் உயிரை காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்த ஓட்டுனரை எங்கள் வாழ்வாளில் உயிருள்ளவரை மறக்க மாட்டோம் என்றும் பயணிகள் தெரிவித்தனர்.

காவல்துறை கட்டுபாட்டில் மதுரை.

தமிழகத்தில் சில நாட்களாக பா.ஜ.க கட்சி நிர்வாகிகளும் இந்துதுவா அமைப்பு சார்ந்தவர்களும் சமூக விரோதிகளால் கொல்லபட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, தற்பொழுது வரை இந்த கொலைகளை செய்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் விசாரணை நடந்து கொண்டே இருக்கிறது.


இந்நிலையில் வரும் ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று மதுரையில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடக்கலாம் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையின் பேரில் மதுரை மாநகரம் மொத்தமும் காவல்துறை கட்டுபாட்டில் எடுக்கபட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி மூன்றடுக்கு போலிஸ் பாதுகாப்பும், தீவிர சோதனையும் நடத்தபட்டு வருகிறது.

மதுரையை சுற்றி 20 சோதனை சாவடிகளில் தொடர் சோதனை நடந்து வருகிறது. ரயில்நிலையத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்படுகிறது. பொதுமக்கள் இந்த சோதனைகளுக்கு போதிய ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், சந்தேகப்படும்படியாக யாரேனும் தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்குமாறு வணிகவளாகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு தகவல் அனுப்பட்டதாகவும் காவல்துறை அறிவித்திருக்கிறது.


2001ல் சென்னையில் திமுக தொண்டர்கள் மீது நடத்தப்பட்ட‌ வன்முறை குறித்து திமுக எம்.எல்.ஏவின் நினைவலைகள்

திமுக தொண்டர்கள் மீது 2001ல் சென்னையில் காவல்துறையும், ரவுடிகளும் நடத்திய வன்முறை குறித்து திமுக எம்.எல்.ஏவின் நினைவலைகள்

குன்னம் தொகுதி எம்.எல்.ஏ திமுகவை சேர்ந்த சிவசங்கர் எஸ்.எஸ் அவர்கள் 2001ல் ஜெயலலிதா அரசால் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை நள்ளிரவில் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து ஆகஸ்ட் 12, 2001ம் ஆண்டு நடைபெற்ற பேரணியில் வெடித்த வன்முறை குறித்து நினைவுகளை ஃபேஸ்புக் பக்கத்தில் சுவையாக எழுதியிருந்தார், அவைகள் உங்கள் பார்வைக்கு.
---------------

ஊர்வலத்திற்கு வரும் போது வாகனத்தை கிண்டியிலேயே காவல்துறை மடக்கியது. அதற்கு மேல் வாகனத்தை அனுமதிக்க முடியாது என்றனர். அங்கேயே போலீஸார் வீடியோ கேமரா கொண்டு படமெடுக்க துவங்கினர். கெடுபிடி அதிகமாக இருந்தது.

ஊர்வலம் துவங்கியது. நாங்கள் பங்கேற்ற இடம் கிட்டத்தட்ட ஊர்வலத்தின் மய்யப்பகுதி. துவங்கிய சைதாப்பேட்டையிலிருந்தே சாலையின் இருபுறமும் போலீஸ் வெகுவாக குவிக்கப் பட்டிருந்தனர். சாதாரணமாக அல்ல, சுவர் வைத்தது போல.

2001 ஆம் ஆண்டு, ஜூன் 30-ம் நாள் தலைவர் கலைஞர் நள்ளிரவில் ஜெயலலிதா அரசால் அராஜகமாக கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்த ஊர்வலம் ஆகஸ்ட் 12 அன்று. மே மாதம் ஆட்சியை இழந்தக் கட்சியின் ஊர்வலமாகத் தெரியவில்லை.

