BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 9 April 2014

கருணாநிதியைப் பொருத்தவரை திமுக எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ அது, மதச்சார்பற்ற கூட்டணி.

பாஜக தேர்தல் அறிக்கையை பொருளாதார, அரசியல் நிபுணர்கள் பாராட்டியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய முயற்சியால் மாநில அரசுகளுக்கான முக்கியத்துவம், மரியாதை, உரிமைகள் கிடைக்கும்.

ராமர் சேது பாலம் நமது நாட்டின் கலாச்சார பாரம்பரிய சின்னமாகும். இப்பாலத்துக்கு குந்தகம் ஏற்படாமல் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த 4-வது பாதை வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே பரிந்துரைக்கப்பட்டது. ராமர் பாலத்துக்கு குந்தகம் ஏற்படாமல் சேது திட்டம் நிறைவேற்றுவதில் ஆட்சேபம் இல்லை.

பொது சிவில் சட்டம் பற்றி அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் அரசியலமைப்புச் சட்ட வரையறைக்கு உட்பட்டு ராமர் கோயில் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தீர்ப்பு வந்த பிறகு ராமர் கோயில் கட்ட சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். ராமர் கோயில் கட்டுவது எங்களது அடிப்படைக் கொள்கை.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்துள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்குவது குறித்து அனைத்து தரப்பினருடன் விவாதிக்கப்படும் என்றுதான் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவாதிப்பது எப்படி தவறாகும்?

அண்டை நாடுகள், அண்டை மாநிலம் குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழகத் தின் முக்கிய கோரிக்கைகளான இலங்கைத் தமிழர் நலன், தமிழக மீனவர்கள் நலன் குறித்த தகவல்கள் கொண்ட துணை தேர்தல் அறிக்கை வெளியாகும் என நினைக்கிறேன்.

நீலகிரி பாஜக வேட்பாளர் குருமூர்த்தி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. எங்கள் வேட்பாளர் விலைபோகவில்லை. அவர் தவறு செய்திருக்கலாம், துரோகம் செய்யமாட்டார். ஏ.பி. படிவத்தை எடுத்துச் செல்லும்போது விபத்து ஏற்பட்டதால் தாமதம் ஆகியிருக்கிறது. அதற்காக வேட்பு மனுவை நிராகரித்துள்ளனர். அதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

பாஜக 272 இடங்களில் வெற்றி பெறும். கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும் இடங்களையும் சேர்த்தால் 300-ஐ தாண்டும். தேர்தலுக்குப் பிறகு யாரிடமும் ஆதரவு கேட்கும் நிலை நரேந்திர மோடிக்கு ஏற்படாது. தேர்தலுக்கு பிறகு அதிமுக பாஜகவோடு போய்ச்சேரும் என்று கூறுவது திசை திருப்பும் முயற்சியாகும். கருணாநிதியைப் பொருத்தவரை திமுக எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ அது, மதச்சார்பற்ற கூட்டணி. அக்கட்சி இல்லாத கூட்டணி, மதவாத கூட்டணி. அவர்கள் எங்களோடும் கூட்டணி வைத்துள்ளார்கள். மதவாத கூட்டணி கோஷம் மக்களிடம் எடுபடாது. பாஜகவுக்கு கோகுலம் மக்கள் கட்சியும், தமிழக மருத்துவ நாவிதர் பேரவையும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இவ்வாறு இல.கணேசன் கூறியிருந்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media