BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 30 November 2014

உணவே மருந்து : ஆரோக்கியத்துக்கு அவகேடோ



ஆரோக்கியமான உணவு பட்டியலில் அவகேடோவும் ஒன்று. 25க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அவகேடோவில் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் நோயின் பிடியிலிருந்து நம்மைக் காக்கின்றன.

ஆரோக்கியமான இதயம் : வைட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் ஒலியிக் அமிலம் (oleic acid) ஆகியவை இதயத் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. மேலும், இந்தச் சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

குறையும் கொழுப்பின் அளவு : பீட்டா சிடோஸ்டெரால் (beta sitosterol) அதிகளவில் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இந்தப் பழம் வெகுவாகக் குறைக்கும். ஹைபர்கொலஸ்ட்ரொலெமியா (Hypercholesterolemia) என்ற நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஒருவர், 7 நாட்கள் தொடர்ந்து அவகேடோவை சாப்பிட்டு வந்தால், அந்த நோயின் தாக்கம் 17 சதவிகிதம் வரை குறையும். 22 சதவிகிதம் கெட்டக் கொழுப்பு குறைந்து, 11 சதவிகிதம் நல்ல கொழுப்பு உடலில் சேரும். நல்ல கொழுப்பு நிறைந்திருப்பதால் இன்சுலின் குறைப்பாடும் சரியாகும்.

ரத்தக் கொதிப்பை தடுக்கும் : வாழைப் பழத்தில் இருக்கும் பொட்டாஷியத்தை விட அவகேடோவில் 35 சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். மேலும், வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால் செரிமானத்துக்கு ஏற்றது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையைச் சமன் செய்கிறது.

அதிகரிக்கும் பார்வை திறன் : லுடீன் (lutein) என்ற ஆண்டி ஆக்சிடன்ட், வயதாகிய பிறகும், பார்வை திறன் குறையாமல் தடுக்கிறது. மேலும், கண்களில் ஏற்படும் புரையை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் அவகேடோவில் உள்ளது.

கர்ப்பிணிகளுக்கு அருமருந்து : ஃபோலேட், வைட்டமின் பி6 ஆகிய ஃபோலிக் அமிலங்கள் அவகேடோ பழத்தில் 23 சதவிகிதம் உள்ளது. கர்ப்பிணிகள் இதைச் சாப்பிட்டு வந்தால், பிறக்க போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். வயதானவர்களுக்குப் பக்கவாதம் வராமல் தடுக்கும்.

புற்றுநோயை தடுக்கும் : ஆன்டிஆக்சிடன்ட் இதில் நிறைந்திருப்பதால் ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயையும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயையும் தடுக்கிறது. மூப்படைதலை தடுத்து இளமையைத் தக்க வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கும்.

வாயை சுத்தம் செய்யும் : இயற்கையான முறையில் வாயை சுத்தம் செய்வதால் இதனை ‘நேசர் மவுத் வாஷ்’ எனச் சொல்லலாம். குடலை சுத்தம் செய்யும் அதோடு நாக்கின் மேல் உள்ள கிருமிகளை நீக்கி, வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

உடல் எடையைக் கூட்டும் : 100 கிராம் பழத்தில் 200 கலோரிகள் உள்ளன. இதனால், உடல் எடையைக் கூட்ட வேண்டும் என நினைப்போருக்கு அவகேடோ ஒரு சிறந்த உணவு. நல்ல கொழுப்பும், சர்க்கரையும் இதில் அதிக அளவில் உள்ளன.

அழகுக்கும் அவகேடோ : தொடர்ந்து அவகேடோ சாப்பிட்டு வர, சருமம் பளபளப்பாகும். கூந்தலின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும். முடி உதிர்தல் நிற்கும். கூந்தல் வறட்சி நீங்கும். எரிச்சல், சிவந்து போகுதல், சோரியாசிஸ் போன்ற சரும நோய்கள் குணமாகும்.

அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி


வெனிசூலா சிறைக் கலவர விவகாரம் : 35 கைதிகள் சாவு



வெனிசூலாவின் பார்க்கிஸிமிடோ நகரில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்ற கலவரத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. பார்க்கிஸிமிடோ நகரின் சிறையில் அளவுக்கு மீறி கைதிகளின் எண்ணிக்கை உள்ளதை எதிர்த்து, கைதிகள் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பின்னர் அங்கு திடீரென கலவரம் வெடித்தது. இதையடுத்து, சிறை மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்த ஏராளமான கைதிகள், அங்கிருந்த மருந்துகளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இருபது பேர் நிலை கவலைக்கிடமளிப்பதாக உள்ளது. அவர்கள் எந்த விதமான மருந்துகளை உட்கொண்டனர் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக, சிறை வார்டன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறை விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுத் தலைவர் கூறினார். "டேவிட் விலோரியா' எனும் பெயர் கொண்ட சிறைச்சாலையில் 850 கைதிகளை சிறைவைக்கலாம். ஆனால் தற்போது சுமார் 3,700 பேர் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே சிறையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் 58 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஆளில்லா விண்கலத்தை செலுத்துகிறது இஸ்ரோ



மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் முதல் படியாக, ஆளில்லா விண்கலத்தைச் செலுத்தவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் எம்.வி.எஸ்.பிரசாத் தெரிவித்தார். ஆந்திரம் மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் பேசியது: இந்த ஆளில்லா விண்கலத்தை ஜிஎஸ்எல்வி எம்.கே.3 ராக்கெட் தாங்கி செல்கிறது. இதுவரை விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டுகளில் இது அதிக எடைகொண்டதாகும். இதன் எடை 613 டன். மேலும் ராக்கெட் தாங்கிச் செல்லும் ஆளில்லா விண்கலம் 3735 கிலோ எடை கொண்டதாகும். இதன் உயரம் 2.7 மீட்டர், வட்டம் 3.1 மீட்டர் சுற்றளவில் தயாரிக்கப்பட்டது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முதல்படி இதுவாகும். இந்த ஆளில்லா விண்கலம் டிசம்பர் மாதம் 15 தேதியில் இருந்து 20 ஆம் தேதிக்குள் விண்வெளிக்கு அனுப்பி சோதிக்கப்படும்.

இந்தச் சோதனையின் வெற்றியைப் பொருத்தே விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும். எனினும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை இந்தியா நிறைவேற்றும் எப்படி செல்லும்?: ஆளில்லா விண்கலத்தை ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏந்திக்கொண்டு விண்வெளிக்குச் செல்லும். தரையிலிருந்து 126 கிலோ மீட்டர் சென்ற பிறகு, விண்வெளியில் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரியும். பின்பு அங்கிருந்து 3 ஆயிரம் திசை வேகத்தில் (ஸ்ங்ப்ர்ஸ்ரீண்ற்ஹ்) பூமிக்குத் திரும்பும். பூமியை நெருங்க நெருங்க திசையின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு 15 வது கிலோ மீட்டரில் பாரசூட் திறக்க ஆரம்பிக்கும். பின்பு 8 ஆவது கிலோ மீட்டரில் பாரசூட் 2-ஆவது கட்டமாக திறக்கும். கடைசியில் பூமியின் அருகே 4 கிலோ மீட்டர் நெருங்கும்போது பாரசூட் 3 ஆவது கட்டமாக திறக்கும். இறுதியாக ஆளில்லா விண்கலம் கடலில் விழும். பின்பு, கடலோரக் காவல் படையினரின் உதவியோடு விண்கலம் மீட்கப்படும் என்றார் எம்.எஸ்.வி.பிரசாத்.

வெப்பம் தாங்கும் சக்தி: ஆளில்லா விண்கலம் விண்வெளியின் வெப்பத்தை தாங்கும் சக்தி கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இத்திட்டத்தின் இயக்குநர் சோம்நாத் கூறினார். அவர் மேலும் கூறியது. பூமியில் இருந்து 80 கிலோ மீட்டர் மேலே சென்றுவிட்டாலே அவை விண்வெளி என அழைக்கப்படும். நாம் கிரயோஜினிக் எஞ்ஜின் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் ஆளில்லா விண்கலத்தை பூமியில் இருந்து 126 கிலோ மீட்டருக்கு கொண்டு செல்ல முடியும். அங்கு கிட்டத்தட்ட ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். மேலும் அந்த இடத்தில் காற்றோட்டமும் இருக்காது. எனவே இந்த ஆளில்லா விண்கலத்தின் மேல்பாகம் சிலிகான் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மனிதனை வைத்து விண்கலத்தைச் செலுத்தும்போது, விண்வெளியின் வெப்பம் பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, மனிதனை விண்வெளிக்கு அனுப்பவுதற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஒத்திகை என்று கூட கூறலாம். இந்த ஆளில்லா விண்கலம் மூன்று பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைக்கு ரூ.40 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார் சோம்நாத்.

சில முக்கிய அம்சங்கள் :
  • ஆளில்லா விண்கலத்தின் செயல்பாடு சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இயக்கப்படும்.
  • 1,10,000 கிலோ திரவ எரிபொருள் மூலம் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும்.
  • சி25 கிரயோஜனிக் எஞ்ஜின் பயன்படுத்தப்படுகிறது.
  • மிகப்பெரிய பாரசூட் முதல் முறையாக ஆளில்லா விண்கலத்தைத் தரையிறக்கப் பயன்படுத்தப்படுகிறது.

