BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 12 March 2014

நியூயார்க்கில் பயங்கர வெடிவிபத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; 2 பேர் பலி, 17 பேர் படுகாயம்


அமெரிக்காவின் நியூயார்க்கில், கிழக்கு ஹெர்லம் பகுதியின் 116-வது தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. வெடிவிபத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது. குண்டு வெடித்ததாக நினைத்து பொதுமக்கள் பீதியடைந்து வெளியில் வந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும், 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் சுமார் 150 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 11 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்து நடந்ததையடுத்து, அருகில் உள்ள மெட்ரோ ரெயில் பாதையில் ரெயில்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.


மலேசிய விமானத்தைத் தேடும் பணியில் இந்திய விமானப் படை ஈடுபடுகிறது


மாயமான மலேசிய விமானத்தை, பல நாடுகள் இணைந்து தேடுதல் பணியை நடத்தி வரும் நிலையில், அந்தமான் கடல் பகுதியையும் உள்ளடக்கி தேடுதல் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாயமான விமானத்தை கண்டுபிடிக்க உதவும்படி இந்தியாவிடம் மலேசியா கேட்டுக்கொண்டுள்ளது.

இதையடுத்து, இந்த விவகாரத்தை கையாளவும், உரிய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும் உரிய நபர்கள் நியமிக்கப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், மாயமான மலேசிய விமானத்தை தேடுவதற்காக விமானப் படையும் தயார் நிலையில் உள்ளதாக, இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.

உரிய உத்தரவு கிடைத்தவுடன், தேடுதல் பணியைத் தொடங்கிவிடுவோம் என்று இந்திய விமானப் படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விமானத்தைத் தேடும் பணியில் 10 நாடுகளைச் சேர்ந்த குழுவினர் 40 கப்பல்கள் 34 விமானங்கள் ஈடுபடுகின்றன.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட முன்வராத மூத்த தலைவர்கள், அவர்களை வற்புறுத்தும் கட்சி தலைமை


காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், வரவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பாத நிலையில்,  இரண்டாவது வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

தற்போதைய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சரான மணிஷ் திவாரி, நிதியமைச்சர் சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ள சச்சின் பைலட் ஆகியோர் போட்டியிட மறுப்பதாக கூறப்படுகிறது. இவர்களை ராகுல் காந்தி போட்டியிட வற்புறுத்துவதாக கூறப்படுகிறது.

எனினும் சிதம்பரம் தனது மகன் கார்த்திக் சிதம்பரத்தை சிவகங்கையில் போட்டியிட வைக்க‌ ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. சிதம்பரம், தன்னை ராஜ்யசபா தேர்தலில் எம்.பியாக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.  சச்சின் பைலட் அவரது சீட்டை கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அசாருதீனுக்கு வழங்க பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பவன்குமார் பன்சால், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் மற்றும் சுரேஷ் கல்மாடி ஆகியோர் போட்டியிட வாய்ப்பு கேட்பதாக தெரிகிறது. அவர்களுக்கு சீட் வழங்குவது குறித்து எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை நீதித்துறை பரிந்துரையின் படி, தமிழக மீனவர்கள் 116 பேர் விடுதலை


தமிழக - இலங்கை இருநாட்டு மீனவர்களின் முதலாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி 27 அன்று சென்னையில் நடைபெற்ற பிறகு, இலங்கை கடற்படை 77 தமிழக மீனவர்கள் கைது செய்து சிறையில்அடைத்தனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கொழும்பில் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தைக்கு முன்னர் இலங்கை சிறைச்சாலைகளில் வாடும் மீனவர்களை விடுவிக்க வேண்டும் என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவல் முடியும் முன்னரே தமிழக மீனவர்கள் 116 பேர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் இலங்கை நீதித்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் 116 பேரையும் அவர்களின் 26 விசைப்படகுகளையும் விடுதலை செய்து நீதிபதி லெனின்குமார் உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து, விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஊழல் வேட்பாளர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறனை எதிர்த்து வேட்பாளர்களை கண்டிப்பாக நிறுத்துவோம்-ஆம் ஆத்மி


தமிழகத்தில் இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளனர். அக்கட்சியின் அதிகாரப்பூர்வ முதல் வேட்பாளர் பட்டியல் வரும் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கள்கிழமை வெளியிடப்பட இருக்கிறது. திமுக அறிவித்து இருக்கும் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசா மற்றும் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து, தமது வேட்பாளர்களை ஆம் ஆத்மி கண்டிப்பாக போட்டியிட வைக்கும் என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பிரச்சாரக் குழு ஒருங்கிணைப்பாளர் டேவிட் பருண்குமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று சென்னையில் கூறியதாவது:

"உதயகுமார் வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில், அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய இடிந்தகரையில் இருந்து வெளியே வருவார். அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால், அவரை போலீஸார் கைது செய்வார்கள். அப்படி கைது செய்தாலும், அவர் சிறையில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்வார். நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் வேட்பாளர்களான ஆ.ராசாவை எதிர்த்து நீலகிரியிலும், தயாநிதி மாறனை எதிர்த்து மத்திய சென்னையிலும் வேட்பாளர்களை கண்டிப்பாக நிறுத்துவோம்."

