BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 15 April 2014

சுப்ரமணியன் சுவாமி இல்லத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர் என்றும், அவருக்கும், அவர் கணவருக்கும் நற்பெயரே கிடையாது என்று சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்து இருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் கட்சியினர், இன்று டெல்லியில் உள்ள சுப்ரமணியன் சுவாமியின் வீட்டை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கடும் கோஷமிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்த ஆவேச தொண்டர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் காரணமாக சுப்பிரமணியன் சுவாமி வீடு முன்பு பரபரப்பு ஏற்பட்டது.  மேலும், அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து எந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நீக்கப்பட்டேன்? - உச்சநீதிமன்றத்தில் சீனிவாசன் கேள்வி

2013 ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டி தொடரின்போது சூதாட்டம் மற்றும் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, பி.சி.சி.ஐ. தலைவராக இருந்த என்.சீனிவாசனை தலைவர் பதவியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் சீனிவாசன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "நான் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து எந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நீக்கப்பட்டேன்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். கடந்த 27-03-2014ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது உரிய காரணங்கள் இன்றி் தன் மீது குற்றம் சுமத்தியிருப்பது தனக்கு மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும் சீனிவாசன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து தன்னை தற்காலிகமாக நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் வாய்வழி உத்தரவிட்டது ஏன்? என்று தனிப்பட்ட முறையில் தமக்கு தெரியவில்லை என்றும் என்.சீனிவாசன் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி விவகாரத்தில் நேரடி விவாதத்திற்கு அழைத்த கருணாநிதியின் கோரிக்கையை ஏற்கிறேன். - ஜெயலலிதா

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், "காவிரி விவகாரத்தில் நேரடி விவாதத்திற்கு அழைத்த கருணாநிதியின் கோரிக்கையை ஏற்கிறேன். சட்டமன்றத்திற்கு வந்து கருணாநிதி இவ்விவகாரம் குறித்து என்னுடன் நேரடியாக விவாதம் செய்யவேண்டும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். " என்று கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, காவிரி நீர் விவகாரத்தில் கருணாநிதி தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகத்தை இழைத்து வருகிறார். கருணாநிதி என்னுடன் சட்டமன்றத்தில் விவாதம் செய்யவேண்டும், அல்லது மக்கள் முன் அவர் தனது துரோகத்தை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவேண்டும்.

பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அடுத்த நடைபெறவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அவரை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். அவரது துரோகங்களை நான் பட்டியலிட தயாராக இருக்கிறேன். என்னுடன் கருணாநிதி மட்டுமே மோதவேண்டும். அதை விட்டு துரைமுருகனோ அல்லது வேறு யாரையும் விவாதத்திற்கு அனுப்பக்கூடாது. இதை ஏற்றுக்கொள்ள தயார் என்றால் கருணாநிதி சட்டமன்றத்திற்கு வந்து பேசலாம்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

பெண்களின் உரையாடல்களை பதிவு செய்யும் மோடி, அவர்களின் பாதுகாப்பு பற்றி பேசுகிறார்- ராகுல் காந்தி

காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வஜித் கடாமை ஆதரித்து, பூனேயில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அவர் பேசியதாவது:

குஜராத் முதல்வர், பெண்களின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்கிறார். அங்கு காவல்துறையினர் பெண்களை மதிப்பதில்லை. பெண்களின் முன்னேற்றத்தை பற்றி பேசுவதற்கு முன்னர் முதலில் அவர்கள் பெண்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை விட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெண்களின் நிலை மோசமாக உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 20 ஆயிரம் பெண்கள் மாயமாகியுள்ளனர். பெண்களின் முன்னேற்றத்திற்காக காங்கிரஸ் பெரிய அளவில் முயற்சிகளை எடுத்தது. ஆனால் பா.ஜ.க. பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

சச்சினுக்கு கால்பந்து அவ்வளவு நன்றாக வராது, நான் தான் சொல்லி கொடுக்க வேண்டும் - கங்குலி !!

ஒரு நாள் போட்டிகளில் சிறந்த துவக்க வீரர்களான சச்சினும் கங்குலியும் இந்தியா அணிக்கு பல வருடங்கள் விளையாடினர் . இப்போது  ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இருவரும் இரு அணிகளை வாங்கி உள்ளனர் .

