BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 13 January 2014

ஜில்லா வெற்றிக்காக நன்றி தெரிவித்த விஜய்



ஜில்லா படம் வெற்றிகரமாக ஒடி வருவதை அடுத்து, சென்னையில் உள்ள ரெஸிடென்ஸி டவர்ஸில் நடைபெற்ற வெற்றி விழாவில் கலந்து கொண்ட விஜய், இதற்கு காரணமான ரசிகர்கள், மக்களிடயே கொண்டு சேர்த்த ஊடக துறையினர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இயக்குநர் நேசன், தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, இசையமைப்பாளர் இமான், காமெடி நடிகர் சூரி மற்றும் விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:  "ஜில்லா படம் வெற்றிகரமாக ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. என் ரசிகர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தியேட்டர்களில் ரசிகர்கள் காலை 3 மணிக்கே திரண்டு பனி, குளிரையெல்லாம் பொருட்படுத்தாமல் கொடி தோரணம் அமைத்தனர். தியேட்டர்களை அலங்காரம் செய்தார்கள். சிரமங்களை பொருட்படுத்தாமல் கடுமையாக வேலை செய்துள்ளனர். இதையெல்லாம் வீடியோவில் பார்த்து நெகிழ்ந்தேன். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் வந்தேன். இது எனக்கு ரொம்ப முக்கியமான படம்."




மகேஷ் பாபுவுடன் இணைந்தார் மணிரத்னம்


இயக்குநர் மணிரத்னம், தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபுவை வைத்து, தெலுங்கு மற்றும் தமிழில் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஒன்றை எடுக்க இருக்கிறார். மார்ச் மாதம், படத்திற்கான திரைக்கதை வேலை முடிந்து விடும். எல்லாம் நல்ல படியாக முடிந்தால், இந்த வருடமே படப்பிடிப்பு முடிந்து விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

பழம் பெரும் நடிகை அஞ்சலி தேவி காலமானார்



எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி இன்று, சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86.

அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில், முன்னணி நடிகர்களுடன், சுமார் 500 படங்களில் ந‌டித்துள்ளார்.  தமிழில், இவர் ஜெமினி கணேசனுடன் நடித்த படங்களே அதிகம்.

சிவாஜி கணேசனுடன்,  'முதல் தேதி', எம்.ஜி.ஆருடன் ‘சக்ரவர்த்தி திருமகள்‘, ‘மன்னாதி மன்னன்’,  ஜெமினி கணேசனுடன் ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’  என இவர் நடித்த படங்களுக்கு தமிழ் சினிமாவில் என்றுமே ஒரு தனி இடம் உண்டு.

போலியோ இல்லாத நாடாக இந்தியா அறிவிக்கப்பட இருக்கிறது



கடந்த மூன்று வருடங்களாக, ஒரு போலியோ தாக்கிய சம்பவம் கூட நடைபெறாத நிலையில், இந்தியா, தன்னை போலியோ இல்லாத நாடாக அறிவித்து இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம், தனது சில பரிசோதனைகளுக்கு பிறகு, பிப்ரவரி 11ம் தேதி, தனது அத்தாட்சி பத்திரத்தை வழங்கும். போலியோ ஒழிக்கப்பட்டது, இந்தியாவின் பொது சுகாதார துறைக்கு பெரும் வெற்றி ஆகும்.

கடந்த வருடமே, போலியோ அதிகமாக பரவியிருக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து, இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டது.

ஐ.நா. மன்ற குழந்தைகள் நிதியம், இந்தியாவின் போலியோ ஒழிப்பை, ஒரு 'பிரம்மாண்டமான மைல்கல்' என வர்ணித்துள்ளது.

சிறை கைதிகளை யோகா, தியானம் செய்ய வைத்த முன்னாள் போலீஸ் அதிகாரி

சதீஷ் குமார் டாக்ரா என்கிறவர் 1982ம் பேட்சை சேர்ந்த‌ ஐ.பி.எஸ் அதிகாரி. இவர் தமிழக சிறைகளில், பல மாற்றங்களை கொண்டு வந்திருப்பவர். டிசம்பர் 31 அன்று, காவல்துறை (சிறைகளுக்கான) துணை இயக்குநராக ஓய்வு பெற்றார்.

2011ஆம் ஆண்டு ஆரம்பித்து, சிறை கைதிகளுக்கு, பல தியான முறைகள், மற்றும் யோகா பயிற்சிகள் அளித்து இருக்கிறார். கைதிகளை குழுக்களில் திரட்டி, ஒவ்வொரு குழுவிலும் 300 பேர் என, அவர்களுக்கு, தியான பயிற்சி கொடுத்து இருக்கிறார். இதையடுத்து, கைதிகள், சதீஷ் குமாரை, அதிகாரி போல் பார்ப்பதை நிறுத்தி, ஒரு ஆன்மிக குரு போல் பார்க்க ஆரம்பித்தனர். அவரிடம், தனிமையில், தான் செய்த தவறுகள் மற்றும் குற்றங்களை பற்றி பகிர்ந்து, வருத்தம் தெரிவித்தனர்.