அபாயம் : 126 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து, அதாவது விண்வெளியில் ஆளில்லா விண்கலம் அதன் ஈர்ப்பு விசை மாறாமல் இருப்பதற்காகவே அதன் செயல்பாடுகள் சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. அப்போதுதான் ஆளில்லா விண்கலத்தின் கோணம் மாறாமல் இருக்கும். அப்படி அந்தக் கோணம் மாறினால், விண்வெளியின் வெப்பம் விண்கலத்தைப் பொசுக்கிவிடும். ஆனால், அது போன்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தச் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால்தான், மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் அடுத்தக் கட்டத்துக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடன்குடி அனல் மின் நிலையம் : கட்டுமானப் பணி விரைவில் தொடக்கம்

உடன்குடி அனல் மின் திட்டத்தின் ஒன்றாம் நிலைக்கான பணிகளுக்கு டிசம்பர் இறுதியில் உத்தரவு வழங்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார். மின்சாரத் துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக, துறையின் அதிகாரிகளுடன் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: எண்ணூர் அனல் மின் திட்ட விரிவாக்கம் ரூ.4,956 கோடியிலும், எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் திட்டம் ரூ.7,920 கோடியிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உடன்குடி அனல் மின் திட்டத்தின் ஒன்றாம் நிலைக்கான பணிகள் ரூ.10,121 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் கட்டுமானப் பணிக்கான உத்தரவு வரும் டிசம்பர் இறுதிக்குள் வழங்கப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படும். அனுமதி பெற வேண்டிய பணிகள்: ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் 1,600 மெகாவாட் திறனும், வடசென்னை மூன்றாம் நிலை மின் திட்டம், எண்ணூர் மாற்று அனல் மின் திட்டம், உடன்குடி இரண்டாம், மூன்றாம் நிலை அனல் மின் திட்டம் ஆகியவற்றுக்கான அனுமதிகளைப் பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகழ் நிதியாண்டில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மூலம் 230 மெகாவாட் மின்சாரமும், தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் மூலம் 387 மெகாவாட்டும், வல்லூரில் அனல் மின் நிலையத் திட்டத்தின் மூன்றாவது அலகின் மூலம் 500 மெகாவாட் மின்சாரமும் விரைவில் கிடைக்கும்.

கூடங்குளம் திட்டம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அலகு ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனை கடந்த ஜூலை மாதம் எட்டியுள்ளது. இதில், தமிழகத்தின் பங்கு 562 மெகாவாட்டாகும். எனவே, இந்த நிதியாண்டிலேயே ஆயிரத்து 529 மெகாவாட் கூடுதல் மின் நிறுவு திறன் உருவாக்கப்படும் என அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரிய ஆய்வுக் கூட்டத்தில் அதன் தலைவர்-மேலாண் இயக்குநர் ஞானதேசிகன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேகாலயத்துக்கு முதல்முறையாக ரயில் சேவை : மோடி தொடக்கி வைத்தார்



நாடு சுதந்திரம் பெற்றதற்கு பிறகு, வடகிழக்கு மாநிலமான மேகாலயத்துக்கு முதல்முறையாக விடப்பட்டுள்ள ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டி அருகே உள்ள மாலிகாவ்னில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மேகாலய மாநிலம் மெண்டிபதார் -குவாஹாட்டி இடையேயான ரயில் சேவையை கொடி அசைத்து பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். மேலும், மேகாலய மாநிலம் பைரபி-சாய்ராங் இடையே அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு அமைப்புகள் சதி : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு



பாகிஸ்தான் அரசு சார்ந்த அமைப்புகளே இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார். அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறைத் தலைவர்களின் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது. உளவுத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்துப் பேசியதாவது: பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பில்லாத சில இயக்கங்களே இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தானின் அங்கீகரிக்கப்பட்ட உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மூலமாகவே இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்கள் அரங்கேறி வருகின்றன. அப்படியானால், "ஐ.எஸ்.ஐ. அமைப்பு' பாகிஸ்தானின் அரசு சாராத இயக்கமா? ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் தாராளமாக உதவிகளைச் செய்து வருகிறது.

அல்-காய்தா அமைப்பு ஒரு சவால்தான்: இந்திய துணைக் கண்டத்தில் தனது கிளையைத் தொடங்கவுள்ளதாக அல்காய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் அஸ்ஸாம், குஜராத், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளையும், வங்கதேசத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு நடக்க அனுமதிக்க மாட்டோம். சிரியா, இராக் நாடுகளில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு தோன்றியிருந்தாலும் கூட, இந்திய துணைக் கண்டத்தில் அதன் தாக்கம் இருக்காது என்று நாம் உறுதியாகக் கூற முடியாது. எனவே, அல்-காய்தா அமைப்பை ஓர் சவாலாகவே ஏற்று அதனை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய முஸ்லிம்கள் தேசபக்தர்கள்: இந்தியாவில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் உள்ளதால் அவர்களை தங்கள் ஆதரவாளர்களாக மாற்றி, இஸ்லாமிய தேசத்தை உருவாக்க பயங்கரவாதிகள் திட்டமிடுகின்றனர். எனவே, இந்தியாதான் அவர்களின் முதல் குறியாக உள்ளது. ஆனால், இந்திய முஸ்லிம்கள் தேசபக்தி நிறைந்தவர்கள். நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் எழுந்தால் அதனை எதிர்த்துப் போராட அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். இதனால் பயங்கரவாதிகளின் எண்ணம் இந்தியாவில் என்றுமே ஈடேறாது. பாடம் புகட்டிய ஜம்மு-காஷ்மீர் மக்கள்: ஜம்மு-காஷ்மீரில் முன்பைவிட தற்போது வன்முறைச் செயல்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. அங்குள்ள பயங்கரவாத அமைப்புகளால் உள்ளூர் இளைஞர்களைத் தங்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்க அவர்களால் முடியவில்லை. பயங்கரவாதிகளின் எதிர்ப்பையும் மீறி ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற முதல்கட்ட பேரவைத் தேர்தலில் ஏராளமானோர் வாக்களித்ததன் மூலம் மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டிவிட்டனர். பயங்கரவாத அமைப்புகள் மீதான அச்சம் குறைந்துள்ளதையே இது உணர்த்துகிறது. பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: நாட்டில் தற்போது 10 மாநிலங்களில் மட்டுமே மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் காணப்படுகிறது. மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. அதற்கு முதலில் அவர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் திறமையான அதிகாரிகளை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும்.

வடகிழக்குப் பிராந்திய பிரச்னைகள்: போதிய வளர்ச்சி, உள்கட்டமைப்பு, பொருளாதார வசதிகள் ஆகியவை இல்லாததால் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. அங்கு வாழும் மக்களின் நலனுக்காக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளிக்கிறேன். காவல்துறை இன்றியமையாதது: நாட்டின் பாதுகாப்பில் காவல்துறையும், உளவுத்துறையுமே முக்கியப் பங்கு வகிக்கின்றன. மக்கள் அச்சமின்றி இருப்பதற்கு காவல்துறையின் பங்கு இன்றியமையதாதது ஆகும். எதிர்காலத்தில் காவல்துறையை நவீனமயமாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார் ராஜ்நாத் சிங். இந்த மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமையன்று, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.



"ஐ.எஸ். அமைப்பால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவது கவலையளிக்கிறது'
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வருவது கவலையளிப்பதாக உள்ளது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது: மேற்குவங்கத்தில் பர்த்வான் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஜமாத்-அல்-முஜாகிதீன் அமைப்பே காரணம் எனக் கூறப்படுகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த பயங்கரவாத சக்திகள், தங்களின் செயல்களை அரங்கேற்ற இந்திய மண்ணைப் பயன்படுத்த முனைகின்றன. இது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பால் இந்திய இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வருவது மிகுந்த கவலை தரும் விஷயமாக உள்ளது. இந்த விவகாரத்தை சவாலாகக் கருதி மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக போரிட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட மும்பையைச் சேர்ந்த ஆரிஃப் மஜீத் என்ற இளைஞரை தேசியப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே தவிர, அந்த இளைஞரை துன்புறுத்துவதற்காக அல்ல என்றார் அவர்.

Saturday, 29 November 2014

உணவே மருந்து : சக்கரைவள்ளி கிழங்கால் கிடைக்கும் நன்மைகள்


சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகஅளவில் இருப்பது அனைவரும் அறிந்தது. ஆனால் வேறு சில முக்கிய சத்துக்களும் உள்ளன. 

வெப்ப மண்டலப் பகுதிகளில் விளையும் கிழங்கு வகையை சேர்ந்தது சக்கரை வள்ளி. சிவப்பு, சாம்பல், கருஞ்சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் சக்கரை வள்ளி கிழங்கு காணப்படுகின்றன. சக்கரைவள்ளி கிழங்கில் அதிகளவில் மாவுச்சத்து மற்றும் நார்ச்சத்து இருப்பதால் உடலுக்கு உடனடியாக ஆற்றல் தரும். சக்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு சத்து குறைந்த அளவில் இருக்கிறது. மேலும், இதில் உள்ள பீட்டா கரோடின் என்ற இயற்கையான அமிலச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சர்க்கரை சத்து கொண்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கில், வைட்டமின் ஏ சத்து அதிகளவில் இருப்பதால் தோல் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு நன்மை தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆண்டுக்கு ஆண்டு சுருங்கும் வைகை அணை : தூர்வாரப்படாததால் வீணாகும் தண்ணீர்

வைகை அணையை தூர்வாரி முழுக் கொள்ளளவில் தண்ணீரைத் தேக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பாசன நிலங்கள் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது வைகை அணை. அணை கட்டப்பட்டு 56 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆதலால், அணைக்கு வரும் தண்ணீரால் அடித்து வரப்பட்ட மண்ணால் அணையின் நீர் கொள்ளளவு குறைந்து கொண்டே வருகிறது. அணையில் சுமார் 20 அடி வரை சேறும், சகதியுமாக உள்ளன. கடந்த 2000ஆம் ஆண்டில், பூண்டி நீரியல் ஆராய்ச்சி நிலையம், அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியை ஆய்வு செய்தது. அப்போது, அணையில் வண்டல் மண், மணல் மற்றும் சவுடு மண் அதிக அளவில் படிந்திருந்ததை கண்டறிந்தது. இதனால், அணையின் முழுக் கொள்ளளவான 6,879 மில்லியன் கன அடியில், 974 மில்லியன் கன அடி (14.16 சதவீத பரப்பளவு) தண்ணீர் தேக்கும் அளவு குறைந்துள்ளது தெரிய வந்தது.