கலைஞர் கைதை தொலைக்காட்சியில் பார்த்து தன்னையே இழுத்துப் போனதாக உணர்ந்த கலைஞரின் உடன்பிறப்புகள் வெள்ளமென திரண்டிருந்தனர். உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தனர். கைது செய்த முத்துக்கருப்பனையும் ஜெயலலிதாவையும் கண்டித்து முழக்கம் எழுப்பப் பட்டது.

காவலுக்கு நின்ற போலீஸார் தலைமையிடத்து உத்தரவின் பேரில் விறைப்பாய் நின்றனர். அதைப் பார்த்த கழகத் தோழர்களுக்கு இன்னும் கோபம் கூடி கோஷத்தின் டெஸிபல் உயர்ந்தது. போலீஸ் ஆளுயர லத்தியுடன் சற்று முறைக்க ஆரம்பித்தனர். "அஞ்ச மாட்டோம் அஞ்ச மாட்டோம் அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம்" என்ற முழக்கம் ஒலிக்க ஆரம்பித்தது.

ஊர்வலம் ராதாகிருஷ்ணன் சாலையில் நுழையும் போது இருட்டத் துவங்கி இருந்தது. போலீஸினர் முகத்தில் வித்தியாசமான உணர்வு தெரிந்தது. சிலரின் கோஷம் கடுமையாக இருந்தது. சில இடங்களில் ஊர்வலத்தை போலீஸார் தடுப்பதாகவும் டைவர்ட் செய்வதாகவும் தகவல்கள் பரவ ஆரம்பித்தன.

சிட்டி செண்டர் சிக்னல் தாண்டும் போது போலீஸார் "சீக்கிரம் போங்க" என எங்களை நெருக்கத் துவங்கினர். எங்களுக்கு முன்பாக திருச்சி மாவட்டத்தினர் சென்று கொண்டிருந்தனர். அவ்வப்போது எங்கிருந்தோ கற்கள் வந்து விழ ஆரம்பித்தன. போலீஸாரிடம் சொன்னால் கண்டு கொள்ளவில்லை. அப்போதே நெருட ஆரம்பித்தது.

டி.ஜி.பி அலுவலகத்திற்கு முன்பாக பறக்கும் ரெயில் பாலம் ஒன்று இருக்கும், அதற்கு கீழாக நாங்கள் செல்லும் போது தொலைவில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. நிதானிப்பதற்குள் எங்கள் அருகிலேயே ஏதோ குண்டு போல் விழுந்தது. ஒரே புகை மயம். கண்ணீர் புகைக்குண்டு. கண்ணை கசக்கிக் கொண்டு சாலையின் ஓரத்திற்கு ஒதுங்கினோம்.

போலீஸார் எங்களை துரத்துவதிலேயே குறியாக இருந்தனர். அதற்குள் தொலைவில் கேட்ட சத்தம், டி.ஜி.பி அலுவலகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு என தெரிய வந்தது....

போலீஸார் லத்தியை சுழற்றத் துவங்கினர். சாலைக்கு திரும்ப சென்றவர்கள் மீது ரப்பர் குண்டுகள் வந்து தாக்கத் துவங்கின. தொடர்ந்து சுடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. சாலையே போர்களமாக காட்சி அளித்தது. எங்கள் மாவட்டத்தினர் மட்டும் அந்த இடத்திலேயே மாட்டிக் கொண்டோம். எங்களில் சிலருக்கு கல்லடி, சிலருக்கு லத்தி அடி.

முன்னாள் சென்றவர்கள் கால்வாய்க்கு இடது புறம் உள்ள சாலையில் சென்றுவிட்டனர். அந்த நேரத்தில் ஒரு மாருதிவேன் ஆம்புலன்ஸ் ஒன்று கடற்கரையை நோக்கி வந்தது. நாங்கள் இருக்கும் பகுதியை கடக்கும் போது புகை மூட்டத்தால் வேகம் குறைந்தது. இருக்கும் சூழலை பார்த்து ஆம்புலன்ஸை திருப்ப முனைந்தது போல் இருந்தது.

