BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 2 April 2014

காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டு சாதனைகளை மக்கள் அறிவர்- சிதம்பரம்

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து தேவக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

10 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் என்ன செய்திருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு முன்பு பாஜக ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தது. பாஜகவிற்கு தமிழ் நாட்டில் பாதி இடங்களில் வேர் கிடையாது. ஆட்களும் கிடையாது. வடநாட்டில் வெற்றி பெற்றதை வைத்து 6 ஆண்டு காலம் ஆட்சி செய்தார்கள். அப்போது நினைவில் நிற்கும்படி எதையும் செய்யவில்லை. அந்த 6 ஆண்டு ஆட்சியையும் காங்கிரசின் 10 ஆண்டு கால ஆட்சியையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அவர்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வரவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில்தான் அது வந்தது. அந்த திட்டத்தில் யாரும் பட்டினி இல்லாமல் இருப்பதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. நாட்டில் வறுமை இருக்கிறது. ஏழைகள் இருக்கிறார்கள். ஆனால் யாரும் பட்டினியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நாள் ஒன்றுக்கு ரூ.80 கூலியில் தொடங்கி தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.148 வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளேன். ஆனால் தமிழக அரசு உங்களுக்கு 148 ரூபாய் தருவது கிடையாது. பல இடங்களில் ரூ.65, ரூ.70, ரூ.75 என்று வழங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. இது உங்களை வஞ்சிப்பதாகும். இதனால் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த ஆண்டிற்கு நிர்ணயம் செய்யப்பட்ட கூலியை அ.தி.மு.க அரசு தராதது அவர்களது குற்றமே ஒழிய பணம் இல்லை என்பது காரணம் அல்ல. செலவுக்கு வரம்புகள் கிடையாது. பணம் நாங்கள் தந்திருக்கிறோம். ஆனால் அவர்கள் உங்களுக்கு தருவது கிடையாது. பா.ஜனதா கட்சிக்கு இந்த திட்டத்தில் நம்பிக்கை கிடையாது. அந்த கட்சி மத்தியிலே தப்பித்தவறி ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்த திட்டத்திற்கு மூடு விழா நடத்தி விடுவார்கள்.

பா.ஜனதா ஆட்சியில் விவசாய கடனை ரத்து செய்தார்களா? காங்கிரஸ் ஆட்சியில் 2008–ம் ஆண்டில் நான் நிதி மந்திரியாக பொறுப்பேற்ற உடன் ரூ.68 ஆயிரம் கோடி விவசாய கடனை ரத்து செய்தேன்.

அதேபோல காங்கிரஸ் ஆட்சியில் நான் போட்ட உத்தரவில் நாடு முழுவதும் 27 லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இப்போது நடைபெறும் தேர்தல் உள்ளாட்சி தேர்தல் அல்ல. பாராளுமன்ற தேர்தல். இந்த தேர்தலில் எங்களுக்கு சவால் விடுவது பா.ஜனதா தான். ஆள் பலம் இல்லாமல் கட்சி பலம் இல்லாமல் எப்படி சவால் விடுகிறார்கள் என்றால் அதற்கு பின்னால் பண பலம் உள்ளது. அந்த கட்சியில் மிக மிக கொழுத்த பணக்காரர்கள், மொத்த வியாபாரிகள், பங்கு சந்தையில் பேரம் செய்யும் தொழில் அதிபர்கள், தங்கம் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்கள் ஆகியோரின் பலத்துடன் பா.ஜனதா கட்சி நமக்கு சவால் விடுகிறது. தமிழ் நாட்டில் பா.ஜனதா கட்சி 8 இடங்களில் போட்டியிடுகிறது. எந்த இடத்திலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. ஆணாதிக்கம் கொண்ட ஆர்.எஸ்.எஸ். பெற்ற பிள்ளை தான் பா.ஜனதா கட்சி.

இவ்வாறு  சிதம்பரம் பேசினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media