BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 6 May 2014

தலைமைச் செயலகத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக நடவடிக்கை எடுக்காமல், கொடநாட்டில் ஓய்வெப்பது நியாயமா?


தமிழகத்தில் மின் வெட்டுப் பிரச்சினையால், அரசு மருத்துவமனையில் நோயாளியின் உயிரைக் காக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழகத்தில் நிலவி வரும் மின் பிரச்சினை குறித்து‌ நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே நான் கூறினேன். தேர்தலு‌க்காக மட்டுமே அதிமுக அரசு மின்பற்றாக்குறை இல்லாதது‌ போலவும், மின்வெட்டு என்ற பேச்சே தமிழகத்தில் இல்லை என்பது‌ போன்ற மாயத்தோற்றத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவாக்கியுள்ளார்.

கோடை காலம் ஆரம்பித்தவுடன் மின்வெட்டின் சுயரூபம் தெரியும் என்று‌ சொல்லி வந்தேன். அப்போது‌ நீண்ட நெடிய விளக்கத்தை அளித்து‌ தமிழகம் மின்மிகை மாநிலம் ஆனது‌ போல முதல்வர் ஜெயலலிதா பேசினார். ஆனால், நடப்பது‌ என்ன?

சென்னையில் 4 மணி நேரமும், பிற மாவட்டங்களில் 8 முதல் 12 மணிநேரமும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தொழில் நகரங்கள் முடங்கிப்போய், தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர்.

கோடையின் தாக்கத்தால் இரவு நேரங்களில் மக்கள் தூக்கமின்றி அவதிப்படுகின்றனர். மின்சாரம் இல்லாததால் விவசாயத்திற்கு நீர்ப்பாய்ச்ச முடியவில்லை. நீர் ஏற்று‌ நிலையங்களில் குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. ஏற்கெனவே உள்ள வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சம் மேலு‌ம் அதிகமாகி, பொது‌மக்கள் காலிக் குடங்களுடன் சாலைமறியல், உண்ணாவிரதம், முற்று‌கைப் போராட்டம் என பல்வேறு‌ போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருள் சூழ்ந்து‌ள்ள நேரத்தில் கொள்ளை அடிப்பது‌ம், வழிப்பறி செய்வது‌ம் என சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுப்போய் உள்ளது‌.

இந்த நிலையில், மருத்து‌வமனைகளும், நோயாளிகளும் இந்த மின்வெட்டில் இருந்து தப்பவில்லை. ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாவும் சிகிச்சை பெற்று‌ வரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்து‌வமனையில், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மின்தடையால் உயிர்பிழைக்க போராடியுள்ளனர். அதில் இரண்டு நோயாளிகள் உயிர் இறந்துள்ளனர்.

இந்தச் செய்தியை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மின்தடையால் செயற்கை சுவாசக் கருவிகள் செயல்படவில்லை என்று‌ தெரிகிறது. அந்த நேரத்தில் டாக்டர்கள் யாருமே இல்லாமல், நர்சுகள் மட்டுமே பணியில் இருந்து‌ள்ளனர். அதன் பின் அங்கே வந்த டாக்டர்கள், இருவரும் இறக்கவில்லை என்று‌ கூறி இறந்தவர்களின் உடல்களுக்கு, ரமணா படத்தில் வருவதைப் போல் செயற்கை சுவாசம் அளித்ததாகவும், உடன் இருந்த உறவினர்கள் தகராறு‌ செய்த பிறகே, இறந்ததை உறு‌தி செய்ததாக சொல்லப்படுகிறது‌.

போதாக்குறைக்கு மருத்து‌வமனையின் சவக்கிடங்கில் உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்க ப்ரீசர் பெட்டிகளில் வைத்து‌ பாதுகாக்கப்படுகிறது‌. இந்த மின்வெட்டினால், பல உடல்கள் கெட்டுப்போய் அதிலிருந்து‌ துர்நாற்றம் ஏற்படும் அளவுக்கு மோசமான நிலை உள்ளது‌.

இந்த ஆட்சியில், நோயாளியின் உயிரையும் காப்பாற்ற முடியவில்லை. இறந்தவரின் உடலையும் பாது‌காக்க முடியவில்லை. உயிரைக் காப்பாற்ற வேண்டி, அரசு மருத்து‌வமனைக்கு வந்தால், உயிரை இழக்கக்கூடிய அவல நிலை உருவாகியுள்ளது‌. இதைவிட கொடுமை வேறு‌ என்ன தமிழகத்தில் இருக்க முடியும்.

