BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 30 January 2014

ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வேண்டி கடிதம் எழுதப்பட்டது கடந்த டிசம்பர் மாதம்


திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதைப் பற்றி கருணாநிதி அளித்த பேட்டியில், அழகிரி தன்னிடம், ஸ்டாலின் இன்னும் 3-4 மாதங்களில் இறந்துவிடுவார் என்று கூறியிருந்தார் என தெரிவித்தார். இந்நிலையில் தான், ஸ்டாலினுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்க கோரி கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

தமிழ் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டியளித்த தி.மு.க நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஸ்டாலின் பாதுகாப்புக் கோரி எழுதப்பட்ட கடிதம் கடந்த டிசம்பர் மாதமே எழுதப்பட்டது என்று தெரிவித்தார். அழகிரிக்கு பயந்து கொண்டு, ஸ்டாலினுக்கு பாதுகாப்பு கோரியதாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்தி தவறு என்பதை அவர் தெளிவு படுத்தியுள்ளார்.

விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதித்த பெண் பயிற்சி விமானி பலி


சேலத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காமலாபுரம் விமான நிலையத்தில், புதிய விமானிகள் பயிற்சி மற்றும் இயக்கம், பாராசூட் பயிற்சி போன்றவை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதிப்பது தொடர்பான பயிற்சி 4 பெண்கள் உள்பட 15 பேருக்கு அளிக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்து 3 பேர் வீதம், ஒவ்வொரு முறையும் பாராசூட் மூலம் கீழே குதித்தனர். இதே போல் 2 ஆண்கள், ஒரு பெண் பயிற்சி விமானிகள் என 3 பேரும்,  விமானம் 150 அடி உயரத்தில் பறந்த போது பாராசூட் மூலம் கீழே குதித்தனர். அப்பொழுது, பெண் பயிற்சி விமானியின் பாராசூட் ஒரு புறம் சுழலவில்லை. இதையடுத்து அவர் விமான நிலையத்தின் அருகில் இருக்கும் ஒரு விவசாய தோட்டத்தின் கரடு முரடான பகுதியில் விழுந்தார். அப்போது அந்த பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அங்கு விரைந்து வந்த  அதிகாரிகள் சிலர், உயிருக்கு போராடி கொண்டிருந்த அப்பெண் விமானியை மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.

போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்த பெண் விமானியின் பெயர், ரம்யா, வயது 26, பெங்களூரை சேர்ந்தவர் என்ற விவரங்கள் தெரிய வந்தது.

சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட நர்சிங் மாணவிகள் 400 பேர் கைது

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் நர்சிங் பயிற்சி பெறும் மாணவிகள் கடந்த 3 நாட்களாக, பணிக்கு செல்லாமல் பயிற்சி பள்ளி உள்ளே
 உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

அரசு கல்லூரிகளில் படித்த நர்சிங் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என‌உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவருகின்றனர். இன்று காலை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முன்பு திடீரென 400 நர்சிங் மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதனால் அங்கு சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  உடனே அங்கு ஐம்பது பெண் போலீசார்கள் வந்து, போராட்டம் நடத்தி கொண்டிருந்த நர்சிங் மாணவிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதனை தொடர்ந்து மோதலும் ஏற்பட்டதில், சில மாணவிகள் மயக்கம் அடைந்து விழுந்துனர். பின்னர் நர்சிங் மாணவிகள் 400 பேரையும் போலீசார் கைது செய்து அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தினார்கள்.

அழகிரி பக்கம் சாய்ந்த நெப்போலியன், ரித்தீஷ், ராமலிங்கம்

அழகிரியை திமுகவை விட்டு அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கியுள்ள நிலையில், அவருடன் கட்சியினர் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று திமுக அறிவித்துள்ளது. இதையும் மீறி, திமுக எம்.பிக்கள் நெப்பொலியன், ஜே.கே.ரித்தீஷ் மற்றும் கே.பி. ராமலிங்கம், அழகிரியை நேரில் சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கின்றனர். அதோடு அல்லாமல், இறுதி வரை தங்கள் ஆதரவு அழகிரிக்கே என்றும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்திருக்கிறது திமுக தரப்பு.






தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் ராமலிங்கம், திமுக தலைமையுடன் நெருக்கமாக இருந்தவர் தான், ஆனால் இப்பொழுது எப்படி அழகிரி பக்கம் சாய்ந்தார் என்பது பலருக்கும் விளங்கவில்லை. நெப்போலியனோ, அழகிரியின் தீவிர ஆதரவாளராக திகழ்ந்து வருகிறார். கலவர பின்னணி மற்றும் வன்முறை வரலாற்றை உடைய ஜே.கே.ரித்தீஷும், அழகிரி பக்கம் சாய்ந்து இருக்கிறார்.

