BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 30 May 2014

2ஜி வழக்கில் தன்னை சாட்சியாக சேர்க்க வேண்டுமென ஆ.ராசா புதிய மனு


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா நீதிபதி ஓ.பி.சைனி முன் ஆஜராகி தன் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், தன்னை வழக்கில் ஒரு சாட்சியாகவும் சேர்க்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு குறித்து சிபிஐ தரப்பில் பதிலளிக்க கோரப்பட்டுள்ளது. சாட்சியாக சேர்ப்பது குறித்து நீதிபதி முடிவு செய்யவுள்ளார்.

சென்னையில் மேலும் 200 அம்மா உணவகங்கள்: சைதை துரைசாமி அறிவிப்பு


சென்னை மாமன்ற கூட்டம் ஒன்றில், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:

ஒரு வார்டுக்கு ஒன்று வீதம் 200 உணவகங்களும், அது தவிர ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, மற்றும் எழும்பூர் அரசு மருத்துவமனை ஆகியவற்றிலும் அம்மா உணவகங்கள் இருக்கின்றன.

தற்போது ஒவ்வொரு வார்டிலும் மேலும் ஒரு அம்மா உணவகம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதே போன்று, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனை மற்றும் கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலும் அம்மா உணவகம் அமைப்பதற்கான உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே 203 அம்மா உணவகங்கள் உள்ளன. தற்போது மேலும் 200 அம்மா உணவகங்கள் தொடங்க உள்ளது.

காஷ்மீரில் 370வது பிரிவை நீக்கினால் ஐ.நா. தீர்மானப்படி பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டி வரும்



காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் 370வது பிரிவை நீக்குவது என்பது பாஜகவின் முக்கிய கோஷமாகும், தற்போது பாஜக தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைத்துள்ளதால் இந்த கோஷம் வலுத்துள்ளது, இது குறித்து பிரதமர் மோடி பதவியேற்றபின் இதுவரை எதுவும் சொல்லவில்லை என்றாலும் அவரது கட்சியினரும் ஆர்.எஸ்.எஸ்சும் இதை பிரச்சினையாக்குகின்றன.

காஷ்மீரில் வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க இயலாது, காஷ்மீர் மாநிலத்தின் எல்லையை அதிகரிக்கவோ சுருக்கவோ இந்திய பாராளுமன்றத்தால் இயலாது. இராணுவம், வெளியுறவு, நிதி மற்றும் தொலை தொடர்பு தவிர மற்ற அனைத்து சட்டங்களும் காஷ்மீர் மாநில சட்டத்திற்குட்பட்டது.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு முசாஃபர் ஹூசைன் பெய்க் என்ற அரசியல் சாசன வல்லுநர்  அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டதாவது இந்தியாவிலிருந்து வெள்ளையர்கள் வெளியேறியபோது பல்வேறு தனி தனி சாம்ராஜ்யங்களாக இருந்தவைகள் இந்தியாவில் தாமாகவோ அல்லது இந்திய அரசின் பேச்சுவார்த்தை, போலிஸ் மற்றும் ராணுவநடவடிக்கையினால் இணைக்கபப்ட்டன, ஆனால் ஜம்மு காஷ்மீர் இணைப்பு மட்டும் ஐ.நா சபை வரை சென்றது. இதனால் ஐக்கிய நாடுகள் சபையானது ஜம்மு காஷ்மீர் மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அந்த பொதுவாக்கெடுப்பு நடத்தும் வரை ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இந்திய அரசுக்கும் ஜம்மு காஷ்மீரத்துக்கும் இடையே அரசியல் சாசனம் 370வது பிரிவு உருவாக்கப்பட்டது.

இந்த 370 ஒப்பந்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையேயானது. இது இந்தியாவுக்கும் ஜம்மு காஷ்மீரத்துக்கும் இடையே அரசியல் சாசன தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இந்தியா 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் கோரி நீக்கிவிட்டால் இயல்பாகவே ஜம்மு காஷ்மீரத்து மக்கள் தங்களது தலைவிதியைத் தீர்மானித்துக் கொள்ளும் பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கு உரிமை படைத்தவர்களாகிவிடுவர்கள் என்றார்

ஜூன் 3-ல் பிரதமர் மோடியுடன் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு


பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் ஜூன் 3-ம் தேதி நேரில் சந்திக்கிறார். 

