BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 13 February 2014

பாலு மகேந்திரா மரணம்: இரங்கல் தெரிவித்த வைகோ, கதறி அழுத இயக்குநர்கள்

இன்று மாரடைப்பால் காலமான இயக்குநர் பாலு மகேந்திராவை பற்றி, வைகோ இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

"இயற்கை அழகை அப்படியே படம் பிடித்துக் காட்டி பிரமிக்க வைக்கும் கலைத்திறன் கொண்டவர் பாலுமகேந்திரா ஆவார். இதுவரை பார்த்திராத கோணங்களில் காட்சிகளைத் தந்து கண்களுக்கு விருந்தளித்தார். இயக்குநராக‌வும், ஒளிப்பதிவாளராகவும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்கள் மட்டுமின்றி, இந்தியிலும் பல படங்களை இயக்கியவர் பாலுமகேந்திரா. பாலுமகேந்திரா 5 தேசிய விருதுகளையும், 3 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், 2 நந்தி விருதுகளையும் பெற்றவர் ஆவார். சினிமா மட்டுமல்லாமல், இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவரான‌ பாலுமகேந்திராவின்  மறைவு சினிமா உலகுக்கு பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சினிமா கலை உலகுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்."

இயக்குநர் பாரதிராஜா, தனது நண்பரான பாலு மகேந்திராவின் மரணத்தை நம்ப முடியாமலும் தாங்க இயலாமலும் கதறி அழுதார். பாலு மகேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே வந்துவிட்ட பாலா, அவரது உடலருகே கலங்கிய கண்களுடன் கலக்கத்துடன் அமர்ந்திருந்தார். இயக்குநர் மகேந்திரனும், பாலு மகேந்திராவின் உடலை பார்த்து அழுதார். மகேந்திரனின் முதல் திரைகாவியமான 'முள்ளும் மலரும்' படத்தின் ஒளிப்பதிவாளர், பாலு மகேந்திராவே ஆவார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media