BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 24 February 2014

அரசுகளை நடத்துவது அம்பானி-கேஜ்ரிவால்

ஹரியாணா மாநிலம் ரோதக் நகரில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், நம் நாட்டு அரசுகளை நடத்துவது ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி என்று கூறினார். 

மேலும் பேசிய அவர் கூறியதாவது:
ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு அம்பானி மீது வழக்கு பதிவு செய்தபோது, பாஜக மூத்த தலைவர் அருண்ஜெட்லி, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி உட்பட பலரும் நின்று அதைச் செய்ய முடியாது என கூறினார்கள். அவர்கள் அப்படி கூற காரணம் என்ன‌?

நரேந்திர மோடியும், ராகுல் காந்தியும் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டர் மற்றும் தனி விமானத்தில் உலா வருகிறார்கள். தொடக்க காலத்தில் தேநீர் கடை வைத்திருந்ததாகக் கூறப்படும் மோடிக்கு ஹெலிகாப்டரும் விமானமும் கிடைத்தது எப்படி? இவை முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது என பலரும் கூறுகின்றனர்.

மோடியின் ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஐம்பது கோடி செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது. மோடி தனது இமேஜை உயர்த்த நானூறு கோடி ரூபாய் செலவிட்டிருப்பதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது. இந்தப் பணம் அனைத்தும் முகேஷ் அம்பானி தருவதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.

மோடிக்கும் ராகுலுக்கும் முகேஷ் அம்பானியே பணம் செலவு செய்கிறார். அவரது ஒரு சட்டை பையில் மோடியும் மற்றொரு பையில் ராகுலும் உள்ளனர். இந்த நாட்டின் அரசுகளை முகேஷ் அம்பானியே நடத்துகிறார். இவருக்கு தைரியமாக சவால் விட முன்வந்த ஒரே அரசியல் கட்சி ஆம் ஆத்மி கட்சி.

மேலும் பொது மக்களை பார்த்து, அவர்களே ஹரியாணாவின் பத்து மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், அக்கட்சியிடம் நிதி அதிகம் இல்லை என்பதால் துண்டறிக்கைகளை மக்களே நகல் எடுத்து விநியோகிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media