இன்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, தெலங்கானா மசோதாவை தாக்கல் செய்வதாகக் கூறிய உடனே, அவையில் வன்முறை தலைதூக்கியது. நாடாளுமன்றத்தில் இன்று ஆந்திர மாநிலத்தைப் பிரிக்கக் கூடாது என்று ஒரு தரப்பும், தெலங்கானா தனிமாநிலம் அமைய வேண்டும் என்று ஒரு தரப்புமாக கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்தைப் பிரிக்கக் கூடாது என்ற அணியில் உள்ள காங்கிரஸ் எம்.பி., எல்.ராஜகோபால் மிளகு ஸ்ப்ரே அடித்து அவையில் இருந்தோருக்கு எரிச்சலை தூண்டிவிட்டார்.
மிளகுப் பொடி தூவிய வேகத்தில், கே.நாராயண ராவ் என்பவரின் கண்களில் மிளகுப் பொடி விழுந்து, பெரும் கண் எரிச்சலை அவருக்கு ஏற்படுத்தியது. இதை அடுத்து அவர் உள்ளிட்ட மூன்று எம்.பி.க்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் நாராயண ராவுக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதை அடுத்து கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி, அமளியில் ஈடுபட்ட 18 எம்.பி.க்களை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய அவைத்தலைவர் மீராகுமார் உத்தரவிட்டார். மேலும், நாடாளுமன்ற வரலாற்றில் இது மிகவும் மோசமான சம்பவம் என்று அவர் கூறினார். இதற்கிடையே, வன்முறை சம்பவங்கள் ஏற்பட்ட போது, உடனே, காற்று அடைத்த முகமூடிகள் நாடாளுமன்ற அரங்குக்குள் கொண்டுவரப்பட்டன.
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டி கத்தி வைத்திருந்தார் என்ற அதிர்ச்சியான தகவலும் வெளியாகியது. ஆனால், அது கத்தி அல்ல, வெறும் மைக் தான் என்று அவர் கூறியுள்ளார். இன்று நடந்த அமளியில், ஒரு கணினி சேதம் அடைந்தது.
நேற்று தான், பிரதமர் மன்மோகன் சிங், தெலுங்கானா விவகாரத்தில், எம்.பி.க்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் போது, இதயத்தில் ரத்தம் வடிகிறது என்று கூறியிருந்தார். ஆனால், நேற்றை விட, இன்று நடந்த அமளி மிக மோசமானது, நாடாளுமன்ற வரலாற்றிலேயே, இப்படி ஒரு துர்பாக்கிய தினம் வந்ததில்லை.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.