கைதிகளுக்கு, பயிற்சி வகுப்புகள் எடுக்க ஜெயில் வார்டன்களையும் தயார் செய்தார், சதீஷ் குமார். மிக விரைவில், வார்டன்களும், மிகுந்த அக்கறையுடனும், ஆர்வத்துடனும், செயல் பட்டு, கைதிகளுக்கு, உடல் பயிற்சி வகுப்புகளும் எடுத்து வந்தனர்.

தியானம் செய்ய ஆரம்பித்த பின், கைதிகளிடம், நல்ல மாற்றங்கள் இருந்ததாகவும், அவர்களிடம் இருந்த ஆக்கிரமிப்பு குணங்கள் குறைந்ததாகவும், தங்கள் மனதிற்கு சாந்தி அளித்ததால், தாங்களாகவே, கைதிகள் முன்வந்து தியானம் செய்தனர் எனவும் சதீஷ் குமார் கூறுகிறார்.

ஜில்லா, வீரம் படங்களின் முதல் நாள் வசூல்

விஜய்யின் ஜில்லா, மற்றும் அஜித்தின் வீரம் படம் குறித்த முதல் நாள் வசூல் பற்றி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இத்தகவல்களின் படி, உலக அளவில் 1200 திரைகளில் வெளியான ஜில்லாவின் முதல் நாள் வசூல் 11 கோடி, மற்றும், ஏறகுறைய இதே அளவு திரைகளில் வெளியான வீரம், 9.36 கோடிகளை வசூல் செய்து இருக்கிறது.

விஜய் படங்களிலேயே, ஜில்லா தான் முதல் நாளிலேயே, இந்த அளவுக்கு வசூலை வாரி தந்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். கேரளாவில் வெளியாகிய எந்த நேரடி தமிழ் படமும் பெறாத வரவேற்பை ஜில்லா பெற்றிருக்கிறது. முதல் நாளிலேயே வசூல் 2.62 கோடிகள். இதற்கு முக்கிய காரணம், மலையாளா சூப்பர் ஸ்டார் மோகன் லால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

ஜில்லா, வீரம் ஆகிய இரு படங்களும், வெளியானது முதல், தொய்வு அடையாமல், நன்றாக ஓடி கொண்டிருக்கின்றது என தகவல்கள் கூறுகின்றன.

மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கட்ட்க் மார்கெட்டில் இருந்த பெண்

ஊடக துறையில் வேலை பார்க்கும் ஒருவரும், இன்னும் சில பேரும், ஒடிஷா மாநிலத்தில் உள்ள கட்டக் மாவட்டத்தில், மார்கெட்டில் ஒரு பெண் அழுது கொண்டே அலைந்து கொண்டிருப்பதை பார்த்து, அவரிடம் சென்று விசாரித்தனர்.

விசாரித்ததில், அந்த பெண் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண், சில பிரச்சனைகள் காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி ரயில் ஏறி இருக்கிறார், கட்டக் ரயில் நிலையத்தில் இறங்கிய போது, உதவுவதாக கூறி நான்கு பேர் அழைத்து சென்று, அவரை கற்பழித்து, அவரை ப்ளாட்பாரத்தில் தூக்கி எறிந்து விட்டு சென்று இருக்கின்றனர் என்று தெரிய வந்தது. அவரது, கைகள் மற்றும் கால்களில் காயங்கள் இருந்தது.

இதையடுத்து, அப்பெண்ணை மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, புகார் பதிவு செய்தனர். இதைப்பற்றி போலீஸார் பேசுகையில், "அந்த பெண், மனநிலை பாதிக்கப் பட்டிருக்கிறார், நடந்த்து என்னவென்று விவரமாக சொல்ல கூட முடியவில்லை. அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை." என்று தெரிவித்தனர்.

ஜனதா தர்பாரில் பார்க்க முடியாத கேஜ்ரிவாலை சந்திக்க அவரின் வீட்டின் முன்பு குவிந்த மக்கள்

சனிக்கிழமையன்று டெல்லி முதல்வரை சந்திக்க வந்து, முடியாமல் ஏமாற்றம் அடைந்து திரும்பி போன மக்கள், ஞாயிற்றுகிழமையன்று, அவரது வீட்டின் முன்பு அதிகாலையிலேயே வந்து குவிந்தனர்.

அதில் முகேஷ் யாதவ் என்பவர், மின்சார துறையில், கான்ட்ராக்ட் வேலையில் இருந்ததாகவும், திடீரென்று ஒரு நாள், முன் அறிவிப்பு இல்லாமல் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதாகவும், கூறியிருந்தார். அவரை போன்று, டெல்லியில் உள்ள போக்குவரத்து துறை, மெட்ரோ ரைல், அரசு பள்ளிகள் என பல துறைகளில் கான்ட்ராக்ட் வேலையில் உள்ள பலரும், தங்கள் வேலைகளை நிரந்தரம் செய்ய சொல்லி, கேஜ்ரிவால் வீட்டின் முன்பு காத்திருந்தனர். பத்து வருடங்கள் பணி புரிந்தாலும், தங்கள் வேலைகள் நிரந்தரம் செய்யப்படவில்லை என புகார் அளிக்க சிலர் வந்திருந்தனர்.

கான்டிராக்ட் அடிப்படையில் வேலை என்ற வழக்கத்தை மாற்றுவதாக வாக்குறுதி அளித்த கேஜ்ரிவால் மீது டெல்லி மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media