BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 27 April 2014

ராம்தேவின் சர்ச்சைக்குரிய பேச்சை தொடர்ந்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தலித் வீடுகளுக்கு தேனிலவுக்காகச் செல்வதாக சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்திருந்தார் யோகா குரு ராம்தேவ்.  அவர் பேச்சின் எதிரொலியால், தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

அதன்படி, தனிநபர்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்து அவதூறாக பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும், இதனை மீறுவோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறு பேசுவோர் மீது சட்டபூர்வமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம், மத உணர்வைத் தூண்டும் வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்றும், அதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

யோகா குரு ராம்தேவ் லக்னோ மாவட்டத்தில் மே 16-ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், உத்தரப் பிரதேசத்தின் இதர பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படவில்லை.

இதனிடையே, தலித் சமுதாயத்தை இழிவுபடுத்திய ராம்தேவை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media