BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 6 June 2014

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில், 22, 078 விபத்துகள்; 5,078 பேர் பலி


தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 66,238 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 15,563 பேர் இறந்துள்ளனர்.

மேலும் 75,681 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் தமிழகம் முழுவதும் நடந்துள்ள 22,078 விபத்துகளில் 5,078 பேர் இறந்துள்ளனர், 25,374 பேர் காயமடைந்துள்ளனர் என்று அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து போக்குவரத்துத் துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

சாலை விபத்துக்கள் அதிகரிப்பதற்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவே முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சாலை விதிகளை பின்பற்றி நடக்க வலியுறுத்தி, ஆண்டுதோறும் ஜனவரியில் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களில் மேம்பாலம் கட்டுதல், சாலையை விரிவுபடுத்துதல், துணைச் சாலைகள் அமைத்தல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். 2012-ல் சாலை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 16,175 ஆக இருந்தது. இது 2013-ல் 15,563 ஆக குறைந்துள்ளது. இதை மேலும் குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media