BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 26 March 2014

கெஜ்ரிவால் முட்டாள் தனமாக பேசுபவர் தான், இருந்தாலும் அவர் மீது மை வீசியிருக்க கூடாது-திக்விஜய் சிங்


வாரணாசியில் நேற்று ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அத்தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவதாக கூறி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அவர் மீது நேற்று அங்கு சிலர் மையை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் இன்று கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து திக்விஜய் சிங் கூறுகையில், “நான் கெஜ்ரிவாலின் ரசிகன் இல்லை. அவர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் முட்டாள்தனமாக மட்டும் பேசும் நபர். ஆனால் கெஜ்ரிவால் மீதான மை தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இது பாசிசவாதிகளின் வழியாகும். பா.ஜ.க. ஒரு பாசிச கட்சி, அந்த கட்சிதான் இதுபோன்ற வேலையை செய்கிறது.
 நரேந்திர மோடி ஒருபோதும் பிரதமராகவே முடியாது.”

இவ்வாறு திக்விஜய் கூறியிருந்தார்.

ஆ.ராசாவை மாட்டி விட்டு தப்பித்த காங்கிரஸ், நன்றி மறக்கும் காரணத்தாலே பாதாளத்தில் விழுந்தது-கருணாநிதி


மக்களவை தேர்தலை முன்னிட்டு வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய தொகுதிகளில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசுகையில். “2ஜி அலைக்கற்றை ஊழலில் தி.மு.க.வின் ராசாவை மாட்டிவிட்டு காங்கிரஸ் தப்பித்து விட்டது. அதோடு மட்டுமில்லாது எங்களையும் தனித்து விட்டுவிட்டது. ஆனால், தற்போது ராசா குற்றமற்றவர் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சி நன்றி மறந்து விட்டது. பல கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த அக்கட்சி தற்போது யாரை பழி வாங்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. இதுவே அக்கட்சியின் வீழ்ச்சிக்கும் அதன் மதிப்பு இழந்ததற்கும் காரணம். முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் சிறப்பாக இருந்த காங்கிரஸ், தற்போது அதலபாதாளத்தில் விழுந்து கிடப்பதற்கு அதன் நன்றி மறந்த குணமே காரணம்” என்று தெரிவித்தார்.

இந்தியாவின் எதிரிகள்: ஏ.கே 47, ஏ.கே.அந்தோணி, அரவிந்த் கெஜ்ரிவால்(ஏ.கே. 49): மோடி


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு தழுவிய 'பாரத் விஜய்' என்ற பிரச்சார பேரணியை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் துவங்கினார். அப்பொழுது அவர், மூன்று ஏ.கே.-க்கள் இந்திய நாட்டின் எதிரிகளாக உள்ளனர். ஒன்று ஏ.கே 47 ரக துப்பாக்கி, மற்றொன்று ஏ.கே.,47-களுடன் வலம் வரும் ஏ.கே.அந்தோணி, 3-வது அரவிந்த் கெஜ்ரிவால் (ஏ.கே.49). இவர்கள் 3 பேரும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்து வருபவர்கள்." என்று கூறினார்.

மேலும் மோடி பிரச்சார பேரணியின் போது, "காஷ்மீர்வாசிகள் பாகிஸ்தானுடன் இணைவது குறித்து மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் சொல்கிறார். இவர்களின் வெப்சைட்டில் காஷ்மீர், இந்தியாவில் இடம்பெறாத வண்ணம் காட்டப்பட்டுள்ளது. இவர்கள் இந்தியாவின் எதிரிகள். இவர்கள் பாகிஸ்தானுக்கு உதவியாக செயல்படுகின்றனர்." என்று கடுமையாக சாடி பேசினார்.

