இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராக இருந்து வரும் மார்கண்டேய கட்ஜூ, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து பின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர் ஆவார். நேர்மையான நீதிபதியாக அறியப்பட்ட இவர் திமுக மீது ஒரு கடும் குற்றச்சாட்டை கூறினார்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர சை கட்டாயப்படுத்தி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மாவட்ட நீதிபதி ஒருவரை, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பணி நியமனம் செய்ய வைத்ததாக திமுக மீது இவர் தனது வலைப்பதிவில்(Blog) குற்றம் சாட்டியதை அடுத்து மாநிலங்களவையில் இன்று அமளி ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக மற்றும், பகுஜன் சமாஜ்வாடி கட்சி ஆகியன வலியுறுத்தின. அவரது இந்த கருத்திற்கு, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
காங்கிஸ் தலைவர்களில் ஒருவரான ராஷித் ஆல்வி, மார்கண்டேய கட்ஜூவின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதரமற்றது என்று தெரிவித்தார். தொடர்ந்து அவையில் இந்த விவகாரம் தொடர்பாக கூச்சல் நீடித்ததால் அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
தனது வலைப்பதிவில் நேரடியாக திமுகவின் பெயரையும் அந்த ஊழல் நீதிபதியின் பெயரையும் கட்ஜூ சொல்லவில்லை என்றாலும் அது திமுகவை குறிக்கிறது என்றே அரசியல் தரப்பில் கூறுகின்றனர்.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த நீதிபதிக்கு 2 ஆண்டு கால பதவியை அடுத்து நீக்கப்படுவார் என்றே தான் கருதியதாகவும் ஆனால் அவருக்கு மேலும் ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு கிடைத்தது ஆச்சரியப்படுத்தியது, ஆனால் அதன் பின்னர்தான் இது எப்படி நிகழ்ந்தது என்ற விவரம் எனக்கு தெரியவந்தது. அதாவது உயர் நீதிமன்ற நீதிபதிகள் விவகாரங்களை கையாளும் அப்போதைய உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியத்தில் இடம்பெற்ற மூன்று மூத்த நீதிபதிகள், ஐபி அறிக்கையை சுட்டிக்காட்டி குறிப்பிட்ட அந்த ஊழல் நீதிபதியின் 2 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதால், மேற்கொண்டு பணி நீட்டிப்பு செய்ய வேண்டாம் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்தனர்.
அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. அக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தபோதிலும், மக்களவையில் அதற்கு போதிய பெரும்பான்மை இல்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவை அது நம்பி இருந்தது. அந்த கூட்டணி கட்சிகளில் தமிழகத்தை சேர்ந்த ஒரு கட்சிதான் அந்த ஊழல் நீதிபதிக்கு ஆதரவாக இருந்தது. அதே சமயம் அந்த ஊழல் நீதிபதிக்கு எதிரான பரிந்துரையை அறிந்து அந்த கட்சி அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.
அந்த சமயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் புறப்பட்டுக்கொண்டிருந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவர் நின்றுகொண்டிருந்தபோது, அந்த ஊழல் நீதிபதிக்கு ஆதவரான தமிழக கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், மன்மோகனிடம், 'அவர் தொடர்ந்து கூடுதல் நீதிபதியாக பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை என்றால், நீங்கள் நியூயார்க்கிலிருந்து திரும்பும்போது நாங்கள் உங்கள் அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்றுவிடுவோம்..அரசு கவிழ்ந்துவிடும்' என்று கூறியுள்ளனர்.
அவர்கள் இவ்வாறு கூறியதை கேட்ட மன்மோகன் பீதியடைந்தார். ஆனால் அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற காங்கிரஸ் மூத்த அமைச்சர் ஒருவர் மன்மோகனிடம், 'கவலைப்பட வேண்டாம்; நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' எனக் கூறியுள்ளார். பின்னர் அவர் நீதிபதி லோஹித்திடம் சென்று, குறிப்பிட்ட அந்த நீதிபதியை மேலும் ஒரு ஆண்டுக்கு கூடுதல் நீதிபதியாக பணியாற்ற அனுமதிக்காவிட்டால் அரசியல் நெருக்கடி ஏற்படும் எனக் கூறியுள்ளார். அதனைக் கேட்ட லோஹித், அந்த நீதிபதியை மேலும் ஒரு ஆண்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து கடிதம் அனுப்பி உள்ளார். அதனைத் தொடர்ந்து மேற்கூறிய சூழ்நிலைகளுக்கு இடையே அந்த நீதிபதி மேலும் ஒரு ஆண்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நீதித்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை காட்டுவதற்காகவே நான் இதனை இங்கு குறிப்பிடுகிறேன். ஒரு நீதிபதிக்கு எதிராக ஐபி புலனாய்வு அறிக்கை வந்தால், அந்த நீதிபதி கூடுதல் நீதிபதியாக பதவியில் நீடிக்கக்கூட அனுமதிக்கக்கூடாது. ஆனால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது" என கட்ஜூ மேலும் எழுதியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.