இதைப்பற்றி கங்குலி கூறுகையில் சச்சினுக்கு கால்பந்து அவ்வளவு நன்றாக வராது , நான் தான் சொல்லி கொடுக்க வேண்டும் . எங்கள் கொல்கத்தா அணியை சந்திக்க நிறைய பயிற்சி பெற வேண்டும் . சச்சின் என்னுடன் 15 வருடம் விளையாடியும் பெங்காலி சரியாக கற்றுக்கொள்ளவில்லை . அதுபோல கால்பந்தை கற்றுக்கொள்ள இவர் 15 வருடங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறினார் .

கங்குலி தன் கல்லூரி நாட்களில் கால்பந்து வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

'சூப்பர் பிரதமர்' என்றால் அது மன்மோகன் சிங் தான்!- பிரியங்கா பாராட்டு


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மகள்,  பிரியங்கா தனது சகோதரரும், காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்த பிரதமர்களில் 'சூப்பர் பிரதமர்' என்றால் அவர் மன்மோகன் சிங்தான்" என்றார். இதைப் பற்றி அவர் மேலும் கூறும்போது, "இந்தத் தேர்தல் மக்களின் இதயங்களை பிளவுப்படுத்த நினைப்பவர்களுக்கும், அவர்களை ஒருங்கிணைக்க பாடுபடுபவர்களுக்கும் இடையே உள்ள போட்டியாகவே கருதப்பட வேண்டும். நாங்கள் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாங்கள் அதனை செய்வோம் என்பதை மக்களும் நம்புகின்றனர்" என்று கூறினார்.

அதிமுக வேட்பாளரைத் தவிர வேறு எந்த வேட்பாளருக்கும் தே.ஜ.கூட்டணி ஆதரவு அளிக்க முற்பட்டால் அது, ராசாவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவுவ தாக அமையக்கூடும்.

காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா தோற்கடிக்கப்பட‌ வேண்டுமென அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

ஜெயலலிதாவையோ கருணாநிதியையோ காந்திய மக்கள் கட்சி ஒருநாளும் ஆதரிக்காது. ஆனால், நீலகிரி தொகுதியைப் பொறுத்தவரை ஆ.ராசாவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் ஆரோக்கியமான அரசியலை விரும்பும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதனால், அதிமுக வேட்பாளரைத் தவிர வேறு எந்த வேட்பாளருக்கும் தே.ஜ.கூட்டணி ஆதரவு அளிக்க முற்பட்டால் அது, ராசாவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவுவதாக அமையக்கூடும்.

நீலகிரி வாக்காளர்கள் அனை வரும் ஆ.ராசாவுக்கு எதிராக வாக்களிப்பதை ஒரு சமூகக் கடமையாகக் கருத வேண் டும். வலிமையற்ற மாற்றுக் கட்சி களுக்கும் ஆயிரம் வாக்குகளைப் பெறுவதற்குக் கூட வாய்ப்பு இல்லாத சுயேச்சைகளுக்கும் வாக்களிப்பதனால் ராசாவின் வெற்றியைத் தடுக்க இயலாது. இது ராசாவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே தவிர, ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக அல்ல.

இவ்வாறு தமிழருவி மணியன் அறிக்கையில் கூறியிருக்கிறார். 

சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறி 5 நிமிடம் உட்கார்ந்து சென்ற ஆ.ராசா

அவிநாசியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆ.ராசாவின் வாகனம், அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டது.

போராட்ட குழுவினர் மற்றும் பொதுமக்களிடம் ராசா பேசியபோது, "நீங்கள் 5 வருடம் இருந்தீர்கள், அவிநாசி அத்திக்கடவு திட்டத்துக்காக என்ன செய்தீர்கள்?" என்று கேட்டனர். அதற்கு, உலக வங்கி உதவியுடன் இந்த திட்டத்தை நிறை வேற்றித் தருவேன். இந்தமுறை எம்.பி ஆனதும் இந்த திட்டத்தை நிறைவேற்றித்தருவதாக உறுதி யளித்ததோடு, கடந்தமுறை நான் ஜெயிலில்தான் இருந்தேன் என பதில் சொன்னாராம் ராசா. "மறுபடியும், நீங்கள் ஜெயிலுக் குப் போய்விட்டால் நாங்கள் என்ன செய்வது?" என்று கேட்டபோது, ஒருகணம் திகைப்படைந்து "நானும் உங்களுடன் போராடத் தயார்" என்றபடி சாலையில் உட்கார்ந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் தயார் என்றார். இதையடுத்து, போராட்டக் குழு அமர்ந்திருந்த சாலைப் பகுதிக்கு சென்று தானும் சாகும் வரை உண்ணா விரதம் என்று சொல்லி 5 நிமிடங்கள் அமர்ந்தார். பின், வாகனத்தை முற்றுகையிட்டவர்கள் திகைத்து நின்று பார்க்க, உடன் வந்த வாகனங்களும் ராசா அருகில் வர, அங்கிருந்து வாகனத்தில் 5 நிமிடத்தில் அந்த இடைத்தை விட்டு சென்றுவிட்டார் ராசா.