காங்கிரஸை தாக்கி பேசிய மோடி, "இளவரசர் ராகுல் சொல்கிறார், இந்த நாட்டை முன்னேற்ற நினைக்கிறோம் என்று. நான் சொல்கிறேன்... ராகுல் இந்த நாட்டை அழித்து வருகிறார். இங்கு முதலில் நான் வைஷ்ணவி தேவி முன் வணங்கினேன். இப்போது மக்கள் நீதிமன்றத்தில் வணங்கி கேட்கிறேன். எத்தனை ஆண்டு காலம் நீங்கள் வாரிசு அரசியல் நடத்துவீர்கள்? வாரிசு அரசியல் இந்த நாட்டின் எதிரியாக உள்ளது." என்றும் கூறினார்.

பாஜக ஒரு பலூன், அது வெடித்து சிதற போவது உறுதி, காங்கிரஸ் வெற்றியை பார்த்து அனைவரும் மிரண்டு போவர்


 காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, "கடந்த 2004-ல் 'இந்தியா ஒளிர்கிறது' என்ற பலூன் அடங்கியது போலவே இப்போதும் பாஜக பலூன் வெடித்துச் சிதறப்போவது உறுதி. " என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவது, இந்தியாவுக்கு தீங்கு தரும். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மோசமான தோல்வி அடையப் போவதாக சில கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால், இதற்கு மாறாகவே தேர்தல் முடிவுகள் அமையும். அப்போது, அனைவரும் மிரண்டு போவார்கள்.

காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வி அடையும் என்றும், எங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அலை இருக்கிறது என்றும் 2009-ல் கூட கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால், முடிவுகள் அவற்றைப் பொய்ப்பித்தன. உத்தரப் பிரதேசத்தில் வெறும் 5 தொகுதிகள் கிடைக்கும் என்றார்கள். ஆனால், அந்த மாநிலத்தில் 22 தொகுதிகள் பெற்றோம்"

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

அழகிரியை விட்டு, ஸ்டாலின் பக்கம் தாவிய எஸ்ஸார்.கோபி


அழகிரியின் வலதுகரமாக விளங்கிய எஸ்ஸார் கோபி, தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். முன்னதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்து அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

எஸ்ஸார் கோபியின் இந்த அதிரடி நடவடிக்கை, அழகிரி தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இது குறித்து கோபி கூறியதாவது:

அழகிரியின் ஆதரவாளனாக அவருடன் பல ஆண்டுகளாக இருந்தேன். சமீபகாலமாக அவர் கட்சியை விமர்சித்து பேசுவதுடன், கட்சித் தலைவர் மனது புண்படும்படி தொடர்ந்து நடந்துகொள்வது எங்களுக்குப் பிடிக்கவில்லை. இது குடும்பப் பிரச்சினைதான். சரியாகி விடும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் தொடர்ந்து கட்சியை விமர்சிப்பதும், தேர்தலில் திமுக தோற்கும் என்று கூறுவதையும் எங்களால் ஏற்க முடியவில்லை. திமுகவை மிக மோசமாக விமர்சித்த வைகோவை சந்திப்பதும் அவருக்கு ஆதரவு தருவதும் எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இப்போதைய நிலையில் எங்களுக்கு அழகிரியைவிட திமுகவும், தலைவரும், தளபதியும்தான் முக்கியம். என்னைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த அழகிரி ஆதரவாளர்கள் பலரும் கருணாநிதியை சந்திக்க வருவார்கள்.

என் மீது பல வழக்குகள் இருப்பது உண்மைதான். யாரால் என் மீது வழக்கு வந்தது? அழகிரியுடன் இருந்ததால்தானே இத்தனை வழக்குகளையும் சந்தித்தேன். வழக்குகளிலிருந்து விடுபடத்தான் திமுக தலைமையுடன் இருக்கிறேன் என்று கூற முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு என் மீது 22 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இன்னும் 100 வழக்குகள் போட்டாலும் கட்சியையும், தலைமையையும் விட்டுத் தர மாட்டேன்.

இவ்வாறு எஸ்ஸார் கோபி கூறினார்.

