BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 20 February 2014

ஜெயகாந்தன், வீரமணி, பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் படித்த கடலூர் தூய தாவீது பள்ளி, 300-வது ஆண்டை நெருங்குகிறது


கடலூர் முதுநகரில் 1717-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் தூய தாவீது மேனிலைப்பள்ளி தனது 300-வது ஆண்டு கொண்டாட்டத்துக்கு இப்போதே தயாராகி வருகிறது. கடலூரில் துவக்கப்பட்ட முதல் தமிழ்வழி ஆரம்பப் பள்ளியான தூய தாவீது, டென்மார்க்கிலிருந்து கிடைத்த நிதியுதவியைக் கொண்டு பள்ளி தொடர்ந்து செயல் படத் தொடங்கியது. 1756 முதல் 1760-ம் ஆண்டு வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராபர்ட் கிளைவ் வுக்கு இப்பள்ளி வளாகத்தில் ஓய்வறை ஒன்று இருந்தது.

இதுவரை சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவியர் இப்பள்ளியில் பயின்றுள்ளனர். தானே புயலால் பொலிவிழந்து காணப்படும் நிலையில் பள்ளியின் 300-வது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கவும் பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பண்ருட்டி ராமச்சந்திரன், கி.வீரமணி, முன்னாள் அமைச்சர் பூவராகவன், டிஜிஎஸ் தினகரன் உள்ளிட்டோர் இப்பள்ளியில் படித்தவர்கள். இதைப் பற்றி வீரமணி கூறுகையில், 1944 முதல் 1950-ம் ஆண்டு வரை, தான் இப்பள்ளியில் படித்ததாகவும், தன்னுடன் சேர்ந்து எழுத்தாளர் ஜெயகாந்தனும் சில நாட்கள் பள்ளியில் பயின்றதாகவும் கூறினார்.

திருமணம் ஆகாத விரக்தியில், மூன்று சிறுமிகளை எரித்து கொன்ற ஆசாமி


ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நரேந்திர ரெட்டி என்ப‌வருக்கு 37 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக முன்பு மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், திருமண விழாவில் கலந்து கொண்ட அவர், அங்கிருந்த மூன்று சிறுமிகளை சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி கடத்திச் சென்று எரித்துக் கொலை செய்துவிட்டார். இதற்கிடையே சிறுமிகளை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சிறுமிகளை தேடியபோது அவர்களின் எரிந்த உடல்கள் நிஜாமாபாத் நகருக்கு வெளியே கிடப்பது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் நரேந்திர ரெட்டியை தேடி வருகின்றனர்.

தோணியை ஆதரிக்கும் கவாஸ்கர், ட்ராவிட்; அவரை கடுமையாக சாடியிருக்கும் கங்குலி


தோணி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் தோணி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோணி குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில், "தோணியின் டெஸ்ட் கேப்டன்ஷிப் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. அடுத்த‌ உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இல்லையெனில் அவரை மாற்ற வேண்டும் என்று நானும் கோரியிருப்பேன்" என்று கடுமையாக சாடி பேசியுள்ளார்.

ஆனால், முன்னாள் கேப்டன் கவாஸ்கர், டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து தோணியை நீக்க இது சரியான நேரம் என்று தனக்கு தோன்றவில்லை என்றும்,  தோணிக்கு இன்னும் வாய்ப்புகள் அளிக்கலாம் என்றும் கூறினார். மற்றொரு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டும், இன்னும் ஓராண்டுக்கு கேப்டனாக நீடிக்க தோணி தகுதியானவர் என்கிறார்.

ராகுலும், கவாஸ்கரும் தோணியை ஆதரிப்பது சரி என நினைத்தால், லைக் போடுங்கள்.
கங்குலி சாடியிருப்பது சரி என நினைத்தால், கமென்ட் போடுங்கள்.

ஜெ.வுக்கு உயர்நீதி மன்றம் கொடுத்த மூக்கறுப்பு; நகையாடும் கருணாநிதி


"திமுக ஆட்சியும், மத்திய அரசும் சேர்ந்து துவங்கிய திட்டம் மதுரவாயல் திட்டம். அத்திட்டத்தை பொறாமையாலோ அல்லது வழக்கமான அதிமுவின் அதிலும் குறிப்பாக ஜெயலலிதாவின் காழ்ப்புணர்ச்சியாலோ அதை நிறைவேற்றாமல் தள்ளிப்போட்டார். அது பற்றி அரசு செயலாளர்கள், விஞ்ஞானிகள், கட்டுமானப் பொறியாளர்கள் என்று பலர் எடுத்துக்கூறியும் ஜெயலலிதா அதை எல்லாம் காதில் வாங்கவில்லை. இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஜெயலலிதாவுக்கு பெரிய மூக்கறுப்பு என்றே கூறலாம்.", என பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கருணாநிதி கூறியுள்ளார்.

இன்று கருணாநிதி முன்னிலையில் துவங்கப்பட்ட வேட்பாளர் நேர்காணலில், கூட்டணி குறித்து முடிவு செய்யப்பட்டதா என கேட்ட போது, "நேர்காணல் நடக்கையிலேயே கூட்டணி பற்றி முடிவு செய்யப்படுவதை பத்திரிக்கை உலக வரலாற்றில் கண்டதுண்டா?" என்ற கேள்வியை பதிலாக அளித்துள்ளார்.