அணை கட்டப்பட்ட 1958ஆம் ஆண்டுக்குப் பிறகு, 1960-இல் முதன்முறையாக அணை முழுக் கொள்ளளவை எட்டியது. அதன் பின்னர், 28 ஆவது முறையாக கடந்த 2011-ஆம் ஆண்டு முழுக் கொள்ளளவை அடைந்தது. இந்த காலக் கட்டங்களில் சுமார் 1.38 மில்லியன் கன அடி தண்ணீர் அணையில் இருந்து வீணாக வெளியேறியுள்ளது. ஒவ்வொரு முறையும் அணை முழுக் கொள்ளளவை எட்டும் போதும், 974 மில்லியன் கன அடி தண்ணீர் வீணாக வெளியேறியுள்ளது. அணையில் ஆய்வு செய்து 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்போது அணையில் அதிக அளவு வண்டல் மண் படிந்துள்ளது. எனவே, அணையை தூர்வாரி முழுக் கொள்ளளவான 6,879 மில்லியன் கன அடி நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீருக்காக கேரளத்துடனும், கர்நாடகத்துடனும் போராடும் தமிழக அரசு, வைகை அணையிலிருந்து வீணாகும் தண்ணீரை சேமித்து பயன்படுத்த, தூர்வாரும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

இது குறித்து, தேனி, மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் எம். பாண்டியன் கூறியது: கடந்த 15 ஆண்டுகளாக அணையைத் தூர்வாருவோம் என அரசு சார்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் தூர்வாரப்படவில்லை. இதனால், விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர் என்றார்.

அரசுக்கு பல கோடி ரூபாய் கிடைக்கும் :
அணை முழு கொள்ளளவை அடைய அதில் படிந்துள்ள 27.579 மில்லியன் கன மீட்டர் அளவுக்கு மண்ணை தூர்வார வேண்டும். இதில் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கலாம். மணலை கட்டடப் பணிக்கு விற்பனை செய்யலாம். சவுடு மண்ணை செங்கல் காளவாசல்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யலாம். இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். புதிய அணை கட்ட வேண்டுமானால், ரூ. 1500 கோடி வரை செலவாகும். வைகை அணையை தூர் வார ரூ. 250 கோடி மட்டுமே செலவாகும் என பொறியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வீணாகியுள்ள தண்ணீர் (மில்லியன் கன அடி)
2007 9 நாள்கள் 1,741.13

2008 26 நாள்கள் 1,776.56

2009 3 நாள்கள் 405.48

2010 20 நாள்கள் 4,048.19

2011 17 நாள்கள் 3,035.75

மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் : ஜி.கே. வாசன் அறிவிப்பு


தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என தனது கட்சியின் பெயரை அறிவித்தார் ஜி.கே. வாசன். இதன் மூலம், தமிழகத்தில் மீண்டும் த.மா.கா. உதயமாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக இம்மாத தொடக்கத்தில், காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஜி.கே. வாசன், புதிய இயக்கம் தொடங்கவுள்ளதாக அறிவித்தார். ஜி.கே. வாசன் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்ததிலிருந்து, அவரது கட்சியின் பெயர் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நீடித்து வந்தது. ஏற்கெனவே, ஜி.கே. மூப்பனாரால் தொடங்கப்பட்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குக் காரணமாக இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்), காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டதால், மீண்டும் அதே பெயரை ஜி.கே. வாசன் தனது கட்சிக்குப் பயன்படுத்த முடியுமா அல்லது புதிய பெயரை அவர் தனது கட்சிக்கு சூட்டுவாரா என பல்வேறு யூகங்கள் வெளியாகி வந்தன. இதனிடையே, நவம்பர் 26-ஆம் தேதி சென்னையில், தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் பெயர் நவம்பர் 28-ஆம் தேதி திருச்சி பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் எனக் கூறி, எதிர்பார்ப்பை நீட்டிப்புச் செய்தார்.

இந்த நிலையில், திருச்சியில் வெள்ளிக்கிழமை மாலை ஜி.கே.வாசனின் புதிய இயக்கத்தின் பொதுக் கூட்டம் தொடங்கிய சில நிமிஷங்களில், ஜி.கே. வாசன் தனது கட்சியின் பெயர், தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என அறிவித்தார். இதன் மூலம், தமிழகத்தில் தமாகா மீண்டும் உதயமாகியுள்ளது. கலைக்கப்படாததால் கிடைத்த அதே பெயர்: காங்கிரஸில் இணைந்தபோது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை முறைப்படி கலைக்காததால் மீண்டும் அதே பெயர் ஜி.கே. வாசனுக்கு கிடைத்துள்ளது. ஜி.கே. மூப்பனாரின் மறைவுக்குப் பிறகு த.மா.கா. தலைவரான வாசன், 2002-இல் காங்கிரஸூடன் கட்சியை இணைத்தார். த.மா.கா.வில் இருந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துடன் கட்சியைக் கலைப்பதற்கான விண்ணப்பத்தை தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்தார்.

கட்சியைக் கலைக்க வேண்டுமானால் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்துடன் விண்ணப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. ஆனால், காங்கிரஸில் இணைந்து விட்டதால் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்துகளைப் பெற்று புதிய விண்ணப்பத்தை வாசன் அளிக்கவில்லை. புதுச்சேரியைச் சேர்ந்த குப்புசாமி என்பவர், தமாகா-வின் பதிவை தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளார். தற்போது, ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டதன் பேரில், கட்சிப் பதிவு உரிமையை முழுமையாக அவர், ஜி.கே. வாசனுக்கு அளிப்பதாகக் கடிதம் அளித்துள்ளார்.

கட்சி முறைப்படி கலைக்கப்படாததால் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்ற பெயரில் 2002-இல் அக்கட்சியின் தலைவராக இருந்த வாசனுக்கு தேர்தல் ஆணையம் இப்போது மீண்டும் அதே பெயரை வழங்கியுள்ளது. திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் இதை அறிவித்த வாசன், மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

ராஜபட்ச மீது போர்க் குற்ற விசாரணை நடைபெறாது


இலங்கை அதிபர் ராஜபட்ச மீது போர்க் குற்ற விசாரணை நடைபெறாது என்று எதிர்க்கட்சிகள் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் மைத்ரிபாலா ஸ்ரீசேனா கூறினார். இலங்கையில் அதிபர் தேர்தல் ஜனவரி மாதம் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், ராஜபட்சவின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மைத்ரிபாலா ஸ்ரீசேனா திடீரென ராஜிநாமா செய்தார். அதிபர் தேர்தலில், ராஜபட்சவுக்கு எதிராகப் போட்டியிட் போவதாக அறிவித்த அவர், எதிர்க்கட்சிகள் சார்பிலான பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தலைநகர் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள போர்ப் படிப்பினை - நல்லிணக்க ஆணையத்தின் முடிவுகள் ஏற்கப்படும். நான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், நாட்டின் அதிபராக இருந்த ராஜபட்சவை எந்த விதமான போர்க்குற்ற விசாரணைக்கும் உள்படுத்த மாட்டேன். அவரையோ, அவரது குடும்பத்தினரையோ, இலங்கையின் பாதுகாப்புத் துறை அதிகாரியையோ, சர்வதேச போர்க் குற்ற விசாரணைக் குழுவின் விசாரணைக்கு உள்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன் என்றார். போர்க் குற்ற புகார்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக்கு ராஜபட்ச எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

மக்களவையில் 20 தனிநபர் மசோதாக்கள்



வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவது உள்ளிட்ட 20 தனிநபர் மசோதாக்கள், மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன. வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவதை வலியுறுத்தும் இரு வேறு மசோதாக்களை பாஜக உறுப்பினர்கள் வருண் காந்தி, ஜனார்த்தன் சிங் ஆகியோர் அறிமுகம் செய்தனர். பசுக்களைப் பாதுகாப்பது தொடர்பான மசோதாவை, சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த சந்திரகாந்த் காய்ரே அறிமுகம் செய்தார். அமில விற்பனையை ஒழுங்குப்படுத்துதல், அமில வீச்சைத் தடுத்தல், பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வளித்தல் ஆகிய ஷரத்துகளை உள்ளடக்கிய மசோதாவை பிஜு தனதா தள உறுப்பினர் மஹதாப் அறிமுகம் செய்து வைத்தார். வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக மற்றொரு மசோதாவையும் அவர் அறிமுகம் செய்தார்.

உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கு வெற்றி : நிர்மலா சீதாராமன்

"ஜெனீவாவில், உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில், உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் எவ்வித சமரசத்துக்கோ, நிபந்தனைகளுக்கோ இடம் கொடுக்காமல் இந்தியா இதனைச் சாதித்துள்ளது' என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஜெனீவாவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) பொதுக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வர்த்தக இணக்க ஒப்பந்தத்தில் (டிஎஃப்ஏ), இந்தியாவின் வலியுறுத்தலை ஏற்று, வளரும் நாடுகளின் உணவுப் பாதுகாப்புக்குத் திட்டத்துக்கு நிரந்தர உத்தரவாதம் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மக்களவையில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ளிக்கிழமை தானே முன்வந்து அறிவித்ததாவது: ஜெனீவா கூட்டத்தில் இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்று, வளரும் நாடுகளில் உணவுப் பாதுகாப்புப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்வரை, அந்நாடுகள் பொது விநியோகத்துக்காக எவ்வித வரம்புமின்றி தேவையான உணவு தானியங்களைத் தொடர்ந்து சேமித்துவைக்கவும், மானியம் வழங்கவும் ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியா போன்ற வளரும் நாடுகள் பொது விநியோகத்துக்காக தாராளமாக உணவு தானியங்களைச் சேமித்து வைப்பதோடு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையையும் தங்குதடையின்றி வழங்க முடியும். இதற்காக, வளரும் நாடுகள் மீது பிற நாடுகள் அபராதம் விதிக்க முடியாது. இந்த வெற்றியை, இந்தியா எதனையும் விட்டுக்கொடுக்காமல், வேறு நிபந்தனைகள் எதற்கும் உட்படாமல் சாதித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்பது உயிர்நாடி போன்றது. ஆகையால்தான், இந்தப் பிரச்னையில் முரண்பட்ட அமெரிக்காவிடம், கடந்த மாதம் இந்தியா சரியாக எடுத்துக்கூறி தனது நிலைப்பாட்டுக்கு இசைய வைத்தது. இதன்மூலம் உலக வர்த்தக அமைப்பில் 20 ஆண்டு காலமாக நீடித்துவந்த பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. தன்னை பாதிக்கக்கூடிய பிரச்னையில் இந்தியா உறுதியாக நின்று இந்த வெற்றியைப் பெற்றுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்த ஒப்பந்தத்தை, உலக வர்த்தக அமைப்பில் இடம் பெற்றுள்ள 160 நாடுகளில் மூன்றில் இரு பங்கு நாடுகள் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிக்கும்போது, இந்த ஒப்பந்தம் தானாகவே உலக அளவில் அமலுக்கு வரும் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஒப்பந்த விவரம்: உலக வர்த்தக அமைப்பின் பொதுக் குழுக் கூட்டத்தில் இசைவு தெரிவிக்கப்பட்ட வர்த்தக இணக்க ஒப்பந்தத்தில் (டிஎஃப்ஏ) உள்ள சமாதான ஷரத்து மிக முக்கியமானதாகும். வளரும் நாடுகளின் உணவுப் பாதுகாப்புப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்வரை, இந்த சமாதான ஷரத்து நீடிப்பதற்கு டபிள்யூடிஓ ஒப்புக்கொண்டுள்ளது. பொதுவாக, டபிள்யூடிஓ வர்த்தக நெறிமுறைப்படி எந்த ஒரு நாடும், அதன் உணவு தானிய உற்பத்தியில் 10 சதவீத அளவுக்கு மட்டுமே மானியம் வழங்க முடியும், பொது விநியோகத்துக்காகச் சேமித்து வைக்க முடியும். அதற்கு மேல் மானியம் வழங்கினாலோ, சேமித்து வைத்தாலோ, வர்த்தக உடன்பாட்டில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகள் அதன் மீது அபராதம் விதிக்க முடியும். இவ்வாறு அபராதம் விதிக்கப்படாமல் இருக்க, சமாதான ஷரத்து வகை செய்கிறது. இதனைத்தான் காலக்கெடு இன்றி நீட்டிப்பதற்கு இந்தியா வலியுறுத்தி, அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி மதிப்புள்ள 6.20 கோடி டன் உணவுதானியங்களை பொது விநியோகத்துக்காகச் சேமித்து வைக்கும் இந்தியாவுக்கு, டபிள்யூடிஓ ஒப்பந்த விவகாரத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றி மிக முக்கியமானதாகும்.

Friday, 28 November 2014

உணவே மருந்து : நோய்களை குணப்படுத்தும் வெங்காயம்


  • நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.
  • வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
  •  வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.
  • வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும்.
  • வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
  • படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.
  • வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும்.
  • வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.
  • மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
  • வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் டி.பி நோய் குணமாகும்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம்


மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 103.86 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நொடிக்கு .4,923 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனம், கிழக்கு, மேற்குக் கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 2,700 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 69.93 டி.எம்.சி.யாக இருந்தது.

இலங்கையில் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாட முயன்றவர் கைது



இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாட முயன்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். இதுகுறித்து இலங்கை காவல் துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹானா கூறியதாவது:

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, பிரபாகரனின் பிறந்தநாள் வாழ்த்துகள் அடங்கிய சுவரொட்டிகள், மடிக்கணினி, தகவல் சேகரிப்பு கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன. தீவிரவாதத் தலைவரின் பிறந்த நாளை பொது இடங்களில் கொண்டாட அனுமதிக்கமாட்டோம் என்று அவர் கூறினார். உலகின் பல்வேறு பகுதிகளில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 60-வது பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் புதன்கிழமை கொண்டாடினர்.

மின் துறையில் ஒத்துழைப்பு : சார்க் நாடுகள் ஒப்பந்தம்

மின் துறையில் ஒத்துழைப்பது தொடர்பாக "சார்க்' அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. நேபாளத் தலைநகர் காத்மாண்டில் புதன்கிழமை தொடங்கிய தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ("சார்க்') 18-ஆவது உச்சி மாநாடு வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளன்று, சார்க் நாடுகளுக்கு இடையே மின் துறையில் ஒத்துழைப்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதேசமயம், சார்க் நாடுகளின் மக்களிடையே தொடர்புகளை அதிகரிப்பதற்காக மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து தொடர்பாக கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை.

இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவதன் மூலம், மாநாட்டை வெற்றியடையச் செய்வதற்கு நேபாளத் தலைவர்கள் பெரும் முயற்சி எடுத்து வந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல ஒப்பந்தம் கையெழுத்திடப்படாதது, நேபாளத் தலைவர்களிடையே சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து நேபாளப் பிரதமர் சுஷில் கொய்ராலா பேசுகையில், "மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தங்களுக்கு அனுமதி பெறுவதற்கு 3 மாத கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றார். மோட்டார் வாகனங்கள், ரயில் போக்குவரத்து தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படாததற்கு பாகிஸ்தானின் எதிர்ப்பே காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சம் மறுத்துள்ளது. இஸ்லாமாபாதில் அடுத்த சார்க் மாநாடு: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் அடுத்த சார்க் மாநாடு அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை நேபாளப் பிரதமர் சுஷில் கொய்ராலா வெளியிட்டார்.

மோடி, ஷெரீஃப் நலம் விசாரித்தனர்
சார்க் மாநாட்டின் நிறைவு நாளன்று, பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பும் இரு முறை சிரித்துப் பேசி நலம் விசாரித்துக் கொண்டனர். மாநாட்டின் நிறைவு நாளான வியாழக்கிழமை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, மோடியும் நவாஸýம் பரஸ்பரம் கைகுலுக்கியபடி பேசினர். அதேபோன்று, மாநாடு முடிவடைந்த பிறகு, நவாஸ் ஷெரீஃப்பின் தோளில் தனது கைகளை வைத்து மோடி பேசினார். அதைத் தொடர்ந்து, கைகளை குலுக்கிக் கொண்டு சிறிது நேரம் சிரித்துப் பேசியபடி, செய்தியாளர்களிடம் கலந்துரையாடினர். சார்க் மாநாட்டின் தொடக்க நாளான புதன்கிழமை நிகழ்ச்சியின்போது, மோடியும், ஷெரீஃபும் அருகருகே இருந்தும் முகம் கொடுத்துப் பார்த்துக் கொள்ளவில்லை. இதனால், தலைவர்கள் இடையே இறுக்கமான நிலை காணப்பட்டது. இந்நிலையானது, சார்க் மாநாட்டின் நிறைவு நாளன்று, பரஸ்பரம் இருவரும் சிரித்து பேசிக் கொண்டதால், முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைப்பக்கத்தில், வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் வெளியிட்ட பதிவில், "இந்தப் புகைப்படத்துக்காகத்தான் அனைவரும் காத்திருந்தனர்' எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அடுத்த சார்க் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோது, பிரதமர் மோடி கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆல மரம் நட்ட மோடி: இதனிடையே, விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற துலிகலில் உள்ள விடுதியில், ஆல மரக் கன்றை பிரதமர் நரேந்திர மோடி நட்டார். அதைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்த மரக் கன்றுக்கு தண்ணீர் ஊற்றினார்.

15 ஆண்டுகள் பழைமையான வாகனங்களுக்கு தில்லியில் தடை


பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை தலைநகரின் சாலைகளில் இயக்க அனுமதி அளிக்கப்படாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தீர்ப்பாயத்தின் தலைவர், நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு கூறியதாவது: தலைநகரில் காற்று மாசுபாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை. இது, காற்று மாசுபாட்டுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெளிவாகக் காண்பிக்கிறது.

