பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது:
தேர்தல் நேரத்தில் ஓட்டு போட பணம் கொடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம். பணம் கொடுப்பதும், வாங்குவதும் வீடியோ ஆதாரத்துடன் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு ஒரு வருடம் ஜெயில் தண்டனை வழங்கப்படும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை, வாங்குவதை தடுக்க பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். திரை அரங்குகள், போஸ்டர்கள், அறிவிப்பு பலகைகள், தொலைக்காட்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். பறக்கும் படைகள் அமைக்கப்படும். பணம் கொண்டு செல்வதை தடுக்க இந்த பறக்கும் படைகள் பயன்படுத்தப்படும். பதட்டமான வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். 30 சதவீத வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் பொது மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களிலும், சுவர்களிலும் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களில் பொது இடங்களில் விளம்பரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. தனியார் இடங்களில் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம். தமிழ்நாட்டில் ஓரே கட்டமாக தேர்தல் நடத்தும்படி அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதை தலைமை தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளோம். தேர்தல் தேதி அறிவிக்கும் போதுதான் எத்தனை கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்பது தெரியும். பொது இடங்களில் அரசியல் கட்சியின் சின்னங்கள் இருந்தால் தேர்தல் விதிகளின்படி மூடி மறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நிருபர்களிடம் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.