இவ்வாறு டேவிட் பருண்குமார் தெரிவித்தார்.

இது குறித்து உங்கள் கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்!

ஐ.பி.எல் 2014 போட்டிகள் ஏப்ரல் 16 முதல் ஜீன் 1 வரை நடைபெறுகிறது


ஐ.பி.எல். 2014 போட்டிகள் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி ஜூன்-1 வரை 3 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட போட்டி, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் ஏப்ரல் 16-ல் தொடங்குகிறது. ஏபரல் 30 வரை நடைபெறும் முதல் கட்ட போட்டியில் மொத்தம் 16 ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. மே 16 அன்று மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்படுவதால், அன்று ஐ.பி.எல். போட்டிகள் ஏதும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்ட போட்டி மே 1-ல் தொடங்கி மே-12 வரை நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறுவதை ஒட்டி ஐ.பி.எல். போட்டிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என உள்துறை அமைச்சகம் உறுதியாக தெரிவித்துவிட்டால், 2-ம் கட்ட போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெறும் அல்லது இரண்டாம் கட்ட போட்டி இந்தியாவிலேயே நடைபெறும் என ஐ.பி.எல். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 1-ல் தொடங்கி மே-12 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் நடைபெறாத மாநிலங்களில் போட்டிகளை நடத்திக் கொள்ள உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மே 13-ம் தேதி இந்தியாவில் துவங்கும் மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட போட்டிகள் ஜூன் 1-ல் நிறைவுபெறுகிறது.

வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு தண்டனை ரத்துக்கு எதிரான மத்திய அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி


கடந்த ஜனவரி 21-ம் தேதி, வீரப்பன் கூட்டாளிகள் பிலவேந்திரன், சைமன், ஞானபிரகாசம், மாதையா உள்பட 15 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த மாதம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.

கருணை மனுக்கள் தொடர்பான குடியரசுத் தலைவரின் முடிவு நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்றும், மனு மீது காலம் தாழ்த்தி முடிவு எடுக்கப்பட்டதை காரணம் காட்டி மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது ஏற்புடையது அல்ல, அது சட்டவிரோதமானது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் வாதம் ஏற்புடையதல்ல என்பதால் மனுவை இன்று தள்ளுபடி செய்தது.

ராகுல் காந்தி மீது புதிய அவதூறு வழக்கு


கடந்த 6ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பே மகாத்மா காந்தி கொலைக்கு காரணம் என ராகுல் காந்தி பேசியுள்ளார். இதற்கு பரவலாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சனு சுக்லா என்ற வழக்கறிஞர், மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ராகுல் காந்தி தொடர்புபடுத்தி பேசியதை கண்டித்து அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சனு சுக்லா அவரது மனுவில், புலனாய்வு நிறுவனங்களும், கபூர் கமிஷனும் மகாத்மா காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு இல்லை என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியும், ராகுல் காந்தியின் அவதூறான பேச்சால் சங் பரிவார் அமைப்பின் மரியாதைக்கு குந்தகம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதுவை தி.மு.க. வேட்பாளர் நாஜீம் மீது வழக்கு


பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் புதுவை தொகுதியில், நாஜிம் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். அவர் சென்னை சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரிடம் ஆசிபெற்று நேற்று புதுவை திரும்பினார்.  புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் கனக செட்டிக்குளம் எல்லையில் அவருக்கு தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் தொண்டர்கள் காரில் அணிவகுத்துவர பேரணியாக அவர் புதுவை அண்ணா சிலைக்கு சென்று மாலை அணிவித்தார். இதில் 16–க்கும் மேற்பட்ட கார்களை நாஜிம் எம்.எல்.ஏ. பயன்படுத்தியதாகவும், இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் துணை தாசில்தார் சிவராஜ் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். இதனை விசாரித்த சப்– இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தேர்தல் விதிகளை மீறியதாக நாஜிம் எம்.எல்.ஏ. மீது வழக்கு தொடர்ந்தார்.

