BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 13 April 2014

2014 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், முதல் முறையாக பாஜகவை விமர்சித்த ஜெயலலிதா

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெயலலிதா, முதல்முறையாக பாஜகவை விமர்சித்து பேசினார். கரூர் தொகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயலலிதா பேசியது:

தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினையாக விளங்குவது காவிரி நதிநீர்ப் பிரச்சினை. காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய ஆட்சியாக இருந்தாலும், காவிரி பிரச்சினையைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மத்தியிலே பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தாலும், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தாலும் இரு கட்சிகளிடையே வேறு எந்தப் பிரச்சினைகளில் மாறுபாடு இருந்தாலும், வேறு எது எப்படி இருந்தாலும் காவிரி நதிநீர்ப் பிரச்சினையை பொறுத்தவரை பாஜகவும், காங்கிரசும் ஒரே விதமான கொள்கையைத் தான் கடைபிடித்து வருகின்றன. தமிழ்நாட்டை, தமிழக மக்களை இரு கட்சிகளுமே வஞ்சித்து வருகின்றன.

 அதை போலவே, கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி இருந்தாலும், காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், வேறு எதில் அவை மாறுபட்டு இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட திறந்து விடக் கூடாது என்பதில் இரு கட்சிகளுமே உறுதியாக உள்ளன, தீவிரமாக செயல்படுகின்றன.

எனவே, காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களிக்கக் கூடாது. பாஜகவுக்கும் வாக்களிக்கக் கூடாது.

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களையும், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களையும், இந்தத் தேர்தலில் அவர்கள் போட்டியிடுகின்ற அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media