பிரபல செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்திருந்தால் மீண்டும் காங்கிரஸ்தான் ஆட்சி அமைத்திருக்கும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு பல சேவைகள் செய்து வந்தது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமான நலத்திட்டங்களை செய்துள்ளது. அதை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது.
ஆட்சி, அதிகார போதையில் அவர்கள் இருந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. திட்டங்களை மக்களிடம் சொல்லத் தவறியது பெரிய தவறாகும்.
முக்கிய எதிர்க்கட்சியான பாஜக, பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்த நிலையில், காங்கிரஸில் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முயற்சி நடந்தது. ஆனால் சிலர் தாங்கள் பிரதமராகலாம் என்ற கனவில் அதைத் தடுத்துவிட்டனர். அவர்களின் பெயர்களைக் கூற முடியாது. ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருந்தால், வேறு விதமான கூட்டணி அமைந்து, மீண்டும் காங்கிரஸே ஆட்சிக்கு வந்திருக்கும். அதைச் செய்ய காங்கிரஸ் தவறி விட்டது.காங்கிரஸில் உள்கட்சி ஜன நாயகம் இல்லை. அதனால்தான் இந்த நிலை வந்துவிட்டது.
தமிழகத்தில் திமுக, தேமுதிக, காங்கிரஸ் கூட்டணி அமைந்திருந்தால், அகில இந்திய அளவிலும் கூட்டணிகளை மாற்றியிருக்கும். பாஜகவில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகளை இணைத்து நாடு முழுவதும் வலுவான கூட்டணி அமைத்து, கடுமையாக உழைத்தனர். ஆனால் பாஜகவுக்கு இணையாக காங்கிரஸ் கூட்டணியும் அமைக்கவில்லை, உழைக்கவுமில்லை.
இவ்வாறு தங்கபாலு கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.