BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 15 March 2014

ராமதாஸும், விஜயகாந்தும் தருமபுரியில் ஒரே மேடையில் பிரச்சாரம்?


மார்ச் 16-ல் தருமபுரி தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் விஜய காந்தும் ராமதாஸும் ஒரே மேடையில் தோன்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு பாமக மற்றும் தேமுதிக வட்டாரத்தில் எழுந்துள்ளது.

16-ம் தேதி விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்துக்காக தருமபுரி வருகிறார். அதேநாளில் ராமதாஸும் தேர்தல் பிரச்சாரத்துக்காக தருமபுரி வருகிறார். அதற்கு முன்பாக, பாஜக கூட்டணியில் தேமுதிக-வும் பாமக-வும் இடம்பெறுவது இறுதி செய்யப்பட்டால், ராமதாஸும் விஜயகாந்தும் ஒரே மேடையில் தோன்றும் வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து தருமபுரி அரசியல் வட்டாரத்தினர் கூறுகையில், “பாமக-வும் தேமுதிக-வும் தமிழக அரசியலில் இதுநாள் வரை எதிரும் புதிருமாய் இருந்து வந்துள்ளன. ராமதாஸும், அன்புமணியும் மேடைகள்தோறும் விஜயகாந்த் மீதான தனிப்பட்ட விமர்சனங்களை வெளிப்படையாகவே பேசியுள்ளனர். இந்நிலையில், காலத்தின் கட்டாயத்தால் பாமக-வும் தேமுதிக-வும் இப்போது ஒரே கூட்டணியில் இணையக்கூடிய சூழல் நிலவுகிறது. 16-ம் தேதிக்கு முன்பாக கூட்டணிக்கு இறுதிவடிவம் கிடைத்து விட்டால் ராமதாஸும் விஜயகாந்தும் முதல் முறையாக ஒரே மேடையில் அல்லது ஒரே வாகனத்தில் இணைந்து பிரச்சாரம் செய்வர். இது அரசியலில் ஒரு முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது’’ என்றனர்.

இதுகுறித்து பாமக-வின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணனிடம் கேட்டபோது, 16-ம் தேதி அவரச சூழல் எப்படி அமையும் என்று தெரியவில்லை. அதேநேரம், கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் 16 -ம் தேதிக்குப் பிறகு நடக்கும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் ஒன்றாக பிரச்சாரம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது’’ என்று கூறினார்.

டெல்லி பாலியல் வழக்கில் இருவர் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை


உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்த, டிசம்பர் 16, 2012 அன்று நடந்த  டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக நான்கு பேருக்கு  கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ரேவா கேதர்பால், பிரதிபா ராணி ஆகியோர் விசாரித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தனர். 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், விரைவு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்தனர். இந்நிலையில், இருவர் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் இருண்டு இருக்கு, குஜராத்தில் 24 மணி நேரம் மின்சாரம் இருக்கு, மோடிக்கு ஓட்டு போடுங்க- விஜயகாந்த்


ஆற்காட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு மாற்றாக ஒரு மாற்று சக்தி உருவாக வேண்டும்; அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் வறுமையை ஒழிப்போம் என கூறிய கட்சிகள் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமல்படுத்த அதிமுக, திமுக அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

மேலும், மோடி ஆட்சியில் குஜராத் வளர்ச்சியடைந்து உள்ளதாக வியகாந்த் அவருக்கு புகழாரம் சூட்டினார். தமிழகம் போல் இல்லாமல் குஜராத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கிறது என்றார். தமிழக மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என்ற விஜயகாந்த், அதற்கு மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரத்தில் கூறினார்.

திமுகவை விட்டு விலக மாட்டேன், புதிய கட்சி ஆரம்பிக்க மாட்டேன்-அழகிரி

டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, பின் சென்னையில் ரஜினிகாந்தை சந்தித்து , இந்த இரு சம்பவங்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி விட்டு மதுரைக்கு திரும்பிய அழகிரி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில், திமுகவில் இருந்து விலக்கப்பட்டாலும் கூட கட்சியில் இருந்து வெளியேற நான் தயாராக இல்லை. அடுத்தகட்ட முடிவு குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

