தமிழக மீனவர்கள் 43 பேர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ்சந்திரன், ராஜ் ஆகியோரின் 2 படகுகளில், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ரவிச்சந்திரன், கணேசன், இளையராஜா, பூபாலன் உள்பட 18 பேர் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீன்பிடிக்கச் சென்றனர். மேலும், இதே மாவட்டத்தைச் சேர்ந்த கீழகாசாக்குடிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு படகில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்களோடு நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், செல்லியப்பன் என்ற சுப்ரமணி ஆகியோரது 2 படகுகளில் சென்ற மீனவர்களும் கோடியக்கரைக்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், மொத்தம் 5 படகுகளைச் சேர்ந்த 43 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து கைது செய்ததாக காரைக்கால் மாவட்ட மீனவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் அரசுத் துறையினருக்கு வராத நிலையில், சுபாஷ்சந்திரன், ராஜ் என்பவரது படகில் சென்ற மீனவர்கள், கோட்டுச்சேரிமேடு மீனவ பஞ்சாயத்தார்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, கைது செய்யப்பட்ட விவரத்தை தெரிவித்தனர். இதையடுத்து, இந்த கிராமப் பஞ்சாயத்தார்கள், காரைக்கால் மீன்வளத் துறைக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தெரிவித்த மீன்வளத் துறை துணை இயக்குநர் ந. இளையபெருமாள், இது கிராமப் பஞ்சாயத்தார்கள் தெரிவித்த தகவல், அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.