சென்னையில் குண்டுவெடிப்பு, தமிழகம் முழுவது‌ம் மின்வெட்டு, குடிநீர் பஞ்சம், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு என தமிழகம் மிக மோசமான நிலையில் உள்ளது‌. இது‌போன்ற இக்கட்டான சூழலில் கூட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் அமர்ந்து‌ மக்கள் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முன்வராமல், கொடநாட்டில் குளுகுளுவென ஓய்வெடுத்து‌ வருகிறாரே இது‌ நியாயமா?

இவருடைய செயலைப் பார்க்கும்போது, ரோம் நகரம் பற்றி எரியும் போது‌, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது‌.

மேலு‌ம், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பொன்முருகன், மாங்காட்டைச் சேர்ந்த ரவீந்திரன், ஆகியோர் குடும்பங்களுக்கு எனது‌ ஆழ்ந்த இரங்கலையும், அனு‌தாபத்தையும் தெரிவித்து‌க்கொள்கிறேன். இரு குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுகின்ற வகையில் நிதியுதவியை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்று‌ம் கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மாவட்ட ஆட்சியர் வேண்டும் என்று நினைத்தால் 144 தடை உத்தரவு போடலாம் - தேர்தல் ஆணையம்

தமிழக தேர்தல் ஆணைய தலைவர் பிரவீன் குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில் , இதுவரை தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 3000 புகார்கள் வந்துள்ளதாகவும் , 1200 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது .

மேலும் வேட்பாளர்களுக்கு தங்களுடைய தேர்தல் செலவுகளை காட்ட 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது . இந்த கணக்கில் வேட்பாளர்கள்   ஏதாவது விதிமீறலில் ஈடுபட்டு  இருந்தால் அடுத்த மூன்று ஆண்டுகள் தேர்தலில் நிற்க அனுமதிக்கப்பட மாட்டார் .

மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மாவட்ட ஆட்சியர் வேண்டும் என்று நினைத்தால் 144 தடை உத்தரவு போடலாம் .

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர் .

இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரம்: விசாரணையை எதிர்த்து தந்தை வழக்கு


குஜராத் முதல்வர்  நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் ஒரு இளம்பெண்  காவல்துறையை வைத்து வேவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, இந்த கமிஷனுக்கான நீதிபதியை நியமிக்க அரசு முடிவு செய்தது. அதுவும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 16-ம் தேதிக்கு முன்னதாக நீதிபதியை நியமிக்க அரசு திட்டமிட்டது. அரசின் இந்த அவசர முடிவிற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் கூட்டணியிலும் எதிர்ப்பு கிளம்பியதால், அரசு தனது முடிவை கைவிட்டது.

இதனை இன்று உறுதி செய்த மத்திய அமைச்சர் கபில் சிபல், எங்கள் அரசாங்கம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்ற எண்ணத்தை உருவாக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில், வேவு பார்க்கப்பட்டது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தக்கூடாது என்று அந்த பெண்ணின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

விசாரணை நடத்துவது, திருமணமாகிவிட்ட தன் மகளின் தனியுரிமையை மீறுவதாகும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பாபா ராம்தேவின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ. 1 கோடி பரிசு - பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்.



தலித் மக்களின் வீடுகளுக்கு தேனிலவுக்கு செல்வது போல் ராகுல் காந்தி சென்று வருகிறார் என சர்ச்சைக்குரிய கருத்தை யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார். அவருடைய கருத்து  நாடு முழுவதும் உள்ள தலித் மக்களிடம் பலத்த அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

அவர் மீது தீண்டாமை வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோசியர்பூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரான பகவான் சிங் சோஹன், ராம்தேவின் தலையை கொண்டு வருபவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

முன்னதாக ஹோசியர்பூர் பேருந்து நிலையத்தில் ராம்தேவின் உருவ பொம்மையை அவர் தீ வைத்து எரித்ததுடன், அவருக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பினார். ராம்தேவை பற்றிய தனது முடிவில் தான் உறுதியாக உள்ளதாக அவர் பத்திரிக்கையாளர்களிடம் நேற்று தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள ஒட்டுமொத்த தலித் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ராம்தேவ் பேசும்போது தான் பேசுவதில் என்ன தவறு என அவர் கேள்வியெழுப்பினார்.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது-வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தீவிரமடைந்துள்ளது.

வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழையும், சில நேரங்களில் மிக கன மழை பெய்யலாம்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில நேரங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகம் வரை வீசும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம், கேரளம் மற்றும் லட்சத்தீவுகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை அய்வு மையம் எச்சரித்துள்ளது.

ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை தடை செய்தது இந்திய கிரிக்கெட் வாரியம் !!

ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதன் தலைவராக லலித் மோடியை தேர்வு செய்தது . இதனை தொடர்ந்து இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் ராஜஸ்தான் வாரியத்தை தடை செய்தது . இதற்கு முன்னரே இந்திய கிரிக்கெட் வாரியம் , லலித்  மோடியை தேர்வு செய்ய வேண்டாம் என எச்சரித்து இருந்தது .

இந்த பொறுப்பிற்கான தேர்தல் கடந்த வருடம் டிசம்பர் 19 ஆம் தேதி நடந்தது . இதில் லலித்  மோடி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார் .

தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக‌, இடுப்பில் கயிற்றை கட்டி மோடியை சிறையில் தள்ள வேண்டும்- மம்தா


மேற்கு வங்காள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி விமர்சித்தார்.  கூட்டங்களில் மம்தா பேசியதாவது:

நமது மக்களை அகதிகள் என்று கூறி மோடி அவமானப்படுத்துகிறார். சிலரை ஊடுருவியவர்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார். உங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி, யாரையாவது வெளியேற்ற முயன்றால், உங்களை நான் பாதுகாப்பேன். உங்களை யாரும் தொடக்கூட நான் அனுமதிக்க மாட்டேன். அகதிகளுக்கு நான் மரியாதை தருவதாக மோடி கூறுகிறார். யார் அகதி? அகதி என்றால் என்னவென்று அவருக்கு தெரியுமா? 1971-ம் ஆண்டுக்கு பிறகு இங்கு வந்தவர்கள் கூட இந்தியர்கள்தான்.

இது தொடர்பாக இந்திரா-முஜிப் உடன்படிக்கையில் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. இன, நிற கலவரம் தொடர்பாக பேசி வருபவருக்கு பிரதமராகும் உரிமை இல்லை. தேர்தல் விதிமுறைகளை மீறும் இந்த செயலுக்கு இடுப்பில் கயிற்றை கட்டி அவரை சிறையில் தள்ள வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வங்காள தேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களை வெளியேற்றுவேன் என்று கூறும் மோடிக்கு தைரியம் இருந்தால் முதலில் என்னை வெளியேற்றட்டும். நெருப்போடு விளையாட வேண்டாம் என்று அவரை எச்சரிக்கிறேன்.

இவ்வாறு மம்தா பேசினார். 

"இனி வரும் ஒவ்வொரு மே மாதத்தின் முதல் வேலை தினத்தை தென்னக ரெயில்வே சுவாதி தினமாக அனுசரிக்கும்."


தென்னக ரெயில்வே துறையின் சார்பில்,  சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடந்த முதல் தேதி நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் பலியான ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சுவாதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசிய தென்னக ரெயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா, ‘இனி வரும் ஒவ்வொரு மே மாதத்தின் முதல் வேலை தினத்தை தென்னக ரெயில்வே சுவாதி தினமாக அனுசரிக்கும். அந்நாளன்று, பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்த, எப்போதும் தயார்நிலையில் இருக்கும்படி எங்களை மறு அர்ப்பணம் செய்து உறுதிமொழி ஏற்போம். பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வினை பயணிகளுக்கும் எடுத்துரைப்போம்’ என்று தெரிவித்தார்.

மேலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்குமோ..? என்று பயப்படாமல் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரமாக உதவி செய்து, பல உயிர்களை காப்பாற்ற உதவிய ரெயில்வே ஊழியர்களுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒருவர் பலி; காரணம் மின் தடையா?


சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவைச் சேர்ந்தவர் பொன்முருகன் (வயது47). சாலை விபத்தில் சிக்கி தலை மற்றும் காலில் பலத்த காயம் அடைந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். கவலைக்கிடமான சூழ்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டி லெட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் இன்று அதிகாலை இறந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது அப்போது ஜெனரேட்டர் செயல்படவில்லை என்றும் அதனால்தான் தனது கணவர் இறந்து விட்டதாகவும் நவநீதம் ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது குற்றம் சாட்டினார்.

இதை நிராகரித்து, மருத்துவமனையின்  டீன் விமலா கூறியதாவது:–

இறந்ததாக கூறப்படும் நோயாளி பொன்முருகனுக்கு வயிறு, தலை இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவரது நிலைமை மோசமாக இருந்தது. அதனால்தான் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மின்சாரம் தடைப்பட்டதால் அவர் இறக்கவில்லை. மின்சாரம் தடைப்பட்டாலும் தொடர்ந்து 2 மணி நேரம் வெண்டிலெட்டர் செயல் படக்கூடிய வசதி உள்ளது. எனவே அவரது இறப்பிற்கும் மின்தடைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

சோனி நிறுவனத்தின் 185 டெராபைட் வரை சேகரிக்கும் டேப்புகள்

சோனி நிறுவனம், 185 டெராபைட் டேடா வரை சேகரித்து வைத்துக் கொள்ள உதவும் டேப்களை கண்டுபிடித்து இருக்கிறது.  185 டெராபைட், அதாவது, 3700 ப்ளூ-ரே டிஸ்க்களில் சேகரிக்கும் அளவிலான டேடாவை, ஐ.பி.எம் நிறுவனத்தின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த டேப் ஒன்றில் மட்டுமே சேகரித்து வைத்து கொள்ளலாம்.