அந்த நேரத்தில் பக்கத்தில் ஒரு கட்டிடத்தில் இருந்து வந்த இரண்டு பேர் அந்த ஆம்புலன்ஸை கட்டையால் தாக்கினர். கண்ணாடிகள் நொறுங்கின. டிரைவர் இறங்கி தப்பி ஒடினார். ஆம்புலன்ஸில் வேறு யாரும் இல்லை. தாக்கிய இருவரும் தள்ளி சென்று ஒரு பாட்டிலை ஆம்புலன்ஸ் மீது அடித்தனர்.

வேன் தீ பிடித்தது. சினிமாவில் நடப்பதை போல் காட்சிகள் நடந்தேறின. நிமிடங்களில் நடந்த இந்த சம்பவத்திற்கு போலீஸார் மௌனசாட்சியாக நின்றனர். இப்போது நாங்கள் 50 பேர் அளவிலே அந்த இடத்தில் இருந்தோம். மீதி பேர் கால்வாயின் இரு பக்கங்களிலும் சென்று கொண்டிருந்தனர். பின்னால் வெகு தொலைவிலே மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் போலீசாரால் மறிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.

நாங்கள் இருந்த இடத்திலிருந்து காந்தி சிலை வரை சாலை வெறிச்சோடி காணப்பட்டது. பிளாட்பார்மில் ஏறி நடந்தோம். சாலை முழுவதும் ஓடும் போது விட்டு சென்ற செருப்புகளும், கிழிந்த துண்டுகளும், வேட்டிகளும், முறிந்த லட்டிகள் என போர் முடிந்த களமாய் காட்சியளித்தது.

பொங்கி வழியும் வியர்வையும், கண் எரிச்சலுமாய், தாக்குதலின் வலியுமாய் கடற்கரை சாலையை அடைந்தோம். அங்கு இதை விட அலங்கோலம். போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டு கை, கால் முறிந்து, காயங்களோடு பலர் சாலை ஓரமாக அமர்ந்திருந்தனர். குண்டடிப்பட்டவரை தூக்கி செல்கிறார்கள் என்றனர். ஒருவருக்கு உயிர் பிரிந்துவிட்டது என்றனர்.

கழகத் தோழர்கள் வந்த வேன்கள் வந்து தாக்கப்பட்டவர்களை ஏற்றி செல்லும் முயற்சியில் இருந்தனர். நாங்கள் முன்னே செல்ல ஆரம்பித்தோம். விவேகானந்தர் இல்லத்திற்கு அந்தப்பக்கம் சாலை விளக்குகள் ஒளிரவில்லை, வாகன வெளிச்சம் மட்டுமே. பார்த்தால் வெட்டுக்காயங்களோடு இருந்த சிலரை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து காந்தி சிலை பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்திய அதே நேரத்தில், திருவல்லிக்கேணி அயோத்திக்குப்பம் பகுதியில் இருந்து வந்த ரவுடிக்கூட்டம் சிறுசிறு குழுக்களாக பிரிந்து கழகத் தோழர்களை வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களால் தாறுமாறாக வெட்டியிருக்கின்றனர். தலை, கை, கால் என ஏகப்பட்ட பேருக்கு வெட்டு. எங்கும் ரத்த மயம். மரண ஓலம்.

( போலிசுக்கு தலைமை முத்துக்கருப்பன், ரவுடிகளுக்கு தலைமை அயோத்திக்குப்பம் வீரமணி. அரசுக்கு தலைமை முதலமைச்சர் ஜெயலலிதா )

இதை எல்லாம் பார்த்து பதைபதைத்த நாங்கள் உடன் வந்தவர்களை தேடிப் பிடிக்கத் தொடங்கினோம். ஒரு குழு தப்பி ஓடி அயோத்திக்குப்பம் வழியாக வந்து, அங்கே சிலரால் துரத்தப்பட்டு வந்து சேர்ந்தனர். இன்னும் சிலர் நாங்கள் தாக்கப்பட்ட பகுதியிலேயே மொட்டை மாடிகளில் ஏறி ஒளிந்திருந்து வந்து சேர்ந்தனர். பலர் தப்பி பீச்க்கு ஓடி வந்து நாங்கள் வந்த வாகனங்களை கண்டு பிடித்து அமர்ந்திருந்தனர்.