எனவே, 15 ஆண்டுகளாகவோ அல்லது அதற்கும் மேற்பட்டோ இயங்கி வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் சட்டத்துக்கு உள்பட்டு, நோட்டீஸ் அனுப்புதல், வாகனங்களை பறிமுதல் செய்தல் போன்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரில் ராணுவம் - பயங்கரவாதிகள் மோதல் : 10 பேர் பலி


ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 3 வீரர்கள், 4 பயங்கரவாதிகள், 3 அப்பாவிகள் என மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானில் இருந்து ராணுவச் சீருடை அணிந்த பயங்கரவாதிகள், ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள ஆர்னியா பகுதிக்குள் வியாழக்கிழமை காலை ஊடுருவினர். அவர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 வீரர்களும், அப்பாவி ஒருவரும் உயிரிழந்தனர். பதில் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, மாநில போலீஸார் ஆகியோர் இணைந்து பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் கூட்டாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: ஆர்னியா பகுதியின் பிண்டி கட்டார் பகுதியில் உள்ள ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை பயங்கரவாதிகள் ஆக்கிரமத்துக் கொண்டனர். இவை ராணுவத்தின் 92ஆவது காலாட்படைக்குச் சொந்தமானவையாகும். அங்கிருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

அப்போது அவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் 3 வீரர்கள், 4 பயங்கரவாதிகள், அப்பாவி ஒருவர் என மொத்தம் 10 பேர் இறந்தனர். 2 வீரர்கள் காயமடைந்தனர். அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர். அது பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: இதனிடையே, ரஜௌரி மாவட்டத்தின் லாம் படைப்பிரிவுப் பகுதியில் வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலர் சுற்றித் திரிவதை ராணுவ வீரர்கள் கண்டனர். அங்கு விரைந்து சென்ற வீரர்கள், பாகிஸ்தானில் இருந்து இந்தியப் பகுதிக்குள் சில பயங்கரவாதிகள் நுழைய முயன்றதை முறியடித்தனர். ராணுவத்தைக் கண்டதும் அந்த பயங்கரவாதிகள் தப்பியோடினர். அவர்களில் ஒருவரை ராணுவத்தினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கி, 30 தோட்டாக்கள், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, ரூ.8,100 மதிப்பிலான பாகிஸ்தான் ரூபாய் நோட்டு ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட அந்த பயங்கரவாதியின் பெயர் அதுல் கயூமி என்ற பஞ்சாபி என்று தெரிய வந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக வெள்ளிக்கிழமை ஜம்மு செல்ல உள்ள நிலையில் பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலும், ஊடுருவல் முயற்சியும் நடைபெற்றுள்ளன.

Thursday, 27 November 2014

உணவே மருந்து : தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது.


ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்? கடையில தேன் நெல்லிக்காய்-ன்னு கிடைக்குது, விலை அதிகம். உண்மையான தேன்ல தான் ஊற வைக்கிறாங்களான்னா. சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப்பாகுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க. அதனால அதை வாங்குறது இல்ல.

அனுபவம் வாய்ந்த நண்பர்கள் உதவியோட இந்த `வெல்லம் நெல்லிக்காய்' ரெசிப்பியை உருவாக்கி பல வருசங்களா தினமும் வீட்டுல எல்லாரும் சாப்பிட்டுட்டு வர்றோம். சூப்பரா இருக்கு, ஹெல்த்தும், ருசியும் ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேகவைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும். பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க. அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை. இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க. ரொம்ப காச்சணும்னு இல்ல. பிசுபிசுன்னு வந்தவுடன் இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு, ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும் நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்புறம், மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிச்சிருங்க. நெல்லிக்காயின் சத்துகள் இறங்கியிருக்கிறதால அதை வேஸ்ட் பண்ண வேண்டாமே

வலிமையான சார்க் : மோடி வலியுறுத்தல்

சர்வதேச அளவில் "சார்க்' அமைப்பு வலிமையானதாக உருவெடுப்பதற்கு, உறுப்பு நாடுகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதற்காக பல்வேறு யோசனைகளையும் அவர் தெரிவித்தார். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான், மாலத்தீவு ஆகிய 8 நாடுகளை அங்கமாகக் கொண்ட "சார்க்' அமைப்பின் 18-ஆவது உச்சி மாநாடு நேபாளத் தலைநகர் காத்மாண்டில் புதன்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மும்பையில், இதே தினத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட கொடூரத் தாக்குதலை நாங்கள் நினைவு கூர்ந்து வருகிறோம். இந்தத் தாக்குதலில் பலியானோரை நினைத்து நீங்காத துயரத்தில் உள்ளோம். பயங்கரவாதம் என்னும் அச்சுறுத்தல், தெற்காசியப் பிராந்தியத்துக்கு மட்டுமல்லாமல், உலகத்துக்கே சவாலாக உள்ளது. பயங்கரவாதம், நாடு கடந்த குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து, சார்க் நாடுகள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை முழுவதும் நிறைவேற்றுவதற்கு நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதி, வளத்தை ஏற்படுத்தி நம்பிக்கையை ஒளிரச் செய்வதற்கு நாம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அண்டை நாடுகளுடன் நல்லுறவுடன் இருக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் விருப்பமாகும். நமது நாடுகள் அனைத்தும் பரஸ்பரம் பிற நாடுகளின் பாதுகாப்புக்கும், மக்களின் உயிருக்கும், நட்புறவை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கும், நமது பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். தெற்காசியப் பிராந்தியம் என்பது ஜனநாயகம் செழித்து விளங்கும் பிராந்தியமாகவும், ஈடு இணையில்லா இளைஞர் சக்தி கொண்டதாகவும், உறுதியான மாற்றம் மற்றும் வளர்ச்சியை எதிர்பார்க்கும் பிராந்தியமாகவும் திகழ்கிறது. எதிர்காலம் இந்தியாவுடையதே என்பது எனது கனவாகும். அதுபோல, இந்தப் பிராந்தியமும் உருவாக வேண்டும் என்பது எனது விருப்பமாகும். சார்க் தலைவர்களுக்கு பாராட்டு: ஒட்டுமொத்த உலகத்தின் வாழ்த்துகளோடு, பிரதமர் அலுவலகத்துக்கு நான் சென்றேன். ஆனால், என்னை இயங்கச் செய்தது என்னவோ, அண்டை நாடுகளின் தலைவர்களாகிய நீங்கள், எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதுதான்.

எனது வெளிநாட்டுப் பயணங்களின் மூலமாக, மத்திய கிழக்கில் இருந்து பசிபிக் வரையிலும், தெற்கு கடலோரப் பகுதியில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வரையிலும், ஒருமைப்பாடு என்னும் அலை ஆர்ப்பரித்து வருவதை நான் கண்டேன். தெற்காசிய வளர்ச்சிக்கு, பல்வேறு தடைகள் இருக்கின்றன. சிறிதும், பெரிதுமாக ஒரே மாதிரியான பிரச்னைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அதேசமயம், நம்மிடம் உள்ள ஏராளமான வளங்கள் மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சார்க் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. இருந்தபோதிலும், சார்க் குறித்து நாம் பேசும்போது, குறை காணுதல், அவநம்பிக்கை ஆகிய 2 விமர்சனங்கள் தெரிவிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, குறை காணுதல் என்ற போக்கை நன்னம்பிக்கையாக மாற்ற நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் மோடி. மாநாட்டில் பேசிய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அகமதுஜாய், பூடான் பிரதமர் ஷெரிங் டாப்கய் ஆகியோரும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்துப் பேசினர்.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பேசியதாவது:
பயங்கரவாதிகளுக்கு சில நாடுகள் அடைக்கலம் கொடுக்கின்றன. பிற நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதிகளை ஊக்குவித்து, மறைமுகப் போரில் ஈடுபடுகின்றன. எனவே, பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் சார்க் நாடுகளின் தலைவர்கள் உண்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பேசுகையில், "தெற்காசிய நாடுகள் தங்களுக்கு இடையே சண்டையிட்டுக் கொள்வதைத் தவிர்த்துவிட்டு, வறுமை நிலை, பிற சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

தனது 15 நிமிட உரையில், பயங்கரவாதம் குறித்து நவாஸ் ஷெரீஃப் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. பிரதமர் மோடி அஞ்சலி: இதனிடையே, மும்பைத் தாக்குதல் சம்பவத்தின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பொதுமக்கள், பாதுகாப்புப் படையினருக்கு, சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைப்பக்கம் மூலமாக மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அருகிலிருந்தும் விலகியிருந்தனர் !
சார்க் மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆகியோர் அருகருகே இருந்தும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சார்க் மாநாட்டில் புதன்கிழமை கலந்து கொண்ட அவர்கள் இருவரும், பரஸ்பரம் கை குலுக்கிக் கொண்டனர். மாநாட்டு மேடையில் கூட 2 இருக்கைகள் இடம் விட்டே அமர்ந்திருந்தனர். இருவருக்கும் இடையே மாலத்தீவு, நேபாள நாட்டின் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். மாநாட்டின்போது, மோடியும், நவாஸýம் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. மாநாட்டில் பேசுவதற்காக மோடியை நவாஸ் கடந்து சென்றபோதும் கூட, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

ஆகையால், அந்த மாநாட்டையொட்டி மோடி, ஷெரீஃப் பேச்சுவார்த்தை நடைபெற சாத்தியமில்லை என்பது தெரிய வருகிறது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவிக்கையில், "மாநாட்டுக்கு இடையே, இந்தியப் பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேசும் திட்டம் எதுவும் இல்லை. இதுதொடர்பாக பாகிஸ்தானிடம் இருந்தும் எந்தக் கோரிக்கையும் வரவில்லை' என்றார்.

