BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 16 April 2014

காங்கிரஸ் கட்சி தமிழர்களின் தற்போதைய எதிரி, பாரதீய ஜனதாவோ பரம்பரை எதிரி

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்தை ஆதரித்து திருச்செங்கோட்டில் 'நாம் தமிழர்' கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், "காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. காங்கிரஸ் கட்சி தமிழர்களின் தற்போதைய எதிரி, பாரதீய ஜனதாவோ பரம்பரை எதிரி." என்று கூறினார்.

பொதுக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது:

நமது தொப்புள் கொடி உறவுகள் 1½ லட்சம் பேரை கொன்ற பிறகும் இலங்கையை நட்பு நாடு, ராஜபக்சேவை நண்பன் என்கிறது காங்கிரஸ் அரசு. அதையே தான் தனது வெளியுறவு கொள்கை என பாரதீய ஜனதாவும் சொல்கிறது. 840 தமிழக மீனவர்களை கொன்றதற்கு இந்த இரண்டு கட்சிகளும் ஏதாவது எதிர்ப்பு காட்டி உள்ளதா? ஏதாவது போராட்டம் நடத்தி உள்ளதா? கச்சத்தீவு பிரச்சினையிலும் 2 கட்சிகளுக்கும் ஒரே நிலைப்பாடு தான்.

வணிகம் செய்ய வந்தவன் நாட்டை பிடித்தான், அவனுக்கு எதிராக போராட காந்தி, சுபாஷ் சந்திரபோஷ், பகத்சிங், பிறந்தார்கள். இன்று அப்படி ஒருவன் பிறப்பது தெரிந்தால் கருவிலேயே அழித்து விடுவார்கள். இந்தியாவில் 47 கோடி பேர் ஒரு வேளை உணவுக்கு வழியில்லாதவர்களாக இருக்கிறார்கள்.  பணக்கார இந்தியா, நடுத்தர இந்தியா ஏழை இந்தியா என இந்த மூன்றில் எந்த இந்தியாவுக்கு மோடி பாடுபடப் போகிறார்?  கப்பல் வழியாக வந்தவர்களை விரட்டி விட்டு விமானத்தில் வருகிறவர்களை வரவேற்கிறோம்.

ஒட்டுமொத்த தமிழினத்தை கொன்று குவிக்க காரணமாக இருந்தது காங்கிரஸ் கூட நின்று கும்மி அடித்தது திமுக. இவர்களுக்கு பாடம் புகட்ட எங்களுக்கு கிடைத்த கருவி அதிமுக ஆயுதம் இரட்டை இலை.

மீத்தேன் வாயுத்திட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ். கமிஷனுக்காக ஒப்பந்தம் போட்டது திமுக. 6 மாவட்டத்தை சேர்ந்த 60 லட்சம் மக்களின் மண்ணையும் வாழ்வையும் காக்க, அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது அ.தி.மு.க.

இலங்கையில் 1½ லட்சம் தமழிர்களை கொன்ற சிங்கள ராஜபக்சே அரசுக்கு தடை, சிறையில் வாடும் 7 பேரின் விடுதலைக்கு சிறப்பு தீர்மானங்கள் என நன்மைகளை செய்த அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

முள்வேலி முகாம்களுக்கு இணையாக தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் இருந்து இலங்கை தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் நிறைவேற்றி தருவார் என நம்புகிறேன்.

இவ்வாறு சீமான் பேசினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media