வீடுகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துவித நுகர்வோர்களுக்குமான மின் கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு வெள்ளிக்கிழமை (டிச.12) முதல் அமலுக்கு வரும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக உத்தேச மின் கட்டண உயர்வை செப்டம்பர் 23-ஆம் தேதி அறிவித்தது. இந்த கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகள், ஆலோசனைகள் கேட்கப்பட்டன. சென்னை, ஈரோடு, கோவையில் கருத்துக் கேட்புக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. அதன்பிறகு, மின் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, அனைத்து நுகர்வோருக்கும் 15 சதவீத மின் கட்டண உயர்வு இருக்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கு குறைப்பு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தன்னிச்சையாக அறிவித்த உத்தேசக் கட்டண உயர்விலிருந்து கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்குப் பிறகு தொழில் நிறுவனங்கள், உயர் மின் அழுத்தப் பிரிவினருக்கு அறிவித்த உத்தேச மின் கட்டண உயர்வு குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த மின் அழுத்தப் பிரிவில் தொழில் நிறுவனங்களுக்கு உத்தேசக் கட்டண உயர்வு யூனிட் ஒன்றுக்கு ரூ.5.50-லிருந்து ரூ.7.22-ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. இது யூனிட் ஒன்றுக்கு ரூ.6.35 என்ற விகிதத்தில் குறைக்கப்பட்டுள்ளது. உயர் மின் அழுத்தப் பிரிவிலும் இதே அளவில் உத்தேசக் கட்டண விகிதத்திலிருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. உயர் மின் அழுத்தப் பிரிவில் ரயில்வேக்கு அறிவிக்கப்பட்ட உத்தேச மின் கட்டண உயர்வு யூனிட் ரூ.7.22-லிருந்து ரூ.6.35-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. வர்த்தகப் பயன்பாடுக்கு யூனிட் ஒன்றுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.8.05-லிருந்து ரூ.8-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.