BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 19 March 2014

இட ஒதுக்கீட்டினை விட்டுக்கொடுத்து, தனது குடும்பத்தினருக்கு அரசியலில் இடங்களைப் பெற்றுக் கொண்ட கருணாநிதி


தென்காசி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வசந்தி முருகேசனை ஆதரித்து சங்கரன்கோவிலில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஜெயலலிதா, "கருணாநிதியை பொறுத்தவரையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அவருக்கு முக்கியமில்லை. தன் குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படுகிறதா என்ற அந்த இட ஒதுக்கீடு தான் அவருக்கு முக்கியம்." என்று கூறினார்.

இது குறித்து அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது:

"அண்மையில் வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில், "பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் கமிஷன் பரிந்துரையை முழுமையாக அமல்படுத்துதல்" என்ற தலைப்பின் கீழ் "ஆண்டுகள் 17 ஆன பின்பும்; இன்று வரை பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படாமல்; மத்திய அரசின் ஏ பி சி டி ஆகிய பிரிவுகளில் உள்ள இடங்களில் இன்றைய நிலையில் 14 சதவிகிதம் மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய ஒன்றாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தீர்க்க தி.மு.கழகம் மத்திய அரசை வலியுறுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மண்டல் கமிஷன் அறிக்கை என்பது 1993-ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரலாறு கூட தெரியாமல் 17 ஆண்டுகள் ஆன பின்பும் 27 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படவில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 14 விழுக்காடு மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கடந்த 17 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது யார்? தி.மு.க. தானே மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது? இட ஒதுக்கீட்டை முழுமையாக ஏன் பின்பற்றவில்லை என்று மத்திய அரசை தி.மு.க. ஏன் தட்டிக் கேட்கவில்லை?

தி.மு.க-வினர் அமைச்சர்களாக இருந்த அமைச்சகங்களில் ஆவது இந்த இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டதா என்பதை கருணாநிதி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். தனது பேரனுக்கும், தி.மு.க-வினருக்கும் வளம் கொழிக்கும் இலாக்காக்களை கேட்டுப் பெற்ற கருணாநிதி; தகவல் தொழில்நுட்பத் துறையை தி.மு.க-விற்கு வற்புறுத்தி பெற்ற கருணாநிதி; தன் மகள் மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியிடம் மடிப்பிச்சை கேட்ட கருணாநிதி; பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முற்றிலும் பின்பற்றுமாறு மத்திய அரசை ஏன் வலியுறுத்தவில்லை?

கருணாநிதியை பொறுத்தவரையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அவருக்கு முக்கியமில்லை. தன் குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படுகிறதா என்ற அந்த இட ஒதுக்கீடு தான் அவருக்கு முக்கியம்.

தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையிலிருந்து இடஒதுக்கீட்டினை கருணாநிதி காவு கொடுத்துவிட்டார் என்பது தெளிவாகிறது. திரு. கருணாநிதியை பொறுத்தவரையில் இட ஒதுக்கீடு உட்பட எந்த கொள்கையிலும் அவருக்கு அக்கறை இல்லை. தன்னலம் என்ற ஒரே கொள்கையை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறார் கருணாநிதி.

17 ஆண்டுகளாக தன்னலத்திற்காக தமிழகத்தின் நலனை காற்றில் பறக்கவிட்ட கருணாநிதி; மீண்டும் தமிழகத்தின் நலன்களை காற்றில் பறக்கவிட உங்களிடம் வாக்கு கேட்க வருவார். ஏமாந்து விடாதீர்கள். இட ஒதுக்கீட்டினை விட்டுக்கொடுத்து; தனது குடும்பத்தினருக்கு அரசியலில் இடங்களைப் பெற்றுக் கொண்ட கருணாநிதிக்கும், தி.மு.க-விற்கும் வருகின்ற மக்களவைத் தேர்தலில் நீங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். வருகின்ற மக்களவை பொதுத் தேர்தலில் திமுக-வை நீங்கள் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்."

இவ்வாறு ஜெயலலிதா பிரச்சாரத்தில் பேசியிருந்தார். 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media