பயங்கரவாதத் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரிக்க அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பு சித்ரவதையைக் கையாண்டதாக நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை வெளியானதையடுத்து, உலக நாடுகள் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த அறிக்கையைத் தொடர்ந்து, மனித உரிமைக்கு அமெரிக்கா அளிக்கும் முக்கியத்துவம் குறித்து பல நாடுகள் கேள்வியெழுப்பியுள்ளன. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி இதுகுறித்து புதன்கிழமை கூறுகையில், ""பயங்கரவாதம் தொடர்பான கைதிகளிடம் சி.ஐ.ஏ. மேற்கொண்ட விசாரணை முறைகள் சர்வதேச சட்டத்துக்குப் புறம்பானவை'' என்று தெரிவித்தார். சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளும், அமெரிக்கா மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டின.
அமெரிக்கா விளக்கம்: இந்நிலையில், உலக நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியதாவது: நியாயத்தை நிலைநாட்டும் அமெரிக்காவின் உறுதிப்பாடு குலைந்திருந்தால், பயங்கரவாதத்துக்கு எதிராக 60 நாடுகளின் கூட்டணியை அமெரிக்கா அமைத்திருக்க முடியாது.
அந்தக் கூட்டணியில் ஏராளமான முஸ்லிம் நாடுகளும் உள்ளன: இராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில், மேற்காசிய நாடுகளைச் சேர்ந்த பல நாடுகள் எங்களுடன் கைகோத்துள்ளன. கைதிகளிடம் விசாரணை மேற்கொள்ளும் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர அதிபர் ஒபாமா 2009-ஆம் ஆண்டே உத்தரவிட்டார். அதே ஆண்டில், அந்த சீர்திருத்தங்களை அமல்படுத்தும் செயல்குழுவும் உருவாக்கப்பட்டது. சித்ரவதை விசாரணை முறைகளை சட்ட விரோதமாக்குவதில் அதிபர் ஒபாமா உறுதியுடன் இருந்தார். மனித உரிமைகளைக் காப்பதில் அமெரிக்கா காட்டி வரும் அக்கறைதான், உலகம் முழுவதும் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும் அரணாக அமைந்துள்ளது என்றார் ஜோஷ் எர்னஸ்ட்.
கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள இரட்டை கோபுரங்களில் அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தியதில் 2,990-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து, அமெரிக்கா மேற்கொண்ட பயங்கரவாதத்துக்கு எதிரான போரின்போது, சி.ஐ.ஏ. உளவு அமைப்பு கைதிகளிடம் விசாரணை மேற்கொள்வதற்காக கடைப்பிடித்த வழிமுறைகள் குறித்து, உளவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற மேலவைக் குழு விசாரித்து ஓர் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் ஒரு பகுதியை ஒபாமா அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், போலி மரண தண்டனை நிறைவேற்றம், நிர்வாணப்படுத்துதல், தூங்கவிடாமல் செய்தல் உள்ளிட்ட கடுமையான விசாரணை முறைகளை பயங்கரவாதம் தொடர்பான கைதிகளிடம் சி.ஐ.ஏ. பயன்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.