BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 4 May 2014

ரஜினியின் உருவ பொம்மை கன்னட அமைப்பினரால் எரிப்பு; லிங்கா பட ஷுட்டிங் நடத்த கர்நாடகாவில் எதிர்ப்பு

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தின் பட ஷூட்டிங்கை கர்நாடகாவில் நடத்தக்கூடாது என கன்னட அமைப்பினர் ராம்நகரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஷூட்டிங்கை நிறுத்தாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் குதிக்கப்போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படமான 'லிங்கா' படத்தின் பூஜை மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அடுத்த 40 நாட்கள் மைசூர், மண்டியா, ராம்நகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற உள்ளது.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி பட ஷூட்டிங் கர்நாடகாவில் நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாக கன்னட திரையுலகினர் கூறியிருந்த நிலையில், கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கஸ்தூரி கர்நாடக ஜனபிரவேதிகே என்ற அமைப்பினர் ரஜினிக்கு எதிராக சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரஜினிக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பியும் அவரின் உருவ பொம்மையை எரித்தும் தங்களுடைய எதிர்ப்பைக் காட்டினர்.

அந்த அமைப்பின் தலைவர் ரமேஷ் கவுடா பேசு கையில், “தன்னை கன்னடராக சொல்லிக்கொள்ளும் ரஜினி, இதுவரை கர்நாடக மக்களுக்காக ஒன்றுமே செய்ததில்லை. அவர் எங்களுக்கு நன்மை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவையும் ஆறு கோடி கன்னடர்களையும் கடுமையாக‌ தாக்கி பேசியிருக்கிறார். அதுமட்டு மில்லாமல் காவிரி, ஒகேனேக்கல் விவகாரங்களின் போதெல்லாம் கர்நாடகாவிற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்டு தமிழகத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
கன்னட மக்களுக்கும் கர்நாடகாவிற்கும் எதிராக கருத்து தெரிவித்த ரஜினியை கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் மைசூர், மண்டியாவில் மட்டுமல்ல, கர்நாடகாவில் எங்கும் நடக்கக்கூடாது. மீறி நடத்தினால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்'' என்றார்.

 கர்நாடகாவில் ரஜினி பட ஷூட்டிங்கிற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த போதும் மைசூர் அருகே சனிக்கிழமை ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்றது. எக்காரணம் கொண்டும் ஷூட்டிங்கை கர்நாடகாவில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணமில்லை என்கின்றனர் படக்குழுவினர். இதனிடையே கன்னட அமைப்பினரை சமாதானப் படுத்தும் முயற்சியில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் கர்நாடக மாநில வீட்டுவசதித் துறை அமைச்சருமான‌ அம்பரீஷ் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media