திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முத்துப்பாண்டி, சுயேச்சையாகப் போட்டியிட்டு ஒன்றியக் கவுன்சிலராக வெற்றி பெற்றவர். 2 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதான இவர் மீது பல கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளன.
2012 ஜனவரி 10-ம் தேதி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7-வது குற்றவாளி இந்த முத்துப்பாண்டி. இவர் மீது கோபத்தில் இருந்த பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள், முத்துப்பாண்டியை பழிவாங்கும் நோக்கில் 2013 மார்ச் மாதம் திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு பின்புறம் சென்று கொண்டிருந்தபோது முத்துப் பாண்டி வாகனத்தின் மீது பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள் வெடி குண்டு வீசினர். இதில் அதிர்ஷ்ட வசமாக முத்துப் பாண்டி உயிர் தப்பினார். இதையடுத்து ஏப்ரல் 14-ம் தேதி மாலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நான்கு பேருடன் மதுரை அழகர்கோவிலுக்கு வந்த முத்துப்பாண்டி கோயில் வளாகத்திலேயே தங்கினார்.
அதிகாலையில் எழுந்து, வெளிப்பகுதியில் கழிப்பறை செல்ல நடந்து சென்றபோது, 5 பேர் கொண்ட கும்பல் முத்துப்பாண்டி, அவருடன் இருந்த கண்மணி, தாமரைச்செல்வனை ஆகியோரை அரிவாளால் வெட்டி, கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றது. இதில் முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கண்மணி, தாமரைச்செல்வன் ஆகியோரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி போலீஸார் கூறும் போது, பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிவாங்கவே முத்துப்பாண்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக பசுபதி பாண்டியன் ஆதரவாளரான நடராஜன் என்பவரைத் தேடி வருகிறோம். இவரது தந்தை பெரியசாமியை, 2007-ம் ஆண்டு முத்துப்பாண்டி காரை ஏற்றி கொலை செய்ததாக வழக்கு பதிவாகி உள்ளது. எனவே நடராஜனை பிடிக்க முயற்சித்து வருகிறோம் என்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.