பீச்சில் இருந்த வாகனங்களையும், தோழர்களையும் போலீஸ் கிளம்ப சொல்லி விரட்ட ஆரம்பித்தனர். அப்போது கடற்கரை சாலையிலிருந்து துப்பாக்கி ஏந்திய போலிசார் கடற்கரை மணலில் இறங்குவதும், சாலைக்கு திரும்ப போவதுமாக மிரட்டிக் கொண்டிருந்தனர். திரும்ப துப்பாக்கிச்சூடு நடக்கலாம், ரவுடிகள் தாக்க வரலாம் என்ற பீதி கிளம்பியது.

ஒவ்வொரு வாகனமாக கிளப்பி அனுப்பினோம். என்னிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டவர்களை திரட்டி கடைசி வாகனத்தை கிளப்பிய போது இரவு 11.00. நீங்காத திகிலோடு ஊர் திரும்பினோம், வாழ் நாளுக்கும் மறக்க மாட்டோம்.

பின்னாளில், எங்கள் ரத்தத்தை அம்மனுக்கு பூசை செய்த அயோத்திக்குப்பம் வீரமணி, அம்மனாலேயே அருள் பாலிக்கப்பட்டார்.

# இன்னும் ரத்தப் பூசை கேட்ட அம்மன் தான்....

வாயில் வம்போடு அலையும் அமைச்சர்கள்!

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காமல் இந்திய ராணுவத்தினர் மீது தொடத்த திடீர் தாக்குதலினால் இந்திய வீரர்கள் ஐந்து பேர் பலியான சம்பத்தை ஏற்கனவே நாம் சொல்லியிருந்தோம். அவர்களில் நான்கு பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் பாட்னாவை சேர்ந்தவர், சில தினங்களுக்கு முன்பு தான் அவர்களது இறுதி சடங்கு நடந்தது.

பீகார் மாநில ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் பீம்சிங் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் காவல் பணிகளில் சேருவதே உயிர் தியாகம் செய்யத்தான் என்றார், வேளாந்துறை அமைச்சரோ இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தொடர்பு இல்லை, இது தீவிரவாதிகளின் தாக்குதல் என்றார்.

அவர்கள் கூறிய கருத்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமாரிடம் இது குறித்து கேட்கப்பட்டது. இரு அமைச்சர்களின் கருத்துக்கு வருத்தம் தெரிவித்த நிதீஷ்குமார், கட்சி தலைவர் சரத்யாதவ் அவர்கள் இரு அமைச்சர்களின் கருத்து குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டிஸ் அனுப்பியுள்ளார் என்று கூறினார்.

இதனிடையில் இரு அமைச்சர்களின் கருத்து உயிர் தியாகம் செய்த வீரர்களை கொச்சை படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டுமக்களின் உணர்வுகளையும் இழிவு படுத்துவதாக இருக்கிறது என்று பாட்னா உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராம்சந்தோஷ் ராய் இவர்கள் இருவர் மீதும் தோச துரோக வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் வீரர்களின் உடல்கள் பாட்னா விமானநிலையம் வந்த பொழுது சீருடையில் செல்லாமல் சாதாரன உடையில் சென்ற போலிஸ் சூப்பிரண்டு மணிஷ்குமார் சிண்ஹா மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது. பாட்னா வீரர் இறுதி சடங்குக்கு செல்லாமல் மறுநாள் அவர்கள் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய தொழில்நுட்பதுறை அமைச்சர் கவுதம் சிங்கிடம் ஏன் நேற்று வரவில்லை என்று கேட்டதற்கு, அது ஒரு பெரிய விசயமா என கேட்டுள்ளார். அவர் மீதும் வழக்கு பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