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜூன் 3-ம் தேதி புது டெல்லி பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசுவார்.
பிரதமர் அலுவலகத்தில் நடக்கும் இந்தச் சந்திப்பின்போது, தமிழக அரசின் சார்பில் மனு ஒன்றை பிரதமரிடம் அவர் அளிப்பார். அதில், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தமிழகத்தின் மிக முக்கிய விவகாரங்கள் அடங்கியிருக்கும். தமிழகத்தின் வளர்ச்சிப் பாதையை துரிதமாக்குவதற்கு வித்திடக் கூடியதும், மாநில நலனைக் காக்கக் கூடியதுமான மத்திய அரசு அதிவேகமாக கவனம் செலுத்தக்கூடிய விவகாரங்கள் முன்வைக்கப்படும்.  

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிப் பாடப் புத்தக்கத்தில் தன் வரலாற்றை சேர்க்க நரேந்திர மோடி எதிர்ப்பு

குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், பள்ளிப் பாடப் புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு குறித்த பாடத்தைச் சேர்க்க அம்மாநில அரசுகள் முடிவு செய்தன. ஆனால் இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று ட்விட்டர் மூலம் வெளியிட்ட செய்தியில், "சில மாநில அரசுகள், எனது வாழ்க்கைப் போராட்டத்தை பள்ளிப் பாடத்தில் சேர்ப்பது என முடிவு எடுத்துள்ளதாக செய்திகளைப் படித்தேன்.

வாழும் தனி நபர்களின் வாழ்க்கை வரலாறு, பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கக் கூடாது என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

இந்தியாவின் மகத்தான வரலாற்றில் எத்தனையோ வல்லவர்கள் நிறைந்திருக்கின்றனர். அந்த மாபெரும் மனிதர்களின் வாழ்க்கையைதான் இளம் சிறார்கள் படிக்க வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ரயிலில் ஏற முயன்ற பெண், டிக்கெட் பரிசோதகர் தள்ளி விட்டதில், உடல் துண்டாகி உயிரிழந்தார்

மகாராஷ்டிர மாநிலத்தில், உஜ்வாலா பாண்டே எனும் பெண் தனது 10 வயது மகளுடன் ராஜேந்திர நகர் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏ.சி.கோச்சில் ஏற முற்பட்டார்.

அவரிடம் சாதாரண வகுப்புக்கான டிக்கெட் இருந்ததால் ஏ.சி.கோச்சில் ஏறுவதைத் தடுத்து நிறுத்தினார் டிக்கெட் பரிசோதகர் சம்பத் சலுங்கே.

ரயிலைத் தவறவிட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் தன் 10 வயது மகளுடன் மீண்டும் ரயிலில் ஏற முயன்றார் உஜ்வாலா. அப்போது டிக்கெட் பரிசோதகர் அவரைப் பிடித்துத் தள்ளினார்.

டிக்கெட் பரிசோதகர் தள்ளி விட்டதில் தடுமாறிய உஜ்வாலா, ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையில் கீழே விழுந்து, ரயில் சக்கரங்களுக்கு இடையே சிக்கி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து கோபமடைந்த மக்கள், சலுங்கேவைப் பிடித்து இழுத்து, கடுமையாகத் தாக்கினர். பின்னர் அவர் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஸ்கூட்டராக செயல்படும் பாட்டரி பொறுத்தப்பட்ட சூட்கேஸ்


சீன நாட்டில், விவசாயியாக இருந்த ஒருவர், 10 வருடங்களாக முயன்று, சூட்கேஸில் பாட்டரி பொறுத்தி அதை ஸ்கூட்டராக 12 கிலோமீட்டர் தூரம் ஓட்டி காட்டியிருக்கிறார். இந்த ஸ்கூட்டரின் எடை 7கிலோகிராம் மட்டுமே. இதில் இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கலாம் ,மணிக்கு 20கிலோ மீட்டர் தூரம் செல்லும் இந்த ஸ்கூட்டரில், 50-60 கிலோமீட்டர் தூரம் செல்லும் வரை பாட்டரி சார்ஜ் இருக்கும்.