நேற்று மாலை வடசென்னை முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபுவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது அழகிரி நிருபர்களிடம், "நான் அரசியல் ரீதியாக யாரையும் சந்தித்து பேசவில்லை. நட்பு ரீதியாகவும் நலவிரும்பி என்ற முறையிலும் நேரில் பார்த்து பேசுகிறேன். நான் தி.மு.க.வில் இருந்து செயல்படுவேன். தனிக்கட்சி தொடங்கும் திட்டம் எதுவும் இல்லை. எனது ஆதரவாளர்கள் கூட்டத்தை 17–ந்தேதி கூட்டி இருக்கிறேன். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செயல்படுவேன். ஒற்றுமையாக இருந்தால் தி.மு.க. வெற்றி பெறும். யாருடனும் கூட்டணி வைக்க தேவையில்லை." என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

மோடி அருகில் உட்கார்ந்து சாப்பிட வேண்டுமா? 25லட்ச ரூபாய் அதற்கு செலவாகும்


பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் சிறப்பு கூட்டம் ஒன்று வருகிற 26–ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் மோடியுடன் அமர்ந்து சாப்பிடலாம். ஆனால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் கொடுப்பவர்கள் மோடிக்கு அருகில் உட்கார்ந்து சாப்பிடலாம்.

இந்த திட்டத்தின் மூலம் பா.ஜ.க.வுக்கு அன்று ஒரு நாள் மட்டும் ரூ.15 கோடி நிதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பாஜக இதை மறுத்துள்ளது, மேலும் இது குறித்து பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜேவேட்கர், 'மோடியுடன் டீ' என்ற நிகழ்ச்சி மட்டுமே  தாங்கள் ஏற்பாடு செய்தது என்றும் மோடியுடன் டின்னர் நிகழ்ச்சியை தாங்கள் ஏற்பாடு செய்யவில்லை என்றும் இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்றும் கூறினார்.

மாயமான மலேசிய விமானத்தை கடத்தியது துணை பைலட்டா? கேப்டன் வீட்டிலும் சோதனை

மாயமான மலேசிய விமானத்தை கடத்தியது துணை பைலட்டா? கேப்டன் வீட்டிலும் சோதனை

விஜயகாந்த் 10 சதவீதம் ஓட்டுகளை எடுக்கும்போது நீங்கள் 35 சதவீதம் ஓட்டுகளை அள்ளலாம் ரஜினியிடம் அழகிரி


நேற்று ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில். அழகிரி மற்றும் அவரது மகன் துரை தயாநிதி, மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் சந்தித்தனர்.

இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான், ரஜினியிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று அழகிரி தெரிவித்தாலும்,  அவரது தரப்பில் பேசியவர்கள், ரஜினியிடம் அழகிரி, “கடந்த 96-ம் ஆண்டு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டீர்கள். அதன் பின்பு இப்போது காலம் கனிந்துள்ளது. விஜயகாந்த் அரசியலுக்கு வந்து 10 சதவீதம் ஓட்டுகளை எடுக்கும்போது நீங்கள் அரசியலுக்கு வந்தால் 35 சதவீதம் ஓட்டுகளை அள்ளலாம். தமிழகத்தில் சாதி, மதம் இவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டு உங்களுக்கு மட்டுமே மக்களின் செல்வாக்கு இருக்கிறது. எனவே, தயங்காமல் அரசியலுக்கு வாருங்கள். நான் உங்களுக்கு தோள் கொடுக்கிறேன். இப்போதும் 40 சதவீதம் திமுக-வினர் என்னுடன் இருக்கிறார்கள். மேலும் 10 சதவீதம் பேர் ரகசியமாக எனக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்” என்று கூறியதாக தெரிவித்தனர்.

அழகிரி, தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பேசியபோது, ரஜினி வருத்தம்தோய அதைக் கேட்டுக்கொண்டார் என்றும், அழகிரி தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ரஜினியுடன் நிறைய பேசினார் என்றும் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

அழகிரியின் தற்போதையத் திட்டம், திமுக-வை மூன்றாவது இடத்துக்கு தள்ளுவதும், அதன் மூலம் தனது இழப்பை புரியவைப்பதும்தான். அதற்காகவே டெல்லியில் அவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அவரிடம் தென் மாவட்டம் முழுவதும் பாஜக வெற்றிபெற தான் உதவி புரிவதாக தெரிவித்துள்ளார் என்று அழகிரி தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருந்தது.