வெளிநாட்டு வேலையின் மீது மோகம் கொள்பவர்களுக்கு.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சதீஷ் என்ற 28 வயது வாலிபர், டிப்ளமோ இன் மெக்கனிக்கல் இன்ஞினியரிங் படித்திருக்கிறார். உள்நாட்டில் வேலை செய்து பெரிதாக சம்பாரிக்க முடியாது அதனால் சவுதியில் இருக்கும் சித்தப்பா உதவியுடன் அங்கே எதாவது வேலை செய்து சம்பாரிக்கலாம் என முடிவுக்கு வந்தார்.

வீட்டில் இருந்த நகைகளை விற்று, பத்தாததிற்கு கடன் வாங்கி, பெரும் பணம் சம்பாரித்து அழகான மனைவி, சொந்தத்தில் வீடு அருமையான குழந்தைகள் என வாழ்வின் எதிர்காலத்தை கனவுகளாக கண்டுகொண்டே விமானத்தில் ஏறினார்.

அல்ஜூப் நகர் பக்கத்துல சகாகா என்ற இடத்தில் சதீஷின் சித்தப்பா பஞ்சர் கடை வைத்துள்ளார், அவரது ரெகுலர் வாடிக்கையாளரான மெத்தான் என்பவரின் உதவியுடன் சதீஷுக்கு “ஹவுஸ் ட்ரைவர்” என்று விசா வழங்கப்பட்டு இருந்தது, இதற்காக சதீஷ் மெத்தானுக்கு மாதம் 1200 ரூபாய் கொடுத்து வேண்டியிருந்தது, இந்த விசாவை பயன்படுத்தி சதீஷ் வேறு எங்கும் வேலை செய்து கொள்ளலாம் என்பதால் சதீஷும் தருவதாக ஒப்புக்கொண்டார்.

நிழலின் அருமை வெயிலில் நடக்கும் போது தான் தெரியும் என்பார்கள், சதீஷிற்கு சொந்த மண்ணின் பெருமை அங்கிருக்கும் போது தான் தெரிந்திருக்கிறது, நேரம் காலம் பார்க்காமல், கால் வயிறும், அரை வயிறும் சாப்பிட்டு உழைத்தாலும் மாதம் பத்தாயிரத்திற்கு மேல் அவரால் சேமிக்க முடியவில்லை. அவரை போலவே விவசாய விசாவில் வந்தவர்கள் கிழிந்த கொட்டகையில் ஒட்டகம் மேய்த்து கொண்டு ஒட்டகத்திற்கு வைக்கும் தண்ணிரையே குடித்து கொண்டு வாழும் அவலத்தை கண்ணால் கண்டார்.

ரோட்டில் நடந்து செல்லும் பொழுது அரபிகள் அடிப்பது, ஆடைகளை உருவி அவமானப்படுத்துவது என்று இவர்கள் படாத கஷ்டமில்லை, எதிர்த்து எதேனும் கேள்வி கேட்டுவிட்டால் இஸ்லாத்தை இழிவாக பேசிவிட்டான் என்று பள்ளிவாசல் அழைத்து போய் சவுக்கடி கொடுப்பார்க்கள், இவ்வாறு இலங்கையில் இருந்து பிழைப்புக்காக வந்திருந்த காண்டீபன் என்ற இளைஞரை ஒவ்வொரு வெள்ளிகிழமையும் பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து சவுக்கால் அடித்துள்ளனர், ஒருமுறை அடையாளம் தெரியாத இந்தியர் ஒருவரை காருக்கு பின்னால் வைத்து கட்டி தரதரவென்று ரோட்டில் இழுத்து சென்றுள்ளனர்.