பள்ளி பாடப்புத்தகத்தில் மோடி வாழ்க்கை வரலாறு, எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்


குஜராத்தில், 2015ஆம் ஆண்டு கல்வித் திட்டத்தில் மோடி வாழ்க்கை வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளது. ஆரம்ப நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இனி மோடி வாழ்க்கை வரலாறு கற்பிக்கப்படும்.

இது குறித்து குஜராத் மாநில கல்வி அமைச்சர் புபேந்திர சிங் சுதாசமா செய்தியாளர்களிடம் கூறுகையில், "மோடியின் பிறப்பு, அவரது குடும்பப் பின்னணி, அவரது பள்ளி நாட்கள், வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் முதல் பிரதமர் ஆக உயர்வடைந்தது வரை அந்த பாடப் புத்தகத்தில் அறிமுகம் செய்யப்படும்” என்றார். மாணவர்கள் மத்தியில் தலைமை வகிக்கும் திறமைகளையும் பண்பாட்டையும் மேம்படுத்தும் திட்டத்துடன் இது செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குஜராத் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் தோஷி கூறுகையில், "மோடியை பரவசப்படுத்துவது எப்படி என்பதை யோசிப்பதை விட ஏழைக்குழந்தைகளுக்கு அனைத்துப் பாடப் புத்தகங்களும் கிடைக்க வழிவகை செய்வதே பொறுப்பான செயல்” என்று கூறியுள்ளார்.

விஜய் டிவி தொகுப்பாளர் திவ்யதர்ஷினிக்கு திருமணம்


விஜய் டிவியின் ‘டெலி அவார்டு’ நிகழ்ச்சியில் சிறந்த தொகுப்பாளர் விருது பெற்று, அதை கொண்டாடி கொண்டிருக்கும் திவ்யதர்ஷினிக்கு (டிடி),  வரும் ஜீன் மாதம் இறுதியில், சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது. மாப்பிள்ளையின் பெயர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி யாளராக பணியாற்றியவர்.

இது குறித்து டிடி கூறியதாவது, "கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் நாங்கள் இரு வரும் நண்பர்கள். என்னோட வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கின நேரம். அவரோட வீட்டில் அவருக்கு பொண்ணு பார்க்க தொடங்கினாங்க.

ஒரு வழியாக ரெண்டு பேர் வீட்டிலும் உள்ள பெரியவங்களே பேசி எங்கள் திருமணத்தை முடிவு செய்துட்டாங்க. ஜூன் இறுதியில் சென்னையில் திருமணம். இத்தனை நாட்களாக என்னோட நண்பனாக இருந்த ஸ்ரீகாந்தை, ‘ஹாய் மாமா’’ என்றுதான் செல்லமாக கூப்பிடுவேன். அவ்ளோ ஜாலியான, கேரிங்கான நபர். இப்போ என்னோட லைஃப் பாட்னராகவே ஆகிட்டார். ரொம்பவே சந்தோஷமா இருக்கு. உங்க எல்லோரோட ஆசீர்வாதமும் எங்க ரெண்டு பேருக்கும் வேண்டும்." என்று தெரிவித்தார்.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஞானதேசிகன் பதவி விலக வேண்டும்-ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்

நாடாளுமன்ற தேர்தலலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதுகுறித்து ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், முன்னாள் எம்.பி.க்கள் வள்ளல் பெருமான், கே.எஸ்.அழகிரி உள்பட 30-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, தேசிய அளவில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தது. அதிலும் தமிழகத்தில் மிகவும் மோசமாக 4.31 சதவீத வாக்குகள் பெற்றதற்கு காரணம் என்ன? தமிழக காங்கிரஸ் தலைமை இந்தத் தேர்தலில் சரியாக செயல்படவில்லை.

மற்ற கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தனர். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர் முறையாக காங்கிரஸ் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து கூட்டம் போடவில்லை. பிரச்சாரத்துக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. மாநில அளவில் பொதுக்கூட்டம்கூட நடத்தவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒருங்கிணைத்தும் செயல்படவில்லை.

தலைமைப் பொறுப்பிலிருந்து முறையாக செயல்படத் தவறியதால், இந்த வீழ்ச்சிக்கான முழு பொறுப்பும் தமிழக காங்கிரஸ் தலைவரையே சேரும். இனி தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் தலையெடுக்க வேண்டும் என்றால், விவேகமாக செயல்படும் தலைமையை தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, தோல்விக்கு பொறுப்பேற்று, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் உடனடியாக பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media