மக்களவைத் தேர்தலின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் 4 பேர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டனர். டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு இவர்களை கைது செய்துள்ளது. இவர்களில் ஷியா உர் ரஹ்மான் என்ற வகாஸ், இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய கமாண்டர் ஆவார். மேலும் இருவர் ராஜஸ்தானில் இன்ஜினீயரிங் படித்து வரும் மாணவர்கள். கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து சில வெடி பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை இந்த தீவிரவாதிகள் குறிவைத்துள்ளனர்.
24 வயதாகும் வகாஸ் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். 2010-ம் ஆண்டு முதல்முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளார். எலக்ட்ரிக் சர்க்யூட் மற்றும் ஐஇடி வகை வெடிகுண்டுகளை தயாரிப்பதில் கைதேர்ந்த இவருக்கு, 2010-ம் ஆண்டு நிகழ்ந்த ஜம்மா மசூதி துப்பாக்கிச் சூடு சம்பவம், வாரணாசி குண்டு வெடிப்பு, 2011-ல் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு, 2012 புணே குண்டு வெடிப்பு, 2013 ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு ஆகியவற்றில் தொடர்பு உண்டு.
டெல்லி போலீஸார் ராஜஸ்தானின் வெவ்வேறு நகரங்களில் சனிக்கிழமை முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஜோத்பூரில் தீவிரவாதி ஷாகிப் அன்சாரி என்ற காலித்(25) கைது செய்யப் பட்டார். அவருடன் இருந்த மற்றொருவர் தப்பியோடிவிட்டார். பிரதாப் நகரில் நடத்தப்பட்ட சோதனையில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இன்ஜினீயரிங் மாணவர்களான அவர்களிடம் இருந்து வெடி பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களது பெயர் முகமது மஹரூப் (21), முகமது வக்கார் அன்சார் என்ற ஹனீப் (21) என்று விசாரணையில் தெரியவந்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.