கள்ளநோட்டு கொடுத்து ஏமாற்றி சென்ற உள்ளூர்வாசி ஒருவரை பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்த தஞ்சாவூர்காரர் ஒருவர் மறுமுறை அடையாளம் கண்டு, காட்டி கொடுத்துவிட்டார், அவர்களுக்குள் பேசி தீர்த்து கொண்ட அவர்கள் மறுநாள் துப்பாக்கியுடன் வந்து அவரின் தோள் மற்றும் தொடையில் சுட்டு தப்பிவிட்டனர். இவ்வளவு நடந்தும் சகித்து கொண்ட காரணம் கடன் வாங்கி இங்கே வந்திருக்கிறோம், கடனை அடைக்கும் அளவுக்காவது சம்பாரித்து சென்றுவிடலாம் என்று தான் சதீஷை போல் பலரும் அங்கே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்

இரண்டு வருடம் கழித்து சதீஷும், அவரது நண்பர் சிதம்பரமும் சேர்ந்து சகாகா பகுதியிலேயே சொந்தமாக ஒரு பஞ்சர் கடை திறந்துள்ளார்கள். இதை யாரோ மெத்தான்கிட்ட சொல்லிவிட, சொந்தமாக கடை வைக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டாயா, இனி மாதம் மூவாயிரமும், வருடத்திற்கு தனியாக இருபத்தைந்தாயிரமும் கொடுத்தால் தான் விசாவை புதுப்பிக்க உதவுவேன் என்று மிரட்டியுள்ளார். தெரிந்த இந்திய தூதரக அதிகாரிகள் கூட அப்பொழுது இவர்களுக்கு உதவவில்லை வேறு வழியில்லாமல் மாதம் 2000 கொடுத்து விடுகிறோம் என்று தொழிலை ஆரம்பித்தார் சதீஷ்.

சென்ற மாதம் சர்வீஸுக்கு வந்த கார் ஒன்று ரிவர்ஸ் வரும் போது, வேகமாக வந்து இவரது காலில் மோதி பலத்த சேதம் ஏற்பட்டது, அப்பகுதி மருத்துவர்கள் இங்கே போதிய வசதியில்லை என்று கைவிரித்தனர், வசதி இருந்த மருத்துவமனையிலோ வெளிநாட்டவரை சேர்க்க மாட்டோம் என்று சொல்லிவிட்டனர், சிகிச்சைக்காக இந்தியா செல்லலாம் என அனுமதி கேட்ட போது, இந்த விபத்திற்காக நஷ்டஈடு எதுவும் கேட்கமாட்டேன், யார் மீதும் வழக்கு தொடர மாட்டேன் என்று எழுதி கையெழுத்து வாங்கி இந்தியா அனுப்பியுள்ளனர்.

நண்பர்களின் உதவியுடன் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸில் வரிசையாக நான்கு டிக்கெட்டுகள் எடுத்து படுத்தவாறே இந்தியா வரை செல்ல ஏற்பாடு ஆயிற்று, துணைக்கு யாருமில்லை. 15 மணிநேரம், எந்த அவசரம் என்றாலும் தானாக எழுந்திரிக்கவோ, துணைக்கு தோள் கொடுக்கவோ யாருமில்லை, பல இன்னல்களுக்கு மத்தியில் எப்படியேனும் காலை காப்பாற்றி விடலாம் என்று இந்தியா வந்து சேர்ந்தார் சதீஷ்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆன சதிஷின் காலை மீண்டும் குணப்படுத்த முடியாது, ரெண்டுநாளுக்கு முன்னர் வந்திருந்தால் சரி செய்திருப்போம் என கைவிரித்து விட்டனர் டாக்டர்கள், மருத்துவமனை செலவு, சவுதியில் இருந்து இந்தியா வந்த செலவு என சேர்த்த அத்தனையையும் இழந்து இன்று ஒன்றுமில்லாமல் ஒரு காலையும் இழந்து நிற்கிறார் சதீஷ். இழப்பீடு கேட்டு வழக்கு தொடர முடியாமல் கையெழுத்து வாங்கிவிட்டனர்.