மலேசிய விமானம் கடத்தப்பட்டது, மலேசிய அதிகாரி அறிவிப்பு


239 பயணிகளுடன், மலேசியாவில் இருந்து சீனா கிளம்பி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடந்த 8ம் தேதி மாயமானது. தீவிரமாக தேடப்பட்டு வரும் விமானத்தின் நிலை மர்மமாகவே நீடித்து வந்தது. இந்நிலையில், அந்த விமானம், கடத்தபட்டிருக்கிறது என்ற தகவலை பெயர் வெளியிட விரும்பாத மலேசிய அதிகாரி ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். விமானத்தை கடத்தியவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை. விமானத்தை கடத்திக் கொண்டு எங்கு சென்றார்கள் என்ற விவரங்களும் இன்னும் கண்டுப்பிடிக்கப் படவில்லை.

விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற யூகம், உண்மை தான் என முடிவுக்கு வந்தாகிவிட்டது என மலேசிய அதிகாரி தெரிவித்தார். விமானம் ஓட்டுவதில் திறமை படைத்த ஒருவரோ, அல்லது விமானத்தை ஓட்டி வந்த பைலட் ஒருவரோ இந்த கடத்தல் வேலையில் ஈடுப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தி.மு.க. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது, ராமர் கோவில் கட்ட ஆதரித்தவர் தானே ஜெ.!

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

9-3-2014 அன்று நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசியது அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது அ.தி.மு.க. ஆட்சிதான் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.

தி.மு.க. ஆட்சியில் தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது என்று நாங்கள் கூறுகிறோம். இதில் எது உண்மை?. அ.தி.மு.க. ஆட்சியில்தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது என்றால், அதற்கான சட்டம் இயற்றப்பட்டதா? எந்தத்தேதியில் அதற்கான ஆணை வெளிவந்தது?.எந்த நாளேட்டில் அந்தச் செய்தி வெளியிடப்பட்டது? திட்டவட்டமாகவும் குறிப்பாகவும் ஜெயலலிதா கூறத்தயாரா? 2006-ம் ஆண்டு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திருத்தியமைத்ததும், அவர்களின் பரிந்துரையைப் பெற்றுத்தான் இடஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற அம்சத்தை சேர்த்ததும் அ.தி.மு.க. ஆட்சி என்றும், அதனால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது அவர்கள்தான் என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.

இஸ்லாமிய சமுதாயப் பெருமக்களை கேட்கிறேன். இன்னமும் ஜெயலலிதா அணியினருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று தெரிவிக்கின்ற பல்வேறு இயக்கத்தோழர்களை கேட்கிறேன். ஜெயலலிதா செய்ததுதான் இடஒதுக்கீடு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதல் அமைச்சர்.

உண்மையிலேயே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்று அவர் கருதியிருந்தால், அவர் பதவியிலே இருந்த அந்த 5 ஆண்டு காலத்திலேயே பிற்படுத்தப்பட்டோர் நலவாரியத்தின் பரிந்துரையை பெற்று, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்திருக்கலாம் அல்லவா? அதை ஏன் அவர் செய்யவில்லை?

தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களை ஆதரித்துப் பேசும் ஜெயலலிதா கடந்த காலத்தில் அவர்களைப் பற்றி பேசியது என்ன?. “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டபோது, “ஆமாம், ஆதரிக்கிறேன். இந்தியாவிலேயே ஒரு ராமர் கோவில் கட்ட முடியவில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்?” என்று கூறியவர்தான் ஜெயலலிதா.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், மனித நேய மக்கள் கட்சியும் கூட்டணி சேர்ந்து தலா ஓர் இடத்தில் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. ஏதாவது ஒரு முஸ்லிம் இயக்கத்திற்கு ஓர் இடமாவது அளித்திருக்கிறதா?.

வேட்பாளர்களை எடுத்துக் கொண்டால், தி.மு.க. சார்பாக 2 இஸ்லாமிய சகோதரர்கள், தோழமைக்கட்சிகள் சார்பில் 2 இஸ்லாமிய சகோதரர்கள் என்று மொத்தம் 4 பேர், அதாவது 10 சதவீதம் என்கிற அளவிற்கு முஸ்லிம்களுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டிருக்க, அ.தி.மு.க.வில் ஒரே ஒருவருக்குத்தான் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, இடஒதுக்கீட்டில் ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும், துரோகம் இழைப்பதும் கருணாநிதியா? ஜெயலலிதாவா?

