BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 1 April 2014

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனை ரத்துக்கு எதிரான மத்திய அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி

முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்கு தண்டனை ரத்துக்கு எதிரான மத்திய அரசின் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மூவரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்களை, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்து நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது.  அந்த மனுவில், "கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் அதில் தலையிட அதிகாரம் இல்லாத போதும் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 72-வது பிரிவு கொடுத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் நிராகரித்து பிறப்பித்த உத்தரவில் உச்ச நீதி மன்றம் தலையிட்டது அதன் அதிகாரத் துக்கு அப்பாற்பட்டதாகும். " என்பது உட்பட பல வாதங்களை மத்திய அரசு முன் வைத்திருந்தது.

இதனை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசின் மறு ஆய்வு மனுவை மிகவும் கவனமாக பரிசீலித்ததாகவும், அந்த மனுவில் சரியான காரணங்கள் ஏதும் இல்லதால் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media