தனது வாழ்வை மொத்தமாக இழந்து நிற்கும் சதிஷ் வெளிநாட்டு மோகத்தில் திரியும் இளைஞர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்று தான், பிச்சை எடுத்தாலும் உள்நாட்டிலேயே எடுங்கள், வெளிநாட்டில் வேலைன்னு நம்பி போய் ஏமாந்துறாதிங்க என்பது தான் அது.



தமிழகத்தில் தலைவா ரிலீஸ் - திருட்டு சிடி மூலமாக

தூத்துகுடி டி.வி.டி கடை ஒன்றில் தலைவா திருட்டு டி.வி.டி கிடைப்பதாக தகவல் அறிந்த  தூத்துகுடி விஜய் ரசிகர் மன்ற தலைவர் பில்லா ஜெகன் தமது மன்ற உறுப்பினர்களோடு அக்கடைக்கு சென்று சோதனையிட்டார், அதில் தலைவா உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுபட சீடிக்கள் இருந்தது கண்டுபிடிக்கபட்டது.

அங்கிருந்து காவல்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளனர், அதற்குள் வாக்குவாதம் ஏற்பட்டு டி.வி.டி கடையில் இருந்தவர்கள் விஜய் ரசிகர் மன்றத்தாரால் தாக்கபட்டதாக தெரிகிறது, செய்தி அறிந்து விரைந்து வந்த போலீஸார் சூழலை கட்டுபடுத்த வேண்டி இரு பிரிவினரையும் கைது செய்தனர், பின்னர் விஜய் மன்றத்தார் விடுவிக்கபட்டனர்.

முதல்வன் படம் வெளிவந்த பொழுது அது அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதிக்கு எதிரான படமாக இருக்கிறது என சர்ச்சை கிளம்பியது, இத்தனைக்கும் அது குறித்து கருணாநிதி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, தமிழகத்தில் மதுரையில் மட்டும் முதல்வன் படத்திற்கு எதிர்ப்பு வலுவாக கிளம்பி தினம் இரவு அந்த படம் தி.மு.க குழுமத்தை சேர்ந்தவரால் நடத்தபட்ட சுமங்கலி கேபிள் விசனில் தினம் இரவு காட்டப்படுவதாக சர்ச்சை கிளம்பியது.

அரசியல் ஆசையில் இருக்கும் விஜய் தமது படத்தில் அரசியல் சம்பந்தபட்ட வசனங்கள் வைப்பது ஒன்றும் தமிழ்சினிமாவுக்கு புதிதல்ல, எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இன்று வரை அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது மேலும் நகைச்சுவை காட்சிகளாக அரசியல் விமர்சனங்கள் சோ, எஸ்.எஸ்.சந்திரன், மணிவண்ணன் போன்றவர்களால் செய்யபட்டு தான் வந்தது, ஆயினும் தலைவா படம் மட்டும் இந்த சர்ச்சையில் சிக்கியிருப்பது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளதாக அரசியல் மற்றும் சினிமா விமர்சகர் ஒருவர் தெரிவித்தார்.


தெலுங்கானா விவகாரம் - பதட்டத்தில் ஆந்திரா.

தனி தெலுங்கானா பிரிப்பது குறித்து காங்கிரஸ் அறிக்கை விட்ட நாளிலிருந்தே இரண்டு பகுதியிலும் தொடர்ந்து பதட்ட நிலை நிலவி வருகிறது, தெலுங்கானா பிரிக்கப்படக்கூடாது என பல சட்டமன்ற, நாடாளுமன்ற உறிப்பினர்கள் ராஜினாமா செய்தனர்.