தென் தமிழகத்தில் மழை வாய்ப்பு



தென் மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சற்று நகர்ந்துள்ளது. இது இப்போது இலங்கைக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக வியாழக்கிழமை தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

பறவைக் காய்ச்சலைத் தடுக்க 12 அம்சத் திட்டம் : தமிழக அரசு அறிவிப்பு

பறவைக் காய்ச்சல் நோய் எதிரொலி காரணமாக, கேரளத்தில் இருந்து கோழி மற்றும் அது தொடர்பான பொருள்களை தமிழகத்துக்குள் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டது. கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழை மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் சுமார் 17,000 வாத்துகள் இறந்துள்ளன. இந்த வாத்துகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இவை பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டு இறந்துள்ளன என்பதை மத்திய அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதால், இந்த நோய் தமிழகத்துக்குப் பரவி விடாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:-
1. நமது மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் எதுவும் இல்லை என்றாலும், இந்த நோய் எளிதில் பரவக்கூடியது என்பதால், கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் கோழிகள் மற்றும் கோழியினம் சம்பந்தப்பட்ட பொருட்களை மாநிலங்களுக்கு இடையிலான சோதனைச் சாவடிகள் மூலம் சோதனை செய்து தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படவேண்டும்.

2. இவற்றில் எல்லையில் திருப்பி அனுப்ப சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர், போக்குவரத்து ஆணையர், வணிகவரித் துறை ஆணையர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பார்கள்.

3. கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்கள் மீது தெளிப்பான் மூலம் கிருமிநாசினி தெளிக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு தேவையான தெளிப்பான், கிருமி நாசினிகள் கால்நடை நோய்ப் புலனாய்வுப் பிரிவில் போதுமான அளவு இருப்பில் உள்ளன.

4. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக கேரள மாநில எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படும்.

5. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 800 விரைவு செயலாக்கக் குழுக்கள் அமைக்கப்படும்.

6. தடுப்பு நடவடிக்கைப் பணிக்குத் தேவையான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், தெளிப்பான்கள், கிருமி நாசினிகள் போதிய அளவில் இருப்பு உள்ளது. இவை கூடுதலாக தேவைப்பட்டால், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் அவற்றை வழங்கும்.

7. கேரள மாநில எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் உள்ள கோழிச் சந்தைகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.

8. கோழி இனங்களின் உடல்நிலை குறித்த விவரம் நாள்தோறும் பெறப்பட்டு கண்காணிக்கப்படும்.

9. கேரள மாநிலத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் வாத்து மற்றும் கோழிமுட்டைகள் பெறப்பட்டிருந்தால், அதன் விபரம் சேகரிக்கப்பட்டு, அவற்றை முழுவதுமாக அழித்துப் புதைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

10. இடம் பெயரும் பறவைகளின் நடமாட்டத்தை பறவைகள் சரணாலயங்களில் தலைமை வனப் பாதுகாவலர் கண்காணிப்பார்.

11. கேரள மாநிலத்தில் நோய் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் வரை கோழி மற்றும் கோழியினங்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் ரயில் மூலம் கொண்டுவரப்படுவதை நிறுத்தும்படியும், தமிழ்நாட்டிற்குள் வரும் ரயில்களில் போதுமான அளவு கிருமிநாசினிகளைப் பயன்படுத்திச் சுத்தம் செய்யுமாறும் தென்னக ரயில்வே கேட்டுக் கொள்ளப்படும். கேரளத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் பறவைக்காய்ச்சல் நோய் பரவாமலிருக்க, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், அரசுத் துறை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை :-

12. பறவைக் காய்ச்சல் நோய்த் தடுப்புக்காக, தமிழகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை மத்திய நோய் ஆய்வுக் கூடத்தில் இந்த கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 044-24339097, செல்போன் எண்: 9445032504.

கடும் அமளிக்கிடையே நிறைவேறியது சிபிஐ இயக்குநர் தேர்வு மசோதா


நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளிக்கிடையே சிபிஐ இயக்குநர் தேர்வு தொடர்பான சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. "அங்கீகரிக்கப்பட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இல்லாதபட்சத்தில், அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியின் தலைவரை சிபிஐ தேர்வுக் குழுவில் உறுப்பினராக நியமித்துக் கொள்ளலாம். மேலும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட சிபிஐ இயக்குநரின் நியமனத்தை, போதிய உறுப்பினர்கள் இல்லை எனக் கூறி செல்லாததாக்கிவிட முடியாது' என்பன உள்ளிட்ட ஷரத்துகள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத காரணத்தால், இந்த சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு ஏற்படுத்தியது. கடும் அமளி: இந்நிலையில், மக்களவையில் இந்த மசோதாவை புதன்கிழமை மத்தியப் பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். "சிபிஐ இயக்குநர் தேர்வு நடைமுறைகளிலிருந்து காங்கிரûஸ விலக்கி வைப்பதற்காகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது காங்கிரûஸ இழிவுபடுத்தும் செயல்' என மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார். அரசின் இந்த மசோதா மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கு ஆதரவுத் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ், பிஜு ஜனதா தள உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.

"இந்த மசோதாவில் எந்த உள்நோக்கமும் இல்லை. சிபிஐ இயக்குநர் தேர்வு நடைமுறைகளை சுலபமாக்கும் வகையிலேயே இது உருவாக்கப்பட்டுள்ளது' என அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதையடுத்து, கடும் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Wednesday, 26 November 2014

தமிழரின் மருத்துவம் : நொச்சி இலைகளின் மருத்துவக் குணங்கள்


சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் :  இத்தாவரத்தில் லைனோலியிக், ஒலியிக், பால்மிடிக் போன்ற கரிம அமிலங்கள், கரோட்டின், வைட்டமின் சி ஈரிடாய்டு குளுகோசைடு, குக்குபின், நெகுண்டோசைடு, நிசிண்டாசைடு உண்டு.

காசநோய் புண்களை குணப்படுத்தும் : இலைகள் உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது.

மூட்டுவலிக்கு மருந்து : முழுத்தாவரமும், சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

குடல்பூச்சிகளுக்கு எதிரானது : வேர் சிறுநீர் போக்கு தூண்டுவி, சளி அகற்றும்.காய்ச்சல் போக்குவி, வலுவேற்றும். கட்டிகள் மற்றும் குடல்வலி, பசியின்மை, பெருவியாதி ஆகியவற்றில் மருந்தாக உதவுகிறது. குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல்திறன் கொண்டது. வேர்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாராயத் தயாரிப்பு மூட்டுவலி மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை போக்க வல்லது.

கல்லீரல் நோய்களுக்கு மருந்து : மலர்கள் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தருபவை, தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கனிகள் நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. காய்ந்தவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. நீர் கோர்வை போக்கக் கூடியவை. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

தமிழ் மொழியின் வளம் : பருவங்களுக்கான பெயர்கள்


ஆண்களின் ஏழு பருவங்கள்:-
  • 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்
  • 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
  • 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
  • 15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
  • 16 வயதிற்குண்டான பருவம் – விடலை
  • 17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை
  •  30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்
பெண்களின் ஏழு பருவங்கள்:-
  • 1 வயது முதல் 8 வயது வரை - பேதை
  •  9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
  • 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
  • 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
  • 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
  • 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
  • 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்

தேர்தலைக் கண்காணிக்க ஐ.நா. அதிகாரிகளுக்கு அழைப்பில்லை : இலங்கை

இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுக்கவிருப்பதாகக் கூறியுள்ள அந்த நாட்டு அரசு, ஐ.நா. அதிகாரிகளை அழைக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய கூறியதாவது: 
நடைபெறவிருக்கும் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட வெளிநாட்டுக் குழுக்களுக்களை அழைக்க முடிவு செய்துள்ளோம். எனினும், இந்தத் தேர்தலில் ஐ.நா. கண்காணிப்பாளர்களை அழைக்கப் போவதில்லை. பொதுவாக, ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள்தான் தேர்தலைக் கண்காணிப்பார்கள். ஒரு நாட்டில் முதல் முறையாகத் தேர்தல் நடைபெறும்போதும், தேர்தலில் முறைகேடுகள் நிகழும் அபாயம் இருக்கும் போதும்தான் ஐ.நா. குழு கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளும்.

இலங்கையில், தற்போது அத்தகைய சூழல் இல்லை என்பதால், ஐ.நா. கண்காணிப்புக் குழுவின் அவசியம் இல்லை என்றார் அவர். இலங்கையில், அதிபர் ராஜபட்சவின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அந்த நாட்டில் பொதுத் தேர்தலை நடத்த அவர் முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி பொது வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கு முன்னதாக, வரும் டிசம்பர் மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் தபால் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ஆணையம் அறிவித்தது.

மரண தண்டனை குறித்த ஐ.நா. தீர்மானம் : எதிர்த்து வாக்களித்தது இந்தியா



மரண தண்டனை நிறைவேற்றத்தை உலக நாடுகள் தாற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து ஐ.நா. பொதுச் சபை முன் வைக்கப்பட்ட தீர்மானத்தை எதித்து இந்தியா வாக்களித்துள்ளது. தங்கள் சட்டங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளைத் தண்டிக்கும் நாடுகளின் உரிமையை அந்தத் தீர்மானம் புறக்கணிப்பதால் அதனை எதிர்த்ததாக இந்தியா விளக்கமளித்துள்ளது. சமூக, மனிதாபிமான, கலாசார விவகாரங்களை கவனித்து வரும் ஐ.நா.வின் மூன்றாவது குழு, குறிப்பிட்ட சிலருக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உலக நாடுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது. 18 வயதுக்கு உள்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மன நலன் அல்லது அறிவுத் திறன் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை உறுப்பு நாடுகள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 114 நாடுகளும், எதிராக 36 நாடுகளும் வாக்களித்தன. 34 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த 36 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதுகுறித்து, ஐ.நா.வுக்கான இந்தியத் தூதுக்குழுவின் முதன்மைச் செயலர் மயங்க் ஜோஷி அளித்த விளக்கம்: மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடனேயே அந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது இந்தியாவின் சட்டக் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. சட்டதிட்டங்களை வகுப்பதற்கும், குற்றவாளிகளை அந்தச் சட்டப்படி தண்டிப்பதற்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் முழு உரிமை உள்ளது. அந்த உரிமை இந்தத் தீர்மானத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் "அரிதிலும் அரிதான' வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு நியாயமான விசாரணைக்கும், மேல் முறையீட்டுக்கும் வழிவகை உள்ளது. ஏற்கெனவே, கர்ப்பிணிகளுக்கான மரண தண்டனையை நிறுத்தி வைப்பதற்காகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மரண தண்டனைக்குத் தடை விதித்தும் இந்தியச் சட்டத்தில் பல பிரிவுகள் உள்ளன.
இந்தியச் சட்டப்படி 18 வயதுக்குள்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப் படுவதில்லை என்றார் மயங்க் ஜோஷி.