இளங்கோவன், கருணாநிதியின் தேர்வு இல்லை, குஷ்பூவிற்கு ஏன் திமுகவில் சீட் கிடைக்கவில்லை, பழநிமாணிக்கம் ஓரம் கட்டப்பட்டது எதனால்?


திமுக வேட்பாளர் பட்டியலில், 90 சதவிகிதமான வேட்பாளர்கள் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்று சமீபத்தில், அழகிரி தனது பேட்டியின் போது கூறியிருந்தார். கருணாநிதி, கனிமொழி, இருவருமே தாங்கள் பரிந்துரைத்த நபர்கள் வேட்பாளர் பட்டியலில் இருப்பார்கள் என எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். கனிமொழி தனது ஆதரவாளர்கள் ஐந்து பேருக்காக சீட் கேட்டிருந்தார், ஆனால் ஸ்டாலின் அவரின் கோரிக்கையை நிராகரித்து ஒரு சீட் கூட தரவில்லை என்றும், கனிமொழி பரிந்துரைக்காத நபர்களில்கூட ‘கனிமொழி ஆதரவாளர்’ என்கிற லேசான சந்தேகம் ஏற்பட்டாலே அவர்களும் பரிசீலனைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

டி.ஆர்.பாலு-வுக்கு திருச்சி தொகுதியை ஒதுக்கிவிட்டு, பழநிமாணிக்கத்தை தஞ்சாவூர் தொகுதிக்கு அறிவிப்பதே கருணாநிதியின் திட்டம். இவர் கனிமொழி வட்டத்தில் இருக்கிறார் என்பதாலேயே ஓரங்கட்டப் பட்டதாக பேசப்படுகிறது.

தென்சென்னைக்கு அறிவிக்கப்பட்ட டி.கே.எஸ். இளங்கோவன் கருணாநிதியின் தேர்வு என பரவலாக நம்ப படுகிறது. அங்கு ஸ்டாலினின் ஆதரவாளரான முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன்தான் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், சில உட்கட்சி பிரச்சினைகளால் சுப்ரமணியனே ஒதுங்கிக்கொண்டாராம். விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை என்றாலும் கூட குஷ்புக்கு அந்தத் தொகுதியை அளிக்க விரும்பினார் கருணாநிதி. இதற்கு துர்கா ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, டி.கே.எஸ். இளங்கோவனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது என்கிறார்கள்.

வேட்பாளர் தேர்வு குறித்து திமுக-வின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “ ஒருவர் பிடியிலேயே மொத்த அதிகாரமும் இருப்பது 2016 சட்டசபை தேர்தலில் திமுக-வுக்கு சாதகமாக அமையாது.  கருணாநிதி பின்பற்றிய உட்கட்சி ஜனநாயக அணுகுமுறையால் மட்டுமே கட்சியில் உள்ளவர்களை சமாளிக்க முடிந்தது. ஸ்டாலினால் அது சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை” என்றார்.

இரட்டை இலை படங்களை எடுக்க கோரிய ஸ்டாலினுக்கு, ஜெயாவின் அதிரடி பதிலடி



நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதனால், மக்கள் மனதில் அதிமுகவிற்கு சாதகமாக மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்த கூடிய அரசின் சிறிய பேருந்துகளில் உள்ள இரட்டை இலை படங்களை அகற்றக் கோரி வழக்கு தொடர்ந்தார், திமுக பொதுச் செயலர் மு.க.ஸ்டாலின். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல‌ கேள்விகளை எழுப்பினார், தமிழக முதல்வர் ஜெயலலிதா. நேற்று, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசியை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது, அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியினுடைய சின்னம் கை. அனைவரின் கைகளையும் வெட்டிவிட வேண்டும் என்று மனு கொடுப்பாரா ஸ்டாலின்? அல்லது கையுறைகளை போட்டுக் கொண்டு கைகளை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று மனு கொடுப்பாரா ஸ்டாலின்? சில கட்சிகளுக்கு சைக்கிள் சின்னம் இருக்கிறது. எனவே யாரும் சைக்கிள் ஓட்டக் கூடாது என்று மனு கொடுப்பார்களா?

ஒரு கட்சிக்கு மாம்பழம் சின்னம் இருக்கிறது. எனவே மாம்பழம் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் மனு கொடுப்பாரா? இது போன்றது தான் 'இரட்டை இலை' சின்னமும். "காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்" என்பது பழமொழி. இதைப் போல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கண்டு அஞ்சும் தி.மு.க-வினருக்கு எதைப் பார்த்தாலும் "இரட்டை இலை" போலவே தெரிகிறது. அதனால்தான் ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட திமுக-விற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இந்தத் தேர்தலில் நீங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media