BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 5 May 2014

சோனியா காந்தி வாயில், நெய்யுடன் கலந்த சர்க்கரையை போட வேண்டும்- நரேந்திர மோடி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

‘ஏ தில் மாங்கே மோர்’ (எனது மனம் நிறைய கேட்கிறது). தாமரை சின்னத்துக்கு நிறைய எம்.பி.க்களை தாருங்கள் என்று நான் மக்களிடம் கேட்டால், சோனியாவிக்கு பிடிப்பதில்லை. கேட்டுப் பெறுவதை அவர்கள் அவமானமாக கருதுகின்றனர். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை.

ஏழை தாய்க்கு பிறந்தவன் பிச்சை எடுக்காமல் என்ன செய்வான்? நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல் ஆகியோரின் பெயரில் சுமார் நான்கைந்தாயிரம் அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படும் அம்மா- பிள்ளை ஆட்சியில்,  சர்தார் வல்லபாய் பட்டேலின் பெயர் நாட்டை விட்டே காணாமல் போய்விட்டது. 

இந்த அநீதிக்கு பதில் அளிக்கும் விதமாக சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உலகிலேயே பெரிய நினைவிடத்தை குஜராத்தில் அமைக்க தீர்மானித்திருக்கிறேன். அமெரிக்காவுக்கு செல்கின்றவர்கள், அங்குள்ள சுதந்திர தேவி சிலையின் பிரம்மாண்டத்தை பார்த்து வியந்துப் போகின்றனர். அதைவிட இரண்டு மடங்கு பிரம்மாண்ட சிலையை குஜராத்தில் அமைத்து, ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக்கூடிய ஒரு நினைவிடம் சர்தார் வல்லபாய் பட்டேலுக்காக அமைக்கப்படும்.

‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ (ராணுவ வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க) என்று லால் பகதூர் சாஸ்திரி முழங்கினார். அப்படிப்பட்ட நாட்டில் ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளின் நிலை இப்போது எப்படி உள்ளது?

நமது வீரர்களின் தலைகளை பாகிஸ்தானியர்கள் துண்டிக்கும் போது மத்திய அரசு எதுவுமே செய்ய முடியாத நிலையில் உள்ளது. கொல்லப்படும் ராணுவ வீரர்களின் எண்ணிகையைவிட தற்கொலை செய்துக் கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகமாகி, கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றரை லட்சமாக உயர்ந்துள்ளது. 

அம்மா-பிள்ளை ஆட்சி இதற்கெல்லாம் பதில் சொல்ல தயாராக இல்லை. ’ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ (ராணுவ வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க) என்ற முழக்கம் எல்லாம் போய் ’மர் கிசான், மர் ஜவான்’ (விவசாயி சாகட்டும், ராணுவ வீரர்கள் சாகட்டும்) என்பதே தற்போதைய முழக்கமாக இருக்கிறது.

நான் பிரதமராகி விட்ட நினைப்பில் பேசி வருவதாக சோனியா காந்தி தொடர்ந்து கூறி வருகிறார். எனவே, இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது? நீங்களே(சோனியா) மோடி தன்னை பிரதமராக கருதிக் கொள்கிறார் என்று கூறும்போது, உங்கள் வாக்கு பலிக்கட்டும். உங்கள் வாயில் நெய்யுடன் கலந்த சர்க்கரையை போட வேண்டும் என்றுதான் என்னால் கூற முடியும்.

இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media