பதவி மீது ஆசை இருந்தால் நான் ஏன் முதல்வர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்?



வாரணாசி தொகுதியில் பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுவதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், அத்தொகுதியில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது பேசியதாவது:

பலர் நான் பதவியை விட்டு ஓடிவிட்டதாக கூறுகின்றனர். நான் சில கொள்கைகளுக்காகவே பதவியை விட்டு விலகினேன். கடவுள் ராமர் அவருடைய தாயாரால் 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு அனுப்பப்பட்டார். அதை எல்லோரும் ஆதரித்தார்கள். பா.ஜ.க. அப்போது இருந்திருந்தால் கடவுள் ராமரையும் கூட ஓடிப்போனதாகவே கூறியிருப்பார்கள்.

அரசியல் கொள்கைகள், தியாகம் என்றால் என்னவென்றே பா.ஜனதா கட்சிக்கு தெரியாது. நான் சவால் விடுகிறேன். பா.ஜ.க.வில் யாராவது பஞ்சாயத்து தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய முடியுமா?

பதவி மீது ஆசை இருந்தால் நான் ஏன் முதல்வர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்? காங்கிரசும் பா.ஜ.க.வும் சேர்ந்து என்னுடைய லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை. அதனால்தான் பதவியை விட்டு விலக நேரிட்டது.

ரயில்வே மந்திரி பதவியிலிருந்து ராஜினாமா செய்த அப்போதைய லால் பகதூர் சாஸ்திரியானாலும் சரி, 14 வருடங்கள் வனவாசம் சென்ற ராமர் ஆனாலும் சரி யாரையும் பா.ஜ.க. விட்டுவைக்கப்போவதில்லை. ரயில் விபத்தின் காரணமாகவே அப்போதைய லால் பகதூர் சாஸ்திரி ரயில்வே மந்திரி பதவியிலிருந்து விலக நேரிட்டது. கடவுள் புண்ணியத்தில் அப்போது பா.ஜ.க. இருக்கவில்லை. இருந்திருந்தால் அவர்களையும் கூட ஓடிப்போனதாக தான் கூறியிருப்பார்கள்.

இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் பேசியிருந்தார்.

புழல் சிறையில், போலீஸ் அதிகாரிகளை ஆபாசமாக பேசி, கற்கள் எரிந்து கைதிகள் ஆர்ப்பாட்டம்


சென்னை புழல் சிறையில் 800-க்கும் அதிகமான விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 200 பேர் திங்கள்கிழமை காலையில், தங்கள் மீதான வழக்குகளை விரைவில் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி திரிபாதி, டிஐஜி மவுரியா மற்றும் அதிகாரிகள் சிறைக்கு சென்று கைதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர்களை கைதிகள் கோபமாகவும், ஆபாசமாகவும் பேசினர். அதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த கைதிகளை கலைந்து போகச்சொல்லி சிறைக் காவலர்கள் விரட்டினர்.
அப்போது கைதிகள் கற்களை எடுத்து தாக்குதல் நடத்தினர். போலீஸார் கைதிகள் மீது தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தால் 11 கைதிகள் காயம் அடைந்தனர். இளவரசன் என்ற காவலர் உட்பட 3 காவலர்கள் காயம் அடைந்தனர். மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு கைதிகள் வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ஜெ.வின் 4000 கோடிரூபாய் சொத்தை பற்றி நடுநிலை ஏடுகள் ஏன் செய்தி வெளியிடவில்லை? -கருணாநிதி


சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், மதியம் அங்கிருந்து தனது இல்லத்திற்கு புறப்பட்ட கருணாநிதி, நிருபர்களை சந்தித்தார்.