அழகிரியை கட்சியை விட்டு நீக்கியபோது, யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற கட்சித் தலைமையின் உத்தரவையும் மீறி, அழகிரியோடு தொடர்பு வைத்து கொண்டதோடு மட்டும் அல்லாமல், அவருக்கு ஆதரவு அளித்து, இறுதியுடன் அவருடன் இருப்பதாக கூறி உறுதி அளித்து இருக்கின்றனர். அதற்காக, இந்த மூவர் மீதும் கட்சியில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற‌ எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

புதிய பறக்கும் ரயில் நிலையத்திற்கு பெயர் 'முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்’

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்துக்கும், மயிலாப்பூர் ரயில் நிலையத்துக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய பறக்கும் ரயில் நிலையத்துக்கு ‘முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

பயணிகள் வசதிக்காக, நிறுவப்பட்டிருக்கும் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட ஆன செலவு, ரூ. 30 கோடி ஆகும். புதிய ரயில் நிலையம் கட்டப்படும்போது அந்தந்த மாநில முதல்வர் தான் புதிய ரயில் நிலையத்தின் பெயரை முடிவு செய்து அறிவிப்பார். தமிழக அரசுக்கு, ரயில்வே நிர்வாகம் பரிந்துரைத்த பெயர்கள், திருவள்ளுவர் ரயில் நிலையம், மாதவப் பெருமாள் ரயில் நிலையம், சமஸ்கிருதக் கல்லூரி ரயில் நிலையம், முண்டகக்கண் ணியம்மன் கோயில் ரயில் நிலையம் என்பனவாகும். இந்நிலையில், ஜெயலலிதா, புதிய பறக்கும் ரயில் நிலையத்திற்கு, 'முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்’ என்ற பெயரை சூட்ட உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய ரயில் நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் இயக்கப்படும் பறக்கும் ரயில்கள் அனைத்தும் முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அழகிரி பிறந்தநாள், கேக் வெட்டி கொண்டாட்டம்


 
மதுரை டி.வி.எஸ்.நகர் பகுதி சாய் நகர் வீட்டில் மு.க. அழகிரி, இன்று தன் 63வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். காலை 8.45 மணியளவில், அவரது மனைவி, மகள், மகன், மருமகள் மற்றும் ஏராளமான திமுகவினர் உடன் இருக்க, தன் பிறந்தநாள் கேக் வெட்டி,  அதை குடும்பத்தினருக்கு  ஊட்டி மகிழ்ந்தார்.
அவருக்கு மூன்று  திமுக எம்.பிக்களான  கே.பி. ராமலிங்கம், நெப்போலியன், ரித்தீஷ்  உட்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ஆதரவாளர்கள் அணிதிரண்டு அழகிரியை நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் ராஜா முத்தையா மன்றத்துக்கு அவரை அழைத்து சென்றனர்.

மோடி பிரச்சாரம் செய்யவே தேவையில்லை; ராகுல் பேசினாலே, மோடி வெற்றி பெறுவார்


                                              
சேலத்தில் நேற்று நடந்த பா.ஜ.க கூட்டத்தில் கலந்து கொண்ட இல.கணேசன், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவது குறித்த ஆலோ சனையில் ஈடுபட்டார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு  முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யவே தேவையில்லை. ராகுல் காந்தி பேசினாலே, மோடி வெற்றி பெற்று விடுவார் என கூறினார்.

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை நிறுத்த எந்த தகுதியும் இல்லாததால்தான், காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்து வருகிறது என்றும் கூறினார்.

மேலும் கூட்டணி அமைப்பதை பற்றி பேசிய அவர், தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகளுடன், பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும், பா.ஜ.க அமைக்க போகும் கூட்டணி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு சவால்விடும் கூட்டணியாக இருக்கும் என்றும் கூறினார்.

சிவாஜி சிலையை நீக்குவதென்றால், தமிழகத்தில் 16,000 மேற்பட்ட சிலைகளையும் நீக்க வேண்டும்

                                       

சென்னையில் உள்ள சிவாஜி கணேசன் சிலை, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது என்றும், விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறது என்றும், மக்களுக்கு இடையூறாக இருக்கும் அச்சிலையை அகற்ற வேண்டும் என்று, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பொது இடங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள், சாதித் தலைவர்களின் சிலைகளின் எண்ணிக்கை 16 ஆயிரத்திற்கும் மேல் என்றும், அச்சிலைகளையும் அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மக்களுக்கு இடையூறாக உள்ள அத்தனை சிலைகளையும் கண்டறிந்து அகற்ற ஒரு குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும், அதுவரை நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை அகற்ற இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் ரமேஷ் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media