பாராளுமன்ற தேர்தலையொட்டி கோவையில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:
தி.மு.க. தொடங்கியது தமிழர்களை காப்பாற்ற, தமிழனத்தை காப்பாற்றுவதற்காக தான் என அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறேன். அப்படிப்பட்ட இந்த இயக்கத்தில் இன்றைக்கு உங்களையெல்லாம் நான் நாடியிருப்பது திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஒரு நான்கு பேரை வெற்றிபெற செய்வதின் மூலம் இந்த இயக்கத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும். நாம் சுட்டிக்காட்டுபவர் தான் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டும் என்ற அந்த ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல.
நாம் தமிழ் பண்பாட்டோடு வாழ வேண்டும். தமிழன் யாருக்கும் தலை தாழமாட்டான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தான், இந்த இயக்கம், அன்று தொட்டு இன்று வரையிலே பாடுபட்டு வருகிறது. அப்படிப்பட்ட இயக்கத்துக்கு அண்ணா ஏற்றி வைத்த சுடர் விளக்கு அணையாமல் காக்கும் பெரும்பொறுப்பை உங்களை நம்பி நான் ஏற்று இருக்கிறேன். இந்த மக்களுக்கான ஆட்சியை, நல்லாட்சியை தரவேண்டிய கட்டம் இது.
நம்முடைய பயணத்தில் தேர்தல் என்பது ஒரு கட்டம்.அந்த கட்டத்தை வெற்றிகரமாக தாண்டினால் நாம் எதிர்காலத்தில் நன்மை செய்யலாம். இந்த சமுதாயத்துக்கே நன்மை செய்யலாம். இங்கே பேசியவர்கள் சொன்னார்கள். இந்த மாவட்டத்துக்கு நாம் ஈடுபட்டிருக்கிற பாராளுமன்ற தேர்தலில் எந்தெந்த திட்டங்கள் தீட்ட வேண்டும். என்னென்ன திட்டங்களையெல்லாம் எண்ணியிருக்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால் திட்டங்கள் மக்களுக்காகத்தான்.
நாங்கள் இங்கு வந்து பேசுவது எங்களுக்காக அல்ல. மக்களுக்காக. ஏழை எளிய பாட்டாளி மக்களை தொழிலாள தோழர்களை வாழ வைப்பதற்காக. ஆட்சி மாறலாம். என்னை பொறுத்தவரை ஏறத்தாழ 1957–ம் ஆண்டு முதல் இதுவரையிலே சட்டமன்றத்திலே தொடர்ந்து பணியாற்றியிருக்கிறேன். நான் 5 முறை உங்களால் தமிழகத்தின் முதல்–அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
6–வது முறை களைத்துவிட்டாய் என்று என்னை ஒதுக்கிவிட்டீர்களோ? அல்லது நானாகவே விரும்பி பெற்றுக்கொண்டேனோ? இந்த இடைப்பட்ட காலத்தில் ஓய்வு கிடைத்துவிட்டது. இவன் எப்போது ஓய்வு எடுப்பான் அந்த நேரத்தில் அடிமைதனத்துக்கு உள்ளாக்கலாம் என்று கருதியவர்கள் அதை வெற்றிகரமாக செய்கிறார்கள். அவர்களின் மனப்போக்கை முறியடிக்க வேண்டும்.
உங்களுக்கு எல்லாம் என்னையும் சேர்த்து விடுதலை வாங்கித்தர வேண்டும். நாம் எல்லாம் தமிழர்கள். அந்த உணர்வை பெற்றாக வேண்டும் என்பதற்காகத்தான் நான் பாடுபட்டு வருகிறேன்.
எனக்கு தெரியாது. ஒரு வேளை இதுவே நான் கலந்து கொண்டிருக்கிற கடைசி தேர்தலாகக் கூட இருக்கலாம். (கருணாநிதி இவ்வாறு கூறியதும் கூட்டத்தினர் எழுந்து நின்று இரண்டு கைகளையும் வேண்டாம் என்பது போல நீண்ட நேரம் அசைத்துக் கொண்டிருந்தார்கள்.)
அப்படி சொல்லாதே சொல்லாதே என்று நீங்கள் கையை வீசுகிறீர்கள். அப்படி சொல்லாமல் இருக்க நாங்கள் தமிழர்களாக வாழ்வோம் என்ற உறுதியை நீங்கள் அளித்தாக வேண்டும். அந்த உறுதியை அளித்தால் ஒன்றல்ல. இரண்டல்ல. பத்து அல்ல. பதினைந்து அல்ல. இன்னும் 50 வருடங்கள் கூட உயிருடன் நான் இருப்பேன்.
