பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பெயரில் ‘நமோ நடமாடும் மீன் கடை’ சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. இங்கு ஒரு கிலோ வஞ்சிரம் (உயிருடன்) மீன் ரூ.500-க்கு விற்கப்படுகிறது. கடைத் திறப்பு விழாவில், கலந்து கொண்டு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் மீன் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்பொழுது அவர், "நரேந்திரமோடி பிரதமரானதும் மீனவர்களுக்காக தனித்துறை ஏற்படுத்தப்படும். மற்ற கட்சியினர் வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். பாஜகவால் மட்டும்தான் செயல்படுத்த முடியும். நாங்கள் கடலை தெய்வமாகக் கருதுகிறோம். கடல் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், பாஜக ஆட்சிக்கு வந்தால், மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். " என்று அவர் கூறினார்.
நமோ நடமாடும் மீன் கடையில் விற்பனை நடந்தபோது, பட்டினப்பாக்கம் கடற்கரையில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்கள் திடீரென விழா நடைபெற்ற இடத்துக்கு வந்து, ‘எங்கள் வியாபாரத்தைக் கெடுக்காதீர்கள்’ என்று பலமாகக் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் சமாதானப்படுத்தினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.