பி.வாசு இயக்கும் படத்தில் நடிக்கவில்லை: ஐஸ்வர்யாராய்

 

பி.வாசு இயக்கும் ‘‘ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்’’ என்ற படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கப் போவதாக செய்தி வெளியானது. இந்த படத்தின் கதையை பி.வாசுவிடம் கேட்ட ஐஸ்வர்யாராய் ‘வாவ்’ என சொல்லியதாகவும் செய்தி வெளியானது. இந்த செய்தி உண்மை இல்லை என ஐஸ்வர்யாராய் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யாராய் சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

பி.வாசு இயக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. நிறைய பேர் ஐஸ்வர்யாராயை அணுகி கதைகள் சொல்லி உள்ளனர். அதில் பி.வாசு சொன்ன கதையும் ஒன்றாக இருக்கலாம். அந்த படத்தில் நடிப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை.

இதைப் பற்றி பேசிய ஐஸ்வர்யாராய், "என்னிடம் அறுபதுக்கும் மேற்பட்டோர் கதை சொல்லி உள்ளனர். அதில் ஒரு கதையாக பி.வாசு சொன்ன கதையும் இருக்கலாம்." என்று கூறியுள்ளார்.

ஏழு தமிழர் விடுதலை; தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடும் எதிர்ப்பு

 

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து, பிரதமர் மன்மோகன்சிங் அவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங், தீவிரவாதத்துக்கு எதிராக எந்த ஒரு அரசும், அரசியல் கட்சியும் மென்மையான போக்கை கடைபிடிக்கக் கூடாது. ராஜிவ் படுகொலை என்பது நாட்டின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல். ஏழு பேரை விடுதலை செய்வது என்பது நீதித்துறையின் அனைத்து மாண்புகளுக்கும் முரணானது. தமிழக அரசின் முடிவு சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியுள்ளார்.

தாமதம் காரண மாகவே தண்டனை குறைப்பு என்ற கருத்து என்னை வேதனை அடையச் செய்கிறது: ப.சிதம்பரம்


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பதில் ஏற்பட்ட நெடிய தாமதத்தை காரணம் கூறி தண்டனையை ஆயுளாக குறைத்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி பேசிய ப.சிதம்பரம், "மூன்று குற்றவாளிகளின் தண்டனை குறைக்கப்பட்டது மகிழ்ச்சி என்றோ அல்லது மகிழ்ச்சி இல்லை என்றோ நான் சொல்லமாட்டேன். ராஜீவ் காந்தி கொடூரமான வகையில் கொல்லப்பட்டது என்றைக்குமே மிகப் பெரிய சோகம்தான். அந்த சோகம் எப்போதும் அகலாது. மூன்று குற்றவாளிகளையும் நிரபராதிகள் என உச்ச நீதிமன்றம் அறிவிக்கவில்லை.
நீண்ட தாமதம் ஏற்பட்டால் அதன் அடிப்படையில் மரண தண்டனையை குறைக்கலாம் என்கிற உச்ச நீதிமன்றத்தின் கருத்து பிரச்சினையானதுதான். " என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

 மேலும் பேசிய அவர், தாமதம் காரணமாக தண்டனையை ஆயுளாக குறைக்கலாம் என்ற கருத்தானது சட்டம் சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது. இந்த கருத்து சரியானதா என்பதை நாம் ஆராயவேண்டும். தாமதம் காரணமாகவே தண்டனை குறைப்பு என்ற கருத்து என்னை வேதனை அடையச் செய்கிறது என்று அவர் கூறினார்.

ஏழு பேர் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததோடு, ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தது. இந்நிலையில் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று அறிவித்தார். மேலும் மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், மாநில அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, அவர்களை விடுதலை செய்யும் என்று ஜெயலலிதா கூறி இருந்தார். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுகி விளக்கம் கேட்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஓடும் காரில் ஒரு மணி நேரம் பெண்ணை நான்கு பேர் கற்பழிப்பு


உத்தரபிரதேசம் மாநிலம், மீரட் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் தனது விவாகரத்து வழக்கு தொடர்பாக வக்கீலை சந்திக்க நேற்று காசியாபாத் நகருக்கு வந்தார்.  அங்குள்ள பேருந்து நிலையத்தில் காத்திருந்த அவரிடம்,  காரில் இருந்து இறங்கி அறிமுகமான நபர் நலம் விசாரித்தார். சற்று நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்த அந்த பெண் தனது கஷ்டத்தை எல்லாம் அவரிடம் கூறி, ‘எனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கி தந்தால் உதவியாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

’லோனி பகுதியில் இருக்கும் என் நண்பர் ஒருவர் வேலைக்கு ஆள் தேவை என்று சொன்னார். என்னுடன் வந்தால் அந்த வேலை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்று கூறிய அந்த நபர் அவரை காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். கார் சிறிது தூரம் சென்றதும் அதில் மேலும் 3 பேர் ஏறி  அந்த பெண்ணை ஓடும் காரிலேயே சுமார் ஒரு மணி நேரத்துக்கு கற்பழித்து விட்டு, அவரை இறக்கி விட்டு, சென்றனர்.

கற்பழிப்பில் ஈடுபட்ட நால்வரையும், போலீஸ் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னையில் அம்மா திரையரங்கம்: மேயர் சைதை துரைசாமி அறிவிப்பு


சென்னை மாநகராட்சியின் 2014-15-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சே.சந்தானம் தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக  தொடக்க உரையில் மேயர் சைதை துரைசாமி பேசிய போது, "சென்னையில் பெரும்பாலான திரையரங்குகள் வணிக வளாகங்களாக மாறி அதிக கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். எனவே, ஏழை எளிய மக்களுக்காக குறைந்த கட்டணம் வசூலிக்கும் அம்மா திரையங்குகள், தேர்வு செய்யப்பட்ட இடங்களில் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள இடங்களில் அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும் என்றும், அங்கு குறைந்த செலவில் எடுக்கப்படும் படங்களுக்கு முன்னுரிமைத் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media