அப்படி அல்லாமல் அடிமைத் தமிழ்நாட்டில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டால் அது வாழ்க்கையாக இருக்காது. ஆகவே தான் தமிழன் தமிழனாக வாழவேண்டும். நம்முடைய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் எதை நம்பி நம்முடன் வந்தார்கள். யார் யாரையோ நம்பி பார்த்தோம்.
ஆனால் இந்தியாவில் நமக்கு கிடைத்த கொம்பாக, கிளையாக காவல் அரணாக இருப்பது திராவிட முன்னேற்ற கழகம் தான் என்று நம்பி வந்துள்ளனர். தோழமை கட்சி தலைவர்கள் ஒருநிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார்கள்.
நான் அந்த தோழமை கட்சி தலைவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. அவர்கள் ஏமாறவும் மாட்டார்கள். எல்லோரும் இணைந்து இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்கள் உயிரை கொடுத்து உழைப்போம் என்ற உறுதியை தோழமை கட்சி தலைவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய 14–வது வயதில் மொழி காக்க குரல் கொடுத்தேன். அந்த மொழி உணர்வு இந்த வயதிலும் பட்டுப்போகவில்லை. இந்த உணர்வு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கெல்லாம் இருந்தால் இனி கட்டாய இந்தி மொழி தமிழகத்தில் நுழையாது. இளைஞர்களாக இருக்கும் நீங்கள் அந்த உறுதியை பெறவேண்டும். என்னை நினைத்து அந்த உறுதியை பெறுங்கள். தமிழ்நாட்டிலே யார் வேண்டுமானாலும் நுழையலாம். அத்துமீறி நுழையலாம். ஆட்சி புரியவே எண்ணம்கொண்டு நுழையலாம் என்ற எண்ணம் மோடிகளுக்கும் ஏற்படாது.
மோடி அல்ல, யாரும் நுழைய முடியாது. மீறி நுழைந்தால் ஒரு கோடியில் தான் நிற்க வேண்டும். மோடிகளுக்கு இங்கே வேலை இல்லை. இந்தியாவுக்கு இருக்கிற சிறப்பே, நாம் கட்டிக்காத்த உறவுகள்தான். நாம் கட்டிக்காத்த வீரம்தான். தேர்தலிலே தோற்காதவர்கள் யார்? தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் எல்லாம் இந்த நாட்டை ஆண்டு முடித்து விட்டார்களா? இல்லை. நம்முடைய லட்சியங்கள் ஈடேற வேண்டும் என்றால் மொத்த தமிழ் இனமும் அதற்கான போர்க்குரலை எழுப்ப வேண்டும்.
நாம் எப்படிப்பட்ட முதல்–அமைச்சரை பெற்று இருக்கிறோம்? என்பது பெங்களூரில் நடைபெறும் அவரது சொத்து குவிப்பு வழக்கு ஒன்றே போதுமான உதாரணம். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.5 ஆயிரத்து 107 கோடி ஆகும்.
இந்த தேர்தலில் அவரை தப்பிக்கவிட்டால் இன்னும் பல கோடி ரூபாய் தமிழ்நாட்டில் சம்பாதிப்பார். அதற்கு இடம் கொடுக்க வேண்டும். நாம் ஏமாற தயாராக இருக்க வேண்டும் என்று எண்ணினால் நீங்கள் இந்த தேர்தலில் எங்களை ஆதரிக்காமல் அவர்களையே ஆதரியுங்கள். அப்போது தான் தமிழ்நாடு பொட்டல் காடாகும். அப்படி ஆக வேண்டும் என்று கருதினால் இந்த தேர்தலில் அந்த அம்மையார் சுட்டிக்காட்டும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.
இல்லை என்றால் எங்கள் பேச்சை தயவு செய்து கேளுங்கள். நாங்கள் உங்களோடு இருப்பவர்கள். எங்கள் பேச்சை அலட்சியப்படுத்தினால் வந்ததை அனுபவியுங்கள் என்று சாபம் இடுவதை தவிர வேறு வழியில்லை. ஆகவே நீங்கள் இந்த சாபத்துக்கு ஆளாக மாட்டீர்கள். ஏனென்றால் எதிர்கால தமிழ் சந்ததியை வாழவைக்க முன் வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
இவ்வாறு கருணாநிதி பேசியிருந்தார்.