BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 21 May 2014

மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் ராஜ்பக்சே


நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்காக சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் ராஜபக்சே பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் செய்துள்ள ராஜபக்சே, இந்தியாவிற்கு வருவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக கட்சியின் செயலர் வைகோ,  நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலைய குப்பை தொட்டிக்குள் ரூ. 3 கோடி மதிப்புள்ள தங்கம் கிடந்தது


விமான நிலையத்திற்குள் பணிபுரியும் துப்புரவு ஊழியர் ஒருவர், ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு பிளாஸ்டிக் பை அழுத்தி வைக்கப்பட்டிருந்ததை பார்த்தார். சந்தேகமடைந்த அவர் அந்த பையை எடுத்து பார்த்தபோது அதில் தங்க பிஸ்கட்டுகள் இருந்தன. இதுபற்றி சுங்க அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார்.

உடனே சுங்க அதிகாரிகளும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகளும் அங்கு வந்து 10.5 கிலோ எடை கொண்ட தங்க பிஸ்கட்டுகளை கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி ஆகும். இந்த தங்கத்தை வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்து, அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் இருக்க இவ்வாறு குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி பிரதமர் பதவியில் செயல்பட மோடியை வாழ்த்திய கருணாநிதி


நாட்டின் பிரதமராக இம்மாதம் 26-ம் தேதி பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து, திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

பாஜக நாடாளுமன்ற குழுத் தலைவராக நீங்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். குஜராத்தில் எளிமையாக தொடங்கி இந்தியப் பிரதமர் என்ற உயர் பதவியை நீங்கள் அடைந்துள்ளீர்கள். இதற்குக் காரணம் உங்கள் புத்திசாலித்தனமும், கடின உழைப்புமேயாகும்.

நேற்று வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஏற்புரை வழங்கிய போது, ஏழைகள் நலன் பற்றி சிந்தித்து செயலபடும் அரசாக உங்கள் அரசு இருக்கும் என நீங்கள் கூறியிருந்தீர்கள். கிராமங்கள், இளைஞர்கள், பெண்கள் நலன் பேணப்படும் என உறுதியளித்திருந்தீர்கள். இந்த உயரிய குறிக்கோள்களை நீங்கள் நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என இந்திய தேசமே பெரும் எதிர்பாப்பினை கொண்டுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி பிரதமர் பதவியில் நீங்கள் சிறப்பாக செயல்பட திமுக சார்பில் வாழ்த்துகிறேன்"

இவ்வாறு கருணாநிதி கடிதத்தில் கூறியிருந்தார்.

குஜராத்தின் புதிய முதல்வராக ஆனந்திபென் பட்டேல் தேர்வு


நாட்டின் பிரதமராக வருகிற 26-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், குஜராத் முதல்வர் பதவியை நரேந்திர மோடி இன்று ராஜினாமா செய்தார்.

இதனை அடுத்து, குஜராத்தின் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக ஆனந்திபென் பட்டேல் தேர்வு செய்யப்பட்டார். நாளை அவரது தலைமையிலான குஜராத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்க, குஜராத் ஆளுநர் கமலா பென்னிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

நரேந்திர மோடியும் ஆனந்திபென் பட்டேலும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். மோடி உள்ளிட்ட தலைவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் தன்னுடைய 45-வது வயதில் ஆனந்திபென் அரசியலில் நுழைந்தார். அவர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர்.  1987-ல் இரு மாணவிகள் சர்தார் சரோவர் அணையில் மூழ்கியபோது ஆனந்திபென்,  அணையில் குதித்து இரு வரையும் காப்பாற்றினார். இதற்காக மாநில அரசின் சார்பில் அவருக்கு வீரதீர விருது வழங்கப்பட்டது.

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நீதிமன்ற காவல்

இந்தியாவின் பெரிய ஊழல்வாதிகள் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜகவின் நிதின் கட்காரியையும் அதில் இணைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்காரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி கோமதி மனோச்சா இன்று அரவிந்த் கேஜ்ரிவாலை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதன்படி, மே 23 வரை இரண்டு நாள்களுக்கு அவர் சிறையில் அடைக்கப்படுவார்.

ஜாமீன் பத்திரத் தொகை ரூ.10,000 யை கேஜ்ரிவால் செலுத்த மறுத்ததால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தை கட்டி தழுவி, கன்னத்தை வருடிய மோடி


நேற்று டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். விஜயகாந்த் தலைவர்கள் அமர்ந்திருந்த முன் வரிசையில் மோடி, பிரகாஷ்சிங் பாதல் ஆகியோருக்கு அடுத்த படியாக அமர்ந்து இருந்தார்.

பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் வரவேற்று பேசுகையில் விஜயகாந்தின் பெயரைக் குறிப்பிடும் போது உங்கள் மனைவி பிரேமலதா வந்திருக்கிறாரா? என்று கேட்டார். உடனே பிரேமலதா எழுந்து நின்று ராஜ்நாத் சிங்கை கை கூப்பி வணங்கினார்.

அதே போல் நரேந்திர மோடியும் விஜயகாந்தை எங்கே உங்கள் மனைவி பிரேமலதா என்று கேட்டார். அப்போது பிரேமலதா எழுந்து மோடியைப்பார்த்து வணக்கம் தெரிவித்தார்.

பின்னர் விஜயகாந்த் மோடிக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது மோடி விஜயகாந்த்தை கட்டித்தழுவினார். தொடர்ந்து மோடிக்கு காஞ்சிபுரம் வெண்பட்டு சால்வை போர்த்திய போதும் விஜயகாந்த் கன்னத்தை செல்லமாக வருடினார்.

