BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 21 April 2014

ஜனநாயகத்தை பணநாயகம் விலைக்கு வாங்கும் அவலநிலை: ராமதாஸ்

வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர் பணம் விநியோகம் செய்வதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரு நாட்கள் மட்டுமே உள்ளன. தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் நேற்று முதல் வாக்குகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது.

செய்தித்தாள்களுக்குள் வைத்து பணம் வழங்குதல், பால் பாக்கெட்டுகளுடன் சேர்த்து பணம் வினியோகித்தல், பேனாக்களில் ரீஃபிலை எடுத்துவிட்டு, ரூ.1000 தாள்களை வைத்து வழங்குதல் என பலவகையான உத்திகளை அ.தி.மு.க.வினர் கடைபிடித்து வருகின்றனர். இன்னும் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து பட்டப்பகலிலேயே வீடுவீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். ஆனாலும் இதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

மற்ற தொகுதிகளைவிட தருமபுரி தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் வழங்கப் பட்டு வருகிறது. இத்தொகுதியில் மட்டும் ரூ.200 கோடி வரை செலவிட அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.3000 முதல் ரூ.5000 வரை பணம் வழங்கப்படுவதாக மக்களே குற்றம்சாற்றியுள்ளனர்.

பல இடங்களில் ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை அப்பகுதியில் உள்ள பெண்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், பணம் கொடுத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அவர்களை பிடித்துக் கொடுத்த பொதுமக்கள் மீதே வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்போவதாக மிரட்டி வருகிறது.

குற்றம் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்காமல், அதை அம்பலப்படுத்தியோரை மிரட்டுவது தான் நியாயமான, நேர்மையான, சுதந்திரமான முறையில் மக்களவைத் தேர்தலை நடத்தும் இலட்சணமா?இதை தடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரிகளோ கண்களை மூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் விழிப்புடன் செயல்படும் வேட்டை நாயாக திகழ வேண்டிய தேர்தல் ஆணையம், பெயரளவுக்கு மட்டும் பயமுறுத்தும் சோளக்கொல்லை பொம்மையாகவே உள்ளது. இதே வேகத்தில் செயல்பட்டால் தமிழகத்தில் நியாயமான, நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடைபெறாது.

ஜனநாயகத்தை பணநாயகம் விலைக்கு வாங்கும் அவலநிலை தான் ஏற்படும். எனவே, இனியாவது தேர்தல் ஆணையம் விழித்துக் கொண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதையும், அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல்கள் நியாயமாக நடப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இவ்வாறு ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media