அப்பொழுது ஜெயலலிதா 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பதாக நேற்றையதினம் பெங்களூரில் நடைபெற்ற சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறாரே என்று கேட்கப்பட்ட போது, அதற்கு கருணாநிதி, " ஏறத்தாழ 4 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் சொத்து ஜெயலலிதா தரப்பினரிடம் இருப்பதாக நேற்றையதினம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் எடுத்து தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி பற்றி தமிழ்நாட்டு பத்திரிகைகள் குறிப்பாக சென்னையில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள், நடுநிலை ஏடுகள் என்று தங்களை சொல்லி கொள்கின்ற பத்திரிகைகள் வெளியிடாததின் காரணம் என்ன?. சூட்சுமம் என்ன?. ரகசியம் என்ன? நடந்த பேரம் தான் என்ன?" என்று கூறியிருந்தார்.

மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான கருணாநிதி விளக்கம்


சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மதியம் 1.40 மணிக்கு கருணாநிதி வீட்டிற்கு புறப்பட்டார். அப்பொழுது நிருபர்களை சந்தித்த அவர், அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான விளக்கத்தை கூறினார். அதாவது, "அழகிரி தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டதற்குப்பிறகு உரிய விளக்கங்களை அதற்கு அளிக்காமல், மேலும் மேலும் தி.மு.க.வை விமர்சிப்பதாலும், தி.மு.க. தலைவர்களைப்பற்றி அவதூறு கூறி வருவதாலும், அவர் வெளியிடுகின்ற கருத்துகள் தி.மு.க.விற்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும், களங்கம் கற்பிக்கும் வகையிலும் இருப்பதாலும், நானும், பொதுச்செயலாளர் க.அன்பழகனும் இன்றைக்கு கலந்து பேசி, அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக அறவே நீக்கப்படுகிறார் என்று தெரிவித்திருக்கிறோம். " என்று பதிலளித்தார்.

குஜராத்தில் நடந்த 2002 கலவரத்திற்கு பிறகு, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய விரும்பினேன்-மோடி


பிரிட்டன் எழுத்தாளரும் தொலைகாட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான ஆண்டி மெரினோ, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து நூல் வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தில் நரேந்திர மோடி  கூறியிருப்பதாவது:

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்துக்காக வருத்தப்படுகிறேன். ஆனால் குற்ற உணர்வால் பாதிக்கப்படவில்லை. நான் குற்றவாளி என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை. கலவரத்துக்கு ஒரு மாதத்துக் குப் பின்பு 2002 ஏப்ரல் 12-ம் தேதி பனாஜியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாகத் தெரிவித்தேன். ஆனால் கட்சித் தலைமை எனது ராஜினாமாவை விரும்ப வில்லை. அதேபோல் என்னை விட்டு விலக மாநில மக்களும் விரும்பவில்லை.

2002 பிப்ரவரி 27-ம் தேதி 59 கரசேவகர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். அந்த நாளில் கோத்ராவில் இருந்து காந்திநகருக்கு இரவில் திரும்பினேன். ராணுவத்தை தயார் நிலையில் இருக்கச் செய்யுமாறு எனது அதிகாரிகளுக்கு உத்தர விட்டேன். ஆனால் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நேரம் என்பதால் பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவியது. அதனால் ராணுவ வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டிருந் தனர். எனவே அண்டை மாநில முதல்வர்களின் உதவியை நாடினேன். ராஜஸ்தான், மகா ராஷ்டிர மாநிலங்களில் இருந்து 10 கம்பெனி போலீஸ் படையை அனுப்ப கேட்டுக் கொண்டேன். மகாராஷ்டிர அரசு மட்டும் பெயரளவுக்கு சிறிய போலீஸ் படையை அனுப்பியது. மற்ற 2 மாநில அரசுகளும் எனது கோரிக்கையை நிராகரித்து விட்டன. என்னைப் பொறுத்தவரை வளர்ச்சிதான் தாரக மந்திரம். மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதே எனது அரசின் பிரதான நோக்கம்.

இவ்வாறு அந்நூலில் கூறியிருக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media