பிறகு பாராளுமன்றத்துக்கு வெளியே வந்த விஜயகாந்த் நிருபர்களை சந்தித்த போது, "நான் மோடியிடம் தமிழ்நாட்டுக்கு என்னென்ன தேவை என்பதை சேலம் கூட்டத்தின் போதே பட்டியலிட்டு கொடுத்தேன். அதை மீண்டும் வலியுறுத்தி மீனவர் பிரச்சினை, மின்சார பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம்." என்று கூறினார்.

மோடி தலைமையில் இந்தியா வல்லரசாகும்; அவர் மீண்டும் மீண்டும் பிரதமராக வருவார்: சந்திரபாபு நாயுடு



தேசிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பேசிய தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு  கூறியதாவது:

தே.ஜ.மு. மற்றும் பாஜகவின் வெற்றியை இந்த நாட்டின் ஒவ் வொரு குடிமகனும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திரப் பிரதேசம் வந்த மோடி, திருப்பதி மற்றும் காளஹஸ்தி கோயில்களில் தரிசனம் செய்த அதே நாளில் ஐந்து பிரச்சாரக் கூட்டங்களில் பேசினார். அதை முடித்து தேநீர் அருந்தலாமா என்றார். நான் உணவு அருந்தலாமே என்றதற்கு பணி முடிந்ததும் தான் உணவு எடுத்துக் கொள்வேன் என உறுதியாகக் கூறி விட்டார். அந்த அளவிற்கு தன் கடமையில் மோடி உறுதியாக இருந்தார்.

அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளுக்கு இணையாக இந்தியா இருக்க வேண்டும். சில வளரும் நாடுகள் இருக்கலாம். ஆனால், நமக்கு உண்மையான போட்டி அமெரிக்காவும், சீனாவும்தான். நரேந்திர மோடி நிச்சயமாக அதை செய்து முடிப்பார்.

மோடியின் மனஉறுதியும், உற்சாகமும் அசாதாரணமானவை. மக்கள் காங்கிரஸின் ஊழல், திறமையின்மை, செயல்படாத தன்மை ஆகியவற்றால் வெறுத்துவிட்டனர். மோடியின் தலைமையில் நாட்டிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. அவர் மீண்டும் மீண்டும் பிரதமராக வருவார். அதுதான் நாட்டின் விருப்பமாகும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

நைஜீரியாவில் இரட்டை கார் குண்டு வெடிப்பு: 118 பேர் உடல் சிதறி பலி


நைஜீரியாவின் மத்திய நகரான ஜோஸில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிலையம் அருகே அடுத்தடுத்து 2 கார் குண்டுகள் வெடித்தன. இதில் 118 பேர் உடல் சிதறி பலியாகினர். அந்தப் பகுதியே சடலங்கள் இரைந்து கிடந்ததால் கோரமாக காட்சி அளித்தது.

இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் வழக்கமாக பொகோ ஹராம் தீவிரவாதிகள் நிகழ்த்தும் குண்டு வெடிப்புகள் போலவே நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அண்மைகாலமாக பொகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்தி சென்றனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சமீபத்தில் பொகோ ஹராம் தீவிரவாதிகளின் அராஜகம் தாங்க முடியாத நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்து மக்கள், அத்தீவிரவாதிகளை தாக்கி கொன்றனர்.

தமிழக பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் அதிமுக-வுடன் இணைந்து பணியாற்றுவதில் தயக்கமில்லை- அன்புமணி


தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்த பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு பாமக சார்பில் வாழ்த்து தெரிவிக்கிறேன். அவரது அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து குடியரசுத் தலைவரிடம் பாமக சார்பில் கடிதம் அளித்துள்ளோம். தமிழகத்தில் எங்கள் கூட்டணி இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதே சமயம் திமுக - அதிமுக ஆதரவின்றி, இரண்டு இடங்களில் வெற்றி பெற்றிருப்பது வரலாறாகும். இதைப் போன்ற வெற்றிகள் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்.

பணபலம், அதிகார பலம், தேர்தல் ஆணைய ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரதிநிதித்துவம் தேவை. எங்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக எந்த உறுதியும் தரப்படவில்லை. பதவி தர முன்வந்தால், எங்கள் கட்சி அதுபற்றி முடிவெடுக்கும்.

இலங்கைத் தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சினை, நதிநீர் விவகாரம் உள்ளிட்ட தமிழக பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பேன். அதிமுக சார்பில் 37 பேர் உள்ளனர். தமிழக பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்தில் அதிமுக-வுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

இவ்வாறு அன்புமணி கூறினார்.

இந்திய அரசுக்கு அழுத்தும் கொடுக்கும் செல்வாக்கு ஜெயலலிதாவுக்கு கிடைக்காதது மகிழ்ச்சி அளிக்கிறது-இலங்கை அமைச்சர்


இலங்கை செய்தித் துறை அமைச்சர் கெகிலிய ராம்புக்வெல்லா கொழும்பில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

டெல்லியில் வலுவான அரசு அமைந்திருப்பது இலங்கைக்கு சாதகமாக இருக்கும். எந்தவொரு விவகாரமானாலும் தமிழகத்தின் அழுத்தம் இல்லாமல் டெல்லி அரசு முடிவெடுக்க முடியும்.

முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் 37 இடங்களைக் கைப்பற்றி இருந்தாலும் மத்திய அரசில் அதிகாரம் செலுத்தும் நிலையில் இல்லை.

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளார். அவர் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தனி மெஜாரிட்டியுடன் மோடி ஆட்சி அமைப்பதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

இந்திய மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்றவுடன் இலங்கை அதிபர் ராஜபட்ச அவருக்கு முதலில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

ராஜபட்சவுக்கும் நரேந்திர மோடிக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media