இளமைக் காலத்திலேயே இஸ்லாமிய சமுதாயத்தினர்மீது நான் கொண்டிருந்த மதிப்பின் தொடர்ச்சியாக; காயிதே மில்லத் மீது நான் கொண்டிருந்த அன்புக்கும், பாசத்துக்கும் அடையாளமாக - இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு வாய்ப்பு கிடைத்திடும் போதெல்லாம் பல்வேறு நன்மைகளை வழங்கியிருக்கிறேன்.

ஆனால் என்னைப் பற்றித்தான் ஜெயலலிதா நான் ஏமாற்றுவதாகவும், வஞ்சிப்பதாகவும் பேசியிருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் இஸ்லாமிய பெருமக்களுக்காக நாம் செய்த சலுகைகளையெல்லாம் அவர்களுக்கு நினைவூட்டிட வேண்டும்.

‘முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல, வேறு சமுதாயத்தினரும் இருக்கிறார்கள்’ என்றெல்லாம் ஜெயலலிதா பேட்டி கொடுத்ததையும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது தி.மு.க. அரசுதான் என்பதையும் விளக்கிட வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

பாமக உள்ளே, தேமுதிக வெளியே? விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் போன் சுவிட்ச் ஆஃப்!

பாஜக கூட்டணி - பாமக உள்ளே, தேமுதிக வெளியே? விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் போன் சுவிட்ச் ஆஃப்!

ஆம் ஆத்மி கட்சியினர், குஜராத் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாதல், போலீஸார் வழக்கு பதிவு


அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 5-ந்தேதி குஜராத்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அவருடன் சுமார் 20 வாகனங்களில் அவரது கட்சியினரும் சென்றனர். படான் மாவட்டத்தில் வராகி பகுதியில் சென்ற போது அங்குள்ள சுங்கச்சாவடியில் 20 வாகனங்களும் கட்டணம் செலுத்தவில்லை. கட்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட சம்கியாலி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியிலும் ஆம் ஆத்மியினரின் 15 வாகனங்கள் பணம் செலுத்தவில்லை.

இது குறித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் முகேஷ் காத்வி மற்றும் தோமர் என்பவர்கள் போலீசில் புகார் செய்தார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் ஆம் ஆத்மியினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த வாகனங்களின் ஓட்டுனர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தேவயாணி மீது அமெரிக்கா இன்று மீண்டும் வழக்கு பதிவு செய்தது, 21 பக்க குற்றச்சாட்டு

அமெரிக்காவிற்கான‌ துணைத்தூதராக இந்தியாவில் இருந்து சென்ற தேவயானி கோப்ரகடே மீது ஏற்கனவே கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் மீது இன்று மீண்டும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க நீதிமன்றத்தில், தேவயானி மீதான விசா மோசடி வழக்கு விசாரணை நடந்து வந்தது. அதில் வழக்கறிஞர்கள் வாதம் முடிந்து கடந்த 12-ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது தேவயானி மீதான விசா மோசடி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அமெரிக்க மாவட்ட நீதிபதி ஷிரா செச்சின்ட்லின் தனது 14 பக்க தீர்ப்பில், அவர் கைது செய்யப்பட்ட போது முழு தூதர் தகுதியுடன்தான் இருந்தார் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தேவயானி மீது புதிய குற்றச்சாட்டுகள் மன்ஹட்டன் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் சார்பில் இந்திய வம்சாவழியை சேர்ந்த அரசு தரப்பு வக்கீல் ப்ரீத் பராரா இந்த குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்துள்ளார். அமெரிக்க அதிகாரிகளிடம் உண்மையை மறைத்து பொய்யான தகவல்களை அளித்து வேலைக்காரிக்கு விசா பெற்றது, அமெரிக்க சட்டங்களுக்கு உட்பட்டு அவருக்கு சம்பளம் வழங்காதது, போதுமான பாதுகாப்பு அளிக்காதது தொடர்பாக 21 பக்கங்கள் அடங்கிய குற்றச்சாட்டுகள் தேவயானி மீது சுமத்தப்பட்டுள்ளன.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media