இதை தொடர்ந்து ஆந்திரா அரசு ஊழியர்கள் அமைப்பு ஆந்திரா அரசை கலைக்க வேண்டும் என அறிக்கை விட்டது, அதற்கு எந்த பதிலும் அவர்களுக்கு திருப்தியாக இல்லாததால் நான்கு லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர், இதை தொடர்ந்து ஆந்திரா போக்குவரத்து துறையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தது.

திருப்பதி உள்ளிட்ட ஆந்திராவின் பல பகுதிகளுக்கு போக்குவரத்து தொடர்பு துண்டிக்கபட்டது, தொடர் பதட்டம் நிலவி வருவதால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. ஆந்திரா செல்ல இருந்த பயணிகள் அனைவரும் பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் கோயம்பேடு பஸ்நிறுத்தத்திலேயே தங்கி தங்களது இருப்பிடமாக மாற்றி கொண்டிருக்கிறார்கள்.


குத்து ரம்யா தேர்தலில் போட்டி- பிரச்சாரம் தொடக்கம்!

கர்நாடகா மாண்டியா பகுதி எம்.பி.யாக இருந்த சலுவரய்யா சாமி தமது பதவியை ராஜினாமா செய்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார், அதனால் அப்பகுதியில் இடைதேர்தல் நடைபெறுகிறது, அத்தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த மூன்றாம் தேதி மனுதாக்கல் செய்த நடிகை ரம்யா தமது பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினராவார். இவரது பெயரை கர்நாடக முதல்வர் சித்ரம்மையாவும், கார்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் கட்சி மேலிடத்திற்கு சிபாரிசு செய்ததாக தெரிகிறது. இவர் ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தொகுதிகளில் அனைத்தும் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.

தமிழில் குத்து படம் மூலம் அறிமுகமான ரம்யா. கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். காவேரி பிரச்சனைக்காக கர்நாடக அரசை எதிர்த்து நடிகர்கள் நடத்திய அடையாள உண்ணாவிரதத்தில் ரம்யா கலந்து கொள்ளாதது மட்டுமல்லாது, கர்நாடகா சார்பில் நடிகர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு சர்ச்சை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் அவரை எதிர்த்து மதசார்பற்ற ஜனதாதளம் சார்ப்பில் போட்டியிடும் புட்டராஜுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்டவேரவை உறுப்பினர் சீனிவாஸ், ரம்யா தனது வேட்புமனுவில் தந்தை பெயரை குறிப்பிடவில்லை, என்ன சாதி என்றும் குறிப்பிடவில்லை மேலும் அவர் மாண்டியா பகுதியை சேர்ந்தவர் அல்ல, அவருக்கு இத்தொகுதியின் தேவைகள் குறித்து ஒன்றும் தெரியாது என பேசியது பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.




போர் நிறுத்தம் முடிவுக்கு வருமா?

கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டியும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியும் ஒன்பது முறை இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது, கடந்த சில தினங்களுக்கு முன் நடத்திய தாக்குதலில் ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தியா அமைதியை விரும்பும் நாடென்பதால் நாமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என அமைதி காக்கிறது, இந்தியாவிடமும் தக்க பதிலடி கொடுக்க தேவையான ஆயுத பலமும், ஆட்பலமும் உள்ளது என காங்கிரஸ் தரப்பு சொல்லி வருகிறது.

இந்தியாவிற்குள்ளேயே பேசிக்கொள்கிறார்களே தவிர பாகிஸ்தானுடன் உடனடியாக பேச்சு வார்த்தை நடத்த வெளியுறவுதுறையோ, பிரதமரோ நடவடிக்கை எடுத்தது போல் தெரியவில்லை, பாகிஸ்தான் ராணுவம் எங்கள் கட்டுபாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் அரசால் சொல்லமுடியாது, இந்தியாவின் தயக்கத்திற்கான காரணம் புரியவில்லை என அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள்.


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media