வீரப்பன் கூட்டாளிகள் பிலவேந்திரன், சைமன், ஞானபிரகாசம், மாதையா உள்பட 15 பேரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கருணை மனு மீது காலம் தாழ்த்தி முடிவு எடுக்கப்பட்டதை காரணம் காட்டி 15 பேரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது ஏற்புடையது அல்ல. இந்தத் தீர்ப்பு சட்டவிரோதமானது.
கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க காலதாமதமானதை சுட்டிக் காட்டி பிரிவு 21-ன்படி குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வுதான் விசாரித்திருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பிறகு அவரது முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. பிரிவு 72-ன்படி கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தபிறகு நீதிமன்றத்தின் அதிகாரம் வரம்புக்கு உள்பட்டதாகி விடுகிறது. ஒருவேளை உரிய காரணம் இன்றி கருணை மனு நிராகரிக்கப் பட்டிருப்பதாக நீதிமன்றம் கருதினால் அந்த கருணை மனு குடியரசுத் தலைவரின் மறுஆய்வுக்கு மீண்டும் அனுப்பப்பட வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை காலதாமதத்தை காரணம் காட்டியிருப்பதால் குடியரசுத் தலைவருக்கே மீண்டும் பரிந்துரைத்திருக்கலாம்.
தீவிரவாத செயல்கள் தொடர்பான தடா உள்ளிட்ட சட்டங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதை நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. எனவே மரண தண்டனையை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு மத்திய அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவில் குறிப்பிட்டுள்ளது
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.