மோடியின் அந்தரங்க வாழ்வில் தலையிடுகிறது காங்கிரஸ்-சிவசேனை

சிவ சேனை நாளிதழான சாம்னாவில், "மோடி தன் மனைவி பெயரை வேட்புமனுவில் குறிப்பிடாமல் விட்டுவிட்டதால், குஜராத்தின் வளர்ச்சி தடைபட்டுவிடவில்லை" என்ற தலைப்பில் தலையங்கம் வெளியாகி இருக்கிறது. அப்பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மோடியின் திருமணம் வெறும் சம்பிரதாயத்துக்காக நடந்தது. சுவாமி சமர்த் ராம்தாஸ் தனது திருமணச் சடங்குகளில் பாதியிலேயே ஓடி விட்டார். அவர் சமூகத்துக்கு தனது வாழ்வை அர்ப்பணித்தார். அதைப் போலவே, மோடி ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக மாறி விட்டார். யசோதா பென் புகார் எதுவும் தெரிவிக்காதபோது, காங்கிரஸ் ஏன் அவருக்காக குரல் கொடுக்கிறது?

இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ராகுல்காந்தி, மோடியின் அந்தரங்க விஷயங்கள் குறித்து விமர்சிக்கிறார். யசோதாபென் குறித்து அக்கறை காட்டும் காங்கிரஸ், மர்மமான முறையில் இறந்து கிடந்த சுனந்தா புஷ்கர் குறித்து ஏன் அக்கறை காட்டக் கூடாது?.

சில முட்டாள்கள், கண்ணை மூடிக்கொண்டு தங்கள் தவறு களை மறந்து விட்டு, அடுத்தவர்களின் குறைகளைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். மோடியின் திருமணத்துக்கும், சாமான்ய மக்களின் பிரச்சினைக ளான விலைவாசி உயர்வு, ஊழல் போன்றவற்றுக்கும் என்ன தொடர்பு?

இதைப் பற்றிப் பேசிக் கொண் டிருந்தால், அண்டை நாடுகளில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான செயல் பாடுகள் நிறுத்தப்படுமா, தாவூத் இப்ராஹிம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுவாரா, மகாராஷ் டிரத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது முடிவுக்கு வந்துவிடுமா?

இவ்வாறு சாம்னாவின் தலையங்க பக்கத்தில் விவாதிக்கப் பட்டுள்ளது.

400 அடி கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனைக் காப்பாற்ற உதவிய போர்வெல் ரோபோ


சங்கரன்கோவில் அருகே 400 அடி ஆழ்துளைக் கிணற்றில் த‌வறி விழுந்த 3 வயது சிறுவன், பெயர் ஹர்சன், 6 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ரோபோ கருவி உதவியுடன் மீட்கப்பட்டான்.

ரோபோவில் பொருத்தப்பட்ட மனிதனின் கை போன்ற இரு ராட்சத கைகளை, ஆழ்துளை கிணற்றுக்குள் செலுத்தி, ஹர்சனை மீட்க முயற்சிக்கப்பட்டது. சிறிது உயரம் தூக்கிய நிலையில் சிறுவன் நழுவி கீழே விழுந்தான். மீண்டும் முயற்சி செய்ததில், கருவியின் ராட்சத கைகள் ஹர்சனை கெட்டியாகப் பற்றிக் கொண்டன. தீவிர போராட்டத்துக்கு பின்,சிறுவன் பத்திரமாக வெளியே தூக்கிவரப்பட்டான். இதைப் பார்த்த மக்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

சிறுவனைக் காப்பாற்ற உதவிய போர்வெல் ரோபோவை கண்டுபிடிக்க தீவிரமாக‌ செயல்பட்டவர், மணிகண்டன் (வயது 42). அவர் ஆழ்துளை கிணறுகளில் விழுந்து குழந்தைகள் இறக்கும் சம்பவங்கள் த‌ன்னை  பாதித்ததாகவும்,  அவர்களைக் காப்பாற்றும் வகையில் கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என, இந்த ரோபோவை கண்டுபிடித்து இருக்கிறார்.