"செம்மொழிகள் வாரம்' கொண்டாடப்பட வேண்டும்



நாடு முழுவதும் "செம்மொழிகள் வாரம்' கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் வலியுறுத்தினார். இது தொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து அவர் பேசியதாவது: மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் "சம்ஸ்கிருத வாரம்' கொண்டாட மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிஎஃப்எஸ்இ) பள்ளிகளுக்கு ஆணையிட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் எட்டாவது பிரிவில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு மொழியை மட்டும் கொண்டாட வேண்டும் என்று அரசு கூறியுள்ளது வியப்பாக உள்ளது. மேலும், சம்ஸ்கிருதம் செம்மொழி என்றும் கூறியுள்ளது. தமிழ் உள்பட ஐந்து மொழிகள் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுள்ளன என்பதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். "செம்மொழிகள் வாரம்' என்று கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் அப்பொழுதே வலியுறுத்தினார்.

ஆனால், மத்திய அரசு சம்ஸ்கிருதத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது. அதை மட்டுமே செம்மொழியாகக் கருதுகிறது. சம்ஸ்கிருத வாரம் மட்டும் கொண்டாடவில்லை. அத்துடன், "குரு உத்ஸவ்' கொண்டாடுவது மேலும் சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் உருவாகியுள்ள இந்த ஐயத்தைப் போக்க "செம்மொழிகள் வாரம்' கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மாநிலங்கள் விரும்புக்கூடிய மொழிகளை கொண்டாட இது வழிவகுக்கும் என்றார் டி.கே. ரங்கராஜன்.

தில்லி - சென்னை புல்லட் ரயில் சேவை : சீனாவில் உயர்நிலைக் குழு ஆலோசனை



தில்லி - சென்னை இடையே அதிவேக புல்லட் ரயில் சேவைக்கான வழித்தடம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயவும், தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறவும் இந்திய ரயில்வேயின் உயர்நிலைக் குழுவினர், சீனாவில் முகாமிட்டுள்ளனர். இந்திய ரயில்வேயின் ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்தின் உயரதிகாரி சதீஷ் அகர்வால் தலைமையிலான உயர்நிலைக் குழு, பெய்ஜிங்குக்கு திங்கள்கிழமை வந்தது. அங்கு, சீனாவின் அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இந்தக் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தியா, தற்போது இரண்டு அதிவேக புல்லட் ரயில் சேவை வழித்தடங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. இதில் ஒன்று, ஜப்பான் நாட்டின் உதவியுடன் மும்பை - ஆமதாபாத் இடையே அமைக்கப்படவுள்ளது. மற்றொன்று, சீன உதவியுடன் தில்லி - சென்னை இடையே அமைகிறது.சீனாவின் பெய்ஜிங் - குவாங்க்ஸூ இடையே 2,298 கி.மீ. தொலைவுக்கு அமைந்துள்ள புல்லட் ரயில் வழித்தடம்தான் உலகிலேயே மிகவும் நீளமானதாகும். இந்தியாவில், சுமார் ரூ. 2 லட்சம் கோடி செலவில், தில்லி - சென்னை இடையே 1,754 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படவுள்ள வழித்தடம், உலகின் இரண்டாவது மிக நீளமான புல்லட் ரயில் வழித்தடமாக இருக்கும்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் கடந்த செப்டம்பர் மாதம் தில்லி வந்தபோது, இந்தியாவில் புல்லட் ரயில் சேவை தொடங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் அடிப்படையில், புல்லட் ரயில் சேவைக்கான சாத்தியக்கூறு ஆய்வை சீனா இலவசமாக செய்து தருகிறது. மேலும், இந்திய ரயில்வேயின் 100 அதிகாரிகளுக்கு புல்லட் ரயில் சேவை தொடர்பான பயிற்சி தரவும், அதிவேக ரயில் சேவைக்குத் தகுந்தபடி பழைய ரயில் நிலையங்களை மேம்படுத்துவதுடன் புதிய நிலையங்களை அமைக்கவும்,இந்தியாவில் ரயில்வே பல்கலைக்கழகம் நிறுவுவதற்கு உதவவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே, இந்திய ரயில்வே உயரதிகாரிகள் குழு தற்போது சீனாவில் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கான பயிற்சி விரைவில் தொடங்கவுள்ளது. தில்லி - சென்னை புல்லட் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் அடுத்த ஆண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தில்லி - சென்னை இடையே தற்போது இயக்கப்படும் விரைவு ரயிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மூலம், பயண தூரத்தைக் கடக்க 28 மணி நேரம் பிடிக்கிறது. மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் இயக்கப்பட்டால், இந்தப் பயண நேரம் வெறும் 6 மணி நேரமாகச் சுருங்கிவிடும் என்பது குறிப்பிடத் தக்கது.

நாடாளுமன்றத்தில் கடும் அமளி : கருப்புப் பணம், காப்பீட்டு மசோதா விவகாரம்



கருப்புப் பணம் விவகாரம், காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை, புதிய சிபிஐ இயக்குநரை நியமிக்கும் விவகாரம் ஆகியவை தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை பிரச்னை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் இரு முறை ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை காலை 11 மணிக்கு அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் தொடங்கியதும், நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "கருப்புப் பணம் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும். எனவே, கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். ஆனால், "விதிகளின்படி கேள்வி நேரத்தை ரத்து செய்ய அனுமதிக்க முடியாது. நோட்டீஸ் கொடுத்தால் அனுமதிக்கிறேன்' என்று சுமித்ரா மகாஜன் கூறினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள், "கருப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டு வாருங்கள்' என்ற வாசகம் எழுதப்பட்ட கருப்பு நிறக் குடைகளை ஏந்தியபடி அவையின் மையப் பகுதிக்கு வந்து குரல் எழுப்பினர். அவர்களுடன் சேர்ந்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி, ஆம் ஆத்மி ஆகியவற்றின் உறுப்பினர்களும் குரல் எழுப்பினர். ஆனால், இந்த விவகாரத்தை எழுப்ப சுமித்ரா மகாஜன் அனுமதி மறுத்தார். இதையடுத்து நிலவிய கூச்சல், குழப்பத்தால் மக்களவை முதலில் நண்பகல் 12 மணி வரையிலும், பின்னர் மீண்டும் கூடிய போதும் நீடித்த அமளியால், பிற்பகல் 2 மணிவரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. 

சிபிஐ புதிய இயக்குநர் மசோதா: பிற்பகலில் அவை கூடிய போது, சிபிஐ புதிய இயக்குநர் தேர்வுக் குழுவில் மக்களவையில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியின் தலைவரை உறுப்பினராக இடம் பெற வைக்கும் வகையில், தில்லி போலீஸ் சிறப்பு அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவை மத்திய பணியாளர் நலத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் முன்மொழிந்தார்.அதில் "சிபிஐ இயக்குநரைத் தேர்வு செய்யும் குழுவில் அதன் உறுப்பினர்களில் யாரேனும் இல்லாத போதும், குழுவால் தேர்வாகும் சிபிஐ இயக்குநரின் நியமனத்துக்கு எவ்விதப் பாதிப்பும் இருக்காது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையும் மீறி மசோதாவை ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

மாநிலங்களவையில் : மாநிலங்களவை காலையில் புதிய நடைமுறைப்படி கேள்வி நேரமின்றி அதன் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் தொடங்கியது. அப்போது, அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் தேர்வுக் குழுவின் தலைவரும், பாஜக மூத்த உறுப்பினருமான சந்தன் மித்ரா, தனது குழுவின் அறிக்கை அளிக்கப்படும் தேதியை டிசம்பர் 12-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். தேர்வுக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசிக்காமல் சந்தன் மித்ரா தன்னிச்சையாக அவைக்குள் கால நீட்டிப்புக் கோருவதை ஏற்க முடியாது என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரம் தொடர்பாக அவை விதிகளை மேற்கோள்காட்டி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சந்தன் மித்ரா ஆகியோரும் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஆனந்த் சர்மா, மார்க்சிஸ்ட் உறுப்பினர் ராஜ்வீ ஆகியோரும் பரஸ்பரம் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, நீண்ட விவாதத்துக்குப் பிறகு தேர்வுக் குழு அறிக்கை தாக்கல் செய்ய டிசம்பர் 12-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஹைதராபாத் விமான நிலையத்துக்கு சூட்டப்பட்டிருந்த ராஜீவ் காந்தி பெயர் நீக்கப்பட்ட விவகாரத்தை ஆந்திரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பினர். இதனால் ஏற்பட்ட அமளியால் அவை நடவடிக்கைகள் சில நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர், நண்பகல் 12 மணிக்கு அவை கூடிய போதும் இதே விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை அலுவல் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, மத்திய அமைச்சரவையில் புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களை அவைக்கு பிரதமர் நரேந்திர மோடி சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகம் செய்து வைத்தார். இதனிடையே, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், "கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களைக் காப்பாற்றவே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுகின்றன' என்று குற்றம்சாட்டினார்.

