சென்னை தலைமை செயலகத்தில், பத்திரிக்கை நிருபர்களை சந்தித்த தமிழக தேர்தல் தலைமை அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது:
தேர்தலையொட்டி 22-ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் 24-ம் தேதி நள்ளிரவு வரை 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் ஹோட்டல்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் தனியார் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள், கடைகள், பொது இடங்களில் யாராவது மது விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.
வாக்குப்பதிவு நாளான 24-ம் தேதி அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் மீறி, விடுமுறை அளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.
ஏதாவது தனியார் நிறுவனம் விடுமுறை அளிக்காவிட்டால் அதுகுறித்து 1950 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அந்தப் பகுதி தேர்தல் அதிகாரி சம்பந்தப்பட்ட நிறுவனத்தை ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பார்வையற்றோர் வாக்களிக்க வரும்போது அவருடன் துணைக்கு வருபவர் வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார். சிறையில் இருப்பவர்களில், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மட்டும் தபால் ஓட்டு போட முடியும். மற்றவர்கள் ஓட்டு போட முடியாது. முப்படையினர், தேர்தல் பணியில் ஈடுபடும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வெளிமாநிலத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் தமிழக போலீஸார், தூதரக அதிகாரிகள் ஆகியோர் தபாலில் வாக்களிக்கலாம். 22-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் யாரும் கருத்துக்கணிப்பு வெளியிடக்கூடாது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.