ஆழ்துளைக் கிணற்றில் ஆயிரம் அடி ஆழத்தில் குழந்தைகள் சிக்கி இருந்தாலும் கூட, இக்கருவியின் உதவியால் மீட்க முடியும். குழந்தைகளைப் பற்றிப்பிடிக்கும் வகையிலான இயந்திர கை தானாக சுருங்கி விரியும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. மின்சப்ளை இல்லாத இடங்களில் பேட்டரி மூலமும் இதை இயக்க முடியும். குழந்தையை மீட்டு வரும்போது, குழந்தை நழுவி விடாமல் இருக்க மடங்கும் விரல்கள் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.  மொத்தம் 2 அடி உயரம், 5 கிலோ எடை உள்ள இந்த இயந்திரத்தை எங்கும் எளிதாக எடுத்துச் செல்லலாம். குழிக்குள் சிக்கிய குழந்தையை அழுத்தும்போது ஏற்படுத்தும் அழுத்த அளவை துல்லியமாக அறிந்து கொள்ள, `பிரஸ்ஸர் கேஞ்ச்’ அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. இதை தயாரிக்க ரூ.60, 000 ஆகும் என மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

குழிக்குள் தவறி விழுந்த குழந்தையின்மீது மண் சரிவதால் மீட்புப் பணியில் ஏற்படும் சிரமங்களை நீக்க மண் அள்ளும் இயந்திரம், வாக்குவம் பம்ப் ஆகியவையும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை ஐ.ஐ.டி. இந்த இயந்திரத்துக்கு 2006-ல் விருதும், அங்கீகாரமும் அளித்திருக்கிறது. 2007-ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் குடியரசு தினவிழாவில் நற்சான்றிதழ் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக பேசிய மணிகண்டன், "கருவியின் செயல்பாடு குறித்து தீயணைப்புத் துறைக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பியிருந்தேன். இதற்காக எனது சொந்த காசை செலவிட்டு சென்னைக்குச் சென்று, கருவியின் செயல்விளக்கத்தை செய்து காண்பித்திருக்கிறேன். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கப் படவில்லை." என்று தெரிவித்தார்.

ஜெயா டிவியில் என்னை கேவலபடுத்துகின்றனர்; எனது கட்சியை ஒழிக்க பார்க்கின்றனர்; அது முடியாது- விஜயகாந்த்

நேற்று அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ளஅவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,  தேமுதிக தலைவர் விஜயகாந்த்.  அதைத் தொடர்ந்து அவர் பேசும்போது, "சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டவர்தான் அம்பேத்கர். ஊழல், கொலை இல்லாத நாட்டுக்காக அவர் போராடினார். அம்பேத்கர் வழியின் அடிப்படையில்தான் எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. நான் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்கிறேன். உடல் நலக் குறைவால், நான் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்யவில்லை. மீண்டும் 4 நாட்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பிரச்சாரம் செய்வேன். இந்தியாவில் ஊழலற்ற, நியாயமான ஆட்சி அமைய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள்" என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஈஸ்வரனை ஆதரித்து சேலத்தில் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசும்போது, "பிரியங்கா காந்தியின் கணவர் செய்துள்ள ஊழலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்தியாவில் மிகவும் மோசமான ஆட்சியை காங்கிரஸ் செய்துள்ளது. ஜெயலலிதா பிரச்சாரத்தில் கருணாநிதியை குறை கூறி பேசி வருகிறார். அவர்களின் தொலைக்காட்சியில் என்னை கேவலப்படுத்துகின்றனர். எனது கட்சியை ஒழிக்க பார்க்கின்றனர். அது முடியாது. மின்சாரத்தை யாரோ திருடுகிறார்கள் என்று ஜெயலலிதா கூறி வருகிறார். இதையெல்லாம் வரும் 24-ம் தேதி வரை கூறுவார்கள். அதன்பின், மின் மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று கூறுவார். மோடி பிரதமரானால் உடனடியாக தண்ணீர், மின்சார பிரச்சினையை முடித்துக் கொடுப்போம். மலைவாழ் மக்களுக்கு பட்டா, ஜாதி சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்வோம்"

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media