BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 19 April 2014

இந்தியாவில் மோடி அலை, தமிழ்நாட்டில் விஜயகாந்த் அலை - பிரேமலதா

கன்னியாகுமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா. திறந்த வேனில்  நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அவர் பேசியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கான கூட்டணி, இளைஞர்களுக்கான கூட்டணி, இளம் சிங்கங்களின் கூட்டணி, அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக உருவான கூட்டணி. நாளை சரித்திரம் படைக்கப்போகும் கூட்டணி. நிச்சயமாக யார் தயவும் இல்லாமல் 300 இடங்களுக்குமேல் பிடித்து இந்த கூட்டணி தனித்து ஆட்சி அமைக்கும்.

குஜராத்தை விட தமிழகம் முதன்மையான மாநிலம் என ஜெயலலிதா சொல்கிறார். இதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல முடியுமா? குஜராத்தில் மின்வெட்டு என்பதே கிடையாது. நர்மதா ஆற்றில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் ராட்சத பைப்புகள் அமைத்து குடிநீர், தொழிற்சாலை, விவசாயம் என அனைத்திற்கு தண்ணீர் தட்டுப் பாடின்றி கிடைக்கிறது.

குஜராத்தில் முதன்மையான தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது. லஞ்ச, ஊழலற்ற ஆட்சி நடக்கிறது. நதிநீர் இணைப்பைப் பற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதன்மூலம் அறிவிப்பு அரசியலை அவர் மீண்டும் தொடங்கி விட்டார்.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்களின் ஒட்டு மொத்த ஆதரவை பெற்றவர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே. இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகிறது. தமிழ்நாட்டில் கேப்டன் (விஜயகாந்த்) அலை வீசுகிறது. 2 பேரும் சேர்ந்து நல்ல ஆட்சியைத் தரப்போகிறார்கள். மோடி மூலம் இந்தியா வல்லரசு ஆகும். கேப்டன் மூலம் தமிழ்நாடு நல்லரசு ஆகும்.

தமிழ்நாட்டில் அமைதி, வளம், வளர்ச்சியை எங்காவது பார்த்து இருக்கிறீர்களா? சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டதில் தான் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தான் வளமாக இருக்கிறார்கள். தமிழகம் டாஸ்மாக் வருமானத்தில் தான் வளர்ச்சியை அடைந்துள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டுமே பழிவாங்கும் அரசியல் நடத்தி மக்களை பழி வாங்குகிறார்கள். எனவே பா.ஜ. கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு பிரேமலதா பேசினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media