இந்த டேப்களில், ஒரு சதுர இன்ச்சில்,  148 கிகாபைட் டேடா சேகரிக்கப்படுகிறது.

தொழில் நிறுவனங்களுக்கு இந்த கண்டுபிடிப்பு மகத்தான ஒன்றாக அமையும்.

சோனி நிறுவனம், பேனாசோனிக் நிறுவனத்துடன் இணைந்து ஒரு டெராபைட் டேடா வைத்துகொள்ளும் அளவிலான காப்பக டிவிடிகளை கொண்டு வர முயற்சித்து வருகிறது. இந்த கண்டுபிடிப்பின் மூலம், 250 டிவிடி படங்களை, ஒரே ஒரு காப்பக‌ டிவிடியில் வைத்துக் கொள்ளலாம்.

நீலகிரியில் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட பாஜக வேட்பாளர் குரூமூர்த்தி கட்சியில் இருந்து நீக்கம்


நீலகிரி தொகுதியில் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட பாஜக வேட்பாளர் குருமூர்த்தி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குருமூர்த்தி, ஆவணங்களை உரிய நேரத்தில் வழங்காத காரணத்தால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு, நீலகிரி தொகுதியில் பாஜக போட்டியிடும் வாய்ப்பை இழந்தது. இதுபற்றி முன்னாள் மாநிலத் தலைவர் கே.என்.லட்சுமணன், மாநில பொதுச் செயலாளர் (அமைப்பு) எஸ்.மோகன்ராஜுலு, மாநில செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் அடங்கிய குழு விசாரித்து அறிக்கை அளித்துள்ளது.

அதன்படி குருமூர்த்தியும், அவரது தலைமை முகவராக செயல்பட்டு உரிய நேரத்தில் ஆவணங்களைக் கொடுக்கத் தவறிய வரதராஜனும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படு கிறார்கள். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மேற்கொண்டு விசாரித்து இறுதி அறிக்கையை மாநிலத் தலைமைக்கு வழங்கும். அதனடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் இன்னும் ஓயவில்லை !!!

கடந்த 2009இல் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு தமிழர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் மீண்டும் ஒன்று கூடுவதாக இலங்கை அரசு கூறி வந்தது . இந்நிலையில் இலங்கையில் இருந்து சிலர் அகதிகளாக தமிழகம் வந்தனர் .

ஒருவர் கூறுகையில் , விடுதலைப்புலிகள் ஊடுருவதாக கூறி அப்பாவி சிறுவர்களையும் , இளைஞர்களையும் தேடி பிடித்து கொலை செய்கின்றனர் . ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் வைத்து உள்ளனர் .

இன்னொருவர்  கூறுகையில் அங்கே தமிழர்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . இதனால் பலர் தலைமறைவாக காடுகளில் வாழ்கின்றனர் . இன்னும் 5000 தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர காத்திருக்கின்றனர் என தெரிவித்தார் . 

குமார் விஸ்வாஷுக்கும் போலிஸ்க்கும் இடையே சலசலப்பு !!

தேர்தல் உச்ச கட்டம் அடைந்து உள்ள நிலையில் நேற்று அமேதியில் ஆம் ஆத்மியின் வேட்பாளர் குமார் விஷ்வாஸ் வீட்டிற்கு வந்து அமேதி தொகுதியின் வாக்காளர்களை மற்ற அனைவரையும் வெளியேற உத்தரவிட்டனர் . அல்லது கைது செய்யப்படுவார்கள் என கண்டித்தனர் . விஷ்வாஸ் மனைவியும் அமேதியில் வாக்களிக்க முடியாததால் அவரையும் கைது செய்வதாக கூறினர் . இதனால் போலிஸ்க்கும் விஸ்வாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஆனது .

போலிஸார் கூறுகையில் , அமேதியில் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் அமைதியான வாக்குப்பதிவு நடக்க வாக்களிக்க முடியாதவர்களை வெளியேற்றி வருவதாக கூறினர் .

விஸ்வாஸ் கூறுகையில் ஆம் ஆத்மி கட்சியை மட்டும் குறி வைத்து தாக்குகின்றனர் என்றார் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media