இன்று விவாதம்?
கருப்புப் பணம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்நிலையில், கருப்புப் பணம் மீட்பு தொடர்பான விவாதம், இரு அவைகளிலும் புதன்கிழமை நடைபெறும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

Tuesday, 25 November 2014

உணவே மருந்து : அழகு பானம்



முகத்தில் அடிக்கடி கட்டிகள் ஏற்படுகிறது. இது அழகை பாதிக்கிறது. வெளி அழகிற்கு நமது உணவுப் பழக்கமும் ஓர் முக்கியக் காரணமாய் அமைகிறது. ஆகவே நாம் நம் உணவுப் பழக்கத்தை சீராய் அமைத்தல் அவசியம். அதற்கு எளிய முறையில் வீட்டிலேயே இயற்கை முறையில் சத்துள்ள பானம் ஒன்று தயாரிப்பது பற்றி இங்கே...

தேவையான பொருட்கள் :
கேரட் - 2, 
பீட்ரூட் - 1, 
பச்சை கொத்துமல்லி (மண் போக அலம்பி கட் செய்தது) - 1 கப், வெள்ளை முள்ளங்கி - 1, 
இஞ்சிச் சாறு - 1/2 ஸ்பூன், 
தேன் - 1 ஸ்பூன், 
தண்ணீர் - 1/2 தம்ளர்.

செய்முறை :  முள்ளங்கி, கேரட், பீட்ரூட் இவைகளை நன்றாகக் கழுவி தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கவும். கொத்தமல்லியையும் சுத்தம் செய்து, மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்டி இஞ்சிச்சாறு, தேன் கலந்து பருகவும், மலச்சிக்கல் ஏற்படாது. முகம் பளபளப்பாகும். கட்டிகள் வராது. வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கூடச் சாப்பிடலாம்.

5ஆவது அதிசயத்துக்கு ஆபத்தா?



உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் 5ஆவது அதிசயமாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவின் பவளப்பாறைகள் பெருந்தொடர், உலக வெப்பமயமாதல் காரணமாக அழியும் ஆபத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சொன்னாலும் சொன்னார், பருவநிலை மாற்றம் பற்றிய விவாதம், சர்வதேச அளவில் மீண்டும் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற ஜி20 நாடுகள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பேசியபோது தனது இந்தக் கவலையை ஒபாமா வெளியிட்டார். ஒபாமாவின் கருத்துக்கு பார்வையாளர்கள் கைதட்டி வரவேற்புத் தெரிவித்தாலும், ஆஸ்திரேலிய அரசு கையை முறுக்கி கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

உண்மையில், பவளப்பாறைகளின் நிலைதான் என்ன?
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாகாணமான குயின்ஸ்லாந்து கடல் பகுதியில் சுமார் 2300 கி.மீட்டர் நீளத்துக்கு விரிந்துள்ளது இந்தப் பவளப்பாறைகள் தொடர் (GREAT BARRIER REEF). பருவநிலை மாற்றம், கடற்கரையோரம் நடக்கும் அளவுக்கதிகமான மேம்பாட்டு நடவடிக்கைகள், மீன்பிடிப்பு போன்றவற்றால் இந்தப் பவளப்பாறைகளுக்கு ஆபத்து ஏற்படுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்தான், ஒபாமாவும் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். குயின்ஸ்லாந்து கடற்கரையோரப் பகுதியில் நடந்து வரும் வேகமான தொழில்மயமாக்கல் நடவடிக்கைகள் குறித்து யுனெஸ்கோவும் ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் இரினா பொகோவா ஆஸ்திரேலியாவுக்கு நேரில் சென்று இந்தப் பவளப்பாறைகளின் நிலை குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்த நேரத்தில் ஒபாமாவின் கருத்து வெளியானதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, இந்தப் பவளப்பாறைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியாவின் மத்திய அரசும், குயின்ஸ்லாந்து மாகாண அரசும் ஒரு தொலைநோக்குத் திட்டத்தை வகுத்துள்ளன என்றாலும், இன்னும் வரைவு வடிவத்திலேயே இருக்கும் அத்திட்டத்தால் பெரிய பலன் ஒன்றும் இருக்காது என ஆஸ்திரேலியாவின் அறிவியல் அகாதெமி தெரிவித்துள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய அரசு இதை மறுக்கிறது. "பருவநிலை மாற்றத்தால் பவளப்பாறைகளுக்கு ஆபத்து இல்லை; விவசாய நிலங்களிலிருந்து வெளியேறும் ரசாயன உரங்கள் கலந்த கழிவுகள், இயற்கைப் பேரிடர் இந்த இரண்டினால் மட்டுமே ஆபத்து. ஆனால், இந்த இரண்டும் நிகழ 200 ஆண்டுகளாவது ஆகும்' என்கிறார் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர். குயின்ஸ்லாந்து கடலோரப் பவளப்பாறைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வரும் யுனெஸ்கோ, அவை அழிவின் பிடியில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து அடுத்த ஆண்டு அறிவிக்கவுள்ளது. அவ்வாறு அழிவின் பிடியில் உள்ளதாக அறிவித்தால், சுற்றுலா உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கையையும் ஆஸ்திரேலிய அரசு மேற்கொள்ள இயலாது. பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு உலகம் முழுவதும் பரவலாக எழுந்துள்ள நிலையில், எந்த ஒரு பாரம்பரிய சின்னமுமே பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்காவின் தலையீட்டை ஆதிக்க மனப்பான்மையாக எடுத்துக்கொண்டாலும் சரி, அக்கறையாக எடுத்துக்கொண்டாலும் சரி.

விஞ்ஞானிகள் எச்சரிக்கை\
ஆஸ்திரேலிய அரசின் கருத்துக்கு நேர்மாறாக அந்நாட்டு விஞ்ஞானிகளே கருத்துத் தெரிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்து குளோபல் சேஞ்ச் இன்ஸ்டிட்யூட் பல்கலைக்கழக இயக்குநர் ஒபே ஹியூஜ் குல்ட்பெர்க் கூறுகையில் "பவளப்பாறைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசின் நடவடிக்கை போதாது. ஏற்கெனவே கடந்த 30 ஆண்டுகளில் பவளப்பாறைகள் பாதியாக சுருங்கிவிட்டன. வெப்பமயமாதல் இன்னும் 1.5 டிகிரி அதிகரித்தாலும் பவளப்பாறைகள் அழிந்துவிடும்' என எச்சரிக்கிறார் அவர். மற்றொரு விஞ்ஞானி சார்லி வெரோன் என்பவர், கரியமிலவாயு வெளியேற்றம் இதேபோல நீடித்தால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பவளப்பாறைகள் அழிந்துவிடும் என்கிறார். ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக தலைமை விஞ்ஞானி ஜோன் புரோடி கூறுகையில், பருவநிலை மாற்றம்தான் பவளப்பாறைகளுக்குப் பெரும் ஆபத்தாக உள்ளது. பவளப்பாறைகள் உள்ள கடல் பகுதியில் தண்ணீரின் தரத்தை மேம்படுத்த அரசு முயல்கிறது, ஆனால், அது மிகச்சிறிய நடவடிக்கையே என்கிறார்.

என்ன இருக்கிறது?
இதில் சுமார் 3000 தனித்தனி பவளப்பாறைகளும், 600 பாறைத் தீவுகளும், 150 சதுப்புநிலத் தீவுகளும் உள்ளன. சுமார் 100 வகையான ஜெல்லி மீன்களும், 3000 வகையான மெல்லுடலிகளும், 1600 வகையான மீன்களும், 130 வகையான சுறாக்களும், 30 வகையான திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களும் வாழ்கின்றன. இந்தப் பவளப்பாறைகள் தொடரை யுனெஸ்கோ 1981இல் உலகப் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் சேர்த்தது.

7 இயற்கை அதிசயங்கள்
இயற்கை அதிசயங்கள் பட்டியல் குறித்து சில முரண்பாடுகள் இருந்தாலும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 7 அதிசயங்களை சி.என்.என். தொலைக்காட்சி பட்டியலிட்டுள்ளது. அவை:

1 எவரெஸ்ட் சிகரம்

2 அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கன்யான் பள்ளத்தாக்கு

3 நார்தெர்ன் லைட்ஸ் பூமத்திய ரேகையின் வடக்குப் பகுதியில் தோன்றும் பிரமாண்ட ஒளி

4 ரியோ டி ஜெனீரோவில் உள்ள இயற்கைத் துறைமுகம்

5 ஆஸ்திரேலியாவில் உள்ள பவளப்பாறைகள் தொடர்

6 மெக்ஸிகோவில் உள்ள பரிகுட்டின் எரிமலை

7 இங்கிலாந்தில் உள்ள விக்டோரியா அருவி

நடவடிக்கை போதாது
"பவளப்பாறைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசு இன்னும் அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் 50 வருடங்கள் கழித்து எனது மகள்கள் தங்களது மகனுடனோ, மகளுடனோ இந்தப் பவளப்பாறைகளைப் பார்க்க வர வேண்டும்'

- அமெரிக்க அதிபர் ஒபாமா

ஒபாமாவின் கவலை தேவையற்றது
"பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியா பல சாதனைகளைச் செய்துள்ளது. அதிபர் ஒபாமாவின் கவலை தேவையற்றது'

- ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் ஆண்ட்ரூ ராப்

"பவளப்பாறைகளுக்கு பருவநிலை மாற்றத்தால் ஆபத்து இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இருப்பினும், ஆஸ்திரேலியாவின் இயற்கைப் பொக்கிஷமான அதைப் பாதுகாக்க நாங்கள் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்'
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media