BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 28 March 2014

கருணாநிதி சுட்டிக்காட்டுபவரே பிரதமராக அமர வேண்டும்-ஸ்டாலின்


இன்று குன்னூர் பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் நின்ற படியே அத்தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து, தேர்தல் பிரச்சாரம் செய்தார் மு.க.ஸ்டாலின். அப்பொழுது அவர் பேசியதாவது:

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் குன்னூருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையைப்போக்க ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேட்டுப் பாளையம்–கக்கநல்லா சாலை ரூ.100 கோடியில் அமைக்கப்பட்டது.

இந்த தொகுதியின் எம்.பி.யாக உள்ள ஆ.ராசா மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று உதவினார். தி.மு.க. ஆட்சியின் போது நீலகிரியில் மின்வெட்டு இல்லை. ஆனால் தற்போது நீலகிரியிலும் மின்தடை உள்ளது. இங்கு உள்ளதை விட சமவெளி பகுதிகளில் மின்தடை அதிகம் உள்ளது.

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மத்தியில் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும். அதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சுட்டிக்காட்டுபவரே பிரதமராக அமர வேண்டும். அதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் இங்கு தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